வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மெல்லக் கொல்லும் கொலையாளி! புகையிலை


_சா.சுமித்திரை_

அமெரிக்காவில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியிலேயே புகையிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் காயங்களை சுத்தமாக்கும் தொற்று நீக்கியதாகவும் வலி நிவாரணியாகவும் புகையிலையை பயன்படுத்தினர். வட அமெரிக்காவில் பணம் உழைக்கும் பயிராக புகையிலை இருந்துள்ளது. 1847 ஆம் ஆண்டு பிலிப் மொரிஸ் என்பவரே முதன் முதலாக புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட்டினைத் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். எனினும் சிகரெட் பயன்பாடு என்பது ஆரம்ப காலங்களில் இராணுவ வீரர்களிடமும் பாதுகாப்புப் படையினரிடமே காணப்பட்டது.

1953 களில் சிகரட், புகையிலை பாவனையால் பலவகையான புற்றுநோய் ஏற்படுகின்றது என டாக்டர் எமல் எல் வைன்டஸ் கண்டுபிடித்தார்.
இதனைத் தொடர்ந்து 1964 களில் அமெரிக்க அரசு புகைபிடிப்பதால் சுகாதாரத்திற்கு கேடு என்னும் நோக்கில் அவர்களுக்கு எதிராகவும் விற்பனைக்கு எதிராகவும் சட்டம் உருவாக்கியது.
மனிதனுக்கு மரணத்தைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாம் நிலையிலுள்ளது. இதனாலேயே புகையிலை பாவிப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக உலக சுகாதார அமைப்பு 1987 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து உலக நாடுகள் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நாளாக அனுஷ்டித்து வருகின்றன.
புகைத்தல் புகை பிடிப்பவரை விட அச் சூழலில் இருக்கும் ஏனையவர்களையே அதிகளவு பாதிக்கச் செய்கின்றது. புகைப்பவர்கள் தமது ஆயுட் காலம் முடிவதற்கு முன்பே தமது உயிரினை அழித்துக் கொள்கின்றனர். இதேவேளை தன் உயிரை அழிப்பதற்கே இந்த உலகில் அனுமதி இல்லாத போது  தன் சுயநலத்துக்காக அடுத்தவர் உயிர்களின் அழிவுக்கு மற்றவர்கள் காரணமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?

புகைத்தல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உலகில் நிமிடத்திற்கு 6 பேர் மரணிப்பதாக சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
20 ஆம் நூற்றாண்டில் 100 மில்லியன் பேரும் 21 ஆம் நூற்றாண்டில் இதுவரை 1 பில்லியன் பேரும் புகைத்தல் தொடர்பான நோய்களால் இறந்துள்ளனர் எனவும் ஆய்வறிக்கை ஒன்ற தெரிவிக்கின்றது. இது தொடருமானால் 2030 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 8 மில்லியன் பேர் வரை வருடாந்தம் உலகில் மரணமடையலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
இலங்கையில் ஒரு நாளைக்கு புகை சம்பந்தமான நோய்களால் 370 பேர் இறப்பதாக கடந்த வருடம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புகைக்கும் போது வெளிவரும் புகையில் 400 இற்கும் அதிகமான நச்சு இரசாயனப்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் 50 வீதமானவை சுவாசப் பற்றுநோயினை ஏற்படுத்துபவையாகவுள்ளன. அத்துடன் இப்புகையை சுவாசிக்கும் சிறு குழந்தைகளின் எண்ணங்களில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் நைட்டிங் காம் பல்கலைக்கழகங்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புகையியை சுவாசிப்பதால் இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்ற அதேவேளை நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு, பல், உதடுகளின் நிறம் மாறுதல், இருமல் என புதுப்புது நோய்கள் புகைப்பவர்களின் உடலினை ஆக்கிரமித்து கொள்கின்றன. இதனால் புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது வாழ்நாளினை வைத்தியசாலைகளிலும் மருந்துகளுடனும் கழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
புகையிலையை பல விதங்களில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வெற்றிலையுடன் சேர்த்து உண்ணல், மூக்குப் பொடியாக பயன்படுத்தல், குழாய்களைப் பாவித்து புகையை உறிஞ்சுதல், இதனை விட பீடி, சுருட்டு, சிகரெட் என பல முறைகளில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.
புகைப்பிடிப்பதால் சிலவேளைகளில் உடலின் அல்லது மனதின் உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், இவற்றினால் இறுதியில் கிடைக்கும் பிரதிகூலங்களும் வேதனைகளும் செல்லிலடங்காதவை.

