சனி, 28 டிசம்பர், 2013

இன்னும் துலங்காத மர்மம்

சா.சுமித்திரை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப் கென்னடி உயிரிழந்து 50 வருடங்கள் ஆகியுள்ள போதிலும் அவரின் படுகொலைக்கான காரணம் இதுவரை அமெரிக்க மக்களுக்கு தெரிவிக்கப்படவே இல்லை.

 இருந்த போதிலும் எத்துறை பிரபலங்களாயினும் அவர்கள் உயிரிழந்த பின்னரும் அவர்கள் தொடர்பான சுவாரசியங்கள் சர்ச்சைகள் மர்மங்கள் வெளியாகிய வண்ணமே இருக்கும். அவற்றில் எந்தளவிற்கு உண்மை உள்ளது அவை எந்தளவிற்கு போலியானவை என எதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது.

அமெரிக்காவின் 35 ஆவது ஜனாதிபதியான ஜோன் எப். கென்னடியின் 50 ஆவது நினைவு தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் உயிரைப் பறித்த மர்மத் தோட்டா தொடர்பான திடுக்கிடும்  தகவலை அவருக்கு முதலுதவியளித்த தாதியொருவர் வெளியிட்டிருந்தார்.

கென்னடியின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற நேரத்திலே 28 வயது இளநங்கையாகவிருந்த பைலிஸ் ஹால் என்ற இந்த மருத்துவ தாதிக்கு தற்பொழுது 78 வயதாகிறது. அந்த நிகழ்வு பற்றி அவர் கூறுகையில்,
தலையில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கென்னடியின் தலையைத் தூக்கிப் பிடித்தபடியே அவரது சுவாசம் சீரடைவதற்காக முதலுதவியை நான் வழங்கினேன்.

 அப்பொழுது நான் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டேன். துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்த பலருக்கு நான் சிகிச்சையளித்துள்ளேன். ஆனால் அன்று கண்டது போல் நான் இதுவரை பார்த்ததே இல்லை. கென்னடியின் காதுக்கும் தோள் மூட்டுக்கும் இடையில் கூர்மையான ஒரு விசித்திர துப்பாக்கி ரவையைப் பார்த்தேன். அந்த ரவை சுமார் 1 1/2 அங்குள நீளமிருந்தது.
 சாதாரணமாக துப்பாக்கியிலிருந்து வெடித்து சீறிப் பாயும் தோட்டாக்களின் முனை மழுங்கிப் போயிருக்கும். ஆனால் கென்னடியின் தலையில் பாய்ந்த அந்த தோட்டாவின் முனையில் கூர்மை மழுங்காமல் இருந்தது.

அத்துடன் துப்பாக்கிக் குழலிலிருந்து வெளியேறும் வேகத்தில் தோட்டாவின் வெளிப்பகுதியில் தேய்வது போன்ற உராய்வுகளுக்கான அறிகுறி தென்படும். அதுவும் அந்தத் தோட்டாவில் காணப்படவில்லை.இந்தத் தோட்டா எந்த வகைத் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க இயலாத நிலையில் அது இருந்ததாகவும் பைலிஸ் தெரிவித்திருந்தார்.

கென்னடி படுகொலை தொடர்பான விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட தோட்டாக்களிலிருந்து அது மிகவும் வித்தியாசமாகத் தோற்றமளித்தது.
ஆயினும் அந்த தோட்டாவும் சத்திர சிகிச்சை  மூலம் அவரது உடலிலிருந்து அகற்றப்பட்டது. ஆனால் கடைசி வரை அந்த தோட்டா நீதிமன்ற விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படவே இல்லையெனவும் பைலிஸ் தெரிவித்திருந்தார்.

ஆனால் பைலிஸினால் தற்பொழுது வெளியிடப்பட்ட தகவல் தொடர்பில் அமெரிக்காவின் எப்.பி.ஐ. எந்தக் கருத்துகளையும் வெளியிடவோ அல்லது விசாரணையை நடத்தவோ இல்லை.

அதேசமயம் பைலிஸ் இந்த தகவல்களை 50 வருடங்களின் பின்னர் அம்பலப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்னவெனத் தெரியவில்லை.
ஏற்கனவே இதனையறிந்திருந்த பைலிஸ் இத்தகவலை வெளியிடக்கூடாதென எவராலும் அச்சுறுத்தப்பட்டிருந்தாரா? அல்லது அக்காலப்பகுதியில் இதனை வெளியிடுவதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சியிருந்தாரா? எனத் தெரியவில்லை.

எப்படியாயினும் இந்த இரகசியம் தற்பொழுது கசிய விடப்பட்டுள்ளதால் இனிமேலும் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படாது  என்பதற்கு என்ன நிச்சயம் உள்ளது? அதேபோல் நற்பெயரைப் பெறுவதற்காக பொய்யான தகவலை வெளியிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆயினும்  இவ்விவகாரம் தொடர்பிலே விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை உண்மைகள் வெளியாகப் போவதில்லை. அத்துடன் கென்னடியின் படுகொலையின் மர்மம் துலங்கும் வரை இது போன்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும்.

