வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அமெரிக்காவை உரசும் ரஷ்யா?

பனிப்போருக்கு வித்திடப்போகும் ஸ்நோடென் விவகாரம்

சா.சுமித்திரை

அமெரிக்காவின் சி.ஐ.ஏ.உள்ளிட்ட புலனாய்வுத்துறை அமைப்புகளின் இரகசிய நடவடிக்கைகளை வெளி உலகுக்கு கசியவிட்ட எட்வர்ட் ஸ்நோடனுக்கு ரஷ்யா புகலிடம் வழங்கியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் நிலை அதிகரித்துள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இரகசியங்களை அழித்து நாசமாக்கி விடுவதற்கு இடமளிக்க முடியாதென சமூக இணையத்தளங்கள் உட்பட முன்னணி இணையச் சேவை நிறுவனங்களின் “சேவர்’களுக்குள் ஊடுருவி இரகசியத் தகவல்களைப் பதிவு செய்யும் சி.ஐ.ஏ.யின் ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்பப் பணியாளர் எட்வர்ட் ஸ்நோடென் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடுகளினதும் இணையத்தளங்கள், தொலைபேசி உரையாடல்களுக்குள் ஊடுருவி அந்தந்த நாடுகளைச் சேர்ந்த தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் செயற்பாடுகளை வாஷிங்டன் தீவிரமாக கண்காணிக்கின்றது என்ற குற்றச்சாட்டு, சர்வதேச சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டது.

மறுபுறம், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ள அமெரிக்காவானது இணைய உளவு என்பது தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் தவிர்க்க முடியாதென நியாயப்படுத்திக் கொண்டதுடன், அமெரிக்கா முழு உலகிலும் உளவு பார்க்கும் இரகசியத்தை கசியவிட்டு வர்ட் எட் ஸ்நோடெனையும் வலைபோட்டு தேட ஆரம்பித்தது.

அத்துடன் ஸ்நோடெனை பிடிக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா, ஹொங்கொங், ஈக்குவடோர் மற்றும் பொலிவியா என பல நாடுகளை ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் இராஜதந்திர ரீதியில் அச்சுறுத்தியும் வந்தது. இதன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டவிரோதப் போக்கு சர்வதேசத்திற்கு அம்பலமாகியது.

இதேநேரம் ரஷ்ய அரசாங்கம், தப்பியோடிய ஒருவருக்கு உதவுகின்றது என்று வொஷிங்டனின் குற்றச்சாட்டுகள் பிதற்றல்கள் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறிக்கொண்டார். ஆனால், இன்று ஸ்நோடெனுக்கான புகலிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவிற்கும் ஸ்நோடெனுக்குமான கண்ணாம்பூச்சி விளையாட்டில் ரஷ்யாவும் சேர்ந்து கொண்டுள்ளது. ஒரு மாதகாலமாக, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள விமான நிலையத்தின் மாற்றுப் பயண வலயத்திற்குள் தங்கியிருந்த ஸ்நோடென் முதற்தடவையாக அங்கிருந்து வெளியேறியுள்ளதுடன், தனக்குப் புகலிடம் வழங்கியமைக்காக ரஷ்ய மக்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் ஒரு வருடகாலம் தற்காலிகமாக தங்குவதற்கு வியாழக்கிழமை ஸ்நோடெனுக்கு ரஷ்ய அரசு அனுமதிச் சான்றிதழை வழங்கியது. இதனைத் தொடர்ந்து மொஸ்கோவிலுள்ள செரிமெடிவோ விமான நிலையத்தை விட்டு தனது சட்டத்தரணி அனாடலி குசெரினாவுடன் சினோடென் வெளியேறியுள்ளார்.

