சா. சுமித்திரை
இலங்கையில் சிறுவர் திருமணங்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா.வின் சிறுவர் மற்றும் கல்விக்கான நிதியத்தினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போதிய அறிவின்மை, பொருளாதார நிலைமைகள், தகுந்த பாதுகாப்பின்மை, பெற்றோரின் அலட்சியப் போக்கு, மூட நம்பிக்கைகள் போன்றவற்றால் சிறுவர் திருமணங்கள் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக ஐ.நா.வின் இலங்கைக்கான பிரதிநிதி ரிஸா ஹொனாசனி தெரிவிக்கின்றார்.
உலகளாவிய ரீதியில் ஆபிரிக்கா மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளிலேயே சிறுவர் திருமணங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. குறிப்பாக 7 நிமிடங்களுக்கு ஒரு பால்ய விவாகம் என்ற வீதத்தில் நடைபெறுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்நிலைமை இன்னும் 10 வருடங்களில் இரு மடங்காகுமெனவும் ராய்ட்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலைமையிலே சிறுவர் திருமணங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றினைத் தடுப்பதற்கான வழிவகைகள் குறித்த சிறந்த புரிந்துணர்வை எட்டும் வகையில் ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தரம் தழுவிய ஆய்வொன்றை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவென குழுவொன்றை நியமித்திருந்தது.
இதன்போது குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் இளவயது திருமணங்களும் பாலியல் வன்முறைகளும் அதிகரித்துக் காணப்பட வாய்ப்புகள் உள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சிறுவயதில் திருமணம் செய்த 71 பேரை மையப்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வின் போது 30 வீதமானோர் 18 வயதுக்கு முன்னதாகவே கருத்தரித்திருந்தமை தெரிய வருகின்றது. இது தேசிய சராசரியை விட 20 சதவீதம் உயர்வாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எமது நாடு ஏனைய துறைகளில் கண்ட அபிவிருத்தியை விட சுகாதாரத் துறையில் முன்னிலை வகிக்கின்றது. குறிப்பாக தாய், சேய் நலன் ஆரோக்கியமானதாக காணப்படுகின்ற அதேநேரம் சிசு மரண வீதமும் குறைவாகுமென்பதை எவராலும் மறுக்க முடியாது.
இருந்த போதிலும் சிறு வயது திருமணங்களால் இந்த அபிவிருத்தியை தொடர்ச்சியாக பேண முடியுமா என்பது கேள்விக்குறியே. சிறுவர் திருமணங்களால் மன உளைச்சல், சிசு மரணங்கள், சட்டவிரோத கருக்கலைப்புகள், சுகாதார சீர்கேடுகள், பாலியல் மற்றும் ஏனைய குடும்ப வன்முறைகள் என பலவகையிலான சமூக பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன.
இந்நிலையில் எமது நாடு சுகாதார ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ அல்லது கல்வி ரீதியாகவோ பாரியளவில் பின்னடைவைச் சந்திக்கப் போகின்றது. இவற்றுக்கான தீர்வினை உடனடியாக பெறாவிடின் எதிர்காலச் சமூகம் ஆரோக்கியமற்றதொன்றாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.
ஏனெனில் சிறுவர் திருமணங்களால் பல பிரச்சினைகள் ஏற்பட வழிகோலுகின்றன. குறிப்பாக பாடசாலைக் கல்வியை இடைநடுவிலே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் இளவயது திருமணங்களுக்கு இன்னொரு காரணமாகும்.
இலங்கையிலே ஆண்டுதோறும் சுமார் 2 இலட்சம் சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை கைவிடுவதாக சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை அதிகார சபை தெரிவிக்கின்றது.
கல்வியை இடைநடுவில் கைவிடும் சிறுவர்களின் எண்ணிக்கை வட, கிழக்கு மலையகம் மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகமாகக் காணப்படுவதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களெனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
மாணவர்கள் கல்வியை இடைநடுவிலே கைவிடுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பிரதானமாக வறுமையே சுட்டிக் காட்டப்படுகின்றது. இலவசக் கல்வி வழங்கப்படும் இலங்கையில் வறுமை காரணங் காட்டப்படுகின்றது என்றால் எங்கோ ஒரு இடத்தில் குறைபாடு உள்ளது என்பதே அர்த்தமாகும். எனவே இக்குறைப்பாட்டை இனங்கண்டு அதனைத் தீர்க்க கல்வி சமூகம் முன்வர வேண்டும்.
அதேபோல் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. இதன்போது இங்கிருக்கும் அவர்கள் பெண் பிள்ளைகளுக்கு சரியான பராமரிப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகின்றது. அத்துடன் வெளிநாடு செல்லும் அநேக பெண்களின் கணவன்மார் சரியான முறையில் குடும்பத்தைக் கவனிக்காமல் தமது மனைவிமாரின் வெளிநாட்டுப் பணத்தை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனாலும் அப்பெண் பிள்ளைகள் தமது பாதுகாப்பு கருதி சிறு வயதிலே திருமணம் செய்து கொள்ள எத்தனிக்கின்றனர்.
இதேவேளை பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும் போது சீதனம் வழங்கும் வழக்கம் எம் சமூகத்தினரிடையே காணப்படுகின்றது. எனவே சீதனம் கொடுக்க முடியாத ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை வயதான பணக்காரர்களுக்கு திருமணம் செய்து வைத்து கடமைகளை முடித்துக் கொள்கின்றனர்.
இதன்மூலம் அப்பெண் மட்டுமே உடல், உள ரீதியாக பாதிக்கப்படுகின்றாள். திருமணம் செய்து வைப்பது என்பது ஒரு கடமையல்ல. திருமண பக்குவத்தில் தமது பிள்ளை இருக்கின்றாளா என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்வார்களாயின் ஓரளவேனும் இளவயது திருமணங்கள் குறைவடையும்.
கடந்த வருடம் அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே சுமார் 1200 சிறார்கள் திருமணம் செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் அதிர்ச்சி செய்தி வெளியிட்டிருந்தனர்.
கடந்த வருடம் 157 சிறுவர் திருமணங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் இவை தொடர்பில் பல தகவல்கள் கிடைத்ததாக அநுராதபுர மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்திருந்தார்.
இதேபோல் பாடசாலை மாணவர்களிடையே மதுபானம், போதைப்பொருள் மற்றும் சிகரெட் பாவனைகளும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவையும் ஒரு வகையில் சிறுவர் திருமணங்களுக்கு வழிகோலியுள்ளன.
அதேசமயம் இன்றைய மாணவர்கள் கணினிகள் மற்றும் இணையத்தள வசதிகள் கையடக்கத் தொலைபேசி வசதிகள் என தொழில்நுட்ப யுகத்தில் இருக்கின்றனர். இதன்மூலம் பல சாதகமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இவர்களுக்கு கிடைத்துள்ள இந்த வசதிகளை அவர்கள் தவறாக பயன்படுத்துவது பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளன.
இத்தகைய சிறுவர் திருமண முறையானது சிறுமியர் தங்கள் கல்வியை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை மட்டுப்படுத்தி வருவது மட்டுமன்றி கர்ப்ப காலத்திலும் சரி பிரசவ காலத்திலும் சரி தாய் மற்றும் குழந்தைக்கு அபாயம் ஏற்படக்கூடிய நிலையை ஏற்படுத்துகின்றது. அத்துடன் குழந்தைகள் பிறந்த பின்னர் போஷாக்கின்மை அடிக்கடி நோய் வாய்ப்படல் உட்பட உடல், உள குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
இதனைவிட அப்பெண் உலக அறிவு அனுபவங்களை எட்டும் போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். இதன்போது மன அழுத்தங்களுக்கு உள்ளாவதுடன் குடும்பப் பிரிவு மற்றும் விவாகரத்து போன்ற நிலைகளுக்கும் தள்ளப்படுகின்றாள்.
எனவே தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறுவர் திருமணங்கள் அதிகரிக்கின்றதோ அந்தளவுக்கு விவகாரத்துகளும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக 18 வயதுக்கு குறைந்த ஆண், பெண் வழக்காற்றுத் திருமணத்தையோ அல்லது பதிவு செய்யப்பட்ட திருமணத்தையோ மேற்கொள்ள முடியாது. ஆயினும் எம் சமூகத்தினரிடையே இன்னும் பல்வேறு இடங்களில் சிறுவர் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நேரிலேயே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இவ்விடயம் ஒரு சட்டவிரோதமானது எனத் தெரிந்தும் பார்த்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனை தரக்கூடிய விடயமாகும்.
மேலும் பொருளாதார பிரச்சினையால் பாடசாலை செல்கின்ற வசதியற்ற பிள்ளைகள் வேலையும் இல்லாத சமயம் தமது பாதுகாப்பும் அரவணைப்பும் பெறும் பொருட்டு தாம் விரும்பிய ஒருவருடன் வீட்டை விட்டுச் செல்கின்றனர்.
இத்தகையோரை அந்தந்த பகுதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனங்கண்டு அவர்களுக்குரிய கல்வி வசதியையோ சுயதொழில் முயற்சிகளையோ வழங்க முன் வர வேண்டும். இதன்மூலம் இத்தகைய சிறுவர் திருமணங்களை தடுக்க முடியும்.
சில பெண் பிள்ளைகள் தமது வீடுகளிலேயே உறவினர்களால் பாலியல் தொந்தரவுகளுக்குள்ளாகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அச்சம்பவம் பற்றிப் பொலிஸில் முறைப்பாடு செய்து மேலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதை விட குறிப்பிட்ட நபருக்கே திருமணம் செய்து வைத்தல் சிறந்தது எனக்கருதி அப்பிள்ளையின் பெற்றோர் திருமணம் செய்து வைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.
உண்மையிலேயே இப்படியானதொரு பிரச்சினை கவலை தரக்கூடியதாகும். எனினும் ஒரு பெண் பிள்ளை குறித்த வயதினை எட்டும் போது பெற்றோர் எச்சந்தர்ப்பத்திலும் அப்பிள்ளையை தமது கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் இத்தகைய பிரச்சினைகள் பெரியளவில் ஏற்பட õட்டாது.
இலங்கையில் 14 வயது பிள்ளையொன்று கட்டாயக் கல்வி பெற வேண்டுமென்ற சட்ட ஏற்பாடு உள்ளமை எத்தனை பேருக்குத் தெரியும்? இதனை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
சிறுவர் திருமணங்கள் கல்விக்கான உரிமையைப் பாதிக்கின்றன. அத்துடன் இத்திருமணங்கள் சில சந்தர்ப்பங்களில் நீண்டகாலம் நிலைத்திருப்பதில்லை. அவ்வாறான நிலையில் தமக்குப் பிறந்த பிள்ளைகளுடன் சமூகத்தில் மதிப்பும் மரியாதையுமின்றி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அத்துடன் இவ்வாறு கைவிடப்படும் பெண்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில் பல்வேறு கேலிப் பேச்சுகளுக்கும் பாலியல் சுரண்டல்களுக்கும் உட்படவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
எனவே சமூகப் பிரச்சினையாக மாறி வருகின்ற சிறுவர் திருமணங்களை முற்றாக நிறுத்துவதற்கு அனைத்து தரப்புகளும் ஒத்துழைக்க வேண்டும். இளவயது திருமணத்தின் விளைவு பற்றிய விழிப்பூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்பட வேண்டும்.
அதேசமயம் இளம் பருவத்தினருக்கான இனவிருத்தி, சுகாதார சேவைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பலவந்தமாக திருமணம் செய்தல் மற்றும் இளவயது கர்ப்பம் போன்றவற்றுடன் தொடர்புடையவர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க மகளிர் பாதுகாப்புத் தரப்பினர் முன்வர வேண்டும்.