புகையிø உள் இழுக்கும் போது புகையிலுள்ள நிக்கோர்டின் என்னும் இரசாயனப் பொருள் மூளையினைச் சென்றடைகின்றது. ஒவ்வொரு முறையும் இழுக்கும் போதும் அந்த இரசாயனப் பொருள் மூளைக்கு செல்கின்றது. அத்துடன் இந்த இரசாயன நச்சுப் பொருளுடன் 700 வகையான வேறு இரசாயனக் கூட்டுப் பொருட்களும் செல்கின்றன.
மூளையின் மனநிலை மாற்றுக் கலங்களுக்கு நிக்கோர்டின் உட்பட இரசாயனக் கூட்டுப்பொருட்கள் செல்வதால் புகைபிடிப்பவர்களுக்கு ஒரு வகை மாயையைத் தோற்றுவிக்கின்றனர். சில மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள் இந்த மாயையை ஒரு சிறந்த தீர்வாக எண்ணுகின்றனர். எனவே புகைபிடித்தலை ஒரு பழக்கமாக ஏற்றுக்கொள்ள முனைகின்றனர்.

மன அழுத்தங்களுக்கு புகைத்தல் தீர்வாகுமா?
இலங்கை இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரை அநேகமான ஆண்கள் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது பொது இடங்களிலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கும் தீர்வாகவே புகைபிடிப்பதாகக் காரணம் சொல்வார்கள். எந்தவொரு பிரச்சினைகளையும் பேசியோ, ஆராய்ந்தோ, சிந்தித்தோ முடிவெடுக்காது புகைபிடித்தலைக் காரணம் சொல்வது மடமையாகும்.

இலங்கையிலேயே புகைபிடிப்பதற்காக பல காரணங்களை சொல்கின்றனர். மகிழ்ச்சிக்காகவென 22 வீதமானோரும் நண்பர்களுடனும் பொழுது போக்கவென 8.2 வீதமானோரும் புகைபழகத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 17 வீதமானோரும் தனிமையைப் போக்க 10.5 வீதமானோரும் பரீட்சித்துப்பார்க்கவென 8.7 வீத மானோரும் நண்பர்களின் அழுத்தங்களுக்காக 10 வீதமானோரும் பிரச்சினைகளுக்காக 15 வீதமானோரும் தாம் புகைபிடிப்பதற்கான காரணமாகச் சொல்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்களின் விலையேற்றத்தால் திணறுகின்ற பொதுமக்கள் சிகரெட், சுருட்டு, மது போன்றவற்றின் விலையினை எத்தனை சதவீதத்தினாலும் அரசு உயர்த்தினாலும் எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாது அதிக பணம் கொடுத்த வாங்கி உபயோகிக்கின்றனர். எனவேதான் அரசு எந்தவித அச்சமோ, தயக்கமோ இன்றி அடிக்கடி இத்தகைய பொருட்களின் விலையினை அதிகரித்து வருகின்றது. இந்த விலையேற்றத்தால் குடும்பப் பெண்களும் குழந்தைகளும் உறவினர்களுமே பாதிக்கப்படுகின்றனர்.
200 குடும்பங்கள் சிகரெட் வாங்க மாதாந்தம் செலவு செய்யும் தொகை 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவாகும். ஒருநாளைக்க 4101 மில்லியன் சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன.

