சா.சுமித்திரை
யாசித்தல் என்பது
பலருக்கு சிரமமின்றி சமூகத்தை ஏமாற்றி பணம் உழைக்கும் தொழிலாக மாறி வரும் நிலையில் இ. போ. ச. தனியார் பஸ்களிலோ, ரயில்களிலோ
பிச்சை எடுப்பதற்கு கடந்த 1 ஆம் திகதி முதல்
தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, எமது நாட்டைப்
பொறுத்தவரை பிச்சை எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துடன், இது போன்று பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக
முன்பும் தடைகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் காலத்தின் சில தேவைகளால்
அத்தடைகளும் மறக்கப்பட்டிந்தன.
இந்நிலையிலே
மீண்டும் பஸ் , ரயில் போன்றவற்றில்
பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள
பிச்சைக்காரர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தம்மை பல்வேறாக
அடையாளப்படுத்துகின்றனர். யுத்த மற்றும்
இயற்கை அனர்த்தத்தாலோ அல்லது
பிறவியிலேயோ அங்கவீநர்களாக தொழில் செய்ய முடியாதவர்கள், சொந்த பந்தங்களால்
கைவிடப்பட்ட முதியோர்கள், யுத்த காலத்தில்
சொத்துகளை இழந்து நிர்க்கதியானவர்கள்,
உடல் வளம், கல்வி வளம் இருந்தும் பிச்சை எடுப்பவர்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
பொதுவாக தலைநகர்
கொழும்பு, யாழ்ப்பாணம்,
வவுனியா, அநுராதபுரம் போன்ற வர்த்தக நகர் பகுதிகளிலேயே
பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்படும். சன நெரிசல் நிறைந்த
பொதுஇடங்களில் குறிப்பாக பஸ் நிலையங்களை அண்டிய பகுதிகளில் அநேகமான
பிச்சைக்காரர்களை நெஞ்சை உருக்கும் பரிதாபக் கோலங்களில் காணலாம்.
இவர்களால்
அப்பகுதியால் செல்வோருக்கும், பயணிகளுக்கும்
தொந்தரவுகளும் சிரமங்களும் ஏற்படுகின்ற அதேவேளை, வீதி விபத்துகளும்
ஏற்படுகின்றன.இந்நிலையில்தான் பஸ், ரயில்களில்
பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ரயிலில் பிச்சை எடுத்து மாதாந்தம் ஒரு இலட்சம்
ரூபா வரை பணம் பெற்று வந்த 60 வயதான பெண்ணொருவருக்கு
கடந்த 5 ஆம் திகதி கொழும்பு
மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் 6மாதச் சிறைத் தண்டனையையும் 2 ஆயிரம் ரூபா அபராதத்தையும் விதித்து
தீர்ப்பளித்தது.
இதேபோல, கடந்த டிசம்பர் மாதம் ராகம ரயில் நிலையத்தில்
பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருவரது சொத்து மதிப்பு 20 இலட்சம் என்ற அதிர்ச்சிச் செய்தி
வெளியிடப்பட்டிருந்தது. இது போன்று பிச்சை எடுத்தே இலட்சாசிபதியாகும் சில சம்பவங்கள் தினமும் அரங்கேறிக்
கொண்டிருக்கின்றன.
பிச்சை எடுத்தலை
ஒரு வருமானம் பெறும் தொழிலாக உயர்த்தி, அதன் மூலம் பணம் தேடும் சட்ட விரோதக் குழுக்கள் உருவாகி வருவதே ரயில் மற்றும்
பஸ்களில் பிச்சை எடுப்பதற்குத் தடை உருவாக பிரதான காரணமாகும். ஆயினும், வேறு தொழில் செய்ய இயலாத, ஒரு நேர உணவுக்காக மட்டும் கையேந்துபவர்களின்
வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே, பிச்சைக்காரர்களுக்கு எதிராக வைக்கப்படட இந்த
இலக்கு எத்தகையதொரு பொருத்தமாக அமையும் என்பதை தெளிவாகக் கூறி விடமுடியாது. இன்று
வறுமையில்லாத தேசத்தை நோக்கி “என்னும்
திட்டத்தினூடாக பல செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அரசு பிச்சைக்காரர்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது ?.
