ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கொழுந்து விட்டெரியும் எண்ணெய் வள நாடு

சா.சுமித்திரை

சுதந்திரம் பெற்று சிறிது காலத்திற்குள்
அதிகாரப் போட்டிக்குள் சிக்கித்
தவிக்கும் தென் சூடான்


உலகில் புதிய நாடாக உதயமாகிய தென் சூடானில் இனப்படுகொலைகள், வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வீதிப் பேரணிகள், கொந்தளிப்புகள் என கடந்த இரு வார காலமாகவே ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே, இரு தசாப்தங்களுக்கு மேலாக நீடித்திருந்த உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டிருந்த சூடானியர்களுக்கு தற்போதைய  பதற்றமான நிலைமை மிக மோசமான விளைவுகளையே நிச்சயம் ஏற்படுத்தப் போகின்றது. 

தற்போதைய நிலைமை மூலம், சிவில் யுத்தத்திற்கான உள்மறைவொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் மிக மோசமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் அங்குள்ள ஐ.நா. தூதரகங்களில் புகலிடம் கோரி ஆயிரக்கணக்கான தென் சூடானியர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருந்த போதிலும் உயிருக்குப் பயந்து தஞ்சம் புகுந்துள்ள அப்பாவி மக்களின் முகாம்களைக் கூட, விட்டு வைக்காது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அப்பாவி மக்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இரு தலைமைகளின் அதிகார மோதல்களே காரணமாக அமைந்துள்ளன. 

சுதந்திரம் கண்ட பின்னர் குறுகியதொரு வரலாற்றினை மட்டுமே கொண்டுள்ள தென் சூடான், பாரியதொரு சவாலுக்கு சர்வதேச ரீதியில் முகம் கொடுத்துள்ளது. 

தென் சூடானின் பெரும்பான்மை பழங்குடியினமான டிங்கா பிரிவைச் சேர்ந்தவர் ஜனாதிபதி சல்வா கிர். இவர் தன்னை கவிழ்க்க சதி முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றஞ் சாட்டியதையடுத்தே இந்த பாரிய வன்முறைகள் வெடித்துள்ளன. 

இதற்குக் காரணமானவரெனக் குற்றஞ் சாட்டப்படும் முன்னாள் துணை ஜனாதிபதி ரியேக் மக்சார் முதலில் இந்தக் குற்றச்சாட்டினை மறுத்த போதிலும் பின்னர் அரச எதிர்ப்புப் படைகள் மக்சார் தலைமையிலேயே செயற்படுகின்றமையை உறுதிப்படுத்திக் கொண்டார். தென் சூடானின் இரண்டாவது பெரும்பான்மையினமாக நூர் பிரிவு உள்ளது. மக்சார் இந்தப் பிரிவையே சேர்ந்தவராவார். 

மக்சார் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை துணை ஜனாதிபதி பதவியிலிருந்து கீர் அகற்றியிருந்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு மேலாக, அதிகார உட்பூசல்களே இந்தப் பதவி அகற்றலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்ததென பரவலாக விமர்சனங்கள் எழுந்திருந்தன. 

இந்நிலையிலேயே ஆளும் சூடான் மக்கள் விடுதலை முன்னணிக்குள் மீண்டும் அதிகார மோதல்களுக்காக சொந்த மக்களையே படுகொலை செய்யும் அளவுக்கு ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர். ஏற்கனவே, தென்சூடானில் 90 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். அதிக எண்ணெய் வளம் நிறைந்த நாடாக உள்ள போதிலும் பல்வேறு நிலைகளிலும் எவ்வித அபிவிருத்தி  இல்லாமலேயே காணப்படுகின்றது. குறிப்பாக தென் சூடான் தனித்து இயங்கும் நிலையை எட்டுதற்கு நாட்டின் உருவாக்கம் மற்றும் கட்டுமானப் பணிகளிலும் பாரிய சவால்கள் நிறைந்து காணப்படுகின்றன. அத்துடன், துறைசார் நிபுணத்துவமும் ஆளணி வளங்களும் பெருமளவில் தேவைப்படுகின்றது. 

அதிக எண்ணெய் வளம்  தென் சூடானில் காணப்படுகின்ற போதிலும் எண்ணெய் ஏற்றுமதிக்காக சூடானையே பெரிதும் தங்கியிருக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. ஏனெனில், தென்சூடானது கடல் தொடர்புகள், துறைமுகம் என்பன இல்லாத புவியியல் அமைவிடத்தைக் கொண்டுள்ளது. 
எனவே, எண்ணெய்க் குழாய்கள் மூலம் சூடான் துறைமுகத்திற்கு எரிபொருள் எடுத்துச் செல்லப்பட்டு  செங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதி  செய்யப்பட வேண்டும். 

இதுபோன்று தென் சூடானின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வேறு நாடுகளை அது தங்கியுள்ளது. அத்துடன், அங்குள்ள மக்கள் கல்வியறிவு, சுகாதார வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளிலும் பின்தங்கியே உள்ளனர். இந்நிலைமையில் இப்படியான வன்முறைகளும் ஆர்ப்பாட்டங்களும் நிச்சயம் எதிர் விளைவுகளை மட்டுமே அங்கு ஏற்படுத்தப் போகின்றது. 

கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வரும் மோதல்களில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

பாதுகாப்புப் படையினரால், நூர் இனத்தைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஐ.நா. அதிகாரிகள் முன் சாட்சியம் அளித்துள்ளனர். 

டிங்கா இனக்குழுவைச் சேர்ந்த துப்பாக்கிதாரர்களே நூர் இனத்தைச் சேர்ந்தவர்களை சரமாரியாக சுட்டுக் கொலை செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஐ.நா. பொதுச் செயலர் பான்கீ மூனின் பரிந்துரைக்கமைய மேலதிக துருப்புகளை அனுப்பும் தீர்மானம் மீது ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பும் இடம்பெற்றிருந்தது. 

இதில் 12,500 அமைதி காக்கும் படையினரையும் 1323 சர்வதேச பாதுகாப்புப் பொலிஸாரையும் அனுப்புவதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. இதனையடுத்து, இந்த நெருக்கடிக்கு இராணுவம் மூலம் தீர்வு காண முடியாதெனவும் நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்த அரசியல் மூலமே தீர்வு காண வேண்டுமெனவும் ஐ.நா. பொதுச்செயலர் பான்  கீ மூன் வலியுறுத்தியதுடன் ஐ.நா. குழுவினரை அங்கு 48 மணித்தியாலங்களுக்குள் சென்று பணியைத் தொடருமாறு கூறியுள்ளார். 

கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென் சூடானில் சமாதான உடன்படிக்கைக்கு உலகத் தலைவர்களும் வலியுறுத்தி அழைப்பு விடுத்துள்ளனர். 

யேசு கிறிஸ்து பிறப்பின் மகிமையைக் கூறும் இம் மாதத்தில் இரத்தம் படிந்த வாரமாக தென்சூடான் காணப்படுகின்றமை வேதனையானதாகும். அதுவும் அங்கு மூன்று பாரிய மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டமை சர்வதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

தலைநகர் ஜுபாவில் இரு மனித புதை குழிகளும் பென்ரியூவில் ஒரு மனிதப் புதை குழியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காமல் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். 

இன ரீதியாக மக்கள் கொல்லப்படுகின்ற தற்போதைய நிலைமையானது ஒரு நோக்கத்திற்காக மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் புதிய நாடு இனக் கலவரத்தை நோக்கி திசை திருப்பப்பட்டுள்ளது. 

இந்த திசை திருப்பல் மூலம் தென் சூடானினுள் நேரடியாகவே சர்வதேச நாடுகளின் தலையீடுகள் மேலோங்கியிருக்கப் போகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் கிழக்குப் பிராந்தியமான யொங்லைய்யின் தலைநகர் பொரில், விமானமொன்று சுடப்பட்டதில் அமெரிக்கப் பிரஜைகளை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு அமெரிக்க அதிகாரிகள் காயமடைந்திருந்தனர். 

இச்சம்பவத்திற்கு அமெரிக்கா தனது பலத்த கண்டனங்களை வெளியிட்டிருந்ததுடன் இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதானது அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்தினரால் வழங்கப்படும் நீண்ட கால ஆதரவினை முடிவுக்கு கொண்டு வரக் காரணமாகி விடுமென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்தும் இருந்தார்.

நாட்டிலுள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய  பொறுப்பு தென் சூடானியர்களுக்கு உள்ளதென வலியுறுத்திக் கூறியதுடன் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனது தேசிய பாதுகாப்புக் குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் சும்மாவே தலையிட அமெரிக்கா முயலும், இந்நிலைமையில் தென் சூடானில் கணிசமான முதலீட்டுத் திட்டங்களை அமெரிக்கா வைத்துள்ளது. எண்ணெய் விவசாய அபிவிருத்தி மற்றும் நீரலை மூலமான சக்தி உருவாக்கம் குடிநீர் (நைல் நதி) போன்ற முதலீட்டினை மேற்கொள்ளும் திட்டங்களை கைவசம் வைத்துள்ளது.  இத்திட்டங்களை மேம்படுத்த இந்த விமானத் தாக்குதலென்ற காரணமே போதுமானதாகும். 

ஏற்கனவே, இந்த காரணத்தைக் கூறி நகரில் பீரங்கிகள், ஹெலிகொப்டர்கள், சிவி22 ஒஸ்பிரேஸ் ரக எறிகணை விமானங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. 

மேலும் ஸ்பெயினில் நிறுத்தப்பட்டிருந்த 150 கடற்படையினரை டஜிபோரில் உள்ள தனது தளத்திற்கு ஒபாமா நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. டயிபோரிக்கும் தென் சூடானுக்குமிடையிலான தூரம் வெறும் ஆறு மணித்தியாலங்களேயாகும். 

அதேபோல் தென் சூடானை சுற்றியுள்ள தனது பிராந்திய இராணுவ முகாம்களிலும் நவீன ரக ஆயுதங்களை அமெரிக்கா குவித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. 

ஏற்கனவே, சூடானிலிருந்து தென் சூடான் பிரிந்து செல்வதற்கு அமெரிக்கா இரு காரணங்களுக்காக தனது ஆதரவினை வழங்கியிருந்தது. ஒன்று, எண்ணெய் வள ஏற்றுமதிக்கான தனியுரிமையினை சூடான் அரசாங்கம் சீனாவிற்கு வழங்கியிருந்தமையாகும். மற்றையது எல்லை கடந்த இஸ்லாமிய தீவிரவாதத்திற்கான தளமாக சூடான் செயற்பட்டமையாகும். 

இவ்விரண்டிலும் அமெரிக்காவின் சுயநலமே காணப்பட்டது. தற்பொழுது, உள்நாட்டு நெருக்கடியையும் தனக்கு சாதகமாக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. 

இந்த நிலையில் சீனாவின் தலையீடு என்னவாக இருக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

இதேவேளை, தலைநகர் ஜுபாவில் ஜனாதிபதி கீருடன் எதியோப்பியா மற்றும் கென்யா ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தையொன்றினை வியாழக்கிழமை மேற்கொண்டிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கென்யாவின் தலைநகர் நைரோபியில் கிழக்கு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த எட்டு அரச தலைவர்களுடனும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. 

தென் சூடானிய நெருக்கடியினை முடிவுக்கு கொண்டு வரும் நிலையிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும், அந்நாட்டின் இரு தலைமைகளுக்குமிடையிலான அதிகார மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமும் அந்நாட்டின் மீதான சர்வதேசத்தின் கள்ளக் காதலை தடுத்து நிறுத்துவதன் மூலமே நிரந்தரமான தீர்வு எட்டப்பட முடியும். 

இதேவேளை, இந்த நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாவது காணப்பட வேண்டும்.  சிறிய தீப்பொறி போல உருவான நெருக்கடி 14 நாட்களுக்குள் தென் சூடானின் அனைத்து பிராந்தியங்களிலும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது. அதன் தாக்கம் அயல் நாடுகளிலும் தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க வேண்டுமாயின், உடனடித் தீர்வு கட்டாய தேவையாகின்றது. 

சுதந்திரம் கிடைத்த பின்னரான  மிகவும் குறுகிய வரலாற்றினைக் கொண்ட தென்சூடான் மிக மோசமான வன்முறைகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளமையானது  அந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தினை கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும் அதேவேளை, எதிர்காலத்தில் பிரிவினை கோரும் நாடுகளினதோ அல்லது தீவுகளினதோ  சுதந்திர பிரகடனங்களுக்கு சர்வதேசம் அங்கீகாரம் வழங்குமா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. 

சனி, 28 டிசம்பர், 2013

இன்னும் துலங்காத மர்மம்

சா.சுமித்திரை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப் கென்னடி உயிரிழந்து 50 வருடங்கள் ஆகியுள்ள போதிலும் அவரின் படுகொலைக்கான காரணம் இதுவரை அமெரிக்க மக்களுக்கு தெரிவிக்கப்படவே இல்லை.

 இருந்த போதிலும் எத்துறை பிரபலங்களாயினும் அவர்கள் உயிரிழந்த பின்னரும் அவர்கள் தொடர்பான சுவாரசியங்கள் சர்ச்சைகள் மர்மங்கள் வெளியாகிய வண்ணமே இருக்கும். அவற்றில் எந்தளவிற்கு உண்மை உள்ளது அவை எந்தளவிற்கு போலியானவை என எதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது.

அமெரிக்காவின் 35 ஆவது ஜனாதிபதியான ஜோன் எப். கென்னடியின் 50 ஆவது நினைவு தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் உயிரைப் பறித்த மர்மத் தோட்டா தொடர்பான திடுக்கிடும்  தகவலை அவருக்கு முதலுதவியளித்த தாதியொருவர் வெளியிட்டிருந்தார்.

கென்னடியின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற நேரத்திலே 28 வயது இளநங்கையாகவிருந்த பைலிஸ் ஹால் என்ற இந்த மருத்துவ தாதிக்கு தற்பொழுது 78 வயதாகிறது. அந்த நிகழ்வு பற்றி அவர் கூறுகையில்,
தலையில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கென்னடியின் தலையைத் தூக்கிப் பிடித்தபடியே அவரது சுவாசம் சீரடைவதற்காக முதலுதவியை நான் வழங்கினேன்.

 அப்பொழுது நான் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டேன். துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்த பலருக்கு நான் சிகிச்சையளித்துள்ளேன். ஆனால் அன்று கண்டது போல் நான் இதுவரை பார்த்ததே இல்லை. கென்னடியின் காதுக்கும் தோள் மூட்டுக்கும் இடையில் கூர்மையான ஒரு விசித்திர துப்பாக்கி ரவையைப் பார்த்தேன். அந்த ரவை சுமார் 1 1/2 அங்குள நீளமிருந்தது.
 சாதாரணமாக துப்பாக்கியிலிருந்து வெடித்து சீறிப் பாயும் தோட்டாக்களின் முனை மழுங்கிப் போயிருக்கும். ஆனால் கென்னடியின் தலையில் பாய்ந்த அந்த தோட்டாவின் முனையில் கூர்மை மழுங்காமல் இருந்தது.

அத்துடன் துப்பாக்கிக் குழலிலிருந்து வெளியேறும் வேகத்தில் தோட்டாவின் வெளிப்பகுதியில் தேய்வது போன்ற உராய்வுகளுக்கான அறிகுறி தென்படும். அதுவும் அந்தத் தோட்டாவில் காணப்படவில்லை.இந்தத் தோட்டா எந்த வகைத் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க இயலாத நிலையில் அது இருந்ததாகவும் பைலிஸ் தெரிவித்திருந்தார்.

கென்னடி படுகொலை தொடர்பான விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட தோட்டாக்களிலிருந்து அது மிகவும் வித்தியாசமாகத் தோற்றமளித்தது.
ஆயினும் அந்த தோட்டாவும் சத்திர சிகிச்சை  மூலம் அவரது உடலிலிருந்து அகற்றப்பட்டது. ஆனால் கடைசி வரை அந்த தோட்டா நீதிமன்ற விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படவே இல்லையெனவும் பைலிஸ் தெரிவித்திருந்தார்.

ஆனால் பைலிஸினால் தற்பொழுது வெளியிடப்பட்ட தகவல் தொடர்பில் அமெரிக்காவின் எப்.பி.ஐ. எந்தக் கருத்துகளையும் வெளியிடவோ அல்லது விசாரணையை நடத்தவோ இல்லை.

அதேசமயம் பைலிஸ் இந்த தகவல்களை 50 வருடங்களின் பின்னர் அம்பலப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்னவெனத் தெரியவில்லை.
ஏற்கனவே இதனையறிந்திருந்த பைலிஸ் இத்தகவலை வெளியிடக்கூடாதென எவராலும் அச்சுறுத்தப்பட்டிருந்தாரா? அல்லது அக்காலப்பகுதியில் இதனை வெளியிடுவதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சியிருந்தாரா? எனத் தெரியவில்லை.

எப்படியாயினும் இந்த இரகசியம் தற்பொழுது கசிய விடப்பட்டுள்ளதால் இனிமேலும் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படாது  என்பதற்கு என்ன நிச்சயம் உள்ளது? அதேபோல் நற்பெயரைப் பெறுவதற்காக பொய்யான தகவலை வெளியிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆயினும்  இவ்விவகாரம் தொடர்பிலே விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை உண்மைகள் வெளியாகப் போவதில்லை. அத்துடன் கென்னடியின் படுகொலையின் மர்மம் துலங்கும் வரை இது போன்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும்.

1963 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதியன்று டெக்சாஸ் மாகாணத்தின் ரெஸ்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும் போதே எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு கென்னடியின் தலையில் பாய்ந்தது. ஆயிரக் கணக்கானோர் அவரை வரவேற்கக் காத்திருந்த போது அங்கேயே திறந்த காரில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்த கென்னடியின் உயிர் கண்ணிமைக்கும் நேரத்தில் பறிக்கப்பட்ட சம்பவம் சர்வதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

உலகின் மிகப்பெரும் தலைவர்களின் ஒருவராக விளங்கிய கென்னடி மனைவி ஜாக்குலினுடன் காரில் ஊர்வலமாகச் சென்ற போது வீதியின் இருபுறமும் திரண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மக்களைப் பார்த்து கை அசைத்த படியே சென்று கொண்டிருந்த கென்னடியின் தலையிலும் கழுத்திலும் துப்பாக்கி ரவைகள் திடீரெனப் பாய்ந்தன. காருக்குள் சுருண்டு விழுந்த கென்னடியை ஜாக்குலின் தாங்கிக் கொண்டு கதறினார். கண் இமைப்பதற்குள் அனைத்து சம்பவங்களும் முடிந்திருந்தன.

கென்னடி கொல்லப்பட்ட சில மணித்தியாலங்களுக்குள்ளேயே லீ ஹார்வே ஒஸ்வோல்ட் என்ற 24 வயதான இளைஞனொருவன் கைது செய்யப்பட்டிருந்தான்.

ஒஸ்வோல்ட் கடற்படையில் முன்பு பணியாற்றியிருந்தவன் எனக் கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட அவனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக 1963 நவம்பர் 24 ஆம் திகதியன்று பொலிஸார் வெளியே அழைத்து வந்தனர்.

சிறைக்கு முன்னால் பெரும் கூட்டமொன்று கூடியிருந்தது. இக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஜேக் ரூபி என்ற 42 வயதான ஒருவர் ஒஸ்வோல்டை மிகவும் அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டார். குறி தவறாது ஒஸ்வோல்டின் மார்பைக் குண்டு துளைக்க அவன் அதேயிடத்தில் உயிரிழந்தான்.

ஒஸ்வோல்ட் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கென்னடி ஏ ன் சுட்டுக் கொல்லப்பட்டார் அவர் படுகொலை செய்யப்படுவதற்கான பின்னணி என்ன? ஒஸ்வோல்ட்டினை யாரும் தூண்டி விட்டார்களா? என எதுவுமே தெரியாமல் உலகம் திகைத்துப் போனது.

ஒஸ்வோல்டை சுட்டுக் கொலை செய்த ரூபியையும் பொலிஸார் கைது செய்து அவர் மீது வழக்கும் தொடரப்பட்டிருந்தது. ரூபி இரவு விடுதியொன்றின் உரிமையாளராவார். 1964 ஆம் ஆண்டு மார்ச்சில் ரூபிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் ரூபி ஒரு மன நோயாளியென அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியதால் தூக்கில் போடப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டார். 1967 இல் சிறையிலிருந்தே உயிரிழந்தார்.ரூபி ஒரு மனநோயாளி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் மீதான விசாரணைகளும் மூடப்பட்டன.இதன் மூலம் கென்னடியின் படுகொலையின் இரகசியமும் அம்பலமாகவில்லை.

2 ஆம் உலகப் போர் முடிந்து 16 ஆண்டுகளே ஆகியிருந்த நிலையிலேயே ஜோன் எப். கென்னடி ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். 1954 இல் ஜனாதிபதியாகவிருந்த ட்ரூமனின் நிர்வாகம் உலகின் ஏகபோக  முதலாளித்துவ வல்லரசு நாடாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வறிய நாடுகளையெல்லாம் கபளீகரம் செய்யும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.

கென்னடியும் தனது அரசியல் பயணத்தினை அவ்வாறே ஆரம்பித்திருந்தார். கென்னடி பதவியேற்ற காலப்பகுதியில் பல நாடுகளில் முதலாளித்துவத்திற்கெதிரான போராட்டங்களும் ஆட்சி மாற்றங்களும் மக்கள் புரட்சிகளும் உச்சக் கட்டத்திலே இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இவற்றினை தடுத்து நிறுத்தி தனது ஆளுமைக்குள் கொண்டு வர அமெரிக்கா முயற்சித்தது.

இதனொரு கட்டமாக கியூபா வியட்நாம் மீது படையெடுக்க கென்னடி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. ஆயினும் தனது நிலைப்பாட்டை கென்னடி பின்னர் மாற்றிக் கொண்டார்.

இக்காலப்பகுதியில் சகல அதிகாரம் பெற்ற அமைப்பாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரமைப்பு (சி.ஐ.ஏ.) தன்னை வளர்த்துக் கொண்டிருந்தது. இந்நிலையில்  கென்னடியின் நிலைப்பாட்டினால் அவரோடு முப்படைத் தளபதிகளும் முரண்பட்டனர். இதனால் கென்னடியின் கருத்துகளுடன் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கருத்துகளும் முரண்பட்டுக் கொண்டன.

இந்நிலையிலேயே கென்னடி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆயினும் தனிநபர் ஒருவரின் ஆத்திரமே கென்னடியின் படுகொலைக்குக் காரணமெனக் கூறி அவரின் சகாப்தத்தினை முடித்து விட்டது அமெரிக்கா.

உலகத் தலைவர்களின் தனிப்பட்ட மற்றும் அரசியல் விடயங்களையும் உள்நாடுகளில் குழப்பங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. யிற்கு தன் வீட்டில் இடம்பெற்ற சம்பவத்திற்குக் காரணம் கண்டு பிடிக்க முடியாது போனமை வேடிக்கையான விடயமாகும்.


இளவரசரின் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

சா.சுமித்திரை

உலகளாவிய ரீதியில் சாந்தசொரூபரான யேசு நாதரின் பிறப்பைக் கொண்டாடும் நத்தார் பண்டிகையின் ஆரவாரங்கள் வழமை போலவே காணப்படுகின்ற நிலையில் பிரிட்டன் அரச குடும்பத்தினர் மட்டும் தமது குட்டி இளவரசர் ÷ ஜார்ஜின் வருகை காரணமாக வழமைக்கு மாறான வகையில் பிரமாண்டமாகவும் அரச குடும்பத்தின் ஆழமான கலாசார விழுமியங்களை உள்வாங்கியும் கிறிஸ்ஸ்மஸைக் கொண்டாடுகின்றனர்.

பிரிட்டனின் வரலாற்றில் சுமார் 100 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக முடி சூடுவதற்காகக் காத்திருக்கும் மூன்று இளவரசர்களுடன்  கிறிஸ்மஸ் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுகின்றது.

1992 இல் வின்ஸர் கோட்டையில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களின் பொழுது அரச குடும்பத்தினர் ஒன்று கூடும் இடமாக இரண்டாம் எலிசபெத் மகாராணிக்குச் சொந்தமான நோவூத் பெருந்தோட்டத்திலுள்ள சாடிரிங்ஹம் மாளிகை காணப்படுகின்றது
.
கடந்த வருடங்களைப் போலல்லாது இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையின் போது அரச குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றிணையவுள்ளனர்.கடந்த 2012 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையின் போது கேட் வில்லியம் தம்பதி பக்லேபேரியில் இருந்தனர். இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் கடமையின் நிமித்தம் சென்றிருந்தார். ஆனால் இம்முறை கொண்டாட்டங்களின் போது இவர்களுடன் நத்தார் பண்டிகையின் முதன்மை விருந்தினராக இளவரசர் ஜோர்ஜ்ஜும் இருக்கப் போகின்றார்.

இளவரசர் வில்லியமிற்கு இந்த நத்தார் பண்டிகைக் கொண்டாட்டம் புதியதல்ல. ஆனால் கேட் மிடில்டனுக்கு இது புதிய சடங்குகள் கொண்டதொரு நத்தாராகும்.

பிரிட்டன் அரச குடும்பத்தினரின் நத்தார் பண்டிகை மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். எனினும் நடைபெறவுள்ள மாற்றங்கள் தொடர்பாக மிடில்டன் தான் தயாராகவிருப்பதாகக் கூறியுள்ளார்.

மாலைநேர உடை, பகல் நேர உடைகள், அவற்றுக்குரிய அணிகலன்கள் என பல்வேறான அலங்காரங்கள் இதற்காக தேவைப்படுகின்றன. நத்தார் தினத்தன்று மட்டும் கேட் மிடில்டன் ஐந்து உடைகளை மாற்ற வேண்டும். இதேவேளை இளவரசர் ஜோர்ஜின் குறும்புத் தனங்கள் மீதும் சிறு கண் வைக்க வேண்டிய பொறுப்பும் கேட்டுக்கு உள்ளது.

நிகழ்வின் போது இளவரசர் ஹரி, இளவரசர் சார்ள்ஸ் மற்றும் கமிலா, ஸாரா ரின்டால் மற்றும் அவருடைய கணவர் மைக், இளவரசர் எட்வேட் மற்றும் அவருடைய மனைவி, லேடி ஸாரா ஸாடோ மற்றும் கணவர் டானியல் உட்பட அரச குடும்பத்தின் நெருங்கிய உறுப்பினர்கள் 25 பேர் கலந்து கொள்கின்றனர்.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வின் போது அரச குடும்பத்தின் குட்டி வாரிசு ஜோர்ஜினை வரவேற்க எடின்பேர்க் இளவரசர் பிலிப் மற்றும் மகாராணி எலிசபெத் ஆகியோர் தயாராக இருப்பர்.

தொடர்ந்து 20 அடி உயரமான நத்தார் மரத்தினை அலங்கரிப்பதற்கு சகல குடும்பத்தினரும் உதவிகளை வழங்குவர். பின்னர் வழமை போலவே இளவரசர் பிலிப் தங்கத்திலான நட்சத்திரத்தை கிறிஸ்மஸ் மரத்தின் உச்சியில் வைப்பார் அதேபோல் மகாராணி கண்ணாடியிலான தேவதை (ஏஞ்சல்) யை வைப்பார்.

இதனையடுத்து காலை நேர உணவுடன் நிகழ்வுகள் இடம்பெறும். பின்னர் அரச குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒரே மேசையில் அமர்ந்து மதிய உணவினை எடுப்பர். இதற்கென 50 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
ஓய்வினைத் தொடர்ந்து மீண்டும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும். இரவு  நேர உணவில் வாத்து இறைச்சி, ஆட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சியிலான உணவுகள் பரிமாறப்படுகின்றன. மேலும் இளவரசர் பிலிப்பிற்காக வைன் வைக்கப்படுகின்றது.

அடுத்த மூன்று நாட்களும் பாரம்பரியமான கலாசார நத்தார் கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெறும். இதன்பொழுது அரச குடும்ப உறுப்பினர்கள் தமக்கே உரிய பிரத்தியேகமான பாணிகளுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை பிரிட்டனில் மகாராணியின் வாழ்த்துச் செய்தி முக்கியமானதொன்றாகும். ஆகவே சான்டிஹம் மாளிகையிலிருந்தே தனது வாழ்த்துச் செய்தியை அனைவருக்கும் வெளியிடுகின்றார்.

இதேவேளை இம்முறை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது அரச குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் அரச நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் முதலிடம் பெறுவது கேட் மிடில்டனின் பெற்றோரான மிஷெல் மற்றும் கரோல் மிடில்டன் ஆகியோராவர். மிடில்டன் தம்பதி சாதாரண குடும்பத்தினர் ஆன போதிலும் எதிர்கால மன்னரின் பேரப் பெற்றோர்களாவார்கள்.

இதனையடுத்து இளவரசர் ஹரியின் காதலி கிறிஸ்டா போனஸ் அத்துடன் 2005 இல் கமிலா இளவரசர் சார்ள்ஸினை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவரின் பிள்ளைகளும் கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கவில்லை. எனினும் இம்முறை கமிலாவுடன் இணைந்து அவர்கள் கிறிஸ்மஸ் நிகழ்வுகளில் கலந்து கொள்வார்களா? என்பது தொடர்பில் செய்திகள் வெளிவரவில்லை.

இருந்த போதிலும் அரச குடும்பம் அல்லாத சிலருக்கும் இம்முறை நிகழ்வில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் மாளிகை தெரிவிக்கின்றது.

அரச குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டங்கள் சான்டிஹமில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை பக்கிங்ஹாம் மாளிகையிலும் 50 இற்கு மேற்பட்ட அரச விருந்தினர்களுக்கு இன்று மதிய விருந்துபசாரம் வழங்கப்படுகின்றது.

எனினும் பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கு இளவரசர் ஜோர்ஜுடனான  கிறிஸ்மஸ் பண்டிகை பிரமாண்டமாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

ஏன் இந்தப் பாய்ச்சல்?

இந்திய அமெரிக்க உறவில்  விரிசல் ஏற்படுமா?


சா.சுமித்திரை

தனது இராஜ தந்திரிகளில் ஒருவரை கைது செய்து, அவரை அகௌரவப்படுத்தும் வகையில், நடந்து கொண்ட அமெரிக்காவிற்கெதிராக, பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில், இந்தியத் துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை இரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கையெடுத்துள்ளது. 

நியூயோர்க் நகரிலுள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரக டேவை, விசா மோசடி வழக்கில், பொலிஸார் கடந்த வாரம் கைது செய்திருந்தனர்.

பாடசாலையில் தனது பிள்ளைகளை விட்டுவிட்டு திரும்பியபோது, பொது இடத்தில் பொலிஸார் அவரைக் கைதுசெய்து கைவிலங்கிட்டு ஒரு தீவிரவாதியை கொண்டு செல்வது போல அழைத்துச் சென்றிருந்தனர்.

39 வயதான தேவயானி, அவருடைய வேலைக்காரப் பெண் சங்கீதா என்பவருக்கு அமெரிக்கா விசா பெற்றதில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டியே கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆயினும், கைது செய்யப்பட்ட தேவயானிக்கு, அவரின் பதவிக்குரிய கௌரவம், அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, அவரை நிர்வாணப்படுத்தி, சோதனைகளை மேற்கொண்டிருந்ததுடன் போதைப் பொருள் குற்றவாளிகள் மற்றும் விபசாரிகளை அடைத்து வைக்கும் சிறைக் கூடத்திலேயே தேவயானியும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

மேலும், தேவயானி கைது விவகாரம் தொடர்பில், உடனடியாக இந்திய அரசிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சாதாரண வெளிநாட்டு பிரஜை வேறு நாடொன்றில் குற்றமிழைத்தால் அது தொடர்பில் அப்பிரஜையின் நாட்டு அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அமெரிக்காவிற்கான இந்தியத்துணைத் தூதுவராக இருக்கும் தேவயானியின் கைது விவகாரம் உடனடியாக இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படாதது, அவர் திட்டமிட்டு சதி வலைக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.

250,000 அமெரிக்க டொலர் பெறுமதியிலான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தேவயானிக்கு அவரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், விசா மோசடிக்காக 10 வருடங்கள் சிறையும் தவறான தகவல்களை வழங்கியமைக்காக 5 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.

இந்நிலைமையில், தேவயானியின் கைது மற்றும் மிக மோசமான உடல் சோதனைகளுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் இந்தியா அதிரடியாக உத்தரவிட்டது.

இதேவேளை, அமெரிக்கத் தூதர அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விமான சேவைகளுக்கான பாஸ் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலுள்ள அமெரிக்கப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் விசா விபரங்கள் அப்பாடசாலைகளில் பணியாற்றும் இந்தியர்களின் சம்பளம் மற்றும் வங்கிக் கணக்குகளின் விபரங்கள் ஆகியவற்றையும் உடனடியாக வழங்குமாறும், அமெரிக்க அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர்களின் விபரங்கள் மற்றும் அவர்களது சம்பளம் ஆகியவை குறித்தும், தகவலைத் தருமாறும் கேட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்கத் தூதரகத்தினால் இறக்குமதி செய்யப்படும் மதுசாரம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும், இனிமேல் விமான நிலையத்தில் கடும் பரிசோதனைகளுக்குட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, புது டில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்புத் தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. புதுடில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில், வீதியில் தடுப்புகளை வைத்து போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்பொழுது எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து அந்த வீதித்தடுப்புகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதுடன், அந்தத் தூதரகம் அமைந்துளள பிரதான வீதியையும் பொதுப் போக்குவரத்துக்காக, பொலிஸார் திறந்து விட்டுள்ளனர். இது தூதரகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

மேலும், புதுடில்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி, ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

அமெரிக்காவிற்கெதிராக பல்வேறு பதிலடி நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகின்ற போதிலும், வழமை போலவே அமெரிக்கா தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருவதுடன், தங்களுடைய உறவில் விரிசல் எதுவும் ஏற்படவில்லையெனவும் கூறியுள்ளது.

அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அதிகார வரம்பின் கீழேயே, தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளது. துணைத்தூதர் கைது நடவடிக்கையின் போதும் அந்த விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்பட்டுள்ளன. தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையின் படி, இந்தியத் துணைத்தூதர், தூதராக பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மட்டுமே நீதிமன்றத்தில் விலக்கு உரிமை பெற்றுள்ளார். இதுபோன்ற பல்வேறு வகையிலான சிறப்பு விலக்கு உரிமைகளையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த விலக்கு உரிமை, அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவனதாகும். தேவயானி கைது விவகாரத்தை பொறுத்தமட்டில், அவர் குறித்த வகையிலான விலக்கு உரிமையின் கீழ வருகின்றார். எனவே, அவர் மீது வழக்கு விசாரணை உள்ளதால் குற்றவாளி என்ற வகையில் கைது செய்யத் தகுதியானவர் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், தேவயானி கைது விவகாரம் தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரி இந்தியவவிடம் கவலை தெரிவித்துள்ளார்.

தேவயானி, கோப்ரகடே கைது செய்யப்பட்டமை தொடர்பாக அவரையொத்த வயதுகளையுடைய இரு பெண் பிள்ளைகளின் தந்தை என்ற வகையில் மிகவும் வருந்துகின்றேன் எனவும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் தொலைபேசியில் உரையாடிய போது, ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாடுகளிலுள்ள எமது நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு எவ்வளவு மரியாதை கிடைக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோமோ? அதற்கு இணையான கௌரவத்தினை எங்கள் நாட்டில் தங்கியிருந்து, பணியாற்றும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தக் கைது விவகாரத்தால், இந்தியா அமெரிக்க இடையிலான நெருங்கிய நட்பு பாதிக்கப்படுவதை அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது என்றும் ஜோன் கெரி உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் சதியில் சிக்கியுள்ள தேவயானியை மீட்டு,  நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவேன் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சபதம் செய்துள்ளார்.

தேவயானி, சதி செய்யப்பட்டு சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மீட்காமல் பாராளுமன்றத்திற்கு திரும்பி வரமாட்டேன் எனவும் அவர் கூறிச்சென்றுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் சட்ட விரோதமாக நடக்கவில்லை. இருப்பினும், தூதரின் கௌரவத்திற்கு எந்தப் பங்கமும் வராமல் இருக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும். அவரை, இந்தியா அழைத்து வர வேண்டியது எனது பொறுப்பாகும். அவரை கைது நடவடிக்கையிலிருந்து, வெளியே கொண்டு வந்த பின்னரே, அமெரிக்கா மீது இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முடிவெடுக்கப்படுமெனவும் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமையில் தேவயானியை கைது செய்வதற்கு சூத்திரதாரியாக செயற்பட்டவர் இந்திய வம்வாளியான ப்ரீத் பராரா என்ற சட்டத்தரணி என்ற விடயமும் அம்பலமாகியுள்ளது.

45 வயதான ப்ரீத், நியூயோர்க்கின் வட பிராந்தியப் பகுதி பொது சட்டத்தரணியாவார். இவருடைய தந்தை பஞ்சாப் பிரோஸ்பூரைச் சேர்ந்த சீக்கியராவார். இவருடைய தாயார் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

2009இல், நீயூயோர்க் நகரின் சட்டத்தரணியாக பதவியேற்ற இவர் சட்டவிரோதமாக செயற்பட்ட அரச அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

உலக பங்குச்சந்தை உள்பேர மோசடி வழக்கில் சிக்கியவர் இலங்கைத் தமிழரான ராஜரத்தினம். இந்த வழக்கில் இந்தியரான ரஜத் குப்தாவும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில், குப்தா கைது செய்யப்பட்டபோது, அரச வழக்கறிஞராக ப்ரீத் இருந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்னொரு வழக்கொன்றில் இந்திய தொழிலதிபரான சந்தீப் அகர்வால் கைது செய்யப்பட்ட போதிலும், ப்ரீத்தே முக்கிய பங்கு வகித்தவராவார். தற்பொழுது, தேவயானி மீதான விசா மோசடி விவகாரத்திலும், அவருக்கெதிரான அரச தரப்பு சட்டத்தரணியாக ப்ரீத் செயற்பட்டு வருகிறார்.

இதுபோன்று, தொடர்ந்தும் இந்திய தொழிலதிபர்கள், தூதரக அதிகாரிகள் பலரும் இந்திய வம்சாவளியான ப்ரீத்தினால் சிக்க வைக்கப்பட்டுக் கொண்டிருப்பது இந்திய அரசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தற்பொழுது கண்காணிப்பு வலயத்தின் கீழ் ப்ரீத் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ப்ரீத்  ஏதேனும் உள்நோக்கத்துடன் இந்திய முக்கியஸ்தர்களையும் தொழிலதிபர்களையும் இலக்கு வைத்து செயற்படுகின்றாரா அல்லது அவரை யாராவது கைப்பாவையாக பயன்படுத்துகின்றனரா? என்பது இனிவரும் விசாரணைகளின் மூலமே தெரியவரும்.

ஆயினும், வீட்டு வேலைக்கு அமர்த்திய பெண்ணுக்கு பேசிய படி உரிய சம்பளத்தை தேவயானி வழங்க வில்லை. கடுமையாக வேலை வாங்கியுள்ளதுடன், இந்தப் பெண்ணை வேலைக்கு அமர்த்துவதில் விசா மோசடியும் இடம்பெற்றுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே தேவயானி மீது நடவடிக்கை யெடுக்கப்பட்டது. இந்த விடயத்தில் ஏழை, பணக்காரர், அமெரிக்கர் என்ற பேதம் எதுவும் பார்க்க முடியாது என ப்ரீத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு முன்பொரு போதுமில்லாத அளவிற்கு இந்திய அரசாங்கம் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளதுடன், கடும் பதிலடி நடவடிக்கைகைளையும் மேற்கொண்டுள்ளமையானது, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் நோக்கங்களுக்காகவே, தேவயானி விவகாரம சர்ச்சைக்குள்ளாக் கப்பட்டுள்ளது. அதேநேரம் தேவயானியை கௌரவிக்கும் வகையில், அவரை ஐ.நா. பிரதிநிதியாக மத்திய அரசாங்கம் நியமித்துள்ளது.

தேவயானி வழக்கு ஒரு தனிப்பட்ட விவகாரமாகும். இந்நிலையில், பாதிக்கப்பட்ட வேலைக்காரப் பெண் தொடர்பில் இந்திய அரசாங்கம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அத்துடன், தேவயானி மீதான வழக்கை கைவிட இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

தனிப்பட்ட வழக்கினை இந்திய அரசாங்கம் அரசியலாக்கி உள்ளது. அதேசமயம், அமெரிக்கா இந்திய அரசாங்கத்தினை களங்கப்படுத்தும் நோக்கில், துணைத் தூதுரை சதி வலையில் சிக்க வைத்துள்ளதாக கூறப்பட்டாலும், தேவயானியால் பாதிக்கப்பட்ட வேலைக்காரப் பெண்ணும்  ஒரு இந்தியர் என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால், இரு நாடுகளும் தனிப்பட்ட விவகாரத்தினை அரசியலாக்கி தம் அதிகாரத்தினை நிலைநாட்டவே விரும்புகின்றன.

ஆயினும், தேவயானி துணைத்தூதர் என்பதைவிட, குடும்பப் பெண்ணொருவராவார். இந்தக் கைது விவகாரம் நிச்சயம் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதாகவே அமைந்திருக்கும். அவர் கைது செய்யப்பட்ட விதமும் மிகக் கீழ்த்தரமாக சோதனையிட்ட முறையும் இந்தியர்களை கடும் சீற்றமடையச் செய்துள்ளன.

இருந்தபோதிலும், இந்த வழக்கை அரசியலாக்காது, சுமுகமான முறையில் கொண்டு சென்றாலே, அமெரிக்க இந்திய உறவுகள் ஆரோக்கியமானதாக அமையும் எனவும் இதனை அரசியலாக்க முனையக் கூடாதெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப ஆட்சிக்கு எதிராக வீதியிலிறங்கியுள்ள மக்கள்

சா.சுமித்திரை

தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில் மீண்டும் பாரிய மோசமான அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக உக்கிரமடைந்திருக்கும் வீதி ஆர்ப்பாட்டங்களாலும், போராட்டங்களாலும் தாய்லாந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், வீதி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் குறைந்தபாடில்லை. இதன் மூலம் தலைநகர் பாங்கொக்கின் இயல்பு நிலைமை மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பிரதமர் ஜின்லுக் சினவத்ராவை பதவி விலகக் கோரியும், மக்களில் ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு வலியுறுத்தியும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், தேர்தல் இடம்பெறும்வரை காபந்து பிரதமராக செயற்படுவது தனது கடமையென இக்கோரிக்கையை ஜின்லுக் சினவத்ரா நிராகரித்துள்ளார்.

வாழ்வில் எந்த இழப்பினையும் ஏற்படுத்த இந்த அரசாங்கம் விரும்பாது. பல குழுக்களிலிருந்து இந்த அரசாங்கத்துக்கெதிரான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மக்கள் யாருக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென நினைக்கிறார்களோ, அவர்களை தெரிவுசெய்ய சரியான வழி தேர்தலாகுமெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தாய்லாந்து மக்களே தமது எதிர்காலத்தை தீர்மானிக்க தான் உதவுவதாகவும் அதுவரை தனது கடமையை சரிவரச் செய்ய ஆதரவு வழங்குமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்திருந்தார் ஜின்லுக்.

ஆனால், தேர்தலில் ஜின்லுக் தலைமையிலான கட்சி இலகுவில் வெற்றியடைக்கூடிய வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2011இல் இடம்பெற்ற தேர்தலில், ஜின்லுக் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆயினும் முன்னாள் தலைவரும் ஜின்லுக்கின் சகோதரருமான தக்சின் சினவத்ராவின் கட்டுப்பாட்டின் கீழேயே அரசாங்கம் செயற்படுவதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தாய்லாந்து அரசின் கோட்டைகள் மற்றும் வறிய பிரதேசங்களிலிருந்து ஆதரவினை பெறும்வகையில், ஜின்லுக் கட்சி சட்டம் இயற்றியுள்ளது. இதனால், அக்கட்சி தேர்தலில் இலகுவாக வெற்றியடைய முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆயினும், தக்சின் ஆட்சி வேரோடு அழிக்கப்படுவதே இலக்காகுமென அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை வகிக்கும் சுதெப் தாங்சுபான் தெரிவிக்கிறார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற்றாலும், அங்கு தக்சின் அதிகாரம் நிலைத்துக் காணப்படுமெனவும் சுதெப் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதேவேளை, அரசாங்கத் தலையீட்டுத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட அரிசிக்கு, இன்னும் பணம் வழங்கப்படாததால், விவசாயிகளும் வீதி மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக வியாழக்கிழமை மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஏற்கனவே அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும், பிரதமர் ஜின்லுக் சினவத்ராவுக்கு இது புதிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

தாய்லாந்து விவசாயிகள், பிரதமர் ஜின்லுக்கையும், அவரது சகோதரரான முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவையும் ஆதரித்து வருபவர்களாவர். 2006இல் தக்சின் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன் வறிய மக்களுக்கும் உதவும் கொள்கையொன்றினை அமுல்படுத்தியிருந்தார்.

சந்தை விலையைவிட அதிகமாக, ஒரு தொன் அரிசியை 15,000 தாய்லாந்து பாட் விலைக்கு விவசாயிகளிடமிருந்து வாங்குவதாக உறுதியளித்திருந்தார். இந்த உறுதிமொழி மூலமே, கிராமப்புற மக்களின் ஆதரவுடன் 2011ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று ஜின்லுக் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலைமையில், இவர்களின் ஆதரவும் கை நழுவிப் போகுமானால், தேர்தலில் தோல்வியடைவது நிச்சயமாகிவிடும். ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு ஜின்லுக் தீர்வு காணப் போகின்றார்? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அண்மைய வருடங்களாக எகிப்து, துருக்கி என பல நாடுகளிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் தங்களின் ஆட்சியை நீடிப்பதற்காக உழைக்கும் மக்களை தூண்டி தங்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்துகின்றனர்.

அந்த நடைமுறைக்குள் தாய்லாந்தும் சிக்கத் தவறவில்லை. 2010இல் அப்போதைய பிரதமர் அபிசிட் விஜ்ஜேஜிவா பாராளுமன்றத்தை 30 நாட்களுக்குள் கலைக்க வேண்டுமென கோரி, தலைநகரில் பல வாரங்களாக செஞ்சட்டை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

செஞ்சட்டை எதிர்ப்பாளர்களில் 2006ஆம் ஆண்டில் இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவின் ஆதரவாளர்களே பெருமளவில் இருந்தனர்.

ஆனால், 30 நாள் காலக்கெடு ஒரு பிரச்சினையல்ல. பாராளுமன்றத்தைக் கலைப்பது முழுநாட்டுக்கும் நன்மை தரவேண்டும். இந்த செஞ்சட்டைக்காரர்களுக்காக அதனைச் செய்ய முடியாது. 2010ஆம் ஆண்டின் இறுதிக்குள் உரிய காலத்துக்கு முன்னமே தேர்தலை நடத்த இணங்குவதாகவும் அப்போதைய பிரதமர் அபிசிட் தெரிவித்திருந்தார்.

நீண்டகால நெருக்கடியின் பின்னர் இடம்பெற்ற தேர்தலிலே வெற்றி பெற்று ஜின்லுக் பிரதமராக பதவியேற்றார். ஆனால், அரசியல் சதி மூலமாக ஜின்லுக் சினவத்ரா ஆட்சியை கைப்பற்றியதாகவும், தக்சினின் அதிகாரமே இருப்பதாகவும் கூறி, பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது.

1992இற்கு பின்னர் தாய்லாந்தில் ஜனநாயக கட்சியால் மிகப்பெரியளவில் வெற்றிபெற முடியவில்லை. இதனால், கடந்த சில வருடங்களாகவே அங்கு ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்ப்பாளர்களால் அரசியல் புயல் கிளம்பியுள்ளது.

“ஓட்டப்பம் வீட்டைச் சுடும், தன்வினை தன்னைச் சுடும்’ என்பது போல், 2010இல் அபிஜித்துக்கு ஏற்பட்ட நிலைமை தற்பொழுது ஜின்லுக்கிற்கு ஏற்பட்டுள்ளது.

ஜின்லுக்கின் ஆட்சியை கலைக்க வேண்டுமென ஜனநாயக கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான அபிஜித் தலைமையில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலைமையில், அபிஜித் மீது கொலைக்குற்றச்சாட்டொன்றினையும் அரசாங்கம் சுமத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டினால் அவர் கைது செய்யப்படும் நிலைகூட ஏற்படலாம்.

அபிஜித் கைது செய்யப்பட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளே தற்பொழுது இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது. 

2001இல் தக்சின் ஆட்சியிலிருந்தபோது, சாதாரண மக்களுக்கான சில நல்வாழ்வுத் திட்டங்களை அமுல்படுத்தியிருந்தார். அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவ காப்புறுத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருந்தார்.

மேலும், கல்விக்கும் விவசாயத்துக்கும் சலுகைகளுடன் கூடிய கடன், உதவித் தொகை வழங்குவது போன்றவற்றையும் நடைமுறைப்படுத்தினார்.

1997இல், தென்கிழக்காசிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது தாய்லாந்தும் பாதிக்கப்பட்டது. அவ்வேளையில், சர்வதேச நாணய நிதியம் கடும் நிபந்தனைகளுடன் கடனுதவிகளை வழங்கியிருந்தது. 2001இல் பிரதமராக பொறுப்பேற்ற தக்சின், அந்த நிபந்தனைகளுக்கு செவி சாய்க்காமல் நலவாழ்வுத் திட்டங்களை அமுல்படுத்தினார். இத்திட்டங்களை அமுல்படுத்த மது, சூதாட்டம் போன்றவை மீது வரியை விதித்திருந்தார். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் கடனை திருப்பிச் செலுத்தவும் செய்திருந்தார்.

நலவாழ்வு திட்டங்கள், வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றிய தக்சின் 2005இல் இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.

ஆனாலும், தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாத பாரம்பரிய ஆளும் கட்சியினர் 2006 செப்டெம்பரில் நாட்டின் பிரதமர் என்ற ரீதியில் ஐ.நா.வில் உரையாற்ற தக்சின் சென்றவேளை, இராணுவப் புரட்சிமூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்து அவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அத்துடன், அவரது கட்சியையும் தடைசெய்து சொத்துக்களையும் முடக்கியது. அவர் மீதான விசாரணைகளை நேரடியாக விசாரிக்காமல் 2 வருட சிறைத்தண்டனையையும் விதித்தது. இதனையடுத்து நாடு திரும்பாத தக்சின் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார்.

ஆயினும், நாடு ஸ்திரத்தன்மை பெற்று அமைதியடையவில்லை. மீண்டும் வீதிப்போராட்டங்களும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது, பொது மன்னிப்பு வழங்கும் சட்டமூலமொன்றை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சியெடுத்து வருவதாகக் கூறியே ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்த சட்ட மூலம் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா நாட்டுக்குள் திரும்பி வருவதற்கு வழி செய்து கொடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே, தக்சின் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார். இந்நிலையில், தேர்தலில் ஜின்லுக் தலைமையிலான கட்சி தோல்வியடைந்தால், நாட்டையே விட்டு வெளியேற வேண்டிய நிலையேற்படும்.

அதேநேரம், பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் எதிரணியினரிடமும், நாட்டை நிர்வகிக்கக்கூடிய வலுவான மாற்த்திட்டமெதுவும் இல்லையென கூறப்படுகின்றது.

அரசியலில், எப்பொழுதுமே ஒரு கொந்தளிப்பு காணப்பட வேண்டுமென்ற நோக்கிலே தான்தோன்றித்தனமாக செயற்படுவது போன்றே எதிரணியினரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. தாய்லாந்தின் தற்போதைய நெருக்கடியான நிலைமை ஜனநாயக நிர்வாகத்தை மேலும் பலவீனமடையச் செய்துள்ளது.

தாய்லாந்தில் போராட்டமானது மக்கள் நலன் சார்ந்தாக அமைந்திருக்கவில்லை. மாறாக, யார் நாட்டை ஆள்வது என்பது தொடர்பாக அமைந்துள்ளது.

இந்தப் போராட்டத்தின் நோக்கம் மாற்றப்பட்டு, மக்களுக்கான போராட்டமாக மாற்றப்பட்டால் மட்டுமே நிலையான அமைதி அங்கு ஏற்படும்.

சனி, 21 டிசம்பர், 2013

காற்றினில் கலந்த “கறுப்பு வைரம்’

சா.சுமித்திரை

அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுத்த மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் குரல் மௌனித்து விட்டது. 

மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி, மனித நேயத்தை  சிதைத்து, அவல நிலைகளும் அநீதிகளும் எங்கெல்லாம் மேலோங்கி நிற்கின்றதோ, அங்கெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவரோ ஒருவர் தன்னை அவர்களுக்காக அர்ப்பணித்து போராடுவது வரலாறாகும். 

எனினும், அவர்களை எந்தளவிற்கு இந்தச் சமூகம் கௌரவப்படுத்தி பார்க்கின்றதோ, அந்தளவிற்கு அவர்களை ஏனைய சமூகம் கண்கொண்டு பார்ப்பதில்லை. அதுவும் சில புரட்சியாளர்கள் மரணித்த பின்னரே அவர்களுக்கான அந்தஸ்து வழங்கப்படுகின்றது. எனினும், ஒரு சிலரையே வாழும் போதே சர்வதேசம் பிரமித்துப் பார்க்கின்றது. 


மனிதநேயர் மார்டின் லூதர் கங், மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன் என்ற வரிசையில் இடம் பிடித்தவர் தான்  நெல்சன் மண்டேலா. தன் இனத்தவர்களை மட்டுமல்லாது, உலகிலுள்ள அனைத்து இனங்களையும் நேசித்து அவர்களுக்காக சுவாசித்தவர் தான் இந்த நெல்சன் மண்டேலா. 

அத்தகைய பெருந்தகையும் மனித நேயத்தின் அடையாளமுமாக தனது வாழ்நாட்களை அர்ப்பணித்த நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் ஜோஹனர்ஸ் பேர்க்கிலுள்ள தனது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை காலமானார். 

சொந்த மண்ணிலேயே தன்னினம் அடக்கி ஒடுக்கப்படுவதைக் கண்டு, பொங்கியெழுந்த நெல்சன் மண்டேலா வெள்ளையர்களுக்கெதிராக போராடி வென்றார். ஆயினும், இயற்கையுடன் போராட முடியாது, தன் ஆத்மாவையும் இந்த  இயற்கையுடனேயே சேர்த்துக் கொண்டார். 

மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் தொடர்பாக விரிவான திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதுடன், தென்னாபிரிக்க வரலாற்றில் முதற் தடவையாக ஒரு அரச தலைவருக்கு 12 தினங்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், பிரதிநிதிகள், குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் என பெருந்தொகையானோர் மறைந்த மா மனிதருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மண்டேலாவின் உழைப்பினால், சமாதானமான தென்னாபிரிக்காவை காண்கின்றோம் என பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது இரங்கல்  செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

தென்னாபிரிக்கா தனது புதல்வனை இழந்து விட்டதென அந்நாட்டின் ஜனாதிபதி ஜேகப் சுமா தெரிவித்துள்ளதுடன், மண்டேலாவை சந்தித்ததே தனது வாழ்க்கையில் கிடைத்த பெரும் கௌரவம் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மண்டேலா நீதிக்கான ஒரு இலச்சினை. மண்டேலாவின் உதாரணங்களை எமது வாழ்நாட்களில் கடைப்பிடிப்போம் என ஐ.நா.செயலாளர் பான்கீமூன் தெரிவித்துள்ளார். 

நெல்சன் மண்டேலா என்ற உதாரண புருஷர் இல்லாவிடின் எனது வாழ்க்கையைக் கற்பனை செய்திருக்க முடியாதெனவும் உலகுடன் அசாதாரண மனிதரைப் பகிர்ந்து கொண்ட மண்டேலாவின் குடும்பத்தினருக்கு நன்றிகள் எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

இதேபோல, சர்வதேச தலைவர்களும் மாமனிதர் மாண்டேலாவிற்கு தனது இறுதி அஞ்சலியை காணிக்கையாக்கி வருகின்றனர். இவர் தென்னாபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தெரிவு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவராவார். மண்டேலா குலு என்ற கிராமத்தில் 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி பிறந்தார். சிறு வயது முதலே ஆட்சி விவகாரங்கள், நிர்வாகம், சமூக நலன்கள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தார். 

மண்டேலா, லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டதுடன், 1941 இல் ஜொகனஸ் பேர்க்கில் சட்டத்துறை படித்தார். 
இந்நிலையில் பல சொல்லொணாத் துயரங்களை பிரிக்க கறுப்பினத்தவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். இதனைக் கண்டு பொங்கியெழுந்த மண்டேலா, தம்மை கொத்தடிமைகளாக வைத்திருக்கும் வெள்ளையரைத் துரத்த வைராக்கியம் கொண்டு அகிம்சை வழியில் போராடினார். 

அகிம்சை வழி வெற்றியளிக்காமையையடுத்து கெரில்லா யுத்தத்தைக் கையாண்டு வெற்றி கொண்டார். 1964 இல் மண்டேலாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த அவரின் சிறைவாசம் 27 வருடங்களாகத் தொடர்ந்தது. 

உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் கிடையாது என்றே சொல்லலாம். 1994 இல் மண்டேலா தென்னாபிரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், தென்னாபிரிக்காவில் 300 வருடங்கள் நீடித்த வெள்ளையரின் ஆட்சி முடிவிற்கு வந்தது. இருந்த போதிலும், மண்டேலாவிற்கெதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 2008 இல் பொது வாழ்க்கையிலிருந்து விலகினார். 

மண்டேலா, பொது வாழ்க்கையிலிருந்து விலகிய போதிலும் கடந்த 15 வருடங்களாகத் தன் நாட்டிற்காகவே சுவாசித்துக் கொண்டிருந்தார் என்பதை மறுக்க முடியாது.

திங்கள், 16 டிசம்பர், 2013

எயிட்ஸ்

சா.சுமித்திரை

எயிட்ஸ் நோய் தொடர்பான சுகாதாரக் கல்வி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இந்நோயினை முழுமையாகக் குணப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளோ அல்லது சிகிச்சைகளோ கண்டு பிடிக்கப்படாமையினால் அதன் அபாயம் இன்னும் அதிகரித்தே காணப்படுகின்றது. 

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4500 ஆக உயர் வடைந்துள்ளதாக சுகாதார  அமைச்சின் பால்நோய் மற்றும் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 

இந்த வருடம் எச்.ஐ.வி. தொற்றினால் 64 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடும் பலர் இரத்தப் பரிசோதனைகளை செய்து கொள்வதில்லை. இதுவே இந்த நோய் வேகமாகப் பரவக் காரணமாகியுள்ளது. 

எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியமை தொடர்பில், அறியாமலேயே பலர் இருக்கின்றனர். இது தொடர்பில் கவனம் செலுத்தினால் மேலும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வடையலாமெனவும் டாக்டர் சிசிர லியனகே அச்சம் வெளியிட்டுள்ளார். 

2011 இல் 146 பேரும், 2012 இல் 186 பேரும் எயிட்ஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இந்த வருடத்தில் முதல் ஆறு மாதங்களில், எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நாட்டில் இதுவரை 1739 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்பொழுது மொத்தமாக 4500 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

1988 இல் எயிட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் சர்வதேச ரீதியில் எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றிய எண்ணக்கரு முதலில் உருவானது. இதனையடுத்தே, உலகினை அச்சுறுத்தி வரும் எயிட்ஸ் நோயின்  விளைவுகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் முதலாம் திகதி, சர்வதேச எயிட்ஸ் விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

உயிருக்கு ஆபத்தான நோய்களும் அதை வரும் முன் காப்பதற்கான விழிப்புணர்வினையும் சாதாரண மக்களும் அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சர்வதேச தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. 

ஆயினும், இவை தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களோ அன்றைய தினத்துடன் அல்லது ஒரு வார காலத்துடன் முடிவடைந்து விடும். அதன் பின்னர், “பழைய குருடி கதவைத் திறவடி’ என்பது போலவே அனைத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கெதிரான செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. 

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் போது தொண்டை கிழிய கத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கைவலிக்க எழுதிய ஊடகங்களும் இதன் பின்னர் அடுத்த வருடம்  வரும் விழிப்புணர்வு தினத்தின் போது பார்த்துக் கொள்ளலாமென அமைதி காப்பதையே பெரும்பாலும்  இன்று காணக் கூடியதாகவுள்ளது. 
1981 முதல் 2007 ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் சுமார் இரண்டரைக் கோடி பேர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். 1985 ஆம் ஆண்டு முதல் 7 இலட்சம் பேர் எயிட்ஸ் தொடர்பான மரணங்களிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் சுகாதார அறிக்கை தெரிவிக்கின்றது. 
எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர வைத்தியசாலைகளிலேயே இனங்காணப்பட்டன. 

அதேசமயம், எயிட்ஸினை “உலக பரவு நோயாக’ உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010 இல் எச்..வி. தொற்றினால் உலகில் பலியானோர் எண்ணிக்கை 1.8 மில்லியனாகும். 2010 இன் புள்ளி விபரப்படி உலுகில் 34 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி. தொற்றுடன்  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

கடந்த 10 வருடங்களில், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதில், இந்தியாவில் 2.3 மில்லியன் பேருக்கு எச்.ஐ.வி. தொற்றியிருக்கிறது. 

உலகில் எச்.ஐ.வி. தொற்றுக்களில் 68 வீதமானோர் ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்துடன் கூடிய தெற்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 
அபிவிருத்தி கண்ட நாடுகளை விட, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலேயே அதிகளவு எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்படுகின்றனர். 

ஏனெனில், அந்நாடுகளில் பால்வினை நோய் தொடர்பான விழிப்புணர்வுகள் பெரியளவில் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆயினும் இன்று எச்.ஐ.வி. பற்றிய அறிவு அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் போதிய விழிப்புணர்வுகள் அனைவரையம் சென்றடையவில்லை என்பதே உண்மையாகும். 

இலங்கையிலே எயிட்ஸ் நோய் ஆங்காங்கே இருந்துவரும் நிலையில், எந்நேரமும் இந்நோய் உக்கிரமடையும் கட்டத்திற்கு தள்ளப்படலாமெனவும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. 

எயிட்ஸ் என்பது ஓர் பால்வினை நோயாகும். எச்.ஐ.வி. கிருமிகள் குறித்த ஒரு இனத்தையோ, மக்களையோ மாத்திரம் தாக்குவதில்லை. உலகின் மிக வறிய மக்களை தாக்குவதற்கு எவ்வளவு சந்தர்ப்பம் இருக்கின்றதோ அந்தளவிற்கு உலகின் முன்னணி கோடீஸ்வரர்களைத் தாக்குவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. எனவே, இது வறிய மக்களுக்கு மட்டுமே சொந்தமான நோயென எவரும் விழிப்புணர்வின்றி இருந்து விடமுடியாது. 

எச்.ஐ.வி. நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ இந்நோய்க் கிருமிகள் பரவும். ஏனெனில் எந்தவொரு சிகிச்சையும் எச்.ஐ.வி.  வைரஸுகளை முழுமையாக அழித்து விடக் கூடியவையல்ல. 

ஆண், பெண் இருவருக்கிடையிலான உயிரியல் ரீதியான வேறுபாடே பால் ஆகும். உயிரியல் ரீதியான வேறுபாடுகள் என்கிற போது அவை உடலுறுப்பு, உடற்றொழிப்பாடுகள், ஓமோன், சுரப்புக்கள் என்பனவாகவே காணப்படுகின்றன. 

அத்துடன், சமூகத்தில் ஆண், பெண்ணுக்கு வழங்கப்படுகின்ற ஒரு சமுதாய  அந்தஸ்து தான் பால் நிலையாகும். ஆயினும் சமூகத்தினால் திணிக்கப்படும் விழுமியங்கள், பாத்திரங்கள், மூட நம்பிக்கைகள், மனப்பாங்குகள், குணாதிசயங்கள் ஆகியவற்றையே பால்நிலை குறிப்பதாகக் கூறப்படுகின்றது. இதுவே, சமூகமானது பால்வேறுபாட்டை பால்நிலை வேறுபாடாக வளர்க்க துணை போகின்றது. 

இன்றைய காலப்பகுதியில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனைகளைப் படைத்து வருகின்ற போதிலும் சமூகத்தில் அவர்களை ஒரு போதையூட்டும் பொருளாகவே பார்க்கின்றனர். இவ்வாறான இழிநிலையே பெண்கள் மிகப் பெரிய பால்வினை நோய்களுக்கு உள்ளாகி நோய்க்காவிகளாக வலம் வரக் காரணமாகியுள்ளது. 

இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரு நிலைமை காணப்பட்டாலும் போதியளவு அறிவுடன் கூடிய ஒரு நிரந்தரமான விழிப்புணர்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற போது தான் அவற்றினை முழுமையாக கட்டுப்படுத்தலாம். “கற்பு’ என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான் என்கிறார் மகாகவி பாரதியார். ஆனால், ஆண்களும் பல்வேறு பால்வினை நோய்களுக்கு உள்ளாகின்றனர். 

எச்.ஐ.வி. வைரஸின் தாக்கத்தினால் உடலில்  நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் போவதுடன், நோயின் தாக்கத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. இவற்றின் இறுதிக் கட்டம் மரணம் மட்டுமேயாகும். 

சுகாதாரத் துறைக்கு பாரியதொரு அறை கூவலாக மாறியுள்ள எயிட்ஸிற்கு எதிரான போராட்டத்தின் இலக்குகளை வலிமையான அரசியல் உந்துதல், போதியளவான நிதிவளங்கள், உறுதியான மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் அடைய முடியுமென ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் கூறியுள்ளார். 

இதேவேளை, எச்.ஐ.வி. இற்கு எதிரான போராட்டத்தில்  இவ்வருடம் தீர்மானிக்கப்பட்ட இலக்குகளை 2015 ஆம் ஆண்டளவில் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை ஐ.நா. செயலர் கேட்டுள்ளார். 

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை பாடசாலை மாணவர்கள் முதல் பல்துறை பிரபலங்கள் வரை முன்னெடுத்து வருகின்றனர். இதன் மூலம் எயிட்ஸ் தொடர்பான ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரங்களை நம் நாட்டிலும் முன்னெடுக்க  முன் வர வேண்டும். 

உலகிலேயே தாய்வானில் தான், மிகவும் வயது குறைந்த சிறுவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், கடந்த வருடம் அந்நாட்டு அரசு குழந்தைகளைக் கொண்டு விழிப்புணர்வு பிரசாரமொன்றை ஆரம்பித்திருந்தது. 

எயிட்ஸ் நோயாளி ஒருவருடன் கை குலுக்குவதனாலோ அல்லது அவருடன் நீச்சல் தடாகம், குளியலறை என்பவற்றையே பகிர்ந்து கொள்வதனாலோ இன்னொருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படாது. 

எயிட்ஸ் நோயுடைய தாயொருவர் கர்ப்பமாக இருக்கும் போது, அவரது குழந்தைக்கும் எச்.ஐ.வி.  நோய்த் தொற்றுவர வாய்ப்புள்ளது. குறிப்பாக, பிறந்த குழந்தைக்கு எயிட்ஸ் நோயுடைய தாயொருவர் தாய்ப்பால் கொடுக்கும் போது அதனூடாக குழந்தக்கும் எயிட்ஸ் பரவுகின்றது. இதனாலேயே இவ்வாறான தாய்மாருக்கு சிசேரியன் பிரசவம் பரிந்துரைக்கப்படுவதுடன் அக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தப்படுகின்றது. 

ஆயினும், நுளம்புகள், பூச்சிகள் மூலம் எச்.ஐ.வி. பரவுவதாக  இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதாவது ஒரு நுளம்பின் உடலில், நீண்ட நேரம் எச்.ஐ.வி. வாழமாட்டாதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆயினும், மருத்துவத் துறையில் எவ்வளவு தான் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள போதிலும், எயிட்ஸிற்கான மருந்துகளோ, சிகிச்சைகளோ இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. 

எச்.ஐ.வி.யை எதிர்க்கும் திறன் கொண்ட நோய் எதிர்ப்பாற்றல் குருதியணுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நோபல் பரிசு பெற்ற மருத்துவவியலாளரான டேவிட் பலடிமோர் தமது பரிசோதனைகள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.  இவருடைய பரிசோதனை எதிர்காலத்தில் வெற்றி பெறுமானால் எயிட்ஸ் நோயாளிகளும் சமூகத்துடன் இணைந்து வாழ முயலலாம். 

அதுவரையிலான காலப்பகுதியிலும் எயிட்ஸ் ஒரு உயிர் கொல்லி நோயாகவே இருக்கப் போகின்றது. எனவே, எயிட்ஸ் நோய் தொடர்பானவிழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்துவது இன்றைய கட்டாய தேவையாகும். 

அதேசமயம் எயிட்ஸ் நோயாளர்களையும் சமூகத்திலிருந்து ஒதுக்கி விடாமல் இருக்கும் வரை மகிழ்ச்சியாக  வாழ அவர்களது குடும்ப உறுப்பினர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன்வர வேண்டும். 

உறவைப் பிரித்த உளவு!

சா.சுமித்திரை

அவுஸ்திரேலியா இந்தோனேஷியா
இடையே பெரும் முறுகல் நிலை


அமெரிக்கா தனது எதிரி நாடுகளை மாத்திரமல்லாது, கூட்டாளி நாடுகளின் அரசியல், தனிப்பட்ட விவகாரங்களையும் உளவுபார்த்த விடயம் அம்பலமாகி விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள நிலையில்,இந்தோனேசியாவை அவுஸ்திரேலியா வேவு பார்த்தமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2013இல் எந்தளவிற்கு நவீன தொழில்நுட்பத்துறை வளர்ச்சி கண்டிருக்கோ, அந்தளவிற்கு இணையத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகுதல், மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல்கள் வேவு பார்த்தல், இரகசிய ஆவணங்களை கசியவிடல் போன்றவையும் பல மடங்காக அதிகரித்துள்ளன.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கே இன்று பாரியதொரு சவாலாக இணைய ஊடுருவிகள் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. ஒரு தனிப்பட்டவரின் விபரங்களை வேவு பார்க்கப்படுவதன் மூலம் ஏற்படும் எதிர்த்தாக்கங்களை விட ஒரு நாட்டின் இராஜாங்க விடயதானங்களை அரசியல் விவகாரங்களை கண்காணிப்பதும் அதன் இரகசிய ஆவணங்களை வெளியே கசிய விடுவதும் அந்நாட்டிற்கே பாரிய அச்சுறுத்தலாகும்.

அமெரிக்க உளவு முகவரமைப்பின் முன்னாள் ஒப்பந்த தொழில்நுட்ப பணியாளரான எட்வெட் சிநோடன் உலக நாடுகளின் விவகாரங்களை அமெரிக்கா வேவு பார்க்கின்றது என்பதை கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அம்பலப்படுத்தியிருந்தார்.

உலகத் தலைவர்கள் பலரும் அமெரிக்காவின் இந்த வேவு நடவடிக்கைக்கு பலத்த கண்டனங்களையும், விமர்சனங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர். அமெரிக்கர்களுக்கும் தமது அரச தலைமைகளின் செயல்களுக்கு வருத்தம் தெரிவித்த நிலையில், வாஷிங்டனோ தனது பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கின்றது.

இணைய ஊடுருவிகளின் “ஹீரோ’வாக வர்ணிக்கப்படும் எட்வெட் சிநோடன், சர்வதேச அரசியலின் எதிரியா? அல்லது நண்பனா? என்ற விவாதம் இடம்பெற்று வரும் நிலையில், அவுஸ்திரேலிய உளவு நிறுவனங்கள் இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுஹோயோனா, அவரது மனைவி, துணை ஜனாதிபதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அமைச்சர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒற்றுக்கேட்ட விவகாரம் வெளியாகியுள்ளது.

அதுவும், உளவுத்தகவல்களை கசியவிடும் எட்வெட் சிநோடன் அண்மையிலே அம்பலப்படுத்தியிருந்த ஆவணத்திலேயே, அவுஸ்திரேலிய உளவு நிறுவனம் இந்தோனேசிய தலைமைகளின் நடவடிக்கைகளை வேவு பார்த்தமை வெளியாகியிருந்தது.

சிநோடனிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்த ஒற்றுகேட்பு விடயம் தொடர்பான ஆவணங்களை இரு ஊடகங்கள் வெளியிட்டதையடுத்து அவுஸ்திரேலியாவிற்கான தனது தூதுவரை இந்தோனேசியா திரும்பி அழைத்துக் கொண்டது.

அவுஸ்திரேலிய இலத்திரனியல் உளவுப் பிரிவானது, 2009ஆம் ஆண்டு ஆகஸ்டில் சுசிலோ பம்பாங்கின் கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக கண்காணித்திருந்தமை, சிநோடனின் ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஏற்கனவே, உளவு பார்த்தல் விவகாரம், அவுஸ்திரேலியா செல்வதற்காக படகில் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவுக்கு வருகின்றமை உள்ளிட்ட சில விவகாரங்களால் இரு நாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலைமையில், அவுஸ்திரேலியாவிற்கான தனது தூதுவரை திரும்பி அழைத்துள்ளமையானது, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய இராணுவத்துடனான கூட்டு ஒத்துழைப்பையும் இந்தோனேசியா இரத்துச் செய்துள்ளது. அத்துடன் ஆட்கடத்தல் தடுப்பு நடவடிக்கை மற்றும் இரு நாட்டுக்கும் இடையிலான உளவுப் பரிமாற்றம் உட்பட அனைத்து இராணுவ செயற்பாடுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுஹொயொனா அறிவித்துள்ளார்.

“அவர்கள் எம்மை உளவு பார்க்கவில்லை என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது’ சாத்தியமில்லை, என்றும் சுசிலோ கூறியிருந்தார்.

அதேசமயம், இந்த உளவு விவகாரம் குறித்து உத்தியோக பூர்வமாக விளக்கமளிக்குமாறும், அந்நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோருமாறும் அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபொட்டுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் சுசிலோ.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டிற்காக மன்னிப்புக் கோர முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபொட் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்காக நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக இந்தோனேசிய விவகாரத்தில் அவுஸ்திரேலியா மன்னிப்புக் கேட்காது. சரியான காரணத்துக்காகவே, உளவுத்துறை தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

மற்ற நாடுகளோ அல்லது அரசாங்கமோ இதுபோன்ற காரணத்துக்காக உளவு நடவடிக்கையில் இறங்கினால், அவை மன்னிப்பு கேட்கும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் அயல் நாடுகளுக்கு அதிக மதிப்பளிக்கும நாங்கள், தகவல் தொடர்பு உள்ளிட்ட அவுஸ்திரேலிய வளங்களை அவற்றுக்கு உதவுவதற்கே பயன்படுத்துகிறோமே ஒழிய, தீங்கு விளைவிப்பதற்கில்லை. 

எனினும், இந்தோனேசியா அவுஸ்திரேலியா நல்லுறவுக்கான பாதை அருகிலேயே உள்ளது. வெகு தூரத்தில் இல்லையெனவும் ரொனி அபொட் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையில், ஜகார்த்தா அலுவலகங்களை வேவு பார்த்த கன்பெராவின் அறிக்கைகளுக்கு மேலான சர்ச்சைகளுக்கு மத்தியிலே, அவுஸ்திரேலிய பொலிஸ் மற்றும் அந்நாட்டு சேமிப்பு வங்கியின் இணையத்தளங்கள இணைய ஊடுருவிகளால் தாக்கப்பட்டுள்ளன. இதற்கு யார் காரணம்? இதற்கும் இந்தோனேசியா அதிகாரிகளுக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா? என்பது தொடர்பில் எதுவும் வெளியாகவில்லை.

ஆயினும், தனது கோரிக்கைக்கு அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபொட் மறுப்புத் தெரிவித்தமையால், கடும் எதிர்ப்பினை இந்தோனேசியா வெளியிட்டுள்ளது. அத்துடன், இவ்விடயத்தை அவுஸ்திரேலியா மிக இலகுவாக எடுத்துக்கொண்டதாக இந்தோனேசிய ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவின் விரிசல் அதிகரித்துள்ள நிலையில், இவ்விரு நாடுகளுக்குமிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

1640களின் ஆரம்பத்திலேயே அவுஸ்திரேலியாவிற்கும், இந்தோனேசியாவிற்குமிடையே வெளிநாட்டு உறவுகள் இருந்துள்ளன. தொடர்ந்து இதனைப் பேணி வந்துள்ளமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.

அண்மைய வருடங்களாக, குறிப்பாக 20112012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான வர்த்தக நடவடிக்கைகளை இவ்விரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன. அதேசமயம், 20122013இன் இதுவரையிலான காலப்பகுதியில் இந்தோனேசியாவின் அபிவிருத்தி பணிகளுக்கென 541.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியிருந்தது.

அத்துடன், ஜீ 20 ஆசியான் பிராந்திய அமைப்பு மற்றும் அவுஸ்திரேலியாநியூஸிலாந்துஆசியான் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஆகியவற்றில் இவ்விரு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளனர். 1991இலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு மாதாந்தம் செல்லும் இந்தோனேசியர்களில் ஒரு தொகையினருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் 2011 புள்ளிவிபரப்படி, 38.1 வீதமான இந்தோனேசியர்களுக்கு அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும், அவுஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே 27,500 இற்கு மேற்பட்டோர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், ஆகாயம், கடல், தண்டவாளம் மற்றும் வீதி போக்குவரத்துகளின் அபிவிருத்திகளும் இவ்விரு நாடுகளும் இணைந்தே மேற்கொள்கின்றன.

இவ்வாறு தத்தமது நாட்டின் பல அபிவிருத்தி மற்றும் பொருளாதாரப் பணிகளிலும் இவ்விரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படுவதாகவே பார்க்கப்படுகின்றது.

இதேவேளை புகலிடம் கோரி, படகுகளில் ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

2007இல் கெவின் ரூட்டின் தொழிற்கட்சி அரசாங்கம், தெரிவு செய்யப்பட்ட போதிலும், புகலிடம் கோருவோருக்கும், அகதிகளுக்கும் எவ்வித மாற்றத்தையும் காட்டவில்லை. அத்துடன், இந்த தடுப்பு நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசாங்கத்துடன் இணைந்தே மேற்கொண்டிருந்தன.
அதேபோல, ரூட் தலைமையிலான தொழிற்கட்சி எல்லைப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. அதற்கென 650 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் செலவழித்ததுடன், மேலும் நிதியொதுக்கீடுகளை கண்காணிப்பிற்கென ஒதுக்கியது. அவுஸ்திரேலிய இந்தோனேசியா அதிகாரிகளின் இரகசிய பொலிஸ் நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது.

அதேசமயம், இந்தோனேசியா சர்வதேச புகலிட சட்டவிதிகளில் கையெழுத்திடாத நாடாகும். எனவே, அங்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கோ அல்லது அகதிகளுக்கோ எந்தவித அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படமாட்டாது.

இந்நிலைமையில், அவுஸ்திரேலியாவிற்கும் சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்கும் முயற்சியாக, இந்தோனேசியாவின் மீன்பிடிப் படகுகளை வாங்கும் திட்டத்தினை தற்போதைய அவுஸ்திரேலிய அரசாங்கம் முன் வைத்திருந்தது.

அபொட்டின் இந்த திட்டத்தினை இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்ரைய் நரெலிஹவா நிராகரித்துள்ளதுடன், ஆட்கடத்தல் தொடர்பான கொள்கையினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இதனால் இரு நாடுகளின் உறவில் ஏற்கனவே சிறு விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்திருந்தன. ஆயினும், அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்கள் தன் நாட்டினுள் உள்நுழைவதை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும் அவற்றுக்கு பக்க பலமாக இருப்பது இந்தோனேசிய அதிகாரிகள் என்பதை மறுக்க முடியாது.

அவுஸ்திரேலியாவிற்கு தலையிடியாகவுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தோனேசியாவின் உதவிகள் தேவைப்படுவதால் அந்நாட்டின் உறவினை புதுப்பித்துக்கொள்ள முயற்சிக்கலாம்.

ஆயினும், பழையை உறவை புதுப்பிக்க இந்தோனேசியா தயாராகுமா? என்பது கேள்விக்குறியே. ஒரு வீட்டை இரு திருடர்கள் சென்ற கொள்ளையிட்டுள்ளனர். அதேசமயம் ஒரு திருடனின் வீட்டையே மற்றைய திருடன் கொள்ளையிட்டுச் சென்றால் பாதிக்கப்பட்ட திருடனின் மனநிலை எவ்வாறு இருக்கும்? தனது வீட்டுப் பொருட்களை இழந்த திருடனிற்கு சொல்ல முடியாதளவு ஆத்திரமும், விரக்தியும் காணப்படும். மாறாக, கொள்ளையடித்த திருடனின் மனநிலை இறுமாப்புடனே இருக்கும். ஏனெனில், திருடனின் வீட்டையே கொள்ளையடித்து விட்டேன் என்ற பெருமிதமே இருக்கும். இந்நிலைமையே இன்று அவுஸ்திரேலியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் ஏற்பட்டுள்ளது.

இதில், தனது பொருட்களை பறிகொடுத்த திருடன் போல இந்தோனேசியாவும், திருடனின் வீட்டிலேயே திருடிய திருடன் போல அவுஸ்திரேலியாவும் உள்ளது.

ஏனெனில், இவ்விரு நாடுகளும் இணைந்து ஏனைய நாடுகளின் நடவடிக்கைகளை வேவு பார்த்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் தனது நாட்டினை அவுஸ்திரேலிய அரசாங்கம் வேவு பார்த்துள்ளது என்பதை அறிந்துள்ள இந்தோனேசியா அரசாங்கம், அதனை எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்?

பல நூற்றாண்டுகளாக, பேணி வரும் இந்த உறவில் இன்று விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயினும், வேவு பார்த்ததில் எந்தத் தப்பும் இல்லையென அமெரிக்காவைப் போல அவுஸ்திரேலிய அரசாங்கமும் நியாயம் சொல்லி வருகின்றது. வேவு பார்க்கப்படுவதால், ஏற்பட்ட ஏற்படப் போகும் நன்மைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு எவரும் அது தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளப் போவதில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகள் வல்லரசு நாடான அமெரிக்காவிற்கோ, அல்லது அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கோ ஏற்படும்போது மட்டுமே வேவு பார்க்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த உண்மை புலப்படும்.

எனினும், இந்தக் காரணத்துக்காக இந்தோனேசியா அவுஸ்திரேலியாவுக் கிடையிலான உறவில் நிரந்தரப் பிரிவு ஏற்படுமா? என்பது கேள்விக்குறியே.