இலங்கை மட்டுமல்லாது உலக நாடுகள் பல சிகரெட் விற்பனை மூலமே அதிகளவு வருமான வரியினை  ஈட்டுகின்றன. இலங்கை அரசு சிகரெட் மூலம் 12 வீத வருமானத்தினைப் பெற்று வருகின்றது. புகைபிடிப்பதற்காக 5800 கோடி ரூபாவினை வருடமொன்றுக்கு செலவிடுகின்றனர்.
அதேவேளை புகை தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க சுகாதார அமைச்சு 22 வீதம் செலவிடுகின்றது. புகைபிடிப்பவர்களில் 60 பேர் உயிரிழக்கின்ற அதேவேளை 60 பேர் புதிதாக புகைபிடிக்கப் பழகுகின்றனர்.

புகைபிடித்தலை ஊக்குவிக்க பிரித்தானியா, அமெரிக்கா புகையிலை கம்பனிகள் கோடி கோடியாக அமைதியாக இருந்து கொண்டு இலாபம் உழைக்கின்றனர். ஆனால், இவற்றினை உணராத வறிய, சாதாரண குடும்பத்தவர்கள் அற்ப மகிழ்ச்சிக்காக அவர்களுடைய உடலையும் கெடுத்து குடும்ப மகிழ்ச்சியையும் சீரழித்து பணத்தினையும் விரயம் செய்து கொண்டிருக்கின்றனர்.
2010 ஆம் ஆண்டு விட கிழக்கில் மட்டும் 5.1 பில்லியன் ரூபாவினை அரசு புகையிலைப் பொருட்கள் மூலமாக வருமானமாகப் பெற்றுள்ளது. எனவே தான் புகைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசும் அரசு சாராத நிறுவனங்களும் சமுக நிறுவனங்களும் முன்வர வேண்டும். இதன் ஒரு முயற்சியாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்திப் பிரிவு இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை புகையிலை எதிர்ப்பு வாரங்களாக பிரகடனப்படுத்தியுள்ளது.

பொது இடங்களில் புகைபிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றினை எவரும் கருத்தில் கொள்வதில்லை. எனவே இத்தகையோரைக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்க பொலிஸார் முன்வர வேண்டும். அதேபோல 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு இவற்றை விற்க தடையுள்ள போது கடை உரிமையாளர்கள் இரகசியமாக விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

அதேபோல் பொது இடங்களிலோ, ஊடகங்களிலோ சிகரெட், புகையிலை தொடர்பான விளம்பரங்கள் செய்வதும் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
நாம் பொருட்களை வாங்கும் போது உற்பத்தித் திகதி, முடிவு திகதி, பலன் என ஒவ்வொன்றையும் பார்த்தே வாங்குகின்றோம். ஆனால், சிகரெட் பெட்டிகளிலோ, மதுசாரப் போத்தல்களிலோ பெரிய எழுத்துகளினால் எழுதப்பட்டிருக்கும் உடலுக்கு தீங்கானவை என்னும் வாசகத்தை மட்டும் வாசிக்கவோ பின்பற்றவோ தவறிவிடுகின்றோம்.

1988 ஆம் ஆண்டு பின்லாந்தும் 1994 ஆம் ஆண்டு பிரான்ஸும்  புகைத்தல் தொடர்பான விளம்பரங்களை முற்றாகத் தடை செய்துவிட்டன. அதேபோல எமது நாட்டு ஊடகங்களும் வர்த்தக அமைப்புகளும் இவற்றைத் தடை செய்ய முன்வர வேண்டும்.

ஓசோன் படலத் துவாரத்தை முதன் முதலாக எச்சரித்த விஞ்ஞானி மரணம்


-சா .சுமித்திரை -


சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தின் துவாரம் குறித்து முதன் முதலாக எச்சரிக்கை விடுத்துவரும் இரசாயனவியலுக்கான நோபல் பரிசினைப் பெற்ற வருமான ஷேர்வூர் ரொளலண்ட் தனது 84 ஆவது வயதில் கடந்த 10 ஆம் திகதி காலமானார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியராக இருந்த ரொளலண்ட் ஓசோன் படலம் எவ்வாறு பூமியை சூழ அமைந்துள்ளது? சுற்றுச் சூழல் பாதிப்பின் மூலம் அதில் எவ்வாறு துவாரம் ஏற்படுகின்றது என்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். 1974 ஆம் ஆண்டு இயற்கை தொடர்பாக எழுதிய தனது முதலாவது ஆய்வுக் கட்டுரையிலே ஓசோன் படலம் குளோரோபுளோரோக் காபன் துணிக்கைகள் மூலம் பாதிக்கப்படுவதாக எச்சரித்திருந்தார்.


3 ஒட்சிசன் அணுக்கள் இணைந்து உருவாகின்ற ஓசோன் மூலக் கூறால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓசோன் படலம் சூரியனிலிருந்து வெளிவரும் நச்சுப் புற ஊதாக் கதிர்கள்  (290 நனோ மீற்றர்களிலும் குறைவான அலை நீளமுடையவை) பூமியை தாக்காது பாதுகாக்கும் பணியைச் செய்கின்றது.

இம்மகத்தான தொழிலைச் செய்யும் ஓசோன் படலம் மனிதனின் பல்வேறு முறையற்ற நடவடிக்கைகளால் உருவாகின்ற கரிமச் சேர்ம வளிமங்கள் புவியிலிருந்து 30 கீலோ மீற்றர் தொலை வரையுற்ற வளிமண்டலப் படலங்களைச் சிதைவடைக்கின்றமையால் ஏற்படும் தாக்கங்களால் குளோரின், மற்றும் குளோரின் ஒக்சைட்டுக்கள் உருவாகி ஓசோன் மூலக் கூறுகளை நேரடியாக தாக்குகின்றன.

இதனால் ஓசோனின் மெல்லிய படலத்தில் துவாரங்கள் ஏற்பட்டு அதனூடாக புற ஊதாக்  கதிர்கள்  ஊடுருவி புவியை தாக்க வழி செய்கின்றன என ஷேர்வூர் ரௌலண்ட் தன்னுடைய உதவியாளர் மரியோ மொலினாவுடன் இணைந்து கண்டுபிடித்து இதனை தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கினார். இதனையடுத்தே அவரால் கட்டுரையில் முன்மொழியப்பட்ட கருத்துகளை கொண்டு ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

குளிர் சாதனப் பெட்டிகள், ஸ்பிரே கலன்கள், வாசனைத் திரவியங்கள், ஏரோசோல் ஸ்பிரேக்கள் போன்றவற்றின் அதீத பாவனைகள் காரணமாகவே அதிகளவு குளோரோபுளோரோக் காபன் துணிக்கைகள் வெளியேறுகின்றன. இவ் ஆய்வுக்கட்டுரை வெளியான பின்பே 1985 ஆம் ஆண்டு இரசாயன ஆய்வாளர்கள் அந்தார்டிக்கா கண்டத்தின் மேல் ஓசோன் படலத்தில் துவாரம் ஏற்பட்டுள்ளதையும் குளோரோபுளோரோக் காபன் போன்ற வாயுக்ககளின் தாக்கத்தாலேயே இது உருவானதாகவும் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்தே மேலதிக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர் இரசாயனவியலாளர்கள்.

அதேவேளை 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கையையடுத்து (இஊஇஊஇ  (குளோரோ புளோரோ காபன்) கள் மீதான சர்வதேச தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓசோன் துவாரம் கடந்த பத்தாண்டுகளை விட குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன என்பதை 3 செயற்கை கோள்களும் 3 தரை நிலையங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஓசோன் படலத் துவாரம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த ரௌலண்டுக்கு அவருடைய ஆய்விற்காக 20 ஆண்டுகளின் பின்பு 1995 ஆம் ஆண்டே இரசாயனவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவருடைய இழப்பு இரசாயனவியல் துறைக்கு ஒரு பேரிழப்பாகும். நாம் எங்களுடைய மிகச் சிறந்த நண்பனையும், ஒரு அனுபவசாலியையும் இழந்து விட்டோம் என இவினி கலிபோனியா பல்கலைக்கழக (க்இஐ ) பௌதீகவியல் விஞ்ஞானப் பீடத் தலைவர் கென்னித் யன்டா தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.

பார்க்கின்சன் நோய் காரணமாக காலமான ரொளலண்ட் வளிமண்டல இரசாயனவியல், வேதி வினை வேக இயல் ஆகிய துறைகளிலும் தனது ஆய்வினை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.