குறிப்பாக
இலங்கையில் எவ்வளவு வருமானத்திற்கு குறைந்த மட்டத்தினர் வறுமைக் கோட்டின் கீழ்
உள்ளடக்கப்படுகின்றனர் என்றோ, பிச்சைக்காரர்களும்
நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில்
உரிமைகளையோ, வசதிகளையோ ஏற்படுத்திக் கொடுப்பதிலோ அல்லது மேலும்
பிச்சைக்காரர்களாக உருவாகுவதை தடுப்பது தொடர்பிலோ எந்த விதமான கவனங்களும் இதுவரை
செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
சமாளிக்க முடியாத
வாழ்க்கைச் சுமை அதிகரிப்பால் செல்வந்தர்கள் முதல் சாதாரண வர்க்கத்தினர் வரை
திணறிக் கொண்டிருக்கும் நிலையில், பிச்சைக்
காரர்களுக்கு எந்தவிதமான மாற்று வழிகளையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் பஸ்களில் பிச்சை எடுப்பதற்கு தடை
விதித்துள்ளமையானது மிகவும் இன்னல் படுபவர்களை மேலும் மேலும் துன்பத்தில்
ஆழ்த்தும் செயலாகும்.
இந்தத் தடைகளையும் மீறி சிலர் தமது வயிற்றுப்
பிழைப்பிற்காக பஸ்களில் ஏறிப் பிச்சை
எடுக்க முயற்சி எடுக்கும் போது பஸ் நடத்துனர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்குமிடையே
வாய், கைத் தகராறுகளும்
ஏற்படுகின்றன. இதனால் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல என்ன செய்வதென்று
தெரியாமல் விழிக்கின்றனர்.
யாரும்
பிச்சைக்காரர்களாகப் பிறப்பதில்லை. சமுதாயத்தால் தான் பிச்சைக்காரர்களாக
உருவாக்கப்படுகின்றனர் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. எனவே, நாட்டில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை
எவ்வளவுக்கு அதிகரிக்கின்றதோ அவ்வளவுக்கு நாட்டின் பொருளாதாரம் பின்னடைவைச்
சந்திக்கின்றது.
"கிராமத்தில் விவசாயம் செய்து வந்தேன், விவசாயத்தில்
நட்டம் ஏற்பட்டு கடனுக்கு சொத்து பறிமுதலாகி விட்டது. நகரத்தில் வேலை தேடி வந்தும்
வேலை கிடைக்கவில்லை. இறுதியில் நிரந்தரமாக பிச்சை எடுப்பது தொழிலாகி விட்டது'
என்கின்றார் ஒருவர்.
அதேபோல் பிள்ளைகளால் கவனிக்கப்படாமல், துன்புறுத்தப்படுகின்றமையால் வெளியேறும் முதியவர்கள், பல காரணங்களால்
வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறும் சிறுவர்கள் வயிற்றுப்பசிக்குப் பிச்சை
எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இது போன்ற காரணங்கால் பிச்சை எடுக்கும்
சூழல் உருவாகின்றது.
பிச்சைக்காரர்களின்
எண்ணிக்கை உயர்வடைய சமுக விரோதக் குற்றங்களும் அதிகரிக்கின்றன. தலைநகரில்
மட்டுமல்லாது கண்டி, காலி, குருநாகல்,
அநுராதபுரம் ஆகிய
பகுதிகளிலும் பிச்சைக்காரர்களை வைத்துப் பிழைக்கும் ஈனக் கும்பல்கள் பெருகி
வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் போதை வஸ்து, மது பாவனைகளுக்கு அடிமையானவர்கள் என்றும்
கூறப்படுகின்றது. அத்துடன், கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கும் துணை போகின்றனர்
என்ற குற்றச்சாட்டுகளும் மேலெழுந்து வருகின்றன.
அதேபோல , ஒரு மனிதனின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும்
அருகதை எமக்கு இல்லாத போதிலும், ஒரு சில
பிச்சைக்காரர்களது முறையற்ற நடவடிக்கைகள் எம்மை அருவருக்கச் செய்வதுடன், ஏனையோருக்கு சுகாதாரப் பிரச்சினைகளும், தொற்று நோய்களும் ஏற்படும் வகையிலும்
அமைந்துள்ளன.
இதுபோன்ற
சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் உடனடி நடவடிக்கைகளையோ அல்லது தடைகளை
விதிப்பதன் மூலமோ எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
பிச்சைக் காரர்கள்
தொடர்பான அக்கறையுள்ள செயற்றிட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படாவிட்டாலும்
அவர்களின் வாழ்வியல் போராட்டத்திற்கு மென்மேலும் சவாலான விடயங்களை
முன்னெடுப்பதினூடாக எவ்வாறு வறுமையற்ற தேசம் என்னும் திட்டத்தை வெற்றியளிக்கச்
செய்ய முடியும்?
இன்றைய
உலகில் பிச்சைக்காரர்கள் இல்லாத நாடே
இல்லையெனக் கூறலாம். அமெரிக்கா, இங்கிலாந்து,
கனடா, ஜப்பான் போன்ற அபிவிருத்தி கண்ட நாடுகளில் கூட
பிச்சைக்காரர்கள் என்ற வர்க்கமொன்று இருக்கின்றது. ஆனால், அந்தந்த நாடுகளுக்கேற்ப அவர்களின் வாழ்க்கைத்
தரமும் தமது தொழிலுக்கு பயன்படுத்தும் யுக்திகளும் வேறுபடுகின்றன. அத்துடன்,
அந்நாடுகளின் அரசு
குறிப்பிட்ட வருமானம் பெறும் வர்க்கத்தினரை விட மிகக் குறைந்த வருமானத்தை பெறுவோரை
வறியவர்கள் என்னும் மட்டத்திற்குள் நிர்ணயித்துக்
கொள்கின்றது.
இதேவேளை, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்,
குறிப்பிட்ட தொகை பணம்
என்பவற்றையும் மாதந்தோறும் வழங்கி வருகின்றது. அத்துடன், சுய தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்
கொடுப்பதுடன், அவர்களது
பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி நிலையிலும் அதிக கவனம் செலுத்தி வறுமைக் கோட்டு
மட்டத்திலிருந்து உயர்த்தி வாழ்வாதாரத்தை முன்னேற்றுகின்றது.
ஆனால், எமது நாட்டில் இது போன்ற முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத்
தெரியவில்லை. குறிப்பாக, வட கிழக்கு பகுதி
கடந்த கால யுத்தத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. சொத்து, உயிரிழப்புகளை சந்தித்து, மன நிலை பாதிக்கப்பட்டு, உறவுகளாலும்
கைவிடப்பட்ட நிலையில் வீதியோரப் பிச்சைக்காரர்களாக நாளாந்த வாழ்க்கையை
கொண்டு செல்கின்றனர்.
பொது
வாகனங்களில் ஏறி பிச்சை எடுப்போரில் சிலர்
இலட்சாதிபதியாக உருவாகி வர பலர் கட்டாக்காலி நாய்கள் போன்று வாழும் நிலைக்குத்
தள்ளப்படுகின்றனர். பிச்சை எடுப்பதிலேயே ஏன்
இந்த ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
எமது நாட்டை
பிச்சைக்காரர்கள் அற்ற தேசமாக மாற்ற வேண்டுமாயின் அவை தொடர்பான நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும்.
பிச்சைக்காரர்களது
வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும்,
அவை பெரிதாக
வெற்றியளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
கடந்த பல வருடங்களாக பிச்சைக்காரர்களுக்கென அமைக்கப்பட்ட நலன்புரி
முகாம்களிலிருந்து பிச்சைக்காரர்கள் தப்பிச் சென்றிருப்பதே உண்மை. அவர்களில் 87 வீதமானோர்
சமூகத்தில் வாழ்வாதார உதவிகளை எதிர்பார்க்கவில்லை என்றும், அவர்கள் பிச்சைக் காரர்களாகவே இருக்க விரும்புவதாகவும் அரச அதிகாரிகள்
குற்றஞ்சாட்டுகின்றனர்.
இத்தகையோருக்கு
மன வள ஆலோசனைகளையே முதலில் வழங்க வேண்டும். இதனை விடுத்து, நலன்புரி முகாம்களில் சிறைக் கைதிகள் போல
அடைப்பதில் எந்தப் பயனும் இல்லை.
ஏனெனில்
வாழ்வதற்கு இலகுவான வழி பிச்சை எடுத்தலே என்ற மனநிலைக்கு அவர்கள்
பழக்கப்படுகின்றனர். குறிப்பாக வீடுவாசல் இல்லாதவர்கள், தொழில்
இல்லாதவர்கள், உடல்
ஊனமுற்றவர்கள் எனப் பல வகையினர் பிச்சை எடுத்தாலும் இன்று பிச்சை எடுப்பது ஒரு தொõழிலாக மாறி வருவதை அவதானிக்க முடிகின்றது.
சில பெண்கள் சிறு
குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு பரிதாபகரமாகக் காண்பித்து வெயில்,
மழை எனப் பாராது அலைந்து
கொண்டிருக்கின்றனர். இந்நடவடிக்கைக்காக சிறு குழந்தைகள் வாடகைக்கு விடப்படும்
சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு
கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு புனர்வாழ்வளித்து மன நிலையினையும் ஆரோக்கியமாக வளப்படுத்த வேண்டும்.
மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதினூடாக
அவர்களுக்கு வாழ்க்கையை வாழ ஆர்வம் ஏற்படுகின்றது.
தமது நிகழ்கால எதிர்கால
வாழ்க்கைமீது பற்று ஏற்படுகின்றமையால் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உந்து சக்தி
மனதில் ஏற்படும்போது சுயதொழில் வாய்ப்புகளோ அல்லது வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளோ
வழங்கலாம். அதனை அவர்கள் விருப்பத்துடன் ஏற்று தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்
கொள்வார்கள்.
அதே போல சில மறுவாழ்வு நலன்புரி நிலையங்களில் சேர்க்கப்படும் சில
வயோதிபர்கள் அங்குள்ளவர்களால் சித்திரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாகி
வருவதாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே அவ்வமைப்புக்களை விட்டு வெளியேறி மீண்டும்
பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே, அந்நிலையங்களில் சிறப்பான முகாமைத்துவம்
உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் இலங்கையைப் பொறுத்தவரை இலவசக் கல்வி,
இலவச வைத்தியசேவை என்பன
வழங்கப்படுகின்றன.
ஆனால்
பிச்சைக்காரர்களுக்கோ அவர்களது பிள்ளைகளுக்கோ இச்சேவை முழுமையாகச் சென்றடைகின்றதா?
என்பதைச் சற்று
யோசித்துப் பார்க்க வேண்டும்.
இதேவேளை புதிதாக
பிச்சைக்காரர்கள் உருவாகாமல் தடுக்க
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அத்துடன்
சுயதொழில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க
வேண்டும்.
பிச்சைக்காரர்களின்
தொகை அதிகரிக்கின்றது. அவர்களால் நாட்டில் பல பிரச்சினைகள் உருவாகின்றன.
பொதுமக்களுக்கு தொந்தரவுகளை உருவாக்குகின்றனர் என்று அரசு கூறிக் கொண்டு பிச்சை
எடுப்பதற்குத் தடை செய்வதால் எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. அதே போல
பிச்சைக்காரருக்கு எழுந்தமான தீர்வுகள் வழங்குவதாலும் எதுவும் நடக்கப்
போவதுமில்லை.
எனவே பிச்சைக்காரர்களின் இன்றைய நிலைக்கு
அவர்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரிகளும் காரணமாக அமைந்துள்ளனர் என்பதே உண்மை.
அவை ஒவ்வொன்றும் இனங்கண்டு தீர்க்கப்படுவதன்மூலமும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்துவதற்கு ஏதேனும் மாற்றுத் தொழில்கள், பயிற்சிகள், உதவித் தொகைகள், அடிப்படை வசதிகள், மனநல ஆலோசனைகள் என்பவற்றை வழங்க அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.