இதேவேளை, ஸ்நோடெனுக்கு புகலிட அனுமதியை மொஸ்கோ வழங்கியமையானது கடும் சீற்றம் தரும் விடயமென அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அத்துடன், அடுத்தமாதம் சென்.பீற்றர்ஸ் பேர்க்கில் நடைபெறவுள்ள 
ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டின் ஒரு நிகழ்ச்சி நிரலாக ரஷ்யா ஜனாதிபதி விளா டிமிர் புட்டினுடனான சந்திப்பொன்றுக்கு ஒபாமா திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையில் நடைபெறவிருந்த சந்திப்பு தொடர்பாக மீளாய்வு செய்யவேண்டுமென அமெரிக்கா கூறியுள்ளது. அதேசமயம், ஸ்நோடென் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஒபாமாவின் ரஷ்ய பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இப்பயணத்தின் போது, சிரிய நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக புட்டினுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் ஒபாமா திட்டமிட்டிருந்தார். இவ்விவகாரத்தால் சிரியா குறித்த பேச்சு வார்த்தையும் நிறுத்தப்பட்டுவிட்டது.

அதேசமயம், முன்னைய காலப்பகுதிகளிலும் அமெரிக்கா ரஷ்யா இடையிலான உறவு ஒன்றும் மெச்சும் படியாக அமைந்திருக்கவில்லை. 1917இல் ரஷ்யாவில் லெனின் தலைமையிலான போல்ஸ்விக் புரட்சியைத் தொடர்ந்தே இவ்விரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

எதிர் எதிர்த் துருவங்களாக செயற்பட்டு வந்த இவ்விரு நாடுகளும், இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனியை தோற்கடிக்க கைகோர்த்தன. ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இருவேறு துருவங்களாகப் பிரிந்து நின்று பனிப்போரில் ஈடுபட்டிருந்தன.

1962ஆம் ஆண்டு கியூபாவில் சோவியத் யூனியன் அணுவாயுத ஏவுகணைகளை நிறுத்த போரின் உச்ச கட்டத்திற்கே உலக நாடுகள் சென்றன. 1999இல் விளாடிமிர் புட்டின், ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவுடனான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு தற்போது அது தீவிரமடைந்துள்ளது.

மத்திய கிழக்கில் லிபியா, சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரசாங்கங்களுக்கெதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. உடனடியாக தான் ஒரு வல்லரசு நாடு என்பதை காண்பித்துக் கொள்ள அந்நாடுகளின் உள்விவகாரங்களுள் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. யுத்தம் நடைபெறும் நாடுகளில் அமைதியைக் கொண்டு வருவது போல செய்து நிலைமையை மோசமடையச் செய்வதும் ஒற்றுமை கொண்ட நாடொன்றினுள் கோள் சொல்லி குழப்புவதுமே அமெரிக்காவின் பொழுது போக்காகும். தற்பொழுது, மேற்குலக விவகாரங்களுடன் மாரடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்குள் அவ்வப்போது இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதிலொரு பிரதிபலிப்பாகவே, வரலாற்று பாரம்பரியம் கொண்ட பொஸ்டன் மரதனோட்டப் போட்டியில், வெறும் 19,24 வயதுடைய சகோதரர்களால் இரட்டைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தினால் அமெரிக்கா நிலை குழம்பிப் போய் இருந்தது. 

இதனைவிட இன்னொரு சிறப்பான விடயம் என்னவென்றால், அவ்விரு சகோதரர்களின் பூர்வீகம் ரஷ்யாவாகும். தற்பொழுது அவர்களுடைய பெற்றோர், உறவினர்கள் கூட வசிப்பது ரஷ்யாவின் ஒரு பழங்குடியின கிராமத்தில் தான்.

இதேவேளை, தமது கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷார் அல்அசாத்தினை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பதில் ரஷ்யா உறுதியாகவிருக்க, அவரை ஆட்சியிலிருந்து விரட்டுவதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது.

தற்போது சி.ஐ.ஏ.யின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி ஸ்நோடென் தப்பிச் செல்ல ரஷ்யா உதவியுள்ளது. இதன் மூலம், பொஸ்டன் குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி தொடர்பான வழக்குகள் கூட சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அமெரிக்காவின் ஒற்றாடல் திட்டங்களை தைரியமாக அம்பலப்படுத்திய ஸ்நோடெவனுக்கு, எந்தவொரு அரசாங்கமும் தஞ்சத்திற்கான ஜனநாயக உரிமையை வழங்க தயாராக இருக்கவில்லை. அமெரிக்காவுடன் நாடு கடத்தல் உடன்படிக்கையை பல நாடுகள் கொண்டிருந்ததே இதற்கு காரணமாகும்.

அத்துடன், வல்லரசுடன் ஏன் மோதிக்கொள்வான் எனவும் சிலநாடுகள் ஒதுங்கிக் கொண்டன. இந்நிலையில், அமெரிக்காவிற்கு எதிராக வெனிசுலா உட்பட சில நாடுகள் ஸ்நோடெனை பொறுப்பேற்க முன் வந்த போதிலும், அங்கு செல்வதற்கான வழிதான் கிடைத்திருக்கவில்லை. 

இதேவேளை, ஸ்நோடென் ஏதாவதொரு விமானத்தில் இருக்கிறார் என அமெரிக்கா சந்தேகிக்குமானால், அமெரிக்கா அல்லது நேட்டோ படைகள் வான் வழியில் இடைமறித்து எந்த விமானத்தையும் கீழிறக்குமென அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெரி தெரிவித்திருந்தார்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலா மடுரோவை அழைத்துச் செல்லும் விமானத்தைக்கூட, அமெரிக்கா கீழிறக்கும் என்றுகூறிய கெரி கூறி, ஜனாதிபதி க்குத்தான் விதிவிலக்கு, விமானத்திற்கு அல்ல எனக்குறிப்பிட்டிருந்தார்.

இப்படியானதொரு தருணத்திலே ஸ்நோடெனுக்கு புகலிட அனுமதியை வழங்கியுள்ளது ரஷ்யா. துன்புறுத்தலிலிருந்து தப்பித்து மற்ற நாடுகளில் தஞ்சம் கோரவும் பெற்றுக்கொள்வதற்குமான உரிமை அனைவருக்கும் உண்டு எனக் கூறும் மனிதஉரிமைகள் பிரகடனத்திற்கு ஏற்றாற் போலவா ரஷ்யா, ஸ்நோடெனுக்கு புகலிட அனுமதியை வழங்கியுள்ளது? அல்லது அமெரிக்க அரசுக்கு ஆப்பு வைக்கவா? என்பதைத் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஸ்நோடெனுக்கு தஞ்சம் கொடுக்கும் சாத்தியமுடைய நாடுகளுக்கெதிராக ஒபாமா நிர்வாகம் அச்சுறுத்தல் பிரசாரத்தையே சர்வதேச ரீதியில் நடத்திக் கொண்டிருந்தது.

மக்களுக்கெதிரான தமது சதித்திட்டங்கள் அம்பலமாகி விடுமென்ற அச்சத்தில் வாஷிங்டன் இருக்கின்றது. மாறாக, ஸ்நோடெனின் செயல்களுக்கு அமெரிக்க உட்பட பல நாடுகளிலுமுள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆதரவு வழங்கி வருகின்றன.

வொஷிங்கடனுக்கும், மொஸ்கோவிற்குமிடையே எத்தனையோ பனிப் போர்கள் அரங்கேறியுள்ள போதிலும், இரு அரசாங்கங்களும் பேராசை பிடித்த முதலாளித்துவ அதிகாரங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவையா கும். தத்தமது நாட்டு மக்களிடையே தமது குற்றங்கள் அம்பலப்படுத்துவது குறித்து அச்சத்தில் மறைமுகமாக ஒன்றிணைந்து தான் நிற்கின்றன.

எனவே, தான் எதிர்காலத்தில் அமெரிக்காவின் கீர்த்திக்கு பாதகம் விளைவிக்கும் ஆவணங்களை வெளியிடப் போவதில்லையென ஸ்நோடென் உறுதியளித்த பின்னரே ரஷ்யா புகலிட அனுமதியை வழங்கியுள்ளது.

அமெரிக்க தேசப்பற்றாளர்களின் வீடொன்றில் தான் ஸ்நோடென் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவருடைய சட்டத்தரணி குச்செரனா கூறியுள்ளார்.

எதுவாயினும் ஸ்நோடெனுக்கு புகலிட அனுமதி வழங்கப்பட்டமையானது ஸ்நோடெனுக்கா? அமெரிக்காவிற்கா? அல்லது ரஷ்யாவிற்கா? தலையிடியாகப் போகின்றது என்பதை பொறுத்திருதுதான் பார்க்க வேண்டும். இந்த முக்கோண புள்ளிகளில் வெற்றி பெறப் போவது யார்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக