சனி, 28 டிசம்பர், 2013

இளவரசரின் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

சா.சுமித்திரை

உலகளாவிய ரீதியில் சாந்தசொரூபரான யேசு நாதரின் பிறப்பைக் கொண்டாடும் நத்தார் பண்டிகையின் ஆரவாரங்கள் வழமை போலவே காணப்படுகின்ற நிலையில் பிரிட்டன் அரச குடும்பத்தினர் மட்டும் தமது குட்டி இளவரசர் ÷ ஜார்ஜின் வருகை காரணமாக வழமைக்கு மாறான வகையில் பிரமாண்டமாகவும் அரச குடும்பத்தின் ஆழமான கலாசார விழுமியங்களை உள்வாங்கியும் கிறிஸ்ஸ்மஸைக் கொண்டாடுகின்றனர்.

பிரிட்டனின் வரலாற்றில் சுமார் 100 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக முடி சூடுவதற்காகக் காத்திருக்கும் மூன்று இளவரசர்களுடன்  கிறிஸ்மஸ் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுகின்றது.

1992 இல் வின்ஸர் கோட்டையில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களின் பொழுது அரச குடும்பத்தினர் ஒன்று கூடும் இடமாக இரண்டாம் எலிசபெத் மகாராணிக்குச் சொந்தமான நோவூத் பெருந்தோட்டத்திலுள்ள சாடிரிங்ஹம் மாளிகை காணப்படுகின்றது
.
கடந்த வருடங்களைப் போலல்லாது இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையின் போது அரச குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றிணையவுள்ளனர்.கடந்த 2012 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையின் போது கேட் வில்லியம் தம்பதி பக்லேபேரியில் இருந்தனர். இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் கடமையின் நிமித்தம் சென்றிருந்தார். ஆனால் இம்முறை கொண்டாட்டங்களின் போது இவர்களுடன் நத்தார் பண்டிகையின் முதன்மை விருந்தினராக இளவரசர் ஜோர்ஜ்ஜும் இருக்கப் போகின்றார்.

இளவரசர் வில்லியமிற்கு இந்த நத்தார் பண்டிகைக் கொண்டாட்டம் புதியதல்ல. ஆனால் கேட் மிடில்டனுக்கு இது புதிய சடங்குகள் கொண்டதொரு நத்தாராகும்.

பிரிட்டன் அரச குடும்பத்தினரின் நத்தார் பண்டிகை மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். எனினும் நடைபெறவுள்ள மாற்றங்கள் தொடர்பாக மிடில்டன் தான் தயாராகவிருப்பதாகக் கூறியுள்ளார்.

மாலைநேர உடை, பகல் நேர உடைகள், அவற்றுக்குரிய அணிகலன்கள் என பல்வேறான அலங்காரங்கள் இதற்காக தேவைப்படுகின்றன. நத்தார் தினத்தன்று மட்டும் கேட் மிடில்டன் ஐந்து உடைகளை மாற்ற வேண்டும். இதேவேளை இளவரசர் ஜோர்ஜின் குறும்புத் தனங்கள் மீதும் சிறு கண் வைக்க வேண்டிய பொறுப்பும் கேட்டுக்கு உள்ளது.

நிகழ்வின் போது இளவரசர் ஹரி, இளவரசர் சார்ள்ஸ் மற்றும் கமிலா, ஸாரா ரின்டால் மற்றும் அவருடைய கணவர் மைக், இளவரசர் எட்வேட் மற்றும் அவருடைய மனைவி, லேடி ஸாரா ஸாடோ மற்றும் கணவர் டானியல் உட்பட அரச குடும்பத்தின் நெருங்கிய உறுப்பினர்கள் 25 பேர் கலந்து கொள்கின்றனர்.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வின் போது அரச குடும்பத்தின் குட்டி வாரிசு ஜோர்ஜினை வரவேற்க எடின்பேர்க் இளவரசர் பிலிப் மற்றும் மகாராணி எலிசபெத் ஆகியோர் தயாராக இருப்பர்.

தொடர்ந்து 20 அடி உயரமான நத்தார் மரத்தினை அலங்கரிப்பதற்கு சகல குடும்பத்தினரும் உதவிகளை வழங்குவர். பின்னர் வழமை போலவே இளவரசர் பிலிப் தங்கத்திலான நட்சத்திரத்தை கிறிஸ்மஸ் மரத்தின் உச்சியில் வைப்பார் அதேபோல் மகாராணி கண்ணாடியிலான தேவதை (ஏஞ்சல்) யை வைப்பார்.

இதனையடுத்து காலை நேர உணவுடன் நிகழ்வுகள் இடம்பெறும். பின்னர் அரச குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒரே மேசையில் அமர்ந்து மதிய உணவினை எடுப்பர். இதற்கென 50 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
ஓய்வினைத் தொடர்ந்து மீண்டும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும். இரவு  நேர உணவில் வாத்து இறைச்சி, ஆட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சியிலான உணவுகள் பரிமாறப்படுகின்றன. மேலும் இளவரசர் பிலிப்பிற்காக வைன் வைக்கப்படுகின்றது.

அடுத்த மூன்று நாட்களும் பாரம்பரியமான கலாசார நத்தார் கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெறும். இதன்பொழுது அரச குடும்ப உறுப்பினர்கள் தமக்கே உரிய பிரத்தியேகமான பாணிகளுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை பிரிட்டனில் மகாராணியின் வாழ்த்துச் செய்தி முக்கியமானதொன்றாகும். ஆகவே சான்டிஹம் மாளிகையிலிருந்தே தனது வாழ்த்துச் செய்தியை அனைவருக்கும் வெளியிடுகின்றார்.

இதேவேளை இம்முறை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது அரச குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் அரச நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் முதலிடம் பெறுவது கேட் மிடில்டனின் பெற்றோரான மிஷெல் மற்றும் கரோல் மிடில்டன் ஆகியோராவர். மிடில்டன் தம்பதி சாதாரண குடும்பத்தினர் ஆன போதிலும் எதிர்கால மன்னரின் பேரப் பெற்றோர்களாவார்கள்.

இதனையடுத்து இளவரசர் ஹரியின் காதலி கிறிஸ்டா போனஸ் அத்துடன் 2005 இல் கமிலா இளவரசர் சார்ள்ஸினை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவரின் பிள்ளைகளும் கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கவில்லை. எனினும் இம்முறை கமிலாவுடன் இணைந்து அவர்கள் கிறிஸ்மஸ் நிகழ்வுகளில் கலந்து கொள்வார்களா? என்பது தொடர்பில் செய்திகள் வெளிவரவில்லை.

இருந்த போதிலும் அரச குடும்பம் அல்லாத சிலருக்கும் இம்முறை நிகழ்வில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் மாளிகை தெரிவிக்கின்றது.

அரச குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டங்கள் சான்டிஹமில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை பக்கிங்ஹாம் மாளிகையிலும் 50 இற்கு மேற்பட்ட அரச விருந்தினர்களுக்கு இன்று மதிய விருந்துபசாரம் வழங்கப்படுகின்றது.

எனினும் பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கு இளவரசர் ஜோர்ஜுடனான  கிறிஸ்மஸ் பண்டிகை பிரமாண்டமாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக