வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மெல்லக் கொல்லும் கொலையாளி! புகையிலை


_சா.சுமித்திரை_

அமெரிக்காவில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியிலேயே புகையிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் காயங்களை சுத்தமாக்கும் தொற்று நீக்கியதாகவும் வலி நிவாரணியாகவும் புகையிலையை பயன்படுத்தினர். வட அமெரிக்காவில் பணம் உழைக்கும் பயிராக புகையிலை இருந்துள்ளது. 1847 ஆம் ஆண்டு பிலிப் மொரிஸ் என்பவரே முதன் முதலாக புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட்டினைத் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். எனினும் சிகரெட் பயன்பாடு என்பது ஆரம்ப காலங்களில் இராணுவ வீரர்களிடமும் பாதுகாப்புப் படையினரிடமே காணப்பட்டது.

1953 களில் சிகரட், புகையிலை பாவனையால் பலவகையான புற்றுநோய் ஏற்படுகின்றது என டாக்டர் எமல் எல் வைன்டஸ் கண்டுபிடித்தார்.
இதனைத் தொடர்ந்து 1964 களில் அமெரிக்க அரசு புகைபிடிப்பதால் சுகாதாரத்திற்கு கேடு என்னும் நோக்கில் அவர்களுக்கு எதிராகவும் விற்பனைக்கு எதிராகவும் சட்டம் உருவாக்கியது.
மனிதனுக்கு மரணத்தைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாம் நிலையிலுள்ளது. இதனாலேயே புகையிலை பாவிப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக உலக சுகாதார அமைப்பு 1987 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து உலக நாடுகள் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நாளாக அனுஷ்டித்து வருகின்றன.
புகைத்தல் புகை பிடிப்பவரை விட அச் சூழலில் இருக்கும் ஏனையவர்களையே அதிகளவு பாதிக்கச் செய்கின்றது. புகைப்பவர்கள் தமது ஆயுட் காலம் முடிவதற்கு முன்பே தமது உயிரினை அழித்துக் கொள்கின்றனர். இதேவேளை தன் உயிரை அழிப்பதற்கே இந்த உலகில் அனுமதி இல்லாத போது  தன் சுயநலத்துக்காக அடுத்தவர் உயிர்களின் அழிவுக்கு மற்றவர்கள் காரணமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?

புகைத்தல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உலகில் நிமிடத்திற்கு 6 பேர் மரணிப்பதாக சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
20 ஆம் நூற்றாண்டில் 100 மில்லியன் பேரும் 21 ஆம் நூற்றாண்டில் இதுவரை 1 பில்லியன் பேரும் புகைத்தல் தொடர்பான நோய்களால் இறந்துள்ளனர் எனவும் ஆய்வறிக்கை ஒன்ற தெரிவிக்கின்றது. இது தொடருமானால் 2030 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 8 மில்லியன் பேர் வரை வருடாந்தம் உலகில் மரணமடையலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
இலங்கையில் ஒரு நாளைக்கு புகை சம்பந்தமான நோய்களால் 370 பேர் இறப்பதாக கடந்த வருடம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புகைக்கும் போது வெளிவரும் புகையில் 400 இற்கும் அதிகமான நச்சு இரசாயனப்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் 50 வீதமானவை சுவாசப் பற்றுநோயினை ஏற்படுத்துபவையாகவுள்ளன. அத்துடன் இப்புகையை சுவாசிக்கும் சிறு குழந்தைகளின் எண்ணங்களில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் நைட்டிங் காம் பல்கலைக்கழகங்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புகையியை சுவாசிப்பதால் இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்ற அதேவேளை நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு, பல், உதடுகளின் நிறம் மாறுதல், இருமல் என புதுப்புது நோய்கள் புகைப்பவர்களின் உடலினை ஆக்கிரமித்து கொள்கின்றன. இதனால் புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது வாழ்நாளினை வைத்தியசாலைகளிலும் மருந்துகளுடனும் கழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
புகையிலையை பல விதங்களில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வெற்றிலையுடன் சேர்த்து உண்ணல், மூக்குப் பொடியாக பயன்படுத்தல், குழாய்களைப் பாவித்து புகையை உறிஞ்சுதல், இதனை விட பீடி, சுருட்டு, சிகரெட் என பல முறைகளில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.
புகைப்பிடிப்பதால் சிலவேளைகளில் உடலின் அல்லது மனதின் உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், இவற்றினால் இறுதியில் கிடைக்கும் பிரதிகூலங்களும் வேதனைகளும் செல்லிலடங்காதவை.

புகையிø உள் இழுக்கும் போது புகையிலுள்ள நிக்கோர்டின் என்னும் இரசாயனப் பொருள் மூளையினைச் சென்றடைகின்றது. ஒவ்வொரு முறையும் இழுக்கும் போதும் அந்த இரசாயனப் பொருள் மூளைக்கு செல்கின்றது. அத்துடன் இந்த இரசாயன நச்சுப் பொருளுடன் 700 வகையான வேறு இரசாயனக் கூட்டுப் பொருட்களும் செல்கின்றன.
மூளையின் மனநிலை மாற்றுக் கலங்களுக்கு நிக்கோர்டின் உட்பட இரசாயனக் கூட்டுப்பொருட்கள் செல்வதால் புகைபிடிப்பவர்களுக்கு ஒரு வகை மாயையைத் தோற்றுவிக்கின்றனர். சில மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள் இந்த மாயையை ஒரு சிறந்த தீர்வாக எண்ணுகின்றனர். எனவே புகைபிடித்தலை ஒரு பழக்கமாக ஏற்றுக்கொள்ள முனைகின்றனர்.

மன அழுத்தங்களுக்கு புகைத்தல் தீர்வாகுமா?
இலங்கை இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரை அநேகமான ஆண்கள் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது பொது இடங்களிலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கும் தீர்வாகவே புகைபிடிப்பதாகக் காரணம் சொல்வார்கள். எந்தவொரு பிரச்சினைகளையும் பேசியோ, ஆராய்ந்தோ, சிந்தித்தோ முடிவெடுக்காது புகைபிடித்தலைக் காரணம் சொல்வது மடமையாகும்.

இலங்கையிலேயே புகைபிடிப்பதற்காக பல காரணங்களை சொல்கின்றனர். மகிழ்ச்சிக்காகவென 22 வீதமானோரும் நண்பர்களுடனும் பொழுது போக்கவென 8.2 வீதமானோரும் புகைபழகத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 17 வீதமானோரும் தனிமையைப் போக்க 10.5 வீதமானோரும் பரீட்சித்துப்பார்க்கவென 8.7 வீத மானோரும் நண்பர்களின் அழுத்தங்களுக்காக 10 வீதமானோரும் பிரச்சினைகளுக்காக 15 வீதமானோரும் தாம் புகைபிடிப்பதற்கான காரணமாகச் சொல்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்களின் விலையேற்றத்தால் திணறுகின்ற பொதுமக்கள் சிகரெட், சுருட்டு, மது போன்றவற்றின் விலையினை எத்தனை சதவீதத்தினாலும் அரசு உயர்த்தினாலும் எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாது அதிக பணம் கொடுத்த வாங்கி உபயோகிக்கின்றனர். எனவேதான் அரசு எந்தவித அச்சமோ, தயக்கமோ இன்றி அடிக்கடி இத்தகைய பொருட்களின் விலையினை அதிகரித்து வருகின்றது. இந்த விலையேற்றத்தால் குடும்பப் பெண்களும் குழந்தைகளும் உறவினர்களுமே பாதிக்கப்படுகின்றனர்.
200 குடும்பங்கள் சிகரெட் வாங்க மாதாந்தம் செலவு செய்யும் தொகை 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவாகும். ஒருநாளைக்க 4101 மில்லியன் சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன.

இலங்கை மட்டுமல்லாது உலக நாடுகள் பல சிகரெட் விற்பனை மூலமே அதிகளவு வருமான வரியினை  ஈட்டுகின்றன. இலங்கை அரசு சிகரெட் மூலம் 12 வீத வருமானத்தினைப் பெற்று வருகின்றது. புகைபிடிப்பதற்காக 5800 கோடி ரூபாவினை வருடமொன்றுக்கு செலவிடுகின்றனர்.
அதேவேளை புகை தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க சுகாதார அமைச்சு 22 வீதம் செலவிடுகின்றது. புகைபிடிப்பவர்களில் 60 பேர் உயிரிழக்கின்ற அதேவேளை 60 பேர் புதிதாக புகைபிடிக்கப் பழகுகின்றனர்.

புகைபிடித்தலை ஊக்குவிக்க பிரித்தானியா, அமெரிக்கா புகையிலை கம்பனிகள் கோடி கோடியாக அமைதியாக இருந்து கொண்டு இலாபம் உழைக்கின்றனர். ஆனால், இவற்றினை உணராத வறிய, சாதாரண குடும்பத்தவர்கள் அற்ப மகிழ்ச்சிக்காக அவர்களுடைய உடலையும் கெடுத்து குடும்ப மகிழ்ச்சியையும் சீரழித்து பணத்தினையும் விரயம் செய்து கொண்டிருக்கின்றனர்.
2010 ஆம் ஆண்டு விட கிழக்கில் மட்டும் 5.1 பில்லியன் ரூபாவினை அரசு புகையிலைப் பொருட்கள் மூலமாக வருமானமாகப் பெற்றுள்ளது. எனவே தான் புகைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசும் அரசு சாராத நிறுவனங்களும் சமுக நிறுவனங்களும் முன்வர வேண்டும். இதன் ஒரு முயற்சியாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்திப் பிரிவு இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை புகையிலை எதிர்ப்பு வாரங்களாக பிரகடனப்படுத்தியுள்ளது.

பொது இடங்களில் புகைபிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றினை எவரும் கருத்தில் கொள்வதில்லை. எனவே இத்தகையோரைக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்க பொலிஸார் முன்வர வேண்டும். அதேபோல 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு இவற்றை விற்க தடையுள்ள போது கடை உரிமையாளர்கள் இரகசியமாக விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

அதேபோல் பொது இடங்களிலோ, ஊடகங்களிலோ சிகரெட், புகையிலை தொடர்பான விளம்பரங்கள் செய்வதும் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
நாம் பொருட்களை வாங்கும் போது உற்பத்தித் திகதி, முடிவு திகதி, பலன் என ஒவ்வொன்றையும் பார்த்தே வாங்குகின்றோம். ஆனால், சிகரெட் பெட்டிகளிலோ, மதுசாரப் போத்தல்களிலோ பெரிய எழுத்துகளினால் எழுதப்பட்டிருக்கும் உடலுக்கு தீங்கானவை என்னும் வாசகத்தை மட்டும் வாசிக்கவோ பின்பற்றவோ தவறிவிடுகின்றோம்.

1988 ஆம் ஆண்டு பின்லாந்தும் 1994 ஆம் ஆண்டு பிரான்ஸும்  புகைத்தல் தொடர்பான விளம்பரங்களை முற்றாகத் தடை செய்துவிட்டன. அதேபோல எமது நாட்டு ஊடகங்களும் வர்த்தக அமைப்புகளும் இவற்றைத் தடை செய்ய முன்வர வேண்டும்.

ஓசோன் படலத் துவாரத்தை முதன் முதலாக எச்சரித்த விஞ்ஞானி மரணம்


-சா .சுமித்திரை -


சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தின் துவாரம் குறித்து முதன் முதலாக எச்சரிக்கை விடுத்துவரும் இரசாயனவியலுக்கான நோபல் பரிசினைப் பெற்ற வருமான ஷேர்வூர் ரொளலண்ட் தனது 84 ஆவது வயதில் கடந்த 10 ஆம் திகதி காலமானார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியராக இருந்த ரொளலண்ட் ஓசோன் படலம் எவ்வாறு பூமியை சூழ அமைந்துள்ளது? சுற்றுச் சூழல் பாதிப்பின் மூலம் அதில் எவ்வாறு துவாரம் ஏற்படுகின்றது என்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். 1974 ஆம் ஆண்டு இயற்கை தொடர்பாக எழுதிய தனது முதலாவது ஆய்வுக் கட்டுரையிலே ஓசோன் படலம் குளோரோபுளோரோக் காபன் துணிக்கைகள் மூலம் பாதிக்கப்படுவதாக எச்சரித்திருந்தார்.


3 ஒட்சிசன் அணுக்கள் இணைந்து உருவாகின்ற ஓசோன் மூலக் கூறால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓசோன் படலம் சூரியனிலிருந்து வெளிவரும் நச்சுப் புற ஊதாக் கதிர்கள்  (290 நனோ மீற்றர்களிலும் குறைவான அலை நீளமுடையவை) பூமியை தாக்காது பாதுகாக்கும் பணியைச் செய்கின்றது.

இம்மகத்தான தொழிலைச் செய்யும் ஓசோன் படலம் மனிதனின் பல்வேறு முறையற்ற நடவடிக்கைகளால் உருவாகின்ற கரிமச் சேர்ம வளிமங்கள் புவியிலிருந்து 30 கீலோ மீற்றர் தொலை வரையுற்ற வளிமண்டலப் படலங்களைச் சிதைவடைக்கின்றமையால் ஏற்படும் தாக்கங்களால் குளோரின், மற்றும் குளோரின் ஒக்சைட்டுக்கள் உருவாகி ஓசோன் மூலக் கூறுகளை நேரடியாக தாக்குகின்றன.

இதனால் ஓசோனின் மெல்லிய படலத்தில் துவாரங்கள் ஏற்பட்டு அதனூடாக புற ஊதாக்  கதிர்கள்  ஊடுருவி புவியை தாக்க வழி செய்கின்றன என ஷேர்வூர் ரௌலண்ட் தன்னுடைய உதவியாளர் மரியோ மொலினாவுடன் இணைந்து கண்டுபிடித்து இதனை தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கினார். இதனையடுத்தே அவரால் கட்டுரையில் முன்மொழியப்பட்ட கருத்துகளை கொண்டு ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

குளிர் சாதனப் பெட்டிகள், ஸ்பிரே கலன்கள், வாசனைத் திரவியங்கள், ஏரோசோல் ஸ்பிரேக்கள் போன்றவற்றின் அதீத பாவனைகள் காரணமாகவே அதிகளவு குளோரோபுளோரோக் காபன் துணிக்கைகள் வெளியேறுகின்றன. இவ் ஆய்வுக்கட்டுரை வெளியான பின்பே 1985 ஆம் ஆண்டு இரசாயன ஆய்வாளர்கள் அந்தார்டிக்கா கண்டத்தின் மேல் ஓசோன் படலத்தில் துவாரம் ஏற்பட்டுள்ளதையும் குளோரோபுளோரோக் காபன் போன்ற வாயுக்ககளின் தாக்கத்தாலேயே இது உருவானதாகவும் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்தே மேலதிக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர் இரசாயனவியலாளர்கள்.

அதேவேளை 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கையையடுத்து (இஊஇஊஇ  (குளோரோ புளோரோ காபன்) கள் மீதான சர்வதேச தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓசோன் துவாரம் கடந்த பத்தாண்டுகளை விட குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன என்பதை 3 செயற்கை கோள்களும் 3 தரை நிலையங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஓசோன் படலத் துவாரம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த ரௌலண்டுக்கு அவருடைய ஆய்விற்காக 20 ஆண்டுகளின் பின்பு 1995 ஆம் ஆண்டே இரசாயனவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவருடைய இழப்பு இரசாயனவியல் துறைக்கு ஒரு பேரிழப்பாகும். நாம் எங்களுடைய மிகச் சிறந்த நண்பனையும், ஒரு அனுபவசாலியையும் இழந்து விட்டோம் என இவினி கலிபோனியா பல்கலைக்கழக (க்இஐ ) பௌதீகவியல் விஞ்ஞானப் பீடத் தலைவர் கென்னித் யன்டா தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.

பார்க்கின்சன் நோய் காரணமாக காலமான ரொளலண்ட் வளிமண்டல இரசாயனவியல், வேதி வினை வேக இயல் ஆகிய துறைகளிலும் தனது ஆய்வினை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

புதன், 4 ஜூலை, 2012

மனித உயிர்களுடன் விளையாடும் போலி வைத்தியர்கள்




 இலங்கையில் 50 ஆயிரம் போலி வைத்தியர்கள் சேவையாற்றுவதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
 ஒரு நாட்டில் வைத்தியத்துறை சிறப்பாகச் செயற்பட்டால் மட்டுமே  ஏனைய துறைகளும் சிறப்பாகச் செயற்பட முடியும். அந்த வகையில் இலங்கையானது பல்வேறு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற போதிலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுகாதாரத் துறையில் சிறப்பாகச் செயற்படுவதால் அந்நெருக்கடிகளைச் சமாளித்து வருகிறது. எனினும் கடந்த சில மாதங்களாக வெளிவரும் சில சம்பவங்கள் தொடர்பான செய்திகள் இனிமேலும் இந் நிலை தொடருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் 50 ஆயிரம்  போலி வைத்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர்களை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கையாக சட்ட விரோத மருந்தகங்கள், மருந்துவ நிலையங்கள் சுற்றி வளைப்பு, போலி மருந்து விற்பனை நிலையம் முற்றுகை , கருக்கலைப்பு  நிலையங்களின் அதிகரிப்பு என மருத்துவத் துறைக்கு சவால்களாக  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து  வருகின்றோம். இதனால் வைத்திய சாலைகள், சிகிச்சை நிலையங்கள், வைத்தியர்களிடம் செல்வதற்கு மக்கள் பல்வேறு வகையிலும் ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்டியில் கடந்த 20 வருடங்களாக சாதாரண பரீட்சையில் கூட சித்தியடையாத ஒருவர் போலியான வைத்திய சான்றிதழ்களை வைத்துக் கொண்டு சிகிச்சை நிலையமொன்றினை நடத்தி வந்துள்ளார் என்பது கடந்த வருடமே தெரிய வந்தது. இதனையடுத்து அப்போலி வைத்தியரையும், அவருக்கு உதவியாக இருந்த இரு பெண்களையும் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் கைது செய்தனர்.
அதேபோல் யாழ். நகரில் கடந்த 5 வருடங்களாக இயங்கி வந்த பல் மருத்துவ சிகிச்சை நிலையத்தினை சுற்றி வளைத்துச் சோதனையிட்ட போது அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த போலி வைத்தியரொருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இதனைப் போல மலாய் பெண்ணொருவர் தனக்ப்கு புற்றுநோய் உள்ளதென பரிசோதனை முடிவில் அறிந்து கொண்டு மேலதிக சிகிச்சை பெற முயன்ற போது இயற்கை வைத்தியம் மூலம் இலகுவாக குணப்படுத்த முடியுமென ஒரு போலி வைத்தியர் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த  பெண், 4000 ரிங்கட்டினை கொடுத்து சில சிகிச்சைகளைப் பெற்றுள்ளார். எனினும் சில காலத்தின் பின்னரே அவ் வைத்தியர் ஒரு போலியானவர்  என்றும் தான் ஏமார்ந்து விட்டேன் என்பதையும் தெரிந்து கொண்டார். தற்பொழுது மலாய் பெண்ணுக்கு புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் மரணத்தை நெருங்கிய நிலையில் போராடிக் கொண்டிருக்கின்றார்.
இப் பெண்ணைப் போல பலர் இலகுவாக  குணமாக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ கூடிய நோய்களை தகுதியற்ற போலி வைத்தியர்களிடம்  காட்டி சிகிச்சை பயனளிக்கவில்லையென நோய் தாக்கம் அதிகரித்த பின் அரச வைத்தியசாலைகளை நாடி நிற்கின்றனர். நிலைமை கவலைக்கிடமாக மாறிய பின் வேறு பல நோய்களையும் இலகுவாக வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 
இதனைப் போல  முறையாக மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்யாது தாங்கள் மருத்துவர்கள் எனக் கூறிக் கொண்டு சமூகத்திலே பலர் கௌரவமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே தான் போலிப் பட்டங்களை பணம் மூலமாகவும் சமூக அந்தஸ்து மூலமாகவும் பெற்றுக் கொண்டு வைத்தியர்கள் போல் நடித்து பொது மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்குமாறு சுகாதார  அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 இதற்காக போலி வைத்தியர்கள் தொடர்பான சட்டத்தை திருத்தியமைக்கும் வகையில் நகல் சட்ட மூலத்தை அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இதனடிப்படையில் போலி வைத்தியர் என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படின் 5 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்தை  மிகவும் கடுமையாக அமுலாக்க வேண்டும். ஏனெனில் இன்றைய காலத்திலே வைத்தியத் துறையென்பது சமூகச் சேவையாக பார்க்கப்படுவது குறைவாக உள்ளது. இதையொரு பணங் கொழிக்கும் தொழிலாகவே சில வைத்தியர்கள் கருதுகின்றனர். பணம் கட்ட வசதி இருந்தால் வைத்தியசாலையினுள் நோயாளியை  அனுமதியுங்கள். இல்லையெனில் வேறு வைத்தியசாலை பாருங்கள் என்ற உரையாடல் அதிகளவில் தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெறுவதாகும்.
 போலி வைத்தியர்கள் 5 வருட சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வந்த பின்னரும் கூட புதிய இடத்திற்கு சென்று மீண்டும்  அதே குற்றத்தைச் செய்ய முற்படலாம்.  எனினும்  தற்பொழுது போலி வைத்தியார்கள் உருவாகுவதை ஒரளவேனும் தடுப்பதற்கும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் பொலிஸாருக்கும் சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் சுகாதார அமைச்சர் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றமை வரவேற்கத்தக்க தொன்றாகும்.
அதிகளவில் போலி வைத்தியர்கள் கிராமப் பகுதிகளிலேயே  சட்டவிரோதமாக சேவையாற்றி வருகின்றனர். இதற்குக்  காரணம்  கிராம மக்களிடையே மருத்துவத்துறை சார்ந்த தெளிவான அறிவின்மையே . இவர்கள் அநேகமாக ஆயுர் வேத வைத்தியம் மற்றும் இயற்கை வைத்தியம் போன்றவற்றையே கடைப்பிடித்து வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இவ் வைத்திய முறைகள் வழக்கொழிந்து போயின. இச் சந்தர்ப்பத்தை போலி வைத்தியர்கள் பயன்படுத்தி பணம் உழைக்கின்றனர்.
 அதேபோல் சட்ட விரோத  கருக்கலைப்பு நிலையங்கள், நகரங்களில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. போலி வைத்தியர்களை அதிகளவாக கொண்ட நாடாக மட்டுமன்றி, கருக்கலைப்பு அதிகளவு நடைபெறும்  நாடாகவும் இலங்கை மாறி வருவதாக  பல சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நாளொன்றுக்கு 45100  வரையிலான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக மருத்துவ ஆய்வறிக்கையொன்று  சுட்டிக்காட்டுகின்றது. இந்த கருக்கலைப்பு நிலையங்களில் அதிகளவில் போலி வைத்தியர்களே பணியாற்றுகின்றனர். கருக்கலைப்பு எண்ணிக்கையை விட போலி வைத்தியர்கள் அதிகமாக உள்ளமை அதிர்ச்சி தரும் விடயமாக உள்ளது.
இந்தப் போலி வைத்தியர்களிடம் போதிய கல்வியறிவோ, அனுபவமோ இல்லாமையால் கருக்கலைப்பு நடவடிக்கைகளின் போது அதிகளவு குருதிப்  பெருக்கு ,கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தல், முறையற்ற ஆலோசனைகள் போன்றவற்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.
எந்த வித பரீட்சைகளிலும் சித்தியடையாதவர்களும் மருத்துவ துறை தொடர்பான அறிவு இல்லாதவர்களும் வைத்தியர்கள் என அப்பாவி மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.  இதனால் மனித இனம் பாரிய போராட்டத்தை எதிர்நோக்குகிறது. எனவே தான் அரசாங்கம்  வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய போலி வைத்தியர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு  மாகாணத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போலி வைத்தியர்களை கட்டுப்படுத்த அரசு மற்றும் அரசு சாராத மருத்துவ துறை நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. 2004 ஆம் ஆண்டில் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருந்தனர் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டில் இருந்த தகைமை வாய்ந்த  ஆங்கில வைத்தியருக்கும் போலி வைத்தியருக்கும் இடையிலான விகிதம்  ஒன்றுக்கு நான்கு எனவும் தெரிவித்திருந்தது.
 ஆனால் தற்போதைய சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி போலி வைத்தியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாகும். எனவே, கடந்த 8 வருடங்களில் மேலும் 10 ஆயிரம் போலி வைத்தியர்கள் உருவாகியுள்ளனர்.  மருத்துவ துறையை போலிகளிடமிருந்து பாதுகாக்க சுகாதார அமைச்சு முன்னெடுத்து வந்திருக்கக் கூடிய நடவடிக்கைகள் போதுமானளவு உறுதியுடையவையாக இல்லை என்பதையே இந்த அதிகரிப்பு காட்டுகிறது.
எந்தத் துறையிலும் கலப்படம் இருக்கலாம். அவற்றினால் பாரியளவு பாதிப்புகள் சமூகத்திற்கு ஏற்படாது எனலாம். ஆனால் மருத்துவத் துறையில் போலி வைத்தியர்கள், போலி மருந்துகள் என கலப்படம் காணப்பட்டால் அது மனித உயிருக்கே பாரிய அச்சுறுத்தலாக மாறிவிடும். இத் துறை மனித உயிருடன் தொடர்பு உடையது என்பதை உணர்ந்து உறுதியான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாது எடுக்க முனைய வேண்டும். இல்லையெனில் மேலும் 5 வருடங்களின் பின்பு நாட்டில் இருக்கக் கூடிய போலி வைத்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தும் சனத்தொகையின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும் என்பது திண்ணம்.

வணிக மயமாகிவிட்ட காதலர் தினம்


பொதுவாக ஒரு விடயம் தொடர்பாக சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே விசேட தினங்கள் பிரகடனப்படுத்தி அனுஷ்டிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட தினங்கள் விசேடமானவையாக அமைகின்றன. அந்த வகையில் பெப்ரவரியென்றால் அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது பெப்ரவரி 14 ஆம் திகதி கொண்டாடப்படும் காதலர் தினமாகும். இது இன்றோ, நேற்றோ கொண்டாடப்படுவதல். பல வருடங்களுக்கு முன்பே இத்தினத்திற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளமையே இந்நாளின் சிறப்பாகும். 1840 ஆம் ஆண்டு அமெரிக்க மாதாந்த இதழின் பிரபல எழுத்தாளரான லஹ்எர்க் ஸ்மித் செயிண்ட் வலன்டைன் தினம் ஒரு தேசிய தினமாக ஆகிவிட்டது என தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை நினைவுகூரலாம்.


உண்மையிலே காதலர் தின வரலாற்றினை நாம் ஆராய்ந்து பார்த்தால் இத்தினம் இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடப்படக்கூடிய ஒரு தினமா? என எண்ணத் தோன்றும். ஏனெனில் காதலர் தினம் பலரது தூய காதலுக்காக தன்னுரியிரையே கொடுத்த ஒரு ரோம் பாதிரியாரின் மரணத்திற்கான ஆரம்பமாகும்.  ஒரு தியாகம் நிறைந்த நாளை  அமைதியாக அனுஷ்டிப்பதே சாலச் சிறந்ததாகும். அதாவது கி.பி. 250 ஆம் ஆண்டுகளில் ரோமப் பேரரசாகவிருந்த கிளாடியஸ் தனது அரசியல் வாழ்க்கையிலே தொட்ச்சியாக பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தான். இதேவேளை இவனது ஆட்சியில் மக்கள் இராணுவத்தில் சேர விரும்பவில்லை. அவர்கள் நாட்டிற்காக சேவையாற்றாது குடும்பம், காதல், மகிழ்ச்சியென இருக்கின்றமையால் தான் படைகளில் இணைய மறுக்கிறார்கள் என நினைத்து கிளாடியஸ் திருமணத்திற்கு தடை விதித்தான்.
இதனையெதிர்த்து வந்த பாதிரியரான வலன்டைன் பல இரகசியத் திருமணங்களை செய்து வைத்தார். இதனால் பேரரசு கிளாடியஸ் கோபம் கொண்டான். உடனே பாதிரியாரைச் சிறையிலே அடைத்து கொடுமைப்படுத்தி கொலை செய்தான். கி.பி. 270 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியன்றே பாதிரியார் வலன்டைன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கௌரவப்படுத்தவே புனித தியாக நாளாக இக்காதலர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.
எனினும் பெப்ரவரியென்றால் காதலர்களும் சரி இளவயதினரும் சரி தங்களுடைய காதல் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் ஏதோவொரு வகையிலே வெளிக்காட்ட ஆரம்பித்து விடுவார்கள். காதலர்களது அன்பினை புனிதப்படுத்தி உள்ளங்களில் மறைந்து கிடக்கும் உணர்வுகளை வெளிக்கொண்டு வர உகந்த நாள் காதலர் தினமென ஒரு சாரார் ஆதரிக்கின்றனர். எமது கலாசார விழுமியங்களை சீர்குலைக்கின்றன என காதலர் தினத்தை இன்னொரு சாரார் எதிர்த்து நிற்கின்றனர். ஏனெனில் ஏனைய தினங்கள் அமைதியான வாழ்த்துக்களுடன் முடிந்து போகின்றன. ஆனால், காதலர் தினம் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கின்றதோ என்ற அச்சமும் ஆதங்கமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுகிறது. இன்று காதலர் தினம் வணிகமயமாக்கப்பட்டு வருகின்றமையாலே தானோ என்னவோ இத்தகைய எதிர்ப்புகள் உருவாகின்றன என சிந்திக்கத் தோன்றுகின்றது.
காதலர் தினத்தை ஆடம்பரமாக்க இலத்திரனியல் ஊடகங்களும் துணை போகின்றன. அதாவது வர்த்தக நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்களை இவ் ஊடகங்கள் மூலம் அதிகளவில் விளம்பரப்படுத்துகின்றன. அவர்களது காட்சியறைகளிலே நவீன ரகத்திலான இறக்குமதி செய்யப்பட்ட பல அன்பளிப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றின் வாடிக்கையாளர்களில்  அதிர்ஷ்டசாலியான காதல் ஜோடி தெரிவு செய்யப்பட்டு ஒரு கணினி வழங்கப்படுவதுடன் 3 நாள் சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பும் உள்ளது என பல கவர்ச்சியான விளம்பரங்களை ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துகின்றன.
இதனால், காதலர் தினமென்றால் காதலர்கள் அன்பளிப்புப் பொருட்களை வாங்கி பரிமாறிக்கொள்ளல், சினிமா, நண்பர்களுக்கு விருந்து என பல வகைகளில் பணத்தை அள்ளிவீசி செலவளிப்பது என்றே ஆகிவிடுகிறது. வர்த்தக, நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும், வித்தியாசமாகவும் கவர்ச்சிகரமானதாகவும் விதம்விதமான வாழ்த்து மடல்கள், மலர்ச்செண்டுகள், பரிசுப் பொருட்கள், இனிப்புப் பண்டங்கள், ஆடை அணிகலன்கள் என எல்லாவற்றிலும் காதலர் தின ஸ்பெஷல் என்ற முத்திரை பதித்து குவித்து விடப்பட்டிருக்கம்.
இத்தகைய பொருட்களை வாங்க நினைக்காதவர்களைக் கூட கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஈர்த்து அவற்றினை அதிக விலைக்கு விற்றுவிடுவார்கள். இதனை விட நாம் அன்பு செலுத்துகின்ற யாருக்குமே அவ் அன்பளிப்புகளை வழங்கி எமது உண்மையான அன்பினை வெளிக்காட்டலாம் எனக் கூறி இலவச ஆலோசனைகளையும் வழங்குவார்கள். உதாரணமாக ஒரு தந்தைக்கோ அல்லது கற்பிக்கின்ற ஆசிரியருக்கோ மகன் அல்லது மாணவன் என்ற ரீதியிலே ஒரு தூய அன்பு உள்ளது. இதனைக் கூட வியாபாரமாக்கி அவ்விருவர்களுக்கும் இடையிலான பாசத்தை வெளிக்காட்டக் கூடியதாகவுள்ள தகுந்த பரிசுகளை காட்டி விற்றுவிடுகின்றனர். இதனால், காதலர்கள் மட்டுமல்லாது பொதுவாக அனைவருமே காதலர் தின மலிவு விற்பனையில் அன்பை காட்ட தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கி பரிசளிக்க விரும்புகின்றனர்.
இவர்களது வியாபார தந்திரங்களை உணராத நாம் வாழ்த்து அட்டைகள், மலர்ச் செண்டுகள், இனிப்புப் பண்டங்கள் என பல ரூபாக்கள் செலவளித்து வாங்குகின்ற போது அவர்கள் அமைதியாகவே இருந்து கொண்டு பல ஆயிரக்கணக்கில் இலாபம் சம்பாதிக்கின்றனர்.
அதேபோல அன்றைய தினம் வீதிகளில் காணப்படுகின்ற சாப்பாட்டுக் கடைகள் முதற்கொண்டு பிரபல்யம் உல்லாச விடுதிகள் வரை காதல் ஸ்பெஷல் உணவுகள் கிடைக்கின்றன. ஆனால், அங்கு வழமையாகவே விற்பனையாகின்ற உணவு வகைப் பட்டியலே காதல் ஸ்பெஷல் பெயர் மட்டுமே மாற்றப்பட்டிருக்கும்.
வியாபார நிலையங்களில் விதம்விதமான வடிவங்களில் சொக்லேட் பெட்டிகள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் காதலர் தின வாழ்த்துக்கள், ஆங்கில முதலெழுத்துக்கள் குறிக்கப்பட்ட கவர்களினால் சுற்றி அலங்கரித்து அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். இவற்றினைப் பார்க்கும் பொழுது சிறு குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியோர்களுக்கும் கூட வாங்க வேண்டுமென்ற ஆசை வரும். உடனே அவற்றினை அதிக விலை கொடுத்தும் வாங்கி விடுவார்கள். ஆனால், அவ்வலங்கரிக்கப்பட்ட பைகளினை பிரித்துப் பார்க்கும் போது உண்மையான பெறுமதி மிகச் சாதாரணமானதாகவே இருக்கும். அப்பொழுது தான் நாம் கடைக்கார்களிடம் ஏமாந்து விட்டோம் என்ற உண்மை தெரிய வரும்.
மேலைத்தேய நாடுகளைப் போல எமது நாட்டில் காதலர் தினத்திற்கு வெளிப்படையான ஆதரவு வழங்கப்படுவதில்லை. எனினும் இத்தகைய வியாபார நடவடிக்கைகளே இளம்வயதினர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முனைகின்றன. விளம்பர மேம்பாடு, மையப்படுத்தப்பட்ட சந்தை முயற்சிகள் மூலம் சிங்கப்பூரள், சீனா, தென்கொரியா, இந்தியா என சில ஆசிய நாட்டவர்களே காதலர் தினத்திற்கு என அதிகளவான பணத்தை செலவிடுகின்றனர்.
உலகிலே கிறிஸ்மஸுக்கு அடுத்தபடியாக வாழ்த்து மடல்களை அனுப்புவதிலும் பரிசுப் பொருட்களை வழங்குவதிலும் விருந்து உபசாரங்களிலும் இரண்டாவது இடத்திலே காதலர் தினம் உள்ளதாக புள்ளிவிபரமொன்று சுட்டிக்காட்டுகின்றது. அதேபோல் பெண்களை விட ஆண்களே சராசரியாக இருமடங்கு செலவிடுகின்றனர் எனவும் அப்புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் ஒரு காதலைத் தொடர வேண்டுமாயின் நிறையப் பணம் செலவிட வேண்டும். அப்பொழுது தான் அன்பு நீடிக்கும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்களும் உண்டு. உண்மையான காதலை பொருள் கொடுத்தோ, பணம் கொடுத்தோ வாங்க முடியுமா? வருடத்தின் 365 நாட்களும் கிடைக்காத தூய காதல் இந்நாளில் மட்டும் கிடைத்து விடுமா? இதனை விட ஒரு காதலன், அல்லது காதலி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவோ, தொலைந்த காதலை தேடவோ, இல்லையென்றால் எனக்கு யாரும் இல்லையே என அங்கலாய்க்கவோ தான் இந்நாளைக் கொண்டாட வணிக நிறுவனங்கள் பலவந்தப்படுத்துகின்றன. இக்காதலர் தினம் அன்பின்  அடையாளத்தை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதே ஒழிய கேலிக்கூத்துகளுக்கும் ஆடம்பர செலவுகளுக்கும் அல்ல. எனவே இந்நாளில் வர்த்தக சமூகத்தினரின் தந்திரோபாயங்களுக்கு காதலை விற்று விலை போகாது இனிமையான என்றும் இளமையான உண்மைக் காதல் உங்களுடனே இருக்கும் என்பதில்நம்பிக்கை கொண்டு வாழ்வோமாக.

சா.சுமித்திரை

பரிணாம வளர்ச்சிக்கு உதவிய காலநிலை மாற்றம்


 சா.சுமித்திரை


 இன்றைய காலத்தில் சீரற்ற காலநிலை மாற்றங்களால் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் பல இயற்கை அனர்த்த அழிவுகளை எதிர்நோக்கி வருகின்றன. குறிப்பாக சுனாமி, வரட்சி, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், சூறாவளி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனர்த்தங்களுள் ஒவ்வொரு உயிரினங்களும் சிக்கி சிதைவடைந்து மடிந்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய காலநிலை மாற்றங்களால் உலகிலுள்ள அனைத்து இடங்களிலும் மனித இனம் முற்றுமுழுதாக அழிவைச் சந்தித்து வருகின்றன.இது இவ்வாறு இருக்க இன்னொரு புறம் முன்னைய காலங்களில் இக்காலநிலை மாற்றம் மனித கூர்ப்பு வளர்ச்சிக்கு வழிகோலியது என்ற உண்மையும் புறந்தள்ள முடியாத ஒன்றாகியுள்ளது.
கடந்த 2 பில்லியன் ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற காலநிலை மாற்றங்களால் மனித கூர்ப்பு பரிணாம வளர்ச்சியடைந்து வந்துள்ளதுடன் மாற்றமடைகின்ற காலநிலை தன்மைக்கேற்ப மனித இனம் இசைவாக்க மடைந்து புதியஇடங்களுக்கு இடம்பெயர்ந்து தனது இருப்பை விரிவாக்கி வந்துள்ளது.
 புவியில் நிலவிவந்த கோடை, மாரி போன்ற பருவ காலங்களை உருவாக்கும் காலநிலை மாற்றங்களால் மனிதகூர்ப்பு விருத்தியில் உண்மையாகவே நீண்டதொரு சிறந்தநன்மை காணப்பட்டுள்ளதுடன் இக்காலநிலை மாற்றங்களால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மூலம் கலாசாரம் அறிவியல் மற்றும் பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக மனித இனம் முன்னேற்றம்  கண்டு வந்துள்ளது.
அதாவது ஆதிகால மனிதன் இயற்கையோடு ஒன்றி விலங்குகளோடு விலங்காக நாடோடி வாழ்க்கை வழ்ந்தான். அவ்யுகத்தில் இடம்பெற்ற மழை,குளிர்,வரட்சி போன்ற காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க  படிப்படியாக பழகிய மனிதன் குகை, மரப்பொந்து,மரக்கிளைகள் போன்ற உறைவிடங்களைதேடி  குடிபுகுந்தான். முன்னைய காலங்களிலும் நிலநடுக்கம், கடல்கோள் என்பன உருவாகியுள்ளன என்பதற்கு  ஆதாரங்கள் உள்ளன.எனினும் அக்கால மக்கள் இத்தகைய அனர்த்தங்கள் ஏற்படக்காரணம் இறைவன் தம்மேல் கோபம் கொண்டமையே என மூடநம்பிக்கைகளை வளர்த்து வைத்திருந்தனர்.
 அத்துடன் இத்தகைய இயற்கை அழிவுகளால் அதிகளவு உயிர்ச் சேதங்களோ பொருட் சேதங்களோ ஏற்படவில்லை.ஏனெனில் மனிதன் இயற்கைக்கு பயந்து கட்டுப்பட்டே வாழ்ந்து வந்தான்.
இருப்பிடங்களில் வாழப்பழகிய மனிதன் குளிரிலிருந்து பாதுகாக்கவும் இறைச்சி போன்ற உணவை வேக வைக்கவும் தீயைக் கண்டுபிடித்தான்.ஆதிகால மனிதனது முதலாவது கண்டுபிடிப்பு காலநிலை மாற்றங்களாலேயே உருவானது என நம்பப்படுகிறது.தொடர்ந்து பருவகால மாற்றங்களால் உருவாகும் மழை,கோடை காலங்களில் தனக்கு தேவையான உணவை களஞ்சியப்படுத்தவும் பாதுகாக்கவும் கற்றுக்கொண்டான்.
 எனினும் பின்னர் இந்த நாடோடி வாழ்க்கையைத்  தவிர்த்து மெல்ல மெல்ல காட்டு பகுதிகளை விலகி நதிக்கரையோரங்களை அண்டிய பகுதிகளில் குடியேற்றங்களை அமைத்தான். மனித நாகரிகங்கள் நதிக்கரையோரங்களிலேயே உருவானதாக வரலாறு எமக்கு கூறுகின்ற போதும் இவை காலநிலை மாற்றங்களின் மூலமே உருவாகியுள்ளமை தற்போதயை ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது.

 அதாவது நதிக்கரையோரங்களில் வாழ்வாதார இருப்பிடங்களை அமைத்து நிரந்தர வாழ்க்கை வாழப்பழகியவன் தனது உணவுக்காக விலங்குகளை வளர்த்து மட்டுமன்றி நீரைப் பயன்படுத்தி மண்னை வளப்படுத்தி விவசாயப் பயிர்ச் செய்கை செய்ய ஆரம்பித்தான்.எனவே விவசாயத்திற்கு தேவையான நீரை மழை காலங்களில் போதியளவு பெற்று வந்த போதிலும் கோடைகளில் நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்க நேர்ந்தது.
 இதன் விளைவாக மழைகாலங்களில் நீரை சேமித்து கோடை காலங்களில் பயன்படுத்தலாம் என்னும் திட்டம் இதற்கான தீர்வாக கிடைத்தது.இதனாலேயே குளங்கள்  நீர்த்தேக்கங்கள் போன்ற நீர்சேமித்து வைக்கும் கட்டமைப்புகள் உருவாகின  எனலாம். இதனால் விவசாயத்தில் தன்னிறைவு காண்பதற்கானதொரு உந்துசக்தியை காலநிலை மாற்றம் மனிதனுக்கு வழங்கியது.
ஆகவே மனிதன் காலநிலை மாற்றங்களுக்கேற்ப இசைவாக்கப்பட்டதுடன் படிப்படியாக  அதிகரித்த சனத்தொகை காரணமாக இயற்கை வளங்களை உச்சமாக பயன்படுத்த ஆரம்பித்தான். இதன் விளைவாக உலகையே ஒரு கையுக்குள் கொண்டு வர முயன்ற மனிதன் பலகண்டுபிடிப்புகளையும் சாதனைகளையும் காலநிலை மாற்றங்களை ஆதாரமாகக் கொண்டு நிகழ்த்தினான். இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்பப்புரட்சி, பசுமைப்புரட்சி என ஒவ்வொன்றாக  உருவாகின.
எனவே சீரான காலநிலை மாற்றம் மனித கூர்ப்பு பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட போதிலும் இன்று  வளர்ச்சியின் உச்சத்தை எட்டியுள்ள மனிதனால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளால் சீரற்ற காலநிலை மாற்றங்கள் உருவாகி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இதன் மூலம் பொருளாதார நெருக்கடி, பட்டினி மரணம்,மனவழுத்தங்கள் மற்றும் பலவகையான நோய்கள் என உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சவால்களை சமாளிக்க  முடியாது திணறிவரும் மனிதகுலம் இயற்கையை வெல்ல துடித்ததன் விளைவை  இன்று கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து  வருகிறது.

இலவசக் கல்வியைக் கூட தொடராது ஏன் மாணவர்கள் இடை விலகுகிறார்கள்?


பாடசாலைக் கல்வியைத் தொடராமல் குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் இடைவிலகுவது இலங்கையிலே  பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகின்றதென கல்வி அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். பல காரணங்களால் பாடசாலைகளில் இலவசமாக வழங்கப்படும் கட்டாயமான அடிப்படைக் கல்வியைக் கூட கற்காது இடை விலகும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுக்க பல்வேறுபட்ட அமைப்புகள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிகளை முன்னெடுக்கின்ற போதிலும், சில காரணங்களால் மாணவர்கள் தொடர்ந்தும் பாடசாலையை விட்டு இடை விலகும் வீதம் குறைந்தபாடில்லை.



 இலங்கையில் பல தசாப்தங்களாக அரச பாடசாலைகளில் இலவசக் கல்வியே வழங்கப்பட்டு வருவதுடன், சீருடைகள் மற்றும் பாடநூல்கள் என்பனவும் இலவசமாக வழங்கப்படுகின்றன. பரீட்சைக் கட்டணங்கள் போன்ற சில செலவுகளுக்கு மாத்திரம் ஒரு தொகை பணத்தை பெற்றோர்களிடமிருந்து பாடசாலைகள் அறவிட்டு வருகின்ற அதேவேளை, சில பாடசாலைகளில் இலைக்கஞ்சி போன்ற சத்துணவுத் திட்டம் காலையுணவுத் திட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கல்விக்காக அரசு பெருமளவு பணத்தைச் செலவழித்து வழங்கும் இத்தகைய வசதிகள் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளர்முக நாடுகளில் மட்டுமன்றி அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட இல்லையென துணிந்து சொல்லலாம். இருந்த போதிலும், ஏனைய நாடுகளை போலல்லாது எமது நாட்டிலேயே தற்காலத்தில் பாடசாலைக் கல்வியை தொடராதோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையொன்று கவலைதரும் தகவலை வெளியிட்டுள்ளது.
பாடசாலையிலிருந்து இடை விலகும் மாணவர்கள் அதற்காகச் சொல்லும் காரணங்களில் முக்கியமானது வறுமையாகும். இதனை விட கல்வி கற்பதில் ஆர்வமின்மை, பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மை, குடும்பப் பொறுப்பு, கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாதல் இளவயது திருமணங்கள், மற்றும் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களினால் உடல், உள ரீதியிலே பாதிக்கப்பட்டிருந்தல் என பல காரணங்களால் மாணவர்கள் கல்வியைத் தொடராது இடைவிலகுகின்றனர். இதனை விட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தங்களின் போது ஏற்பட்ட வடுக்கள் காரணமாகவும் கல்வியை தொடர்வதில் பல மாணவர்கள் ஆர்வமற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.
முன்னைய காலங்களைப் போலல்லாது, இன்று கல்வி முறைமைகளில் அதிகளவு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் காலங்களில் ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே மாணவர்கள் அறிவைப் பெற்றனர். ஆனால், இன்று இணையத்தளம் ஊடகங்கள் என பல்வேறு வழிகளிலும் கல்வியறிவையும் தொழில் பயிற்சிகளையும் பெற்றுக் கொள்கின்றமையால் சில வேளைகளில் ஆசிரியர்கள் கூட சில தகவல்களையும் அனுபவங்களையும் மாணவர்களிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இதனை ஆசிரியர்களோ, ஏனைய பெரியோர்களோ அவமானமாகக் கருதக்கூடாது. நீ எனக்கு சொல்லித் தருவதா? என அதற்கு பதிலடி கொடுக்க ஆசிரியர்கள் ஆரம்பித்து விட்டால் அது மாணவர்கள் கல்வி மீது கொண்டுள்ள விருப்பத்தினைக் குறைத்து விடும். இறுதியில் பாடசாலைக் கல்வியை விட்டு இடை விலகி விடுவார்கள்.
அதேபோல் சில பெற்றோர்கள் தங்களுடைய பரம்பரைத் தொழிலையே எங்களுடைய பிள்ளைகளும் செய்ய வேண்டும். எமது தொழிலுக்கு இந்த கல்வியறிவு போதும் என்று கூறி பாடசாலைக்குச் செல்லவிடாது தடுத்து நிறுத்தி விடுவார்கள். வட கிழக்குப் பகுதிகளிலே பல குடும்பங்களில் குடும்பப் பொறுப்பினை விதவைப் பெண்களே சுமக்க வேண்டியதொரு சூழ்நிலை யுத்தத்தின் பின் உருவாகியுள்ளது. இதனால் அப் பெண்கள் வேலைகளுக்குச் செல்லும் போது தங்களுடைய இளைய பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக மூத்த பிள்ளையை பாடசாலைக்கு செல்லவிடக்கூடாது தடுத்து விடுகின்றனர்.
கிராமப் பகுதியில் வாழ்கின்ற சிறுவர்களே அதிகளவில் பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர். ஏனெனில் ஆரம்பக் கல்வியை அவர்களுடைய கிராமங்களிலே தொடர்கின்ற போதிலும் இடை நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வியை கற்க அவர்களுடைய கிராமங்களில் போதிய வசதிகள் காணப்படுவதில்லை. எனவே உயர் வகுப்பு கல்விக்காக தமது கிராமங்களுக்கு அருகிலுள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால், அவர்களுக்கு நகர் பாடசாலைகளுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளோ அல்லது பொருளாதார வசதிகளோ இல்லாத காரணத்தினால் கல்வியைத் தொடராது விட்டு விடுகின்றனர். இத்தகைய தடைகளையும் தாண்டி சில மாணவர்கள் நகரப் பாடசாலைகளில் சேர்த்து விடுவார்கள். ஆனால், சில நகரப் பாடசாலைகளிலுள்ள அதிபர்களோ அல்லது ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியிலேயே கிராமத்திலிருந்து வந்து கல்வி தொடரும் மாணவர்களை அனுசரித்து வழிநடத்த தவறிவிடுகின்றனர். அதேபோல் அவர்கள் போக்குவரத்துப் பிரச்சினைகளால் வகுப்புக்கு தாமதமாக வந்தால் உடனே ஆசிரியரோ, அதிபரோ அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை  வழங்குகின்றனர்.
சில  பாடசாலைகளில் மாணவர்களுக்கு பட்டப் பெயர்கள் சொல்லி அழைப்பது, அவர்களின் குடும்பங்களில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை சொல்லிக் காட்டுவது உதாரணமாக உன்னுடைய அப்பா ஒரு குடிகாரன், உன்னுடைய அண்ணா கள்ளன், உன்னுடைய சகோதரி தற்கொலை செய்து கொண்டார் என சொல்லிச் சொல்லி அம்மாணவர்களின் மனதினைக் காயப்படுத்துகின்றனர். அதேபோல் திறமைகளுக்கு சில பாட ஆசிரியர்கள் முன்னுரிமையளிப்பதில்லை. செல்வாக்கும், பணமும் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்குவார்கள். இதனால் திறமையிருந்தாலும் வறிய மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றமையால் அவர்கள் கல்வி மீது வெறுப்பைக் காட்டுகின்றனர்.
இதேபோன்ற பல்வேறு விதமான உளப்பாதிப்புகளை ஏற்படுத்தும் சம்பவங்களினாலும் மாணவர்கள் இடை விலகுவதுடன் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இடை விலகும் மாணவர்களில் அதிகமானோர் 11 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்டவர்களாகவே உள்ளனர். இப்பருவம் தான் சிறார்கள் சமூகத்தை அதிகளவு உணர்ந்து கொள்ளும் பருவமாகும்.
பாடசாலை நேரங்களில் சில பாட ஆசிரியர்கள் கற்பிக்க விரும்புவதில்லை. மாலை மற்றும் விடுமுறை தினங்களில் தனியார் வகுப்புக்கு வருமாறு வற்புறுத்துவதுடன் தனிப்பட்ட கட்டணங்களையும் அறவிடுகின்றனர். இத்தகைய பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்ல வசதியற்ற மாணவர்கள் பாடசாலைகளில் புறக்கணிக்கப்படுகின்றனர். அதேபோல் சில பெற்றோர்களும் தம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிறிதளவும் சிந்திப்பதில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்பொழுது மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகும் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை கல்வி வளர்ச்சி வீதமும் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
தமிழர்களது  அழிக்க முடியாத. சொத்தான கல்வியறிவினைப் பார்த்து சர்வதேச நாடுகளும் கூட ஆச்சரியப்பட்டன. தமிழ் சான்றோரிடம் வந்து கல்வி கற்பதற்காக வடக்கிற்கு படையெடுத்த ஒரு  காலம் இருந்தது. ஆனால், இன்றைய கல்வி நிலையினை கல்வி சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இடைவிலகிய மாணவர்களை பாடசாலைகளில் மீண்டும் சேர்த்து. அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சீருடை என்பவற்றையும் இலவசமாக வழங்கி. உதவி வருகின்றனர் பலர் சமூக ஆர்வலர்கள். ஆனால், மீண்டும் புதிய வகுப்புகளில் இணையும் இம்மாணவர்கள் பழைய நிலைக்கு முகம் கொடுக்கும் அதேவேளை, வயது குறைந்தவர்களுடன் படிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால் மீண்டும் கல்வி ஆர்வமில்லாது ஏனோதானோ என்று வற்புறுத்தலின் பேரில் பாடசாலை சென்று வருகின்றனர்.
எனவே அத்தகைய மாணவர்களை மனதளவிலும் ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் நிலையை சக மாணவர்களுக்கு உரிய முறையிலே எடுத்துக் கூற வேண்டும். இது போன்ற சின்ன சின்ன மாற்றங்கள் மூலமே இடை விலகிய மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளில் இணைந்து கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

சா.சுமித்திரை

சமூகங்களை ஒன்றிணைக்கும் சமூக இணையத்தளங்கள்

இன்றைய இளைஞர்கள் இருந்த இடத்திலேயே சமூக இணையத்தளங்கள் மூலம் முழு உலகினையும் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சமூக வலைத்தளங்கள் உலகின் எந்தவொரு மூலையிலும் உள்ள அனைத்து சமூகத் தரப்பினரையும் எந்தவித வயது வித்தியாசமும் இன்றி ஆட்கொண்டுள்ளதுடன் அவர்களின் பொழுது போக்கும் மையமாகவும் செயற்பட்டு வருகின்றன என்றால் மிகையாகாது.
இத்தொழில்நுட்ப யுகத்திலேயுள்ள இளம் சமூகத்தினரிடையே உள்ள யாராவது ஒருவருக்கு வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால், சமூக இணையத்தளங்களுக்குரிய கணக்கு இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு சமூக இணையத்தளங்கள் பிரபல்யம் பெற்றுள்ளன. பேஸ்புக் (ஞூச்ஞிஞுஞணிணிடு) டுவிட்டர் (கூதீடிttஞுணூ) மை ஸ்பேஸ் (ட்தூ ண்ணீச்ஞிஞு) லிங்ட்  இன் பிலிக்தர் (ஞூடூடிஞிடுஞுணூ)  என பல வகையான பெயர்களில் சமூக இணையத்தளங்கள் இணையங்களில் உலா வருகின்றன. அவற்றில் ஒவ்வொருவரும் தமது வசதி, தேவை போன்றவற்றுக்கேற்ப அவற்றில் இணைந்துகொண்டு சேவையினை தாராளமாகப் பெற்று வருகின்றனர்.
இச்சமூகத்தளங்களின் பாவனை தற்பொழுது இளைஞர்களின் மத்தியிலே அசுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டு வருகின்ற அதேவேளை அவை தொடர்பான பிரச்சினைகளும் சர்ச்சைகளும் அதேவேகத்திலே அதிகரித்து வருகின்றன என்ற உண்மையையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக இச் சமூக இணையத்தளங்களில் உலா வரும் போது தனிநபர் ஒருவரது தகவல்களை பயன்படுத்துவது,  அத்தகவல்களை திருடி இன்னொருவருக்கு விற்றல், பயனாளர்களின் சுதந்திரத்தில் தலையிடுதல், தெரியாதவர்களுடன் அளவுக்கதிகமாக உரையாடுவது இவற்றை தவிர இத்தளங்களின் அதீத பாவனைகளின் போது ஏற்படுகின்ற அர்த்தமற்ற காதல், கல்வியில், தொழிலில் ஏற்படுகின்ற தடைகள் என வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் சம்பவங்கள் நாள்தோறும் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருகின்றன. மேலும் சமூகத் தளங்களில் அதிகளவு நேரம் செலவிடுபவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர் என அறிவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல் உடல் ரீதியான பாதிப்புகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் உருவாக வழிகோலுகின்றன. இவற்றை போல சமூக இணையத்தளப் பாவனையால் ஏற்படுகின்ற எத்தனையோ பிரச்சினைகளையும் சர்ச்சைகளையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்.
இதனால்தான் என்னவோ எமது மூத்த சமூகத்தினர் இச்சமூகத்தளப் பாவனை பற்றி அதிருப்தி தெரிவிக்கின்றனர். இவர்கள் இளைய சமூகத்தினர் மத்தியில் இதற்கு சிறிதும் ஆதரவு வழங்காது இருக்கின்றனர். இதன் விளைவாக எங்கேயோ ஒரு இடத்தில் இவற்றின் பாவனையால் ஏற்பட்ட பாதிப்பை  ஏதோவொரு வழியில் அறிந்து கொண்டால் உடனே தங்களுடைய வீட்டிலேயே அச்சம்பவம் இடம்பெற்றுள்ளது போல எண்ணி வானுக்கும் மண்ணுக்கும் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது இளைய சமூகத்தினர் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாகவே ஏற்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் எந்தவொரு செயல்களுக்கும் நன்மை, தீமை என இருபக்கம் உண்டு. ஒரு பொருள் பாவனை என்றாலும் சரி அல்லது பொதுவான வாழ்வியல் பழக்கவழக்கங்கள் என்றாலும் சரி அனுகூலங்களுக்குச் சமனான பிரதி கூலங்கள் உள்ளன என்பதை அனைத்து பெற்றோரும் மூத்த சமூகத்தினரும் உணர வேண்டும். இவர்கள் தீமைகளை மட்டும் இனங்கண்டு விட்டு அவற்றினை தடை செய்வதில் எந்த நியாயமும் இல்லை. அவற்றினால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதும் இல்லை.

இத்தகைய சமூகத்தளங்கள் மூலம் எத்தனையோ பேர் தமது வாழ்க்கைக்கு ஒளியேற்றி வருகின்றனர். குறிப்பாக மக்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடித்தரும் அரிய பல உதவிகளை இச்சமூக வலையமைப்புகள் செய்து வருகின்றன. அண்மையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக இணையத்தளங்கள் மூலம் 14.4 மில்லியன் பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 8.3 வீதத்தினர் தமது வாழ்வின் வெற்றிக்கு பேஸ்புக் என்னும் சமூகத்தளம் உதவி உள்ளது என மனதார வாழ்த்துகளை வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.
பேஸ்புக் சமூகத்தளத்தை அதன் நிறுவுனர் மார் சுகேபேரி (ட்ச்ணூடு த்தஞிடுஞுணூஞஞுணூதூ) தனது கல்லூரித் தோழர்களை ஒன்றிணைக்கும் விதமாகவே உருவாக்கினார். எனினும் பின்பு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக பல கூறுகளை இணைத்து தனித்தனியாக ஒவ்வொரு தேவைகளையும் ஒருமுகப்படுத்தி மக்கள் பாவனைக்காக விட்டார். இன்று சமூகத் தளங்கள் மூலம் 500 மில்லியன் பாவனையாளர்கள் பயனடைகின்றனர். இவற்றின் மூலம் இளமைப் பருவங்களில் தொலைத்த பல பழைய நண்பர்களைத் தேடி புதிய நட்புப் பாலத்தை உருவாக்கலாம். பழைய நினைவுகளை மீண்டும் புதுப்பிக்கலாம். பிரிந்த உறவுகள் மீண்டும் இனிமையாக இணையலாம் என பல பரிமாணங்களைக் கொண்ட பயன்கள் அனைத்து மட்டத்தினருக்கும் கிடைத்து வருகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் முன்னேறி வருகின்றமையால் தற்போதைய கல்வி முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று பல தனியார்  கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றி அரச கல்வி நிறுவனங்களும் தமது கற்பித்தல் நடவடிக்கைகளை இச்சமூகத்தளங்கள் மூலம் மேம்படுத்தி வருகின்றன. அதேபோல் பல விளம்பர நிறுவனங்கள் தமது பொருட்களைக் காட்சிப்படுத்தவும் அறிமுகப்படுத்தவும் இவற்றினை பயன்படுத்துகின்றன. இச் சமூகத்தளங்கள் மூலம் இலவச வைத்திய, மனநல ஆலோசனைகள், அழகு, சமையல் குறிப்புகள், ஆன்மீக விடயங்கள், பொது விடயங்கள் என பலவற்றை உடனுக்கு உடன் தொகுத்தும் தனித்தும் தகவல்களைப் பெற உதவி செய்து வருகின்றன. இதனைப் போல எத்தனையோ அனுகூலங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே இத்தகைய சமூகத் தளங்களை ஆரோக்கியமான முறையிலே பயன்படுத்தி சமூகப் பயனுள்ள திட்டங்களைச் செய்ய வேண்டும். இதனை விடுத்து வெறுமனே பயனுள்ள வெட்டிப் பேச்சுகளுக்கும் பொழுது போக்கு விடயங்களுக்கும் முன்னுரிமையளிப்பதை தவிர்க்க வேண்டும். இதனை விட சில சமூகத் தளங்களை வெளிப்படுத்தும் அவற்றின் உரிமை நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்று அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் நிலையும் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பிலும் அனைவரும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
எமக்கு எது நன்மையளிக்கக்கூடியது, எது தீமை தரக்கூடியது என இனங்கண்டு கொள்ள முடியாது ஆளுமை இல்லாத சிறுவர்களும் ஏன் வயது வந்தவர்களும் கூட இச்சமூகத்தளங்கள் தரும் அளவற்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாலியல் ரீதியாகவும் வேறு பல வழிகளாலும் சுரண்டப்படுவதற்கும் தவறான எண்ணங்களால் வழி நடத்தப்படுவதற்கும் அச்சுறுத்தப்படுவதற்கும் வாய்ப்பு க்கள்காணப்படுகின்றன. இதனால் தான் சமூக இணையத்தளங்களால் ஏற்படும் பிரச்சினைகளும் சர்ச்சைகளும் எமது சமூகத்தினர் மத்தியிலும் ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக அடிக்கடி பேசப்படுகின்றன.
இத்தகைய சமூகங்களை ஒன்றிணைக்கும் சமூகத்தளங்களின் பாவனை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளமையாலேயே அவற்றிற்குள்ள வரவேற்பு குறைவதில்லை. உதாரணமாக ஏனையவர்களுடன் தொடர்பாடுதல், வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு சுவாரசியமான விடயங்களை நண்பர்களுடன் பகிர்தல், பலரிடமும் எம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளல், எமது ரசøனைகள், திறமைகள் போன்றவற்றை பலர் மத்தியில் வெளிப்படுத்தல் என பலவற்றுக்கு இவை தளமாக காணப்படுகின்றன. எனவே நாம் பயனுள்ள வழிகளில்  இவற்றை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை இனங்கண்டு பாதுகாப்பாக பயன்படுத்தினால் எல்லோருக்கும் நன்மை கிட்டும்.

சா.சுமித்திரை

போதையால் பாதை மாறும் எதிர்காலச் சமுதாயம்



உலகளாவிய ரீதியிலே போதைப் பொருள் பாவனை, போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை என போதைப் பொருட்களின் ஆதிக்கம் ஒரு முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. இதில் குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இலங்கை முன்னணி வகித்து வருகின்றமையானது நாட்டின் எதிர்கால சமூகத்தினரது நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
இன்றைய இளைஞர்கள் மத்தியிலே போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றதாக போதைப் பொருள் தடுப்பு அதிகார சபையும் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு அறிக்கைப் படி உலகிலே 6 இலட்சம் பேரும் இலங்கையிலே 45 ஆயிரம் பேரும் மிதமிஞ்சிய போதைப் பொருள் பாவனையாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
போதைப் பொருள் பாவனை மூலம் சமூகம் சீரழிவது மட்டுமன்றி, குற்றச் செயல்கள், வன்முறைகள், விபத்துக்கள் போன்றவை அதிகரிக்கவும் இது வழி கோலுகின்றமை ஒரு யதார்த்த உண்மையாகும். போதைப் பொருள் பாவனையாளர்களால் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட 6 இலட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
போதைப் பொருட்களில் மது பாவனையே முதலிடத்தில் உள்ளது. வயது வேறுபாடுகளின்றி அனைத்து தரப்பினரையும் மது விருந்து என்னும் களியாட்ட நிகழ்வு ஆட்கொண்டு வருகின்றது. திருமண வீடு என்றாலும் மரண வீடு என்றாலும் இத்தகைய மது விருந்து முக்கிய பங்கு வகிக்கின்றது.


அது மட்டுமன்றி புதிய வாகனம், புதிய உடுப்பு என ஒவ்வொரு அநாவசியமான பொருட்களை கொள்வனவு செய்கின்ற போதும் காதல், பரீட்சை தோல்விகள் என சின்னச் சின்ன விடயங்களையும் காரணம் கூறி அதிகளவு பணம் செலவழித்து நண்பர்களிடையே தங்களுடைய மகிழ்ச்சியையும் துயரங்களையும் பகிர்ந்து கொள்ள மதுவென்னும் அரக்கனை நாடுகின்றனர்.
இதனை விட கஞ்சா, ஹெரோயின், அபின், மர்ஜீவானா என பல வகையான உயிர்க்கொல்லி போதைப் பொருட்களின் பாவனைகளும் அதிகரித்துள்ளன. இலங்கைக்கு இத்தகைய போதைப் பொருட்கள் உல்லாசப் பிரயாணிகளின் வருகையின் மூலமே கொண்டு வரப்படுகின்ற போதிலும் இன்று கறுப்புச் சந்தையில் இது பாரியளவில் நடைபெற்று வருகின்றது.
ஐரோப்பா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மறைமுகமாக போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையின் கேந்திர மையமாக இலங்கை செயற்பட்டு வருகின்றது. அதற்கு எடுத்துக்காட்டாகவே யாழ்ப்பாணப் பாடசாலையொன்றின் மாணவர்கள் சிலர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதை அறியக் கிடைத்தது. இச் செய்தி யாழ்.மண்ணில் எந்தக் காலமும் அறிந்திராத விதத்தில் போதைப் பொருள் பாவனை மோகம் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற அதிர்ச்சியை எமக்குத் தந்துள்ளது.
அதேபோல், கடந்த வருடம் மெதபித்தமைன் என்னும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் போதைப் பொருள் இலங்கையிலே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசுக்கே பேரிடியாக இருந்துள்ளது.
ஆகவேதான், இலங்கை அரசு போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருவதுடன் அவற்றைக் கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. எனினும் திட்டமிட்ட அடிப்படையிலே இத்தகைய போதைப் பொருள் கடத்தல், பாவனை மற்றும் விற்பனை என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால் இதற்கு உடந்தையாக சில உயர்மட்டக் குழுக்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டு வருகின்றமையால் இவற்றை இல்லாதொழிப்பது மிகவும் கடினமானதாகவும் சவால்மிக்கதாகவும் காணப்படுகின்றது.
போதைப் பொருட்களுக்கு சமூக, குடும்பப் பிரச்சினைகள், பரீட்சை, கல்வி போன்றவற்றில் தோல்வி, அன்பானவர்களின் பிரிவு, கடுமையான நோய்த்தாக்கங்களுக்கு உள்ளானவர்கள், வேலையின்மை, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் என பல காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகளவு அடிமையாகியுள்ளனர்.
கிராமப் பகுதிகளை விட அதிகளவு நகரங்களிலேயே போதைப் பொருள் பாவனையாளர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் நாளொன்றுக்கு கணிசமான அளவு பணத்தை செலவிடுகின்றனர். சிலர் தமது வருமானத்தின் முழுப் பணத்தையும் செலவிடுவதுடன் கடன்களை பெற்றும் செலவு செய்கின்றனர்.
இத்தகையோர் போதைப் பொருளை தொடர்ச்சியாக பயன்படுத்துகின்ற போது அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுவதுடன் சமூகத்தில் பலவிதமான பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நேரிடுகின்றது.
இப் போதைப் பொருள் பழக்கம் 88.2 வீதம் நண்பர்களாலும் 10 வீதம் உறவினர்களாலும் மிகுதி தனிப்பட்ட காரணங்களாலும் சமூகத்தினரிடையே பரவுகின்றது.  அதேவேளை இளம் பராய வயதினரான 15 வயது தொடக்கம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களிடையே அதிகளவு போதைப் பொருள் பாவனை காணப்படுகின்றது.
முன்னைய காலங்களில் எமது சமூகத்தில் ஒரு பிள்ளையை  அப்பிள்ளையின் தந்தையே கையை பிடித்து அழைத்து செல்வார். ஆனால், இன்று மது போதையில் தள்ளாடும் தந்தையை மகன் மதுபான கடைகளிலிருந்து வீட்டிற்கு கூட்டிச் செல்லும் காட்சிகள் நாளாந்தம் அரங்கேறி வருகின்றன.
ஏன் இன்று இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது? இதனால், போதைப் பொருள் பாவனையாளர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகின்றனர் என்ற உண்மையை அனைத்து போதைப் பொருள் பாவனையாளர்களும் உணர வேண்டும்.
இத்தகைய போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களுக்கும் அனைத்து சமூக மட்டத்தினருக்கும் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.  அதேபோல் போதைப்  பொருள் பாவனையாளர்களையும் போதைப் பழக்கத்திலிருந்து படிப்படியாக மீட்டு சமூகத்துடன் இணைக்க சமூக ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் சீரழிவுகள் தொடர்கதையாகும் நிலையே ஏற்படும்.

சா.சுமித்திரை

சனி, 30 ஜூன், 2012

இயற்கை அனர்த்தங்கள் அதிகரிப்பதற்கு பெரிய பங்காளி மனிதனே






காலநிலை மாற்றங்கள், கண்டங்களின் இடப்பெயர்வு, எரி கற்கள் புவியுடன் மோதுகை , எரிமலை வெடிப்புகள், கடல்கோள் என பல்வேறுபட்ட பாரிய இயற்கை அனர்த்தங்கள் மூலம் இயற்கை வளங்கள் அழிவடைந்து வருவதுடன், இயற்கைக்குரிய இயல்புகளும் மாற்றப்பட்டு வருகின்றன. இவை இயற்கையாகவே உருவாகின்றதொன்றாகவே கருதப்படுகின்ற போதிலும் அதிகளவு தடவை இவ் அனர்த்தங்கள் உருவாகுவதற்கு மனிதனின் பல்வேறு பட்ட நடவடிக்கைகளும் முக்கிய பங்காற்றுகின்றன.

விலங்குகளோடு விலங்காக நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் இயற்கையுடன் ஒன்றி அவற்றுக்கு கட்டுப்பட்டே வாழ்ந்தான். ஆனால் புவியிலே மனிதயினம் ஓர் ஆட்சியினமாக தோன்றிய பின் தன்னை வளப்படுத்திக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டான்.

தொழில் நுட்ப புரட்சிகள் ,கைத்தொழில், நகர மயமாக்கங்கள், சனத் தொகை பெருக்கம், அணுப் பரிசோதனைகள்,காடழிப்பு என தன்னுடைய பல்வேறு தேவைகள், விருப்பங்களை நிறைவேற்ற இயற்கையை பயன்படுத்தினான். மனிதனின் இயற்கை வள அதீத பாவனை காரணமாக அவை படிப்படியாக அழிவடைந்து வருவதுடன், மனித இனத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இனி வரும் காலங்களிலாவது இயற்கை வளங்களை முறையாகவும் அவற்றின் சமனிலை பயன்படுத்த வேண்டிய தேவையுள்ள அதேவேளை, அழிவடைந்து வரும் இயற்கை வளங்களை மீண்டும் விஞ்ஞான தொழில் நுட்ப முறைகள் மூலம் விஞ்ஞானிகள் மீட்க நடவடிக்கை  எடுத்து வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால் சில வளங்கள் மாற்ற முடியாமலும் திரும்ப பெற முடியாத வகையிலும் பரிமாண மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும் இயற்கைக் குரிய இயல்புகளுடன் மீளப் பெறுவது சந்தேகம் தான் என்றாலும் ஓரளவு இயற்கை வளத்தினை பாதுகாக்க முடியும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

 அண்மைக் காலமாக பல வகையான மண் , தாவர,  விலங்கு இனங்கள், சுற்றுச் சூழல், பல் வகைகள் பற்றி விஞ்ஞான ஆய்வுகள் அதிகளவு இடம்பெற்று வருகின்றமையால் தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது. அமிலத் தன்மையான மண்ணை நல்ல மண்ணாக மாற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் வெற்றி கண்டுள்ளன. பல கழிவுப்பொருட்கள் பயனுள்ள பொருட்களாக மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
 தொழில் நுட்ப முறை மூலம் சூறாவளி , பருவக் கால மாற்றம், கடல்கோள் போன்ற அனர்த்தங்களின் ஆபத்துகளை முன் கூட்டியே எதிர்வு கூறுகின்றோம்.
அதேபோல் அனர்த்தங்கள் ஏற்படாது தடுக்கும் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  சூறாவளி வேகத்திலுள்ள சக்தியில் எமக்குத் தேவையான பல வருடக்கணக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில் சூறாவளியின் மையப் பகுதிக்கு சென்று அதன் மையத்தில் சில உப்புகளை போட்டு வேகத்தை குறைக்கும் முயற்சியில் அமெரிக்க வான் படையினர் ஈடுபட்டுள்ளார். அத்துடன் நிலநடுக்கத்தால் வரும் சேதங்களை குறைக்கும் தொழில் நுட்ப முறைகளும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக ஜப்பான் , தாய்வான், இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந் நிலையில் இலங்கையிலும் அனர்த்தங்களால் பாதிக்கப்படாத வகையிலே தொழில்  நுட்பங்களை கொண்டு கட்டிடங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாரிய வெள்ளப் பெருக்கை கட்டுப்படுதுகின்றன. மண் சரிவினையும் தொழில்நுட்ப முறைகள் மூலம் தடுக்கின்றனர். சாதாரணமாக மேல் இருக்கும் மண் படையும் கீழ் இருக்கும் படையும் ஒன்றுக் கொன்று விசையினால் ஒட்டிக் கொண்டு இருக்கின்றன. அந்தவிசை விலகும் போதே மண் சரிவு ஏற்படுகின்றது. இவ் விசையினை அதிகரிக்க புவித்துணிகள் (எஞுணி கூஞுதுtடிடூஞு)  என்னும் உபகரணத்தை புதைக்கின்றனர். இதனால் மண் அடுக்குகளுக்கிடையே விசை விலகாது இருக்கும்.  இதற்கான செலவு தற்பொழுது மிக அதிகமாக உள்ள போதிலும் எதிர்காலங்களில் குறைந்த செலவில் சாத்தியமாகலாம்.
ஐரோப்பாவில் பல இடங்களில் நிலக்கரி, உலோக கனிய அகழ்வுகளால் பாழடைந்து அழிந்து போன பகுதிகளை மீளச் சீரமைத்துள்ளனர். அத்துடன் பாலைவனப் பகுதிகளையும் இயற்கை மரங்கள் கொண்ட பிரதேசமாக மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை தண்ணீர் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்ய பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தினமும் வெளியேற்றும் கழிவு நீர் பல்வேறு தொழில் நுட்ப முறைகளின் ஊடாக சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நீர் பற்றாக்குறை மட்டுமன்றி நதிகள், குளங்கள், ஏரிகளிலுள்ள நீரும் கழிவு நீர் சேராது தூய்மையாக இருக்கும்.
 மாசடைந்து அழிவடைந்து வருகின்ற இயற்கை வளங்களான நீர், நிலம், காற்று போன்றவற்றை விஞ்ஞான முறைகள் மூலம் புதுப்பித்து மீள உருவாக்குகின்ற விஞ்ஞானிகள் மனித நடவடிக்கைகளால் அழிவடைந்த தாவர ,விலங்குகளையும் மீளவும் உருவாக்கும் முயற்சியையும் கைவிடவில்லை. அழிவடைந்து வரும் தாவர ,விலங்குகளின் கலம் , இழையங்கள் என்பவற்றை கொண்டு இழைய வளர்ப்பு, குளோனிங், சோதனை குழாய் என பல்வேறு விஞ்ஞான தொழில்நுட்ப முறைகளை கொண்டு  உருவாக்கி  சாதனை படைக்கின்றனர். முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்ட மிருக, தாவர இனங்கள் மீண்டும் உருவாக்குவதென்பது கொஞ்சம் சந்தேகமாக இருந்தாலும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முற்றாக அழிவடைந்த மமூத் என்னும் பெரிய உரோமங்களால் போர்க்கப்பட்ட யானை இனத்தினை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளமையானது இதற்கு சான்று பகர்கின்றது.
 எனவே, நவீன விஞ்ஞானத் தொழில் நுட்ப உயிரியல் முறைமைகள் மூலம் இயற்கையின் பல வளங்களைத் திருப்பி உண்டாக்க முடியும். புதியதாக படைக்கப்படும் வளங்கள் புதிய பரிணாம வழிகளில் இயற்கையோடு இணைந்து எம்முடன் இயற்கை வளங்களாக பயணிக்கும் என்பது திண்ணம்.

சுமித்திரை

எக்ஸ்ரேயைவிட எளிமையான சிறுநீர் பரிசோதனை மூலம் அதிக தகவல்கள்




 அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிப்பு

எலும்புகளில்ற ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் எக்ஸ் கதிர்களை விட எளிய சிறுநீர் பரிசோதனை மூலம் அதிகளவிலான தகவல்கள் வெளிப்படுத்தப்படுமென அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசா நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவினை கடந்த வாரம் ஆய்வாளர்கள் வெளியிட்டிருந்தனர்.

 விண்வெளி பயணங்களின் போது விண்வெளி வீரர்கள் தமது உடல் எலும்புகள் இல்லாதது போன்ற பாரமற்ற நிலைமையை உணர்வதற்கு அவர்களுடைய விண்வெளிக்கு பயன்படுத்தப்படும் உடைகளுடன் இத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. எலும்புகளில் தாக்கும் புற்று நோயிலிருந்தோ அல்லது எலும்பு தேய்வுகளிலிருந்தோ பாதிக்கப்படும் நோயாளிகள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.

 ஏற்கனவே, அதிக எண்ணிக்கையான எலும்பு இழப்பு ஏற்பட்ட போதோ அல்லது எலும்பு தேய்வினை எதிர்கொள்ள நேரிடும் போதோ இப் பரிசோதனை மூலம் தீர்வு பெற முடியுமென அரிசோனா பிராந்திய பல்கலைக்கழகத்தின் உயிரி இரசாயனவியல் மற்றும் இரசாயனவியல் பேராசிரியரும், சிரேஷ்ட எழுத்தாளருமான அரில் அன்பர் தெரிவித்துள்ளார்.

இவற்றில் சிலவற்றை புதிதாக இணைத்து விரிவாக்கியுள்ளோம். இதில் தொழில் நிபுணத்துவம் இல்லை. நாசாவின் மூதலீட்டுடனான பணி எங்களுடைய ஆராய்ச்சியின் ஊடாக சிறப்பான விளைவு கிடைத்துள்ளதென பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

திணிவில் வேறுபட்ட மூலக் கூறு அணுக்களின் அடிப்படையிலே கல்சியம் கணியங்களின் படிமுறைகள் அளவிடப்படுகின்றன. கனியுப்புக்களின் சமநிலையினை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட எலும்பிற்கு பலத்தினை நோயாளியின் சீறுநீர் ஊடாக கனியங்கள் பரிமாற்றப்படுகின்றன.

அறிவியலின் சிக்கல்களுக்கு கணித ரீதியில் விடையளித்த ஜன்ஸ்டீன்

 நாளை ஜன்ஸ்டீனின்

133 ஆவது பிறந்த தினம்

சா .சுமித்திரை

20 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இயற்பியல் மாமேதையான ஆல்பர்ட் ஜன்ஸ்டீனின்  133 ஆவது பிறந்தநாள் நாளையாகும். 1879 ஆம் ஆண்டு மார்ச்  14 ஆம் திகதி பிறந்த இவர் சார்புக் கோட்பாட்டை முன் வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை, அண்டவியல் என்பவற்றில் பாரிய பங்களிப்பை செய்து அறிவியல் உலகிற்கு சேவையாற்றியுள்ளார்.

 ஒளிமின் விளைவைக் கண்டு பிடித்து விளக்கியதுடன், சார்புக் கோட்பாட்டுக் கொள்கையையும் முன் வைத்தமையால் ஜன்ஸ்டீன் என்ற பெயர் இன்றைய காலத்திலும் பேசப்படுகிறது.

அதே வேளை 1999 இல் புத்தாயிரமாம் ஆண்டு குறித்து ரைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட சிறப்பிதழில் ஜன்ஸ்டீனுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்னும் பெயரை வழங்கிக் கௌரவித்திருந்தது.

 ஜெர்மனியில் வுர்ட்டெம்பர்க் உள்ள உல்ம் என்னும் நகரில் ஹேர்மன் ஜன்ஸ்டீன், போலின் கோச் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த ஜன்ஸ்டீன் சிறு வயது முதலே கணிதம், அறிவியல் துறைகளில் அதிகளவு ஆர்வம் காட்டி வந்தார். இவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது ஒரு முறை இவரது தந்தை ஒரு சட்டைப் பையில் வைக்கக் கூடிய திசை காட்டியொன்றைக் கொடுத்தார். அவ் வயதிலேயே காந்த ஊசியில் ஏதோவொரு தாக்கம் உருவானதைப் புரிந்து கொண்டதுடன் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும் பொழுது போக்காக வடிவமைத்து வந்தார்.

1896 இல் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட ஜன்ஸ்டீன் சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள பல் தொழில் நுட்பக் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி கற்றார். தொடர்ந்து படிப்பு முடிந்தும் படிப்புக் கேற்ற வேலை கிடைக்காமையால் சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் தொழில் நுட்ப உதவிப் பரிசோதகராக இணைந்து கொண்டு தனது மேலதிக நேரத்தில் கணித ஆராய்ச்சிப்  பணிகளைத் தொடர்ந்தார்.

1905 ஆம் ஆண்டு ஜன்ஸ்டீனால் எழுதி வெளிவந்த முதலாவது ஆய்வுக் கட்டுரையில் " நிலையான திரவத்தில்  தொங்கும் மிகச் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக் கூற்றுக் கொள்கையினால் தொழிற்படும் இயக்கத்தில்" என பிரௌனியன் இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியை விபரித்திருந்தார். அப்போது சர்ச்சைக்குள்ளாகியிருந்த திரவ இயக்கவியலை பயன்படுத்தி அணுக்கள் இருப்பதற்கான அனுமான ரீதியான ஆதாரமாகக் கொள்ளலாம் என இக்கட்டுரை மூலம் நிறுவியிருந்நார். அதே வேளை அப்போது சர்ச்சையிலிருந்த இன்னொரு கொள்கையான புள்ளி விபரப் பொறிமுறையினையும் (குtச்tடிண்tடிஞிச்டூ  Mஞுஞிடச்ணடிஞிண்) இக்கட்டுரையில் தெளிவு படுத்தியிருந்தார்.

அக்காலத்தில் அணுக்கள் என்பது ஒரு பயன்பாட்டுக் கோட்பாடாகவே அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் கூட அணுக்களின் நிலவுகை தொடர்பான பாரிய விவாதங்களும் நடைபெற்று வந்தன.  அந்நிலையிலேயே அணுக் கொள்கை தொடர்பான ஜன்ஸ்டீனின் புள்ளி விபர ரீதியான விளக்கத்தின் மூலம் எளிய நுணுக்குக் காட்டியினூடாக  அணுக்களை எண்ணும் வாய்ப்பு ஆய்வாளர்களுக்கு கிடைத்தன எனலாம்.

 விஞ்ஞானி வில்கெலம் ஒஸ்ட்வால்ட் அணுவுக்கெதிரான கொள்கையை கொண்டிருந்தார். இவர் ஜன்ஸ்டினின் பிரௌனியன் இயக்கம் தொடர்பான தெளிவான விளக்கம் காரணமாகத்தான் அணு தொடர்பான நம்பிக்கையை பெற்றதாக தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.

 அதே போல ஜன்ஸ்டீன் இரண்டாவது ஆய்வுக் கட்டுரையில் " ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கம் ( Oண ச் ஏஞுதணூடிண்tடிஞி ஙடிஞுதீணீணிடிணt இணிணஞிஞுணூணடிணஞ் tடஞு கணூணிஞீதஞிtடிணிண ச்ணஞீ கூணூச்ணண்ஞூணிணூட்ச்tடிணிண ணிஞூ ஃடிஞ்டt) என்னும் ஒளிச்சக்தி  சொட்டு (ஃடிஞ்டt ஞ்தச்ணtச்)  கருது கோளை முன்வைத்ததுடன் இது எவ்வாறு ஒளிமின் விளைவு போன்ற விடயங்களை விளக்க உபயோகிக்கலாம் எனவும் விபரித்துள்ளார்.

 இக் கருது கோளில் ஒளிச் சக்தி  ஒரு குறித்த அளவுடைய தொடர்ச்சியற்ற சக்திச் சொட்டுக்களாகவே உறிஞ்சப்படவோ, கடத்தப்படவோ முடியுமென கருதும் போது மாக்ஸ் பிளாங்கின் கரும் பொருட் கதிர்ப்பு விதியையும்

இவ் ஆய்வுக் கட்டுரை வலுப்படுத்தியது. ஒளி உண்மையில் தனித்தனி சக்திப் பொட்டலங்களாலேயே உருவாக்கப்பட்டது என்ற கொள்கை மூலம் ஜன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது எனலாம்.

 ஒளியின் சக்திச் சொட்டு கருது கோளானது ஜேம்ஸ் மாக்ஸ்வெல்லின் மின் காந்த இயக்கத்துக்கான சமன்பாட்டினால் பெறப்படும் ஒளியின் அலைக்கொள்கை யோடு முரண்பட்டிருந்ததுடன் பௌதீகத் தொகுதியிலுள்ள சக்தி துணிக்கைகளை மேலும் மேலும் பிரிக்க முடியும் என்ற கருத்தும் முரண்பட்டன. எனவே தான் ஜன்ஸ்டீனின் ஒளியின் விளைவுக்கான சமன் பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம் நிரூபித்த பின்னரும் கூட அவரது சமன்பாட்டுக்கான விளக்கத்தை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.  எனினும் ஒளி மின்னியலில் அவருடைய உழைப்பு  வியந்துரைக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பௌதீகவியலாளர்கள் அவருடைய சமன்பாடு சரி எனவும் சாத்தியம் எனவும் ஏற்றுக் கொண்டதுடன் 1921 ஆம் ஆண்டு இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜன்ஸ்டீனின் சக்திச் சொட்டுக் கொள்கை ஒளியின் அலைத் துணிக்கையின் இரட்டைத்தன்மை அதாவது பௌதிகத் தொகுதியின் அலைத் தன்மை, துணிக்கைத் தன்மை என இரு வேறு பட்ட இயல்புகளை காட்ட வல்லன என்ற கருத்தினை வலியுறுத்து கின்றது.

 அதேபோல அவருடைய மூன்றாவது ஆய்வுக் கட்டுரை இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் என்னும் தலைப்பில் அமைந்திருந்தன. இக்கட்டுரையில் நேரம், தூரம், திணிவு, சக்தி தொடர்பான விஷேட தொடர்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியதுடன் மின் காந்தவியலுடன் தொடர்புபட்டதாகவும் , புவியீர்ப்பு விசையை தவிர்த்தும் எழுதியிருந்தார்.
மைக்கல்சன் மோர்லி பரிசோதனையில் (Mடிஞிடஞுடூண்ணிண - Mணிணூடூஞுதூ ஞுதுணீஞுணூடிட்ஞுணt) ஒளியலை பயணம் செய்ய நீர், காற்று போன்ற ஊடகம் அவசியம் இல்லை என்பதை நிரூபித்த போது உருவான குழப்பத்தை இவருடைய விஷேட தொடர்புக் கொள்கை தீர்த்து வைத்தது. இதன் மூலமே ஒளியின் வேகம் மாறாத அதே வேளை அது அவதானியின் இயக்கத்தில் தங்கியதல்ல என்பது நிரூபணமானது. அதே போல எத்தனையோ விஞ்ஞானிகளின் பரிசோதனை ஊகங்களை இவருடைய கணித சமன்பாடுகள் தீர்த்து வைத்தன என்பதை அறிவியல் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கணித திறமை கொண்ட ஒரு கோட்பாடு இயற்பியல் அறிஞராக விளங்கிய ஜன்ஸ்டீன் தனது வாழ்வில் அதிகளவான பகுதியை அறிவியலுக்காக அர்ப்பணித்தார். அறிவியலின் சிக்கல்களுக்கு கணித ரீதியில் விடையளித்த ஜன்ஸ்டீன் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தனது 76 ஆவது வயதில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.

மம்மிகள் பதப்படுத்தப்படும் முறையை மருத்துவ பரிசோதனை மூலம் நிரூபிக்க முயற்சி







இத்தாலியில் மம்மிகள்  பதப்படுத்தப்பட்ட முறையினை மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் நிரூபித்துக் காட்டுவதற்காக 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகளைத் தோண்டியெடுத்த ஆய்வில் ஈடுபடுத்தியுள்ளனர்.

பண்டைய நாகரிகங்களில் குறிப்பாக எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் போன்ற பெரும் தலைவர்கள் இறக்கும் போது அவர்களின் உடல் பழுதடையாது பல ஆயிரம் ஆண்டுகள் இருக்குமாறு விசேடமாக பதப்படுத்தப்பட்டு அதற்குரிய பேழையினுள் வைத்து புதைப்பார்கள். இம்முறை மூலம் இவை பல ஆண்டு காலம் பழுதடையாமலும் துர்மணம் வீசாமலும் இருப்பதற்கான மர்மம் இன்றைய காலம் வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே தான் தற்போது அதற்கான ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இத்தாலியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 5 மம்மிகளின் உடல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  விரோனா நகரிலுள்ள டிசென்ஸனோ வைத்தியசாலையில் அவை பாதுகாக்கப்பட்டு வரப்படுகின்றது. எனினும் 5 மம்மிகளின் உடல்களின் பல பகுதிகள் இன்னும் கிடைக்கவில்லை. அவற்றில் கழுத்துகளுடன் கூடிய 5 தலைகள், ஒரு இதயம் மற்றும் 2 உடல்கள் ஆகியவையே கிடைத்துள்ளன.

இந்த மம்மிகளின் தலையிலுள்ள இரத்தக் குழாய்களான நாடி, நாளம் மற்றும் தசையிழையங்கள் என்பவற்றை ஆராய்ச்சி நிபுணர் ஜியேவன் பட்டிஸ்ரா ரினி தனித்தனி மாதிரிகளாக எடுத்து ஆய்விற்குட்படுத்தி வருகின்றார்.

இம்மம்மிகளின் உடல்கள் எவ்வாறு பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் எடுத்து வைத்திருக்கும் மாதிரிகளை சி.ரிஸ்கேன், எக்ஸ்ரே கதிர் வீச்சு என்பவற்றின் ஊடாக பரிசோதிக்கப்பட்டு வரப்படுவதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இம்மாதிரிகளின் பரிசோதனை மூலம் இரசம், ஆர்சனிக் ஆகிய இரசாயனப் பொருட்களை ஊசி மூலம் உடலில் செலுத்தியோ அல்லது உடல்களை இவ்விரசாயனப் பொருட்களில் புதைத்தோ பதப்படுத்தியோ பாதுகாக்கப்பட்டிருக்கின்றமையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்விசானப் பொருட்களைக் கொண்டு பதப்படுத்தியுள்ளமையால," இதுவரை கண்டுபிடித்து எடுக்கப்பட்ட மம்மிகளை விட தற்போது கிடைத்துள்ள மம்மிகளின் உடல் பாகங்கள் அதிக தடிப்பாக உள்ளன எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மம்மிகளுக்கு செயற்கை பற்கள், கண்கள் மற்றும் முடி ஆகியவற்றைப் பொருத்தி மேலதிக ஆராய்ச்சிகளையும் மருத்துவ படிப்பினையும் மேற்கொள்ள உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

19 ஆம் நூற்றாண்டகளின் மனித உடல்களை பாதுகாக்க சிலிக்கன் டைஒக்சைட்டு, சல்பர், சுண்ணாம்பு என்பவற்றையே  பயன்படுத்தி வந்துள்ளனர். எனினும் இத்தாலியில் தோண்டியெடுக்கப்பட்ட மம்மிகளில் இரசம், ஆர்சனிக் போன்ற இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வுடல்களைப் பதப்படுத்தும் பயன்படுத்திய மருத்துவ முறைகள் இன்றைய மருத்துவ வளர்ச்சிக்கு சவாலாகவும் அமையலாம்.

 சுமித்திரை