ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மற்றொரு போருக்கு ஜப்பான் தயாராகிறதா?

சா.சுமித்திரை

நான்காவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாகவும், அதிக பட்ச இராணுவ செலவீனங்களைக் கொண்ட 5 ஆவது நாடாகவும் உள்ள ஜப்பான், உலக நாடுகளின் மீது போர் தொடுப்பதற்கு தயாராகி வருகின்றனவா? என்ற சந்தேகம் அண்மைக் காலமாக வலுவடைந்துள்ளது.

அதற்குக் கட்டியம் கூறுவது போல, அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யவுள்ளமை, வருடாந்த இராணுவ செலவீனங்களை அதிகரித்தமை, சர்ச்சைக்குரிய யாசூகூனி நினைவகத்திற்கு பிரதமர் ஷின் ஷோ விஜயம் செய்திருந்தமை, சீனா தனது வான் பரப்பு எல்லையை பிரகடனப்படுத்தியமை என ஒவ்வொரு சம்பவங்களாக அரங்கேறி வருகின்றமையானது,  சர்வதேச ரீதியில் அதிர் வலைகளையும் பதற்ற நிலைமையினையும் தோற்றுவித்துள்ளது. 

குறிப்பாக, தமது படைகள், பிற நாடுகளின் மீது படையெடுக்கும் வகையில், அரசியல் சாசனத்தில் ஜப்பான் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சிறிய நிலப்பரப்பைக் கொண்ட ஜப்பான், உலகப் போரின் போதும் இயற்கை அனர்த்தங்களின் போதும் பெரும் அழிவுகளை சந்தித்திருந்தது. சுனாமி தாக்கிய போது ஜப்பானின் பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

ஜப்பானின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்குமென பொருளியலாளர்களால் எதிர்வு கூறிக் கொண்டிருக்கும் போதே, சாம்பலில் இருந்து எழும்பும் பீனிக்ஸ் பறவைகள் போல, அனைவரையும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு அதன் பொருளாதாரம் அபிவிருத்தி கண்டிருந்தது. 

குறிப்பாக, ஜப்பானின் அபிவிருத்தி எப்பொழுதுமே வியப்புக்குரியதாகவே அமைந்துள்ளது. அதேசமயம், இரண்டாம் உலகப் போரின் போது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது ஜப்பான் படையெடுத்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. 

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமே தனது முப்படைகளும் பயன்படுத்தப்படுமென வரையறை செய்யப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில் சீனாவின் அதிரடி நடவடிக்கைகளை  கருத்திற் கொண்டு, ஜப்பான் அரசியல் சாசனத்தில் மாற்றங்களைச் செய்யவுள்ளதாக பிரதமர் சின்சோ அபே தெரிவித்திருந்தார். 

மேலும், நாட்டின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டு, 68 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் மாறிவரும் சூழலுக்கேற்ப, அதில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதம் நடத்தப்படுமெனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதேவேளை, கடந்த மாதம் 26 ஆம் திகதி சர்ச்சைக்குரிய யாசூகூனி நினைவகத்திற்கு அபே விஜயம் செய்திருந்தமையானது. இராஜதந்திர அனர்த்தமொன்றினை உருவாக்கியுள்ளது என்பதையும் மறுக்க இயலாது. 

பிரதமர்  அபே, யாசூகூனி நினைவகத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய விவகாரமானது, சர்வதேச கவனத்திற்குள்ளாகியுள்ள அதேசமயம், இந்த விஜயம் தனது தலைமையிலான அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து ஒரு வருடத்தை குறிப்பதாகவும், ஜப்பான் மீண்டும் ஒரு போதும் யுத்தத்தை மேற்கொள்ளாது என்ற உறுதி மொழியை புதுப்பிக்கவே அங்கு சென்றதாகவும் அவர் கூறியிருப்பது பலரையும் சினமடைய வைத்துள்ளது. 

ஆனால், அவரது அரசாங்கம் தான், இந்த தசாப்தத்தில் முதற் தடவையாக இராணுவ செலவீனங்களை அதிகரித்துள்ளதுடன் கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவுகளின் மீதான பதற்றங்களையும் வலுப்படுத்தியுள்ளது. 

ஏனெனில், 1945 களிலிருந்து, சென்யாகு அல்லது டையாகு தீவுகளின் பிரச்சினை, யப்பானுக்கும் சீனாவுக்குமிடையே இருந்து வருகின்றது. இத்தீவுகளை தாய்வானும் உரிமை கோரி வந்த நிலையில், அத் தீவுக் கூட்டங்களை அதன் உரிமையாளரிடமிருந்து ஜப்பான் 2012 இல் வாங்கிக் கொண்டது. இதனையடுத்து, சீனா ஆத்திரமடைந்துள்ளது. 

இந்நிலையிலேயே, தற்பொழுது சீனாவுடன் பதற்ற நிலை அதிகரித்துள்ளது. மேலும், சீனாவிற்கெதிராக அமெரிக்க யுத்த தயாரிப்புகளை ஜப்பான் கொள்வனவு செய்து வருகின்றது. இதேசமயம், பிராந்திய பதற்ற நிலைமையை அதிகரிக்கும் வகையில், அபே யாசூகூனி நினைவகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.  

கடந்த 7 வருடங்களில் இங்கு சென்ற முதலாவது ஜப்பானிய பிரதமராக அபே உள்ளார். அபேயின் விஜயமானது, ஏற்கனவே, அப்பிராந்தியத்தில் தூண்டி விடப்பட்டுள்ள பதற்ற நிலைமையை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. 

ஆசியாவின் நாசி கல்லறை என வர்ணிக்கப்படும், யாசூகூனி நினைவகத்திற்கு அபே சென்றமைக்கு சீனா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. 

யாசூகூனி கல்லறை ஒரு யுத்த நினைவிடமாக மட்டுமல்லாது, 1930, 1940 களின் ஜப்பானிய இராணுவ வாதத்தின் முக்கிய சின்னமாகவும் அமைந்துள்ளது. மேலும் யுத்த குற்றவாளிகள் உட்பட  யுத்தத்தின் போது கொல்லப்பட்ட 2.5 மில்லியன் ஜப்பானியர்களையும் அடையாளப்படுத்தும் வகையிலும் காணப்படுகின்றது. இந்நிலையில் அபேயின் யாசூகூனி விஜயமானது, ஜேர்மனியில் ஒரு  அரசியல் தலைவர், நாசி தலைவர்களின் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்த முடிவெடுத்தால் எவ்வாறு இருக்குமோ அதற்கு ஒத்த விதத்திலேயே அமைந்துள்ளது. 

இதேவேளை, யப்பான், சீனா மற்றும் தாய்வான் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய தீவுகளையும் உள்ளடக்கியதாக கிழக்கு சீனக் கடலில் ஒரு வான்  பாதுகாப்பு வலயத்தினை கடந்த மாதம் சீனா பிரகடனப்படுத்தியிருந்தது. 

இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டு இரு நாட்களுக்குள்ளேயே அமெரிக்காவின் பி52 ரக போர் விமானங்கள் பறந்து சீனாவிற்கு தண்ணி காட்டின. தொடர்ந்து, ஜப்பானும் தென்கொரியாவும் தாங்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர், என்பது போல தங்களது போர் விமானங்களையும் அந்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டிருந்தன. 

இந்தவொரு காரணத்தினைக் காட்டியே, இவ்வருடத்துக்கான இராணுவ செலவீனத்தையும் அபே தலைமையிலான அரசாங்கம் அதிகரித்துள்ளது. 
இந்த நெருக்கடிக்குள், போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், சைபர் தாக்குதல் உபகரணங்கள் மற்றும் செய்மதிகளை செயலிழக்கச் செய்யும் உபகரணங்கள் என அனைத்தும் நவீன ரகத்திலான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காகவே இராணுவ செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சர்ச்சைக்குரிய தீவுகளின் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடிய வாகனங்கள் மற்றும் சத்தமின்றி சென்று தாக்கும் போர் விமானங்கள் ஆகியவையும் வாங்கப்படுவதாக அபேயின் அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

ஜப்பானின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் அது யுத்த பிரியமுள்ள நாடாகவே சர்வதேசத்திற்கு காண்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், சீனா மற்றும் பலமிக்க நாடுகள் யுத்தத்திற்கு தயாராகி வருகின்ற அதேசமயம், சாதாரண நாடுகளில் உள்நாட்டு யுத்தங்களுக்கும் தூவமிட்டு வருகின்றன. 

இத்தகையதொரு மோசமான நிலைமை, மூன்றாம் உலக யுத்தத்திற்கான அறிகுறியாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே, இனிமேலும் யுத்தம் ஏற்படுமாயின் அது நீருக்கான யுத்தமாக, அல்லது நீர் சார்ந்த யுத்தமாகவே இருக்குமென எதிர்வு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவு விவகாரமும் நீர் சார்ந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆகவே, மூன்றாம் உலகப் போருக்கு ஜப்பான் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.  

வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ்

 சா.சுமித்திரை

 பிரிட்டனின் முடிக்குரிய முதலாவது இளவரசர் சார்ள்ஸுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் 65 வயதாகின்றது. இதனையடுத்து பிரிட்டன் வரலாற்றில்   பேரரசராக வருவதற்கு காத்திருக்கும் மிகவும் வயதானவராக வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் வர்ணிக்கப்படுகிறார்.

 1830 ஜூனில் வில்லியம் ஐங  தனது 64 ஆவது வயதில் தான் பேரரசராக முடி சூடிக் கொண்டார். இந்த வரலாற்றுப் பயணத்தினை 183 வருடங்களின் பின்னர் இளவரசர் சார்ள்ஸ் முறியடிக்கவுள்ளார். இதேவேளை இலங்கையில்   பொதுநலவாய அரசுத் தலைவர்களின்  மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி  முதல் 17 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நடைபெறவுள்ளது. இலங்கையில் இம்முறை  நடைபெறவுள்ள மாநாட்டில் மகாராணி எலிசபெத் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக இளவரசர் சார்ள்ஸே மாநாட்டிற்கு தலைமை தாங்கவுள்ளார். 

 இம் மாநாட்டு நிகழ்வுகளுக்கு மத்தியிலேயே பேரரசராக முடி சூடுவதற்கு காத்திருக்கும் மிகவும் வயதானவர் என்ற கௌரவப் பட்டத்தினை அடுத்த 8 நாட்களில் பெறவுள்ளார். இந் நிலையில் சார்ள்ஸ் நவம்பர் 14 ஆம் திகதியன்று தனது 65 ஆவது பிறந்த தினத்தினை எங்கு எவ்வாறு கொண்டாடுவார் என்றதொரு கேள்வி நிச்சயம் எல்லோரின் மனதிலும் எழலாம். 

குறிப்பாக எமது நாட்டு தலைவர் மகிந்த ராஜபக்ஷ உட்பட பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களிடமும் இந்தக் கேள்வி சிலவேளைகளில் எழலாம்.  ஏனெனில் இக் காலப் பகுதியில் இளவரசர் சார்ள்ஸ்  இலங்கை வருவதற்கான பயணத்தினை ஆரம்பித்துள்ளார். சில வேளைகளில் பல நாட்டு அரசு தலைவர்களுடனும்  அன்றைய தினம் செலவிடப்படலாம். இதனால் பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸின் 65 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம்  எமது நாட்டிலேயே கொண்டாடப்படும் வாய்ப்புமுள்ளது. 

உலகின் மிகப் பிரபல்யமான ஓய்வூதியராக பதவி பெறும் நிலையிலுள்ள இளவரசர் சார்ள்ஸிற்கு இம்முறை ஹப்பி பேர்த் டே வாழ்த்து சொல்லும் வாய்ப்பு இலங்கையர் எமக்கும் கிடைக்கும் நிலையில் நிச்சயம் பெருமை கொள்ளலாம். சார்ள்ஸ் பிரிட்டனின் முதலாவது  முடிக்குரிய இளவரசர் என்பதற்கு மேலாக அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சியான, துயரமான , கொந்தளிப்பான 65 சுவாரசிய நிகழ்வுகளை அண்மையில் லண்டன்  “ டெய்லி மெயில்’ வரிசைப்படுத்தியிருந்தது.  

இளவரசர் சார்ள்ஸ் பற்றிய 65 சுவாரசியங்கள் 

இளவரசரின் முழுப் பெயர்  சார்ள்ஸ்  பிலிப் அர்தூர் ஜோர்ஜ், இளவரசர் வேல்ஸ், கேஜீ, கேரி, ஜீ.சிபி, ஒஎம். ஏகே, கியூஎஸ்ஒ, பிஸி, ஏடிசி. , இங்கிலாந்தின் பிரபு, கோர்வல் கோமகன் , ரோத்ஸே கோமகன். 

இளவரசர் சார்ள்ஸிற்கு கையடக்கத் தொலைபேசி  பயன்படுத்தும் பழக்கமில்லை . ( அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரமைப்பின் உளவுப் பணிகளின் போது , இளவரசர் சார்ள்ஸ் தொடர்பான விவகாரங்கள் இதனால் தான் பாரியளவில் பெற்றுக் கொள்ள முடியவில்லை ). 

1976  இல்  பிரின்ஸ் நிதியம் என்ற அமைப்பொன்று வேல்ஸ் இளவரசரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  ( அரச கடற்படையிடமிருந்து தனது ஓய்வூதியத்தினைப் பெற்று இந்த அமைப்பிற்குச் செலவிட்டு வருகின்றார்) 

நீண்ட தூரம் பயணங்களாயினும் விமானப் பயணங்களின் போதும் இளவரசர் சார்ள்ஸ் உணவு எதுவும் உட்கொள்வதில்லையாம். 

மார்ஷல் ரோயல் விமானப் படை , அட்மிரல் விமானப் படை மற்றும் மார்ஷல் அதிவிசேட விமானப் படை ஆகிய 3 இராணுவ  சேவைகளிலும் அதி விசேட தரத்தினை இளவரசர் சார்ள்ஸ் பெற்றுள்ளார். 

இளவரசர்  சார்ள்ஸ் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 

இளவரசர் சார்ள்ஸ் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் மரத்துண்டுகளாலான தள்ளு வண்டியே அவரின் குழந்தைப் பருவத்தில் பிடித்த விளையாட்டுப் பொருளாகும்.  

அமெரிக்க பாடகர் லியொனட் கோகென்னின் இசையையே சார்ள்ஸ் அதிகம் விரும்பி கேட்பார். 

1954 இல் இருந்து இளவரசர் சார்ள்ஸ் 105 நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா  , பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவற்றுக்கு அடிக்கடிச் சென்று வந்துள்ளார். 

இளவரசர் வேல்ஸ் 32 அரச குழந்தைகளுக்கு ஞானஸ்தான தந்தையாக  உள்ளார்.  

ஒவ்வொரு கிறிஸ்மஸ் பண்டிகையின் போதும் தவறாது தனது படைப் பிரிவிலுள்ள அனைத்து படை வீரர்களுக்கும் விஸ்கி  போத்தல்களை அனுப்பி வைப்பார். 

அரச பாரம்பரியங்களை பேணுவதில் ஆர்வம் கொண்டவர்.  

எலிசபெத் மகாராணியின் குரலினை போல் பேசும் ஆற்றலுடையவர். 

சார்ள்ஸ் தனது இளமைப் பருவத்தில்  பானைகள், சட்டிகள் போன்றவற்றை  வடிவமைப்பதில்  ஆர்வம் கொண்டிருந்தார். 

2012 இல் தான்சானியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இளவரசருக்கு அங்குள்ள பழங்குடியின தலைவரால் “பசுக்களின் பாதுகாவலர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டிருந்தது. 

பண்ணைகள் , குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிலப்பரப்புகள்  உட்பட 133, 658 ஏக்கர் நிலத்திற்கு உரிமையுடையவர். 

800 யூரோவிற்கு மேற்பட்ட பெறுமதியான 50 இற்கும் மேற்பட்ட தோல் சம்பாத்துகளை வைத்துள்ளார். 

1974 இல் பிரிட்டனின் நீச்சல்  கழகத்தின் இணைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.   

பிரின்ஸ் நிதியத்தினூடாக பாடகர் , பாலோமா பைத் , நடிகர்கள் இரிஸ் எல்பார் ,மக்சியன் டைனமோ ,தொழிலதிபர் மிக்கேல் மொனி ஆகியோருக்கு  உதவிகளை வழங்கியுள்ளார். 

அரச குடும்ப உறுப்பினர்களில் பாடசாலைக்கு சென்று பட்டம் பெற்ற முதலாவது நபராக இளவரசர் சார்ள்ஸ் உள்ளார். 

கண் கட்டி மந்திர வித்தைகள் செய்யும் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். 

இளவரசருக்கு  தேன்  என்றால் மிகவும் விருப்பம். 

1992  இல் சேதன உணவு விற்பனை நிறுவனமொன்றினை ஆரம்பித்து 21 வருடங்களாக நடத்தி வருகின்றார். 

2008 இல் ஈக்குவடோரில் கண்டுபிடிக்கப்பட்ட தவளையின மொன்றிற்கு இளவரசர் சார்ள்ஸ் பெயரிடப்பட்டுள்ளது. 

மண்ணிற கோழி முட்டைகளையே விரும்பி சாப்பிடுவாராம்,. 

விலங்குகளை அதிகம் நேசிப்பாராம். ஆனால், பூனைகளைப் பிடிக்காதாம்.  
400 இற்கும்  மேற்பட்ட அமைப்புகளின் தலைவராக இளவரசர்  வேல்ஸ் உள்ளார். 

கோழி வளர்ப்பில் ஆர்வமுடையவர்  . 

சலவை இயந்திரத்தில் தோய்த்த ஆடைகளை இளவரசர் அணிவதில்லையாம். 

இளவரசருக்கும், இளவரசி ஆனுக்கும்  அவர்களுடைய சிறுவதியல் இளவரசர் பிலிப்பினால் கையுறைகள் உள்ள பெட்டியொன்று கொடுக்கப்பட்டது. இவற்றினை பகிர்ந்து கொள்வதற்காக இருவரும் சண்டை பிடித்துக் கொண்டனராம். 

இளவரசர் சார்ள்ஸிற்கு பிடித்த மதுபானம் மார்டினிஸ். 

முஸ்லிம் மற்றும் அரபு நண்பர்களுக்கு ஏதேனும்  கடிதமோ அல்லது குறிப்போ  எழுதும் போது தனது பெயரினை அரபு மொழியிலேயே கையொப்பம் இடும் வழக்கத்தினைக் கொண்டுள்ளார். அதேசமயம் தற்பொழுது அரபு மொழியைப்  பேசுவதற்கும் கற்று வருகின்றாராம்.   

எக்காளம்  இசைக் கருவியை வாசிப்பதை தனது 15 ஆவது வயதில் கற்றிருந்தார். 

கடந்த 10 வருடங்களில் 99 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். 

வெள்ளித் தகட்டிலான பல் குச்சி (Tooth Pick  )  எங்கு சென்றாலும் கொண்டு செல்லும் பழக்கமுடையவர். இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கும் பல் குச்சியை நிச்சயம் கொண்டு வருவாரென எதிர்பார்க்கலாம்.

இளவரசருக்கு பாணும் , பட்டர் புடிங்கும் தான் பிடித்த உணவாகும். அவுஸ்திரேலியாவில் தான் முதல் முதலாக சமைக்க இளவரசர்  கற்றுக் கொண்டார்.  

இளவரசர் தனது 14 ஆவது வயதில் முதற் தடவையாக பொது இடமொன்றில் மதுபானம் அருந்தியுள்ளார். 

2012 இல் , அரச மாளிகையில் இடம்பெற்ற 657 அரச நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் அங்கு வந்திருந்த 7500 பொது விருந்தினர்களுடனும் உரையாடியுள்ளார். 

பிரிட்டனின் முதலாவது மீள் சுழற்சி முறையில் வீட்டுப் பொருட்களை பயன்படுத்தும் திட்டத்தினை பங்கிங்ஹாம் மாளிகையிலே தான் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இளவரசர் தனது பணியில் புனிதத் தன்மையே பேணும் ஒருவராவார். 

இளவரசர் மரண சடங்குகளில் அணியும் அரச குடும்ப உடையினையும் எங்கு சென்றாலும் கொண்டு செல்வார். 

கால்பந்தாட்ட கிளப்புகளுக்கு உதவி வருகிறார். 

இளவரசர் சார்ள்ஸ் மதிய உணவு கட்டாயமாக சாப்பிடுவதில்லை. மாறாக சில வேளைகளில் சாண்ட் விச் மதிய உணவாகச் சாப்பிடுவார். 

இளவரசருக்கு பிடித்த நொறுக்குத் தீனி வெல்ஸ் புருட் கேக். 

தினமும் நடைப் பயிற்சி செய்யும் வழக்க முடையவர் . ( நடைப் பயிற்சியின் போது , சிலர் அவரிடம் சிகரெட் தேவையெனக் கேட்டால் உடனே  எனக்கு நடை பயிற்சியே தேவை என அவர்களிடம் கிண்டலடிப்பாராம்)  

அணில்களுக்கு உணவூட்டும் பழக்கமுடையவர். சிலவேளைகளில் சமையலறைக்குள்ளேயே வரவழைத்து அவற்றுக்கான உணவினை  வழங்குவார். 

கோரடொனிலுள்ள ஸ்கொட்டிஸ்  பாடசாலையில் கல்வி கற்கும் போது தலைமை மாணவராக நியமிக்கப்பட்டிருந்தார். 

ஹைரோவிலுள்ள வீட்டுப் பண்ணையில் பல் வகையான புல் புதர்களை வளர்த்து வருகின்றார். 

விவசாய மற்றும் கலாசார திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் ரன்ஸேவேனியாவில் இளவரசருக்கு பல சொத்துக்கள் உள்ளன. 

இளவரசர் தனது கார் , ஆசனம் மற்றும் விமான  இருக்கை என அனைத்திலும் கோல்ட் மற்றும் சிவப்பு நிறத்திலான ஒரு சிறிய குஷனொன்றினை வடிவமைத்து வைத்துள்ளார்.

பல வருடங்களாக லேக் மாவட்டத்திலுள்ள ஜெ ரீ பண்ணையில் தனது பொழுது போக்கினைச் செலவிட்டு வருகின்றார். 

1976 இல் இருந்து 750,000 இளைஞர், யுவதிகளுக்கு பிரின்ஸ் நிதியம் மூலம்  உதவி வழங்கப்படுகிறது. 

1983  இலிருந்து பிரிட்டனிலுள்ள 80,000  இற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வியாபார நடவடிக்கைகளுக்கு இந்த நிதியம்  மூலம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இளவரசர் கடந்த 30 வருடங்களாக குறித்த உடல் நிறையினையே சராசரியாகப் பேணி வருகின்றார். 

395, 000 பொது மக்களின்  வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பிரின்ஸ் நிதியம் செயற்பட்டு வருகின்றது. 

இளவரசர் அணியும் சேட் கள் ஒவ்வொன்றினதும் பெறுமதி 350 யூரோவாகும். லண்டன் ஆடை வடிவமைப்பாளர்களான ரென்புல் மற்றும் அஸர் ஆகியோராலேயே இவருக்கான சேட்கள் தைக்கப்படுகின்றன. 

2010 இல் நார் பொருட்களில்  நன்மைகள் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் திட்டமொன்றினை முன்னெடுத்திருந்தார். 

இங்கிலாந்திற்காக நான் எதனையும் செய்வேன் என்பதே இளவரசருடைய தாரக மந்திரமாகும். 

பாற்கட்டி உற்பத்தி பொருட்களை அதிகம் விரும்பி உண்பார்.  
இளவரசர் தனது பள்ளி பருவத்தில் சீம் பாடசாலையில் கற்கும் போது தலைமை ஆசிரியராக பீற்றர் போக்கினால் இரு தடவை பிரம்படி வாங்கியுள்ளார். 

நுட்பமான ஆராய்ச்சிப் பணிகளில் ஆர்வமுடையவர். 

இளவரசி டயனாவினை விவகாரத்துச் செய்த பின்னர் கொந்தளிப்பான ஒழுங்கீன மற்ற வாழ்க்கை நடத்துபவரென பேசப்பட்டவர். 

நேர்மையானவராகவும் கடுமையான உழைப்பாளியாகவும் வலம் வருபவர். 

பல விதமான கார்களைச் செலுத்துவதில் ஆர்வம் கொண்டவர். 

1. கடல் அலைகளில் சறுக்கி விளையாடுவதிலும் ஆர்வம் கொண்டவர்