1963 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதியன்று டெக்சாஸ் மாகாணத்தின் ரெஸ்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும் போதே எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு கென்னடியின் தலையில் பாய்ந்தது. ஆயிரக் கணக்கானோர் அவரை வரவேற்கக் காத்திருந்த போது அங்கேயே திறந்த காரில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்த கென்னடியின் உயிர் கண்ணிமைக்கும் நேரத்தில் பறிக்கப்பட்ட சம்பவம் சர்வதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

உலகின் மிகப்பெரும் தலைவர்களின் ஒருவராக விளங்கிய கென்னடி மனைவி ஜாக்குலினுடன் காரில் ஊர்வலமாகச் சென்ற போது வீதியின் இருபுறமும் திரண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மக்களைப் பார்த்து கை அசைத்த படியே சென்று கொண்டிருந்த கென்னடியின் தலையிலும் கழுத்திலும் துப்பாக்கி ரவைகள் திடீரெனப் பாய்ந்தன. காருக்குள் சுருண்டு விழுந்த கென்னடியை ஜாக்குலின் தாங்கிக் கொண்டு கதறினார். கண் இமைப்பதற்குள் அனைத்து சம்பவங்களும் முடிந்திருந்தன.

கென்னடி கொல்லப்பட்ட சில மணித்தியாலங்களுக்குள்ளேயே லீ ஹார்வே ஒஸ்வோல்ட் என்ற 24 வயதான இளைஞனொருவன் கைது செய்யப்பட்டிருந்தான்.

ஒஸ்வோல்ட் கடற்படையில் முன்பு பணியாற்றியிருந்தவன் எனக் கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட அவனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக 1963 நவம்பர் 24 ஆம் திகதியன்று பொலிஸார் வெளியே அழைத்து வந்தனர்.

சிறைக்கு முன்னால் பெரும் கூட்டமொன்று கூடியிருந்தது. இக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஜேக் ரூபி என்ற 42 வயதான ஒருவர் ஒஸ்வோல்டை மிகவும் அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டார். குறி தவறாது ஒஸ்வோல்டின் மார்பைக் குண்டு துளைக்க அவன் அதேயிடத்தில் உயிரிழந்தான்.

ஒஸ்வோல்ட் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கென்னடி ஏ ன் சுட்டுக் கொல்லப்பட்டார் அவர் படுகொலை செய்யப்படுவதற்கான பின்னணி என்ன? ஒஸ்வோல்ட்டினை யாரும் தூண்டி விட்டார்களா? என எதுவுமே தெரியாமல் உலகம் திகைத்துப் போனது.

ஒஸ்வோல்டை சுட்டுக் கொலை செய்த ரூபியையும் பொலிஸார் கைது செய்து அவர் மீது வழக்கும் தொடரப்பட்டிருந்தது. ரூபி இரவு விடுதியொன்றின் உரிமையாளராவார். 1964 ஆம் ஆண்டு மார்ச்சில் ரூபிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் ரூபி ஒரு மன நோயாளியென அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியதால் தூக்கில் போடப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டார். 1967 இல் சிறையிலிருந்தே உயிரிழந்தார்.ரூபி ஒரு மனநோயாளி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் மீதான விசாரணைகளும் மூடப்பட்டன.இதன் மூலம் கென்னடியின் படுகொலையின் இரகசியமும் அம்பலமாகவில்லை.

2 ஆம் உலகப் போர் முடிந்து 16 ஆண்டுகளே ஆகியிருந்த நிலையிலேயே ஜோன் எப். கென்னடி ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். 1954 இல் ஜனாதிபதியாகவிருந்த ட்ரூமனின் நிர்வாகம் உலகின் ஏகபோக  முதலாளித்துவ வல்லரசு நாடாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வறிய நாடுகளையெல்லாம் கபளீகரம் செய்யும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.

கென்னடியும் தனது அரசியல் பயணத்தினை அவ்வாறே ஆரம்பித்திருந்தார். கென்னடி பதவியேற்ற காலப்பகுதியில் பல நாடுகளில் முதலாளித்துவத்திற்கெதிரான போராட்டங்களும் ஆட்சி மாற்றங்களும் மக்கள் புரட்சிகளும் உச்சக் கட்டத்திலே இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இவற்றினை தடுத்து நிறுத்தி தனது ஆளுமைக்குள் கொண்டு வர அமெரிக்கா முயற்சித்தது.

இதனொரு கட்டமாக கியூபா வியட்நாம் மீது படையெடுக்க கென்னடி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. ஆயினும் தனது நிலைப்பாட்டை கென்னடி பின்னர் மாற்றிக் கொண்டார்.

இக்காலப்பகுதியில் சகல அதிகாரம் பெற்ற அமைப்பாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரமைப்பு (சி.ஐ.ஏ.) தன்னை வளர்த்துக் கொண்டிருந்தது. இந்நிலையில்  கென்னடியின் நிலைப்பாட்டினால் அவரோடு முப்படைத் தளபதிகளும் முரண்பட்டனர். இதனால் கென்னடியின் கருத்துகளுடன் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கருத்துகளும் முரண்பட்டுக் கொண்டன.

இந்நிலையிலேயே கென்னடி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆயினும் தனிநபர் ஒருவரின் ஆத்திரமே கென்னடியின் படுகொலைக்குக் காரணமெனக் கூறி அவரின் சகாப்தத்தினை முடித்து விட்டது அமெரிக்கா.

உலகத் தலைவர்களின் தனிப்பட்ட மற்றும் அரசியல் விடயங்களையும் உள்நாடுகளில் குழப்பங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. யிற்கு தன் வீட்டில் இடம்பெற்ற சம்பவத்திற்குக் காரணம் கண்டு பிடிக்க முடியாது போனமை வேடிக்கையான விடயமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக