திங்கள், 16 டிசம்பர், 2013

எயிட்ஸ்

சா.சுமித்திரை

எயிட்ஸ் நோய் தொடர்பான சுகாதாரக் கல்வி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இந்நோயினை முழுமையாகக் குணப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளோ அல்லது சிகிச்சைகளோ கண்டு பிடிக்கப்படாமையினால் அதன் அபாயம் இன்னும் அதிகரித்தே காணப்படுகின்றது. 

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4500 ஆக உயர் வடைந்துள்ளதாக சுகாதார  அமைச்சின் பால்நோய் மற்றும் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 

இந்த வருடம் எச்.ஐ.வி. தொற்றினால் 64 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடும் பலர் இரத்தப் பரிசோதனைகளை செய்து கொள்வதில்லை. இதுவே இந்த நோய் வேகமாகப் பரவக் காரணமாகியுள்ளது. 

எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியமை தொடர்பில், அறியாமலேயே பலர் இருக்கின்றனர். இது தொடர்பில் கவனம் செலுத்தினால் மேலும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வடையலாமெனவும் டாக்டர் சிசிர லியனகே அச்சம் வெளியிட்டுள்ளார். 

2011 இல் 146 பேரும், 2012 இல் 186 பேரும் எயிட்ஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இந்த வருடத்தில் முதல் ஆறு மாதங்களில், எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நாட்டில் இதுவரை 1739 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்பொழுது மொத்தமாக 4500 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

1988 இல் எயிட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் சர்வதேச ரீதியில் எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றிய எண்ணக்கரு முதலில் உருவானது. இதனையடுத்தே, உலகினை அச்சுறுத்தி வரும் எயிட்ஸ் நோயின்  விளைவுகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் முதலாம் திகதி, சர்வதேச எயிட்ஸ் விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

உயிருக்கு ஆபத்தான நோய்களும் அதை வரும் முன் காப்பதற்கான விழிப்புணர்வினையும் சாதாரண மக்களும் அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சர்வதேச தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. 

ஆயினும், இவை தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களோ அன்றைய தினத்துடன் அல்லது ஒரு வார காலத்துடன் முடிவடைந்து விடும். அதன் பின்னர், “பழைய குருடி கதவைத் திறவடி’ என்பது போலவே அனைத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கெதிரான செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. 

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் போது தொண்டை கிழிய கத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கைவலிக்க எழுதிய ஊடகங்களும் இதன் பின்னர் அடுத்த வருடம்  வரும் விழிப்புணர்வு தினத்தின் போது பார்த்துக் கொள்ளலாமென அமைதி காப்பதையே பெரும்பாலும்  இன்று காணக் கூடியதாகவுள்ளது. 
1981 முதல் 2007 ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் சுமார் இரண்டரைக் கோடி பேர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். 1985 ஆம் ஆண்டு முதல் 7 இலட்சம் பேர் எயிட்ஸ் தொடர்பான மரணங்களிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் சுகாதார அறிக்கை தெரிவிக்கின்றது. 
எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர வைத்தியசாலைகளிலேயே இனங்காணப்பட்டன. 

அதேசமயம், எயிட்ஸினை “உலக பரவு நோயாக’ உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010 இல் எச்..வி. தொற்றினால் உலகில் பலியானோர் எண்ணிக்கை 1.8 மில்லியனாகும். 2010 இன் புள்ளி விபரப்படி உலுகில் 34 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி. தொற்றுடன்  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

கடந்த 10 வருடங்களில், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதில், இந்தியாவில் 2.3 மில்லியன் பேருக்கு எச்.ஐ.வி. தொற்றியிருக்கிறது. 

உலகில் எச்.ஐ.வி. தொற்றுக்களில் 68 வீதமானோர் ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்துடன் கூடிய தெற்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 
அபிவிருத்தி கண்ட நாடுகளை விட, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலேயே அதிகளவு எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்படுகின்றனர். 

ஏனெனில், அந்நாடுகளில் பால்வினை நோய் தொடர்பான விழிப்புணர்வுகள் பெரியளவில் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆயினும் இன்று எச்.ஐ.வி. பற்றிய அறிவு அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் போதிய விழிப்புணர்வுகள் அனைவரையம் சென்றடையவில்லை என்பதே உண்மையாகும். 

இலங்கையிலே எயிட்ஸ் நோய் ஆங்காங்கே இருந்துவரும் நிலையில், எந்நேரமும் இந்நோய் உக்கிரமடையும் கட்டத்திற்கு தள்ளப்படலாமெனவும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. 

எயிட்ஸ் என்பது ஓர் பால்வினை நோயாகும். எச்.ஐ.வி. கிருமிகள் குறித்த ஒரு இனத்தையோ, மக்களையோ மாத்திரம் தாக்குவதில்லை. உலகின் மிக வறிய மக்களை தாக்குவதற்கு எவ்வளவு சந்தர்ப்பம் இருக்கின்றதோ அந்தளவிற்கு உலகின் முன்னணி கோடீஸ்வரர்களைத் தாக்குவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. எனவே, இது வறிய மக்களுக்கு மட்டுமே சொந்தமான நோயென எவரும் விழிப்புணர்வின்றி இருந்து விடமுடியாது. 

எச்.ஐ.வி. நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ இந்நோய்க் கிருமிகள் பரவும். ஏனெனில் எந்தவொரு சிகிச்சையும் எச்.ஐ.வி.  வைரஸுகளை முழுமையாக அழித்து விடக் கூடியவையல்ல. 

ஆண், பெண் இருவருக்கிடையிலான உயிரியல் ரீதியான வேறுபாடே பால் ஆகும். உயிரியல் ரீதியான வேறுபாடுகள் என்கிற போது அவை உடலுறுப்பு, உடற்றொழிப்பாடுகள், ஓமோன், சுரப்புக்கள் என்பனவாகவே காணப்படுகின்றன. 

அத்துடன், சமூகத்தில் ஆண், பெண்ணுக்கு வழங்கப்படுகின்ற ஒரு சமுதாய  அந்தஸ்து தான் பால் நிலையாகும். ஆயினும் சமூகத்தினால் திணிக்கப்படும் விழுமியங்கள், பாத்திரங்கள், மூட நம்பிக்கைகள், மனப்பாங்குகள், குணாதிசயங்கள் ஆகியவற்றையே பால்நிலை குறிப்பதாகக் கூறப்படுகின்றது. இதுவே, சமூகமானது பால்வேறுபாட்டை பால்நிலை வேறுபாடாக வளர்க்க துணை போகின்றது. 

இன்றைய காலப்பகுதியில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனைகளைப் படைத்து வருகின்ற போதிலும் சமூகத்தில் அவர்களை ஒரு போதையூட்டும் பொருளாகவே பார்க்கின்றனர். இவ்வாறான இழிநிலையே பெண்கள் மிகப் பெரிய பால்வினை நோய்களுக்கு உள்ளாகி நோய்க்காவிகளாக வலம் வரக் காரணமாகியுள்ளது. 

இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரு நிலைமை காணப்பட்டாலும் போதியளவு அறிவுடன் கூடிய ஒரு நிரந்தரமான விழிப்புணர்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற போது தான் அவற்றினை முழுமையாக கட்டுப்படுத்தலாம். “கற்பு’ என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான் என்கிறார் மகாகவி பாரதியார். ஆனால், ஆண்களும் பல்வேறு பால்வினை நோய்களுக்கு உள்ளாகின்றனர். 

எச்.ஐ.வி. வைரஸின் தாக்கத்தினால் உடலில்  நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் போவதுடன், நோயின் தாக்கத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. இவற்றின் இறுதிக் கட்டம் மரணம் மட்டுமேயாகும். 

சுகாதாரத் துறைக்கு பாரியதொரு அறை கூவலாக மாறியுள்ள எயிட்ஸிற்கு எதிரான போராட்டத்தின் இலக்குகளை வலிமையான அரசியல் உந்துதல், போதியளவான நிதிவளங்கள், உறுதியான மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் அடைய முடியுமென ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் கூறியுள்ளார். 

இதேவேளை, எச்.ஐ.வி. இற்கு எதிரான போராட்டத்தில்  இவ்வருடம் தீர்மானிக்கப்பட்ட இலக்குகளை 2015 ஆம் ஆண்டளவில் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை ஐ.நா. செயலர் கேட்டுள்ளார். 

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை பாடசாலை மாணவர்கள் முதல் பல்துறை பிரபலங்கள் வரை முன்னெடுத்து வருகின்றனர். இதன் மூலம் எயிட்ஸ் தொடர்பான ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரங்களை நம் நாட்டிலும் முன்னெடுக்க  முன் வர வேண்டும். 

உலகிலேயே தாய்வானில் தான், மிகவும் வயது குறைந்த சிறுவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், கடந்த வருடம் அந்நாட்டு அரசு குழந்தைகளைக் கொண்டு விழிப்புணர்வு பிரசாரமொன்றை ஆரம்பித்திருந்தது. 

எயிட்ஸ் நோயாளி ஒருவருடன் கை குலுக்குவதனாலோ அல்லது அவருடன் நீச்சல் தடாகம், குளியலறை என்பவற்றையே பகிர்ந்து கொள்வதனாலோ இன்னொருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படாது. 

எயிட்ஸ் நோயுடைய தாயொருவர் கர்ப்பமாக இருக்கும் போது, அவரது குழந்தைக்கும் எச்.ஐ.வி.  நோய்த் தொற்றுவர வாய்ப்புள்ளது. குறிப்பாக, பிறந்த குழந்தைக்கு எயிட்ஸ் நோயுடைய தாயொருவர் தாய்ப்பால் கொடுக்கும் போது அதனூடாக குழந்தக்கும் எயிட்ஸ் பரவுகின்றது. இதனாலேயே இவ்வாறான தாய்மாருக்கு சிசேரியன் பிரசவம் பரிந்துரைக்கப்படுவதுடன் அக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தப்படுகின்றது. 

ஆயினும், நுளம்புகள், பூச்சிகள் மூலம் எச்.ஐ.வி. பரவுவதாக  இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதாவது ஒரு நுளம்பின் உடலில், நீண்ட நேரம் எச்.ஐ.வி. வாழமாட்டாதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆயினும், மருத்துவத் துறையில் எவ்வளவு தான் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள போதிலும், எயிட்ஸிற்கான மருந்துகளோ, சிகிச்சைகளோ இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. 

எச்.ஐ.வி.யை எதிர்க்கும் திறன் கொண்ட நோய் எதிர்ப்பாற்றல் குருதியணுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நோபல் பரிசு பெற்ற மருத்துவவியலாளரான டேவிட் பலடிமோர் தமது பரிசோதனைகள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.  இவருடைய பரிசோதனை எதிர்காலத்தில் வெற்றி பெறுமானால் எயிட்ஸ் நோயாளிகளும் சமூகத்துடன் இணைந்து வாழ முயலலாம். 

அதுவரையிலான காலப்பகுதியிலும் எயிட்ஸ் ஒரு உயிர் கொல்லி நோயாகவே இருக்கப் போகின்றது. எனவே, எயிட்ஸ் நோய் தொடர்பானவிழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்துவது இன்றைய கட்டாய தேவையாகும். 

அதேசமயம் எயிட்ஸ் நோயாளர்களையும் சமூகத்திலிருந்து ஒதுக்கி விடாமல் இருக்கும் வரை மகிழ்ச்சியாக  வாழ அவர்களது குடும்ப உறுப்பினர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன்வர வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக