வியாழன், 21 பிப்ரவரி, 2013

நுகர்வோரை மிரட்டும் பாவனைக்குதவாத பொருட்கள்



 சா.சுமித்திரை

இலங்கை நுகர்வோர் சந்தைகளையே ஆட்டங்காண  வைக்கும் வகையில் காலாவதியான பழுதடைந்த அல்லது தரமில்லாத பெருந்தொகையான  உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதும் பின்னர் அவை அழிக்கப்படுவதும்  அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

பொருட்களின் விலை அதிகரிப்பு, கறுப்பு சந்தைகளில் இலாபம் உழைப்பு, இறக்குமதி வரி தீர்வைகள் அதிகரிப்பு, சந்தைகளில் பொருட்களின் விலைகளில் காணப்படும் தளம்பல் நிலை, பொருள் உற்பத்திகளிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் இது சம்பந்தப்பட்ட சில அதிகாரம் மிக்க ஊழியர்களது முறையில்லாத நடவடிக்கைகள் என பலதரப்பட்ட காரணங்களால் உள்நாட்டு சந்தைகளில் பாவனைக்குதவாத தரமில்லாத காலாவதியான  உணவுப் பொருட்கள் நிறையவே உள்ளன.

இந்நிலைமை மேலும் அதிகரிக்குமானால் நுகர்வோர்  சந்தைகளின் ஆரோக்கிய நிலைமைகளுக்கு  கேடு விளைவிப்பதாகவும் வர்த்தக வியாபார நடவடிக்கைகளை பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்து பொருளாதார நெருக்கடிகளை தோற்றுவிப்பதாகவும் அமையுமென பொருளாதார  நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 கடந்த வாரம் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 தொன் நிறையுடைய உருளைக்கிழங்குகள் பாவனைக்குதவாத நிலையில் பேலியகொட  நுகே வீதியில் வைத்து பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவை கொழும்பு பெரிய சந்தைக்குக்  கொண்டு செல்வதற்கென  முச்சக்கரவண்டிகளில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே பொலிஸார்  கண்டுபிடித்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

தலைநகரிலுள்ள பிரதான சந்தைக்கே இவ்வளவு தொகையான பாவனைக்குதவாத உருளைக்கிழங்குகளை விற்பனை செய்யவென கொண்டு செல்லவிருந்த சம்பவமானது  நாட்டிலுள்ள நகர்ப்புறச் சந்தைகளிலுள்ள உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் அச்சமடைய வேண்டிய  நிலையை ஏற்படுத்தியுள்ளதென்றே சொல்லவேண்டும்.

 வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் அநேகமானவை உள்நாட்டு வர்த்தக சந்தைகளுக்கு  ஏன் பழுதடைந்த நிலையிலே, செல்கின்றன என்ற கேள்விக்கு வர்த்தகர்களாலும் அதிகாரிகளாலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஆயினும் குறிப்பாக வியாபார நடவடிக்கைகளின் முகாமைத்துவம் சரியில்லாமை, அவை  தொடர்பான சட்டதிட்டங்கள் முறையாக அமுலில் இல்லாமை, இறக்குமதியாளரின் அலட்சிய போக்கு மற்றும்  இறக்குமதி தீர்வைகளுமே இந்நிலைக்குப் பிரதான காரணங்களாகவுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை இலகுவில் பழுதடையக்கூடியவை. இவற்றினை இறக்குமதியாளர்கள் கப்பல்கள் மூலம் இலங்கைத்துறை முகத்திற்கு கொண்டுவரும் போது நீண்ட காலம் எடுக்கின்றது. அத்துடன் அவை பாதுகாப்பான முறைகளிலே பொதி செய்யப்பட்டு அனுப்பட்டிருக்கும் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

 அதேபோல, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சில சமயங்களில் காலம் தாழ்த்தி வருகையில் அவை கொள்வனவு செய்யப்பட்ட விலையைவிட உள்நாட்டு சந்தைகளிலேயே விலை குறைவாக இருக்கும். அத்துடன், அவற்றினை விற்றுக் கிடைக்கும் இலாபத்தை விட இறக்குமதி வரிகள்  அதிகமாக காணப்படும். இதுபோன்ற காரணங்கள் பொருட்களை இறக்குமதி செய்த பின்பு சிலர் அவற்றினை துறைமுகத்திற்கு சென்று பெற்றுக்கொள்வதில்லை.

 இதன் விளைவாக குறிப்பிட்ட கால எல்லைகளின் பின்னர் அவை துறைமுக அதிகார சபையினால் ஏலத்தில் விற்கப்படுகின்றன. இதனைக் குறைந்த விலைகளிலே கொள்வனவு செய்து வியாபாரிகள் சிறிது இலாபம் வைத்து விற்பனை செய்கின்றனர்.

இதேபோல வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்ட உணவுப் பொருட்களை கட்டளைகள் மூலம் இறக்குமதி செய்ய இணையங்களையோ தொலைபேசி இணைப்புகளையோ அல்லது முகவர்களையோ நாடுகின்றனர். ஆனால், இறக்குமதியாகும்  எல்லாப் பொருட்களும் தரமானவை என்பதை இறக்குமதியாளர்களோ அல்லது ஏற்றுமதியாளர்களோ  உறுதிப்படுத்த  முடியாது. இது போன்ற காரணங்களாலேயே இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டு சந்தைகளுக்கு வரும் சில பொருட்கள் தரமில்லாமலும்  பாவனைக்குதவாத நிலையிலும்  காலாவதியான நிலையிலும் உள்ளன.

 கடந்த 5 ஆம் திகதியன்று கண்டி நகரிலிருந்து  5 இலட்சம் ரூபா பெறுமதியான தோடம்பழங்கள் பாவனைக்குதவாத நிலையிலே சுகாதார பரிசோதனை அதிகாரிகளால் மீட்கப்பட்டிருந்தன. இவற்றைப் பழப்பாகு, பழச்சாறு தயாரிக்கும் உற்பத்தியாளர்  குறைந்த விலையில் வாங்கிச் சென்று பயன்படுத்துவதாகவும் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிகளில் மட்டும்  சில உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. அக்காலப்பகுதிகளில் பொருட்களின் நிரம்பல் அதிகமாகவுள்ளமையால் அவைகளின் விலைகளும் குறைவாகவே இருக்கும். ஆனால் ஏனைய காலப்பகுதிகளில் அவற்றின் விலை உயர்வாக இருக்கும். எனவே சில வர்த்தகர்கள் மலிவான காலப்பகுதிகளில் அப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு பின்னர் அதிக விலைக்கு விற்கின்றனர். இந்நிலையிலும் பொருட்களின் தரம் மாற்றமடைகின்றது.

இதேவேளை. பொருட்களின் விலை அதிகரிக்குமென ஏதேனும் எதிர்வு கூறப்பட்டால் குறிப்பாக மொத்த  வியாபாரிகள்  மூடை மூடையாக பதுக்கி விடுகின்றனர். ஆனால் அவை சில வேளைகளில் அந்த விலையேற்றம்  2 அல்லது 3 மாதங்களின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படுமானால் அவை உற்பத்திக் காலத்தை விட மேலும் 5,6 மாதங்கள் கடந்து விடும். இதன் விளைவாக பொருட்களின் பாவனைக்காலமோ அல்லது தரமோ மாறிவிடுகின்றன. இதனால் பிறகு அப்பொருட்களை மலிவு விலையில்  வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகின்றன.

 இதுபோன்ற  எத்தனையோ சம்பவங்கள் வியாபாரிகளின் சுயநல போக்கினால் மட்டுமே நடைபெறுகின்றன. அவர்களது நோக்கம் இலாபம் உழைப்பதில் மட்டுமே காணப்படுகின்றது என்பதை எவராலும்  மறுக்க முடியாது.

 கடந்த மாதம் சீமெந்து கலந்த அரிசி, பருப்பு போன்றவை ஒரு தொகையாக கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிந்தன. அதேபோல பாவனைக்குதவாத எண்ணெய் கொள்கலன்கள், மாசி கருவாடு,சீனி ,மா, தேயிலை என பல உணவுப் பொருட்கள் நாட்டின் பல பகுதிகளிலும் தினமும்  கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தரமில்லாத இதுபோன்ற உணவுப் பொருட்களால் வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே ஆரோக்கிய மற்றதொரு  நிலையே  உருவாகும்.

அநேகமாக மொத்த வியாபார நிலையங்களின் களஞ்சிய சாலைகளிலிருந்தே பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம்  மட்டும் நுகர்வோர் அதிகார சபையினால் 27877 திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், பாவனைக்குதவாத பழுதடைந்த தரமில்லாத உணவுப் பொருட்கள் தொடர்பான முறைகேடுகளுக்கு 91 மில்லியன் ரூபா தண்டப் பணமாக அறவிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலே இவ்வருட முதல் மாதத்தில் பழுதான நிலையில் இறைச்சி வகைகள், பழங்கள், அரிசி, பருப்பு, மாசி, கருவாடு என நுகர்வோர் அதிகாரசபை  அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையை அறிந்து நுகர்வோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதுடன், சுகாதார கேடுகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
 இதேபோல், சில அதிகாரிகளது முறையற்ற செயல்களாலும் அவர்களது அலட்சிய போக்காலும் பாவனைக்குதவாத பொருட்கள் நுகர்வோர் கைகளில் தவழும் சம்பவங்களையும்  கட்டாயம் சொல்லியாக வேண்டும்.
 இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சில காரணங்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட பாவனைக்குதவாத உலருணவுப் பொருட்கள்  நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டு வருகின்றமை வேதனை தரக்கூடிய விடயமாகும்.கடந்த 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியில்  மீளக்குடியேறிய நாவலடி, பூம்புகார் மற்றும் அரியாலை  கிழக்குப் பகுதி மக்களுக்கு .நா.வின் முகவர் அமைப்பான யுனிசெப் மற்றும் யு.என்.எச்.சி.ஆர். நிறுவனங்கள் உலருணவுப் பொருட்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியிருந்தன.

 இப்பகுதியிலுள்ள 80 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சவர்க்காரம், சலவைத்தூள், பற்பசை, ஷம்போ மற்றும் உலருணவுப் பொருட்கள் பாவனைக்குதவாதவையாக காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

 அதேபோல், அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உலருணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்காது பதுக்கிவைக்கப்பட்டிருந்த குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதன்படி 140 மூடை அரிசி, 70 மூடை பருப்பு, 1200  ரின்மீன்கள் 40 மூடை சீனி என்பன மன்னார் பல நோக்குக்கூட்டுறவுச் சங்கக் களஞ்சியத்திலிருந்து  பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனையடுத்து களஞ்சியசாலை சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதாகக் கூறி அது சீல் வைத்து மூடப்பட்டது. இந்நிலையில் பாவனைக்குதவாத உருளைக்கிழங்கு ,வெங்காயம், கருவாடு என்பன இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டுச் செல்லப்பட்டு வீசப்பட்ட சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.

 பாவனைக்குதவாத தரமில்லாத பொருட்களிலிருந்து பாவனையாளர்களை முழுமையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் நியாயமற்ற வர்த்தக செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு  நிவாரணங்களை வழங்குதல் வேண்டும். அதேவேளை, பாவனையாளர்களுக்கு ஒவ்வொரு உற்பத்திப் பொருட்கள், தொடர்பான அறிவூட்டல்களையும் வலுவூட்டல்களையும் வழங்குதல் மற்றும் நியாயமற்ற போட்டி வர்த்தக செயற்பாடுகளிலிருந்து வியாபாரிகள். உற்பத்தியாளர்களைப் பாதுகாத்து ஆரோக்கியமான போட்டிகளை ஏற்படுத்துவதன் மூலம் சுகாதாரமான உணவுப் பொருட்கள் ஓரளவேனும்  சந்தைகளுக்கு வரும். அத்துடன் நுகர்வோர் அதிகாரசபை பொருளாதாரங்களில்  நிலவுகின்ற போட்டித்தன்மை சந்தை நிலவரங்கள்  தொடர்பிலே அடிக்கடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

 இதேபோல, ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்குமிடையே நம்பிக்கையான  உறவினை வலுப்படுத்திக்  கொள்ள வேண்டும். இதுபோன்ற சில நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டு சந்தைககளுக்கு வரும் பழுதடைந்த தரமில்லாத பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை படிப்படியாக இல்லாது செய்யமுடியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக