வியாழன், 21 பிப்ரவரி, 2013

கொலையாளிகள், பாலியல் குற்றவாளிகள் மூளையின் உட்பகுதியினுள் இருண்ட படை


கொலையாளிகள் , பாலியல் குற்றவாளிகள் போன்றோரின் மூளைகளிலுள்ள இருண்ட படலம் பகுதியொன்றை நரம்பியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 குற்றவியல் வன்முறை எண்ணம் கொண்டவர்களின் மூளைப் பகுதியை ஸ்கான் செய்து பார்க்கும் போது மூளையில் இருண்ட படலப் பகுதி வெளிப்படுத்தப்படுமென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். கொலையாளிகள்பாலியல் குற்றவாளிகள், வன்முறையாளர்கள் மற்றும் கொள்ளையர்கள் என ஒவ்வொரு வகைக் குற்றவாளிகளின் மூளைப் பகுதியிலும் இருண்ட படலப் பகுதியொன்று காணப்படுவதாக ஜேர்மன் நரம்பியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எக்ஸ்  ரேயிலுள்ள ஒரு வெகுஜன கரும் பகுதி போல மூளையின் மத்திய மடல் பகுதியிலேயே இந்த இருண்ட பகுதியுள்ளதென விஞ்ஞானியான டாக்டர் ஜேர்கார்ட் ரோத் தெரிவித்துள்ளார்.
வன்முறை தொடர்பான குற்றச்சாட்டில் சிறைக் கைதிகளாகவுள்ளவர்களை மையப்படுத்தி ஜேர்மன் அரசின் ஆய்வுகளுக்காக நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் போதே ஜேர்கார்ட் மூளையின் இருண்ட பகுதியை கண்டுபிடித்தார்.
நாம் கைதிகளுக்கு சில குறும்படங்களை காண்பிப்பதுடன்  அதன் பின்னர், அவர்களுடைய மூளையின் அலைகளை அளவிட்டு கண்காணிக்கின்றோம்குறும்படங்களில் வரும் மிருகத்தனமானதோ , கொடூரமானதோ அல்லது ஆபாசக் காட்சிகளின் போதோ அவர்களின் மூளையின் இருண்ட பகுதி சொல்ல முடியாதளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது. ஆனால், அக் காட்சிகளில் வரும் கருணை, இரக்கம், சோகம் போன்றவற்றிற்கு மூளையின் இருண்ட பகுதி எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை.
மூளையின் இருண்ட பகுதியென ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பகுதியில் குற்றவியல் வன்முறைகளுக்கான பதிவுகள் உள்ளதென ஜேர்கார்ட் கூறுகின்றர். சில குற்றவாளிகளின் வன்முறைகளுக்கு மரபியல் காரணங்கள்
 இருக்க வேண்டுமெனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் மூளைப் பகுதியை ஸ்கான் செய்து பார்க்கும் போது அவர்களின் மூளையின் கீழ் நெற்றிப் பகுதியில் ஒரு கருமையான பகுதி இருக்குமென ஜேர்கார்ட் கூறியுள்ளார்.
சில வேளைகளில் அப்பகுதியில் காயமோ அல்லது கட்டிகளோ ஏற்படுமாயின் அதனாலேயே குற்றவாளியாக உருவாகும்  வாய்ப்பு காணப்படுகின்றது. ஆனால் மூளையின் பகுதியில் உருவாகும் கட்டிகளை சத்திர சிகிச்சையினூடாக அகற்றி அல்லது காயத்தைக் குணப்படுத்தினாலே குறித்த நபர் குணமடைந்து வக்கிர குணமற்ற மனநிலை அடைந்து விடுவார். இல்லையெனில் அந்நபரின் மூளை திறம்பட செயற்படமாட்டாது. எனவே, குற்றவாளிகளாக மாறும் வாய்ப்பு உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக இது தானாக செயற்படாது . ஆனால், முளையுடன் தொடர்புடைய வன்முறை போக்குகளை ஒரளவு கட்டுப்படுத்த முடியும்என்பது, பல்வேறுபட்ட  மேலோட்டமான  உணர்ச்சிகள்  இரக்க குணம் இல்லாமை, சூழ்ச்சித் திறன், பொறுப்பற்ற தன்மை, திடீர் உணர்ச்சிகள் , மூக விரோத  நடத்தைகள் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை போன்ற ஆளுமைக் கோளாறுகளாகும்.

 மூளையின் முன் நெற்றியின் கீழ் இருண்ட பகுதி உள்ளவர்களில் 66 வீதமானோர் வன்முறை உணர்வுகளை கொண்டுள்ளனர். இந்த பரிசோதனை மூலம் ஆரம்பத்திலேயே சமூக விரோத நடத்தை  கொண்டவர்களை எளிதாக இனங்காண முடியுமெனவும் டாக்டர் கூறுகின்றார்
எனவே, இக்கோளாறு கொண்டவர்களை இளம் பராயத்திலே  இனங்கண்டு  பெற்றோர்களின் அன்புடன் சீர்திருத்தங்களை மேற்கொள்வதனூடாக அவர்கள் எதிர்காலங்களில் ஆரோக்கியமான மனநிலையுடன் செயற்படுவார்கள் எனவும் ஆராய்ச்சிக் குழு உறுதிப்பட கூறுகின்றது.

சா. சுமித்திரை


வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

காதலுக்கு கொமாண்டோ பாதுகாப்பு


சா. சுமித்திரை

உலகில் அனைத்து உயிரினங்களுமே காதல் வசப்படுகின்றன. இதில், மனிதன் மட்டும் என்ன விதிவிலக்கா? ஒவ்வொருவரது  வாழ்நாட்களிலும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் காதல் ஏற்பட்டிருக்கும். யாராவது ஒருவர் தனது வாழ்நாட்களில் ஒரு தடவை கூடக் காதலிக்கவில்லை எனக் கூறுவார்களா?

 அவர்களது காதல் சிலவேளைகளில் நிறைவேறாமலோ அல்லது மறைக்கப்பட்டோ இருக்கலாம். ஆனால் காதல்  நிஜமானது, அவர்களது காதல் நினைவுகள் எங்கோ ஒரு மூலையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும்.

 ஆனால் இன்று தமது காதலில் பல போராட்டங்களைச் சந்தித்து வென்றவர்கள் கூட தமது பிள்ளைகளின் காதல் என்றதும் உடனே எதிர்ப்புக் காட்டத்தொடங்கி விடுகின்றனர்.
இந்நிலையில் காதல் சோடிகளை பாதுகாத்து அடைக்கலம் கொடுத்து வருகின்றனர். லவ் கொமாண்டோக்கள். இவர்கள் காதலுக்கு ஆதரவு தருகின்றார்களா? எனவும் இதுபோன்ற அமைப்புகள் மேலைத்தேய நாடுகளில்தான் இருக்குமெனவும் இளம் காதல் சோடிகள் எண்ணலாம். ஆனால் இந்த லவ் கொமாண்டோ அமைப்பு எமது அயல்நாடான  இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில்தான் உள்ளது.

கட்டாயத் திருமணங்கள், கௌரவக் கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து இளம் காதல் சோடிகளைப் பாதுகாத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் முயற்சியில் காதலைக் காதலிக்கும் லவ் கொமாண்டோ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
 இந்தியாவிலே ஒவ்வொரு வருடமும் காதல் உறவுகளால் ஏற்படும் தொடர்புகளால் 1000 இற்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

 இந்தப் படுகொலைகள் கூட "கௌரவக் கொலைகள்" எனச் சாதாரணமாக அழைக்கப்பட்டு வரும் நிலையிலே காதல் என்னும் தெய்வீக உணர்வுக்கு அடிமைப்பட்ட ரோமியோ ஜூலியட் காதல் ஜோடிகளுக்கு இரகசிய அடைக்கலம் கொடுத்து மென்மையான காதல் மனங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த லவ் கொமாண்டோக்கள்.

 கடும் தொனியில் கூடப் பேசத் தெரியாத இந்த அமைப்பினருடன்  கதைத்துக் கொண்டு இருந்தாலே போதும், கனமான இதயங்கள் அமைதியடைந்து விடும். ஒருவருடைய காதல் உறவினை அவருடைய குடும்பத்தினர் ஏற்கவில்லை எனில் அச்சோடிகளை அழைத்து வந்து திருமணம் செய்து  வைக்கின்றனர்.

 அதேவேளை சட்ட மற்றும் நடைமுறை உதவிகளை வழங்குதல், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பான இரகசிய அடைக்கலம் வழங்கல் , அச்சோடிகளுக்கெதிராக எழும் அச்சுறுத்தல்கள், கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல் எனப்பல உதவிகளையும் இந்த அமைப்பினர் செய்து வருகின்றனர். எதிர்ப்பான காதலர்களுக்கு உதவி செய்வோருக்கு நிச்சயம் உயிர் ஆபத்துக் காணப்படும்.

 ஆனாலும் இன்னொருவருடைய காதலுக்காக லவ் கொமாண்டோக்கள் தமது உயிரையே பணயம் வைத்து காதல் உணர்வுக்கு மட்டும் அர்ப்பணம் செய்து வேறிரு உயிர்களை வாழ வைக்கின்ற சேவை உண்மையிலே உணர்வுபூர்வமானதாகும்.

 சமூக அந்தஸ்து, வசதி வாய்ப்புகள், கல்வித் தகைமை, தொழில், பதவியுயர்வு போன்ற காரணங்களைக் காட்டி தமது குடும்பத்திற்கேற்ற சரியான தெரிவு இல்லை எனவும் வேறு மதம் அல்லது சாதி ஆகியவற்றாலும் பெற்றோர் தமது பிள்ளைகளின் காதலை நிராகரித்து விடுகின்றனர். அதேவேளை பெற்றோரை மீறும் பிள்ளைகளை சமூகத்திற்கு பயந்து தமது கௌரவத்தை மட்டும் கருத்தில் கொண்டு சில பெற்றோர் கொலை கூட செய்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் வருட மொன்றிற்கு 1000 இற்கு மேற்பட்ட காதல் ஜோடிகள் பரிதாபமாக உயிரிழக்கின்றன.

சில சோடிகளில் ஒருவர் மட்டும் மரணமாக மற்றவர் தனது வாழ்நாளைத் தொலைத்து விட்டு மனநோயாளர்களாக தனிமையில் கழிக்கின்றனர். இது போன்ற எத்தனையோ காதல் மனங்களைக் கொல்லும் சம்பவங்களுக்கு எதிராக இந்த லவ் கொமாண்டோக்கள் உள்ளனர்.
 கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் 22  வயதான தனது தங்கை காதலனுடன் ஓடியதையறிந்த 29 வயது சகோதரன் தங்கையைத் தேடிக் கண்டு பிடித்து அவரை வீதிக்கு இழுத்து வந்து அவ்வீதியில் வைத்தே தங்கையின் தலையைத் துண்டித்திருந்தார். மனிதனுக்கு இயற்கையாக உருவாகின்ற மென்மையான உணர்வான காதலுக்கு உயிர் எப்படி ஈடாகும்?

இதே போன்ற சம்பவங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கையிலே லவ் கொமாண்டோக்களின் இச்சேவை கட்டாயம் பேசப்பட வேண்டியதொன்றாகும்.
 இந்தியாவின் பழைய டில்லியில் மிகவும் வசதி குறைந்ததும் சேரிப் பகுதியுமாகவுள்ள ஒரு சிறு ஒழுங்கையிலுள்ள பாழடைந்த கட்டிடத்திலேயே இந்த லவ் கொமாண்டோ  அமைப்பு உள்ளது. இக் கட்டிடக் கதவில்கூட அடையாளம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதொன்றும் இல்லாத நிலையிலே இக்கட்டிடத்தைக் கண்டுபிடிப்பது என்பது இலகுவான காரியமல்ல.
 ஒரு சமூகப் புரட்சியின் விதைகள் விதைக்கப்பட்டு வேர்கொள்ள செய்யப்படுவதாகவே இக்கட்டிடத்திற்குச் செல்லும் ஒவ்வொருவரது மனநிலையும் சொல்லும்.

லவ் கொமாண்டோக்களின் அன்பு என்னும் வாடகையில் 7 பாதுகாப்பான வீடுகள், அவை ஒவ்வொன்றும் 5 அறைகளாகப் பிரிக்கப்பட்ட சிறிய சொத்து தற்பொழுது அன்பு என்னும் பாதுகாப்பின் கீழ் 5 காதல் சோடிகள் வாழ்ந்து கொண்டிருப்பதாக  லவ் கொமாண்டோக்களை அண்மையில் டெய்லி மெயில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருந்தது.
 இந்த லவ் கொமாண்டோக்களைப் பற்றி டெய்லி மெயில் மேலும் பல தகவல்களைத் தந்திருந்தது. அவை உங்களுக்காக!

இந்த அமைப்பின் நிறுவுனராக சஞ்ஜோய் சச்தேவ் ஆதரவில் மனிதாபிமான மற்றும் சட்ட உதவிகளுடன் இந்த தற்காலிக கட்டிடத்தை தலைமையகமாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்குகின்றது.
முன்னாள் ஊடகவியலாளரான 52 வயதுடைய சஞ்ஜோய், இரண்டரை வருடங்களுக்கு முன்பு தன்னார்வ பங்களிப்புகளினூடான நிதியுதவி மூலம் லவ் கொமாண்டோக்கள் அமைப்பினை உருவாக்கியிருந்தார்.

டில்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலுள்ள இளம் காதல் சோடிகளிடமிருந்து வருடமொன்றுக்கு 100 அல்லது 200 அழைப்புகள் வருமென எண்ணுவதாக சஞ்ஜோய் தெரிவித்திருக்கின்றார்.

 நாடு முழுவதும் சுமார் 11, 000 லவ் கொமாண்டோக்கள் தொண்டர்களாக செயற்பட்டு வரும் அதேவேளை, காதல் சோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தல், தற்கொலை, மனவிரக்திகளிலிருந்து காதலர்களை மீட்டெடுத்தல், இலவச சட்ட உதவிகளை வழங்கல் என பலதரப்பட்ட உதவிகளை காதல் பாதுகாவலர்களாக இருந்து 24 மணி நேரமும் சேவையாற்றி வருகின்றனர்.

 இந்தப் பாதுகாப்பான இரகசிய அடைக்கலத்தில் சுமார் 80 காதல் சோடிகள்  தங்கியிருந்து லவ் கொமாண்டோக்களின் உதவிகளைப் பெற்றுள்ளன. இவர்களில் சிலர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்தனர். வேறு சிலர் சிலகாலம் தங்கியிருந்தனர். எவ்வாறாயினும் அவர்கள் தமது எதிர்கால வாழ்க்கைகையை வளமாக வடிவமைத்துக் கொண்டனர் என்ற ஆத்ம திருப்தியடைகின்றனர் இந்த காதல் பாதுகாவலர்கள்.

"வட இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் வங்கிக் கணக்காளராக கடமையாற்றும் 29 வயதான அப்துல் ஹக்கீம் ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். அவர் 25 வயதான  மேவிஸ் என்னும் பெண்ணுடன் காதல் கொண்டிருந்தார். இதனையறிந்த பெண் வீட்டார் அவ்விருவரையும் படுகொலை செய்வதற்கென 2 இலட்சம் ரூபாவுக்கு கூலியும் நிர்ணயித்திருந்தனர். எனினும் அவ்விருவரும் தப்பியோடி வந்து எம்மிடம் அடைக்கலம் கோரினர்.

 நாம் அடைக்கலம் கொடுத்த அன்பினால் ஆதரித்திருந்தோம். பின்னர் இரு வருடங்களன் பின்னர் தமக்குப் பிறந்த பெண்குழந்தையுடன் அக்காதல் தம்பதியினர் தமது கிராமத்துக்குச் சென்றிருந்த போது அவர்களது குடும்பத்தினர் எந்தக் கோபமோ, ஆத்திரமோ இன்றி ஆதரித்து வரவேற்றிருந்தனர்.

 ஆயினும் ஒரு வாரத்துக்குள் அப்துல் ஹக்கீம் அக்கிராமத்தில் வைத்து பட்டப்பகலிலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி சம்பவத்தையும் காதல் கொமாண்டோ நிறுவுனுரான சஞ்ஜோய் விபரித்தார்.

 பொதுவாக சமூகத்தில் பெண்கள் முக்கிய இலக்காவர். காதலுக்குத் தடை மீறினால் கொலைகளும் அச்சுறுத்தல்களும், பாலியல் பலாத்காரம், அடிமைத்தனம் என பெண்கள் பலவகைகளிலும்  நசுக்கப்பட்டு வருகின்றனர்.பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளபோதிலும் அவை நடைமுறையிலுள்ளதாக தெரியவரவில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.

"சாதிகளால் வேறுபட்ட நாம் காதலால் ஒன்றிணைந்தோம்" என பாஸ்கர் கோசாமி (வயது 28), பூஜா சிங் (வயது 22) ஆகிய இருவரும் கூறுகின்றனர். அதேபோல "சமூக பிரிவுகளால் எங்களுடைய காதலுக்கு தடைபோடப்பட்டது. அதனை மீறி நாம் இன்று சந்தோசமாக நிறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்" என தர்மேந்திரர்குமார் (வயது 24), சப்னா மிடால் (வயது 23) காதல் சோடி கூறுகின்றது. இது போல பெற்றோர்களால் தடுக்கப்பட்ட காதலை அவர்களை விட்டு வெளியே வந்து இந்த அடைக்கலத்தில் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோல சாதி, சமூக அமைப்புகள், மதம் பொருளாதார வர்க்கம், கல்வி நிலை ஏற்றத்தாழ்வுகள் எனப்பல வேறுபாடுகளால் பிரிந்து காணப்படுகின்ற மனிதனை காதல் என்னும் ஒரு உணர்வு மட்டும் இணைத்து மனிதநேயத்தை உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கின்றது.

 காதலைப் பாதுகாக்கும் கொமாண்டோக்களிடம் அடைக்கலம் கோரியுள்ளோரில் பெரும்பாலானோர் படித்த சமூகத்தில் , நல்ல தொழில் வாய்ப்புகளில் உள்ளவர்களாவர். ஆசிரியர்கள், வங்கியாளர்கள், பயிற்சிக் கணக்காளர்கள் எனக் கௌரவமான தொழில்களை மேற்கொண்டு வருபவர்களும் நன்கு ஆங்கிலம் பேசக் கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் சஞ்ஜோய் தெரிவிக்கின்றார்.

இந்தியாவிலேயே தாக்குதல் மற்றும் கௌரவக் கொலைகள் இதுவரை தனிப்பட்ட ரீதியிலே இடம்பெறுகின்றன. 2010 ஆம் ஆண்டு  பிரிட்டனில் இதுபோன்ற 3000 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 காதல் என்னைக் காதலிக்கவில்லை என்பதற்காக காதலிப்பவர்களை ஏன் தடுக்க வேண்டும்? நியாயமானதும், தெய்வீகமானதுமான காதலை தடுப்பவர்களுக்கு இந்த லவ் கொமாண்டோக்கள் நிச்சயம் எதிரிகளாகவே இருப்பார்கள். ஆனாலும் காதலிப்பவர்களுக்கு இந்த அடிப்படை வசதிகளற்ற ஒதுக்குப் புறத்தில் உள்ள இரகசிய அடைக்கலம் அன்பு நிறைந்த வசந்தமாளிகையாக இருக்கும் என்பது நிச்சயம்.

வியாழன், 31 ஜனவரி, 2013

மெல்லக் கொல்லும் கழிவுகள்


சா. சுமித்திரை

 எமது நாட்டில் அண்மைக் காலங்களில்  காலநிலை மாற்றம் காரணமாக கடலரிப்பு , நில தாழிறக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் ஏற்படுகின்ற பல்வேறு பாரிய பாதிப்புகளுக்கு நாம் முகம் கொடுத்து வருகின்ற நிலையிலே, பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் எம்மை அச்சுறுத்தி மிரள வைக்கின்றன.

 உணவுக் கழிவுகள் , விலங்குக் கழிவுகள் , மருத்துவக் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள் , பொலித்தீன் கழிவுகள் ,  இலத்திரனியல் கழிவுகள், கண்ணாடிக் கழிவுகள் போன்றவை வருடாந்தம் கோடிக்கணக்கான தொன்களாக சேர்கின்றன. ஏற்கனவே கொழும்பு மற்றும் புற நகர்ப் பகுதிகள் உட்பட பல வர்த்தக நகரங்கள் குப்பைகளில் மிதந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையிலே, கழிவுகள் , குப்பைகள் மேலும் அதிகரிக்குமானால் உயிரினப் பல் வகைமைக்கே அபாயமாக மாறும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. கழிவுகள், குப்பைகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவற்றினைத்  தரம் பிரித்து சரியான முறையில் வெளியேற்றுவதற்கான திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டங்களோ வழிமுறைகளோ இல்லாமையே இந் நிலைமைக்கு முக்கிய காரணமாகும்.

குறிப்பாக சுற்றுச் சூழலுக்கு அதிக அச்சுறுத்தலாக பிளாஸ்ரிக் , பொலித்தீன் மற்றும் கண்ணாடிக் கழிவுகளே உள்ளன. இவைகளை நாம் குப்பைகள் எனக் கருதாத நிலையில் அவை அபாயக் குப்பைகளாக உருவெடுத்து வருகின்றமை கவலை தரக் கூடிய விடயமாகும். உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளாஸ்ரிக் , பொலித்தீன் பொருட்களின்  பாவனைகளால் ஏற்பட்டுள்ள இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல. 
 ஏனெனில் , இம் மூலப் பொருட்களாலான உற்பத்திப் பொருட்களின் மோகத்துக்கு அடிமைப்பட்டுள்ள எம்மால் எப்படி இலகுவாக இதிலிருந்து வெளிவர முடியும் ? அதேபோல், தொழில் நுட்ப சாதனப் பொருட்களும் குப்பைகளாக உருவாகின்றன. நாம் வீட்டில் பயன்படுத்தும் மின்குமிழ்கள் , தொலைக் காட்சி, கையடக்கத் தொலைபேசி ,கணினி, மிக்ஸி  போன்ற மின்னியல் ,  இலத்திரனியல் பொருட்களின் பாவனை முடிந்ததும் அவற்றை சாதாரண குப்பைகளாகக் கருதி வீசி விடுகிறோம்.

அண்மையில் , தொழில் நுட்ப சாதனங்களின் பாவனையாலேயே அதிகளவு தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன என சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார். இவை உடல் சுகாதாரத்திற்கு பாரிய கெடுதலைத் தருகின்ற அதேவேளை , சுற்றுச் சூழல் பல்வகைமைத் தன்மையை இல்லாதொழித்து விடுகின்றன என சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் , பிளாஸ்ரிக் , பொலித்தீன் , கண்ணாடி , மின்னியல் , இலத்திரனியல் பொருட்கள் போன்றவற்றை மண்ணில்  புதைக்கும் போது அவை உக்குவதில்லை.  அதேவேளை அவை நீண்ட காலம் மண்ணில் தங்கியிருந்து, மண் மற்றும் மண்ணுயிரிகளின் தரத்தினையும் மாற்றி விடுகின்றன. மாறாக நாம் அக்கழிவுகளை எரிக்கும் போது அவற்றிலிருந்து வெளியாகும் நச்சுப் புகை வளிமண்டலத்துடன் கலந்து விடுகின்றது. இதன் மூலம் சுவாசப் பிரச்சினைகள், அமில மழை , ஓசோன் படலத்தில் துவாரம் என ஏற்பட்டு வேறுபல சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

 உதாரணமாக , உலகம் முழுவதிலும் உற்பத்தி செய்யப்படும் பாதரசத்தில் சுமார் 25 சதவீதம், மின்னியல் இலத்திரனியல் சாதன உற்பத்திகளுக்கே பயன்படுவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தான், பாதரச உற்பத்திகளைக் கட்டுப்படுத்த 140 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுவிற்சர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உடன்படிக்கையொன்று எதிர்வரும் ஒக்டோபரில் , ஜப்பான் மினமடா நகரில் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஒரு கணினியை உற்பத்தி செய்ய சுமார் 7 கிலோ கிராம் பிளாஸ்டிக் மூலப்பொருள் பயன்படுத்தப்படுகின்றது. சாதாரணமாக அன்றாடம் இப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டுமே சிறுநீரகப் பாதிப்புகள், சுவாசப் பிரச்சினை, ஆண்மைக் குறைபாடு எனப் பல உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன என மருத்துவர்கள் அடிக்கடி கூறுகின்றனர். இந்நிலையிலே, அவை குப்பைகளாக மண்ணில் போடப்படும் போது ஏற்படப் போகும் அபாயங்களை சாதாரணமாகக் கருதி விடமுடியாது. 

 அதேபோல, மருத்துவக் கழிவுகள் பற்றியும் கட்டாயம் சொல்லியாக வேண்டும். ஏனெனில், இலங்கையில் ஆரோக்கியமான துறையாக இருந்த சுகாதாரத் துறை இன்று பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. அச்சவால்களிலொன்றாக மருத்துவக் கழிவுகள் உள்ளன.

அநேகமான மருத்துவமனைகளிலோ , சிகிச்சை நிலையங்களிலோ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் ஊசிகள் , செலைன் போத்தல்கள், இரத்தம்  தோய்ந்த பஞ்சுகள் , கையுறைகள், ஊசி மருந்துக் குப்பிகள் என மருத்துவக் கழிவுகள் பொது இடங்களிலும், கடற்கரையோரப் பகுதிகளிலும் கொட்டப்படுகின்றன. இவைகளால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகள் ஒரு புறமிருக்க, சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானவையாகவும்  இவை காணப்படுகின்றன.

இதேபோல , உணவு மற்றும் விலங்குக் கழிவுகளும் சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இவற்றினால் நீண்ட கால பிரச்சினைகள் எனப் பெரிதாக இல்லாத போதிலும் சுகாதார மற்றும் தொற்று நோய்கள் என குறுங்காலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அழுகிய , பழுதடைந்த உணவுப் பொருட்களையோ, கால்நடை விலங்குகளின் கழிவுகளையோ மண்ணில் புதைக்காது, பொது இடங்களில் போடுகின்றனர். இந்நடவடிக்கைகளால் நுண்ணங்கிகளின் பெருக்கம் அதிகரித்து மண், வளி , நீர் என்பன மாசடைவதற்கான வழி ஏற்படுகின்றது.

இந்நிலையில், பொது மக்களால் சுற்றாடலில் தினமும் சேர்க்கப்படுகின்ற குப்பைகளின் அளவு அதிகரித்துள்ளமையால் அரசாங்கம் அவற்றினை சேகரிப்பதிலிருந்து ஒரு இடத்தில் சேர்த்து வைக்கும் வரை அதிகளவில் பணம் செலவிடுகின்றது.
இதேவேளை , நாட்டில் திண்மக் கழிவுகளை அகற்றும் செயற்பாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதால், எதிர்காலத்தில் நகரங்களில் வசிப்பவர்களிடம் குப்பைகளை அகற்ற வரி அறவிடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வருமென சுற்றாடல்துறை அமைச்சராகவிருந்த அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஏனெனில் , கொழும்பு மாநகர சபையால் மட்டும் தினமும் சேகரிக்கப்படும் 800 மெற்றிக் தொன் குப்பைகளை அகற்றுவது என்பது இலகுவான காரியமல்ல. இது போன்றே ஏனைய பெரிய நகரங்களும் குப்பைகளால் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றன. இதனைக் கருத்திற் கொண்டே வரி அறவிடுவது தவிர்க்க முடியாதுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 இந் நிலையில் , ஏற்கனவே கொழும்பின் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி போன்ற பிரதான பகுதிகளிலும் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற நகரப் பகுதிகளிலும் குப்பை ஏற்ற வரும் ஊழியர்களுக்கு மாதமோ அல்லது வருடமோ அல்லது பண்டிகைக் காலங்களிலோ சிறு தொகை பணம் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில்  அப் பகுதிக் குப்பைகள் முறையாக அகற்றப்பட மாட்டாதெனவும் தெரிவிக்கின்றனர். அதேவேளை உரிய தவணையிலே வந்து குப்பைகள் அகற்றப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

ஒரு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள்  ஒரு பொது இடத்தில் குவித்து விடப்பட்டு நாள், கிழமைக் கணக்காக அப்படியே காணப்படுகின்றன.  அதேபோல பொது மக்களாகிய தாமும் வீதிகளில் செல்கின்றதை மறந்து தமது வீட்டுக் குப்பைகளை எறிந்து விட்டுச் செல்கின்றனர்.
பொது இடங்களில் குவிக்கப்பட்டு இருக்கும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. குப்பைகளால் அப் பகுதி வடிகான்களும் அடைபடுகின்றன.  
தொடர்ந்து இந்த வடிகான்கள் சீராக துப்புரவு செய்யப்படாமையால் மழை காலங்களில் வெள்ள நீர் செல்ல முடியாதுள்ளது. இந் நிலையில் தான் தாழ்வானப் பகுதி நிலங்கள், வீடுகளுள் வெள்ள நீர் செல்கின்றது. குறிப்பாக அடிக்கடி பாரிய வெள்ளப்பெருக்கு அபாயத்திற்குள் சிக்கிக் கொள்ளும் கிழக்கு மாகாணத்திற்கு நிலத் தோற்றப்பாடுகள் தவிரவுள்ள காரணங்களில் இதுவுமொன்றாகும்.
 இதேபோல, தெருவோரங்களில் வீசப்படும், குவிக்கப்படும் குப்பைகளால் மழை , வெள்ளப் பெருக்கு காலங்களில் அதிக சிரமங்களுக்குள்ளாக வேண்டி வருகின்றது
. எனவே, இவ் விடயங்கள் தொடர்பாக மாநகர சபை , நகர சபை உறுப்பினர்கள் அறிக்கைகளை விடுவதை நிறுத்தி விட்டு, உரிய கவனமெடுத்து முறையான கழிவு அகற்றும் பணிகளுக்கு உதவ முன்வர வேண்டும். 
இதேபோல, பொது மக்களும் குப்பைகள் தொடர்பான விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், அதிகரித்துவரும் சனத்தொகை பெருக்கத்தால் காணிகள் துண்டாக்கப்படுகின்றன. நிலப் பற்றாக்குறை பாரியளவில்  காணப்படுகின்றது. இந்நிலையில் அவர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளைப் போடுவதற்கென நிலங்களை ஒதுக்குவது என்பது உண்மையிலேயே , இயலாத காரியமாகும்.
பல நாடுகளில் குப்பைகள் கடலில் கொட்டப்படுகின்றன. இவை ஏனைய கரையோர நாடுகளில் கரையொதுங்குகின்றன. இந் நடவடிக்கைகளில் இலங்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனாலேயே அதிகளவான மீன்கள், கடற் தாவரங்கள் இறந்து கரையொதுங்குகின்றன. குறிப்பாக மேல் மாகாணத்தில் சேரும் குப்பைகளின் அளவு மாததாந்தம் குறிப்பாக மேல் மாகாணத்தில் சேரும் குப்பைகளின் அளவு 1540 மெற்றிக் தொன்களாகும். நாட்டில்  சேரும் குப்பைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை மேல் மாகாணத்திலேயேயுள்ளதென அறியப்படுகின்றது.

தற்பொழுது கொழும்பு மாவட்டத்தில் குப்பைகளைப் போடுவதற்கு இடமில்லை. எனவே, இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கழிவுப் பொருட்கள் உரியவாறு முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும். இப் பிரச்சினைகளை இனிமேலும் உணராதிருந்தால் , பாரிய அழிவுகளை நாமே விரைவில் தேடிக் கொள்ள வேண்டி வரும். மனித இனத்தை மெல்ல மெல்லக் கொல்லும் இந்தக் குப்பைக் கழிவுகளால் உருவெடுத்துள்ள பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த பல மேலைத்தேய நாடுகள் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து விட்டன.

அந்நடவடிக்கைகளிலொன்றாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் மட்டுமன்றி , மலேசியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளும் மின்னியல் இலத்திரனியல் பொருட்களை கழிவாக அகற்றுவதில்லை. அவை மீள் சுழற்சிக்காக சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அவை புதிய வடிவத்தில் பாவனைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.

இந் நடவடிக்கைகளை எமது நாட்டில் மேற்கொள்வதன் மூலம் ஓரளவு குப்பைக் கழிவுகள் ÷ சர்வது குறையும். அதேபோல  ஒரு முறையோ அல்லது இரு முறையோ பயன்படுத்தப்பட்ட பின்னர்  பிளாஸ்ரிக் கண்ணாடிப் பொருட்கள் எறியப்படுகின்றன. இவற்றையும்  மீள் பாவனைக்கு உட்படுத்தலாம். ஆனால், பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனைகளை நாம் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மீள்பாவனைக்கு அவற்றினை பயன்படுத்தும் போது கூட நச்சுத் தன்மையடைகின்றது. எனவே அவற்றிற்குப் பதிலாக கடதாசி, மரப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

குப்பைகள் சேர்வதற்கு இன்னொரு காரணம் நவீன ரகத்திலான கவர்ச்சியான வடிவங்களுக்காக அநேக பொருட்களை அடிக்கடி  மாற்றிக் கொள்வதும், பழையவற்றை குப்பைகளாகப் போடுவதுமாகும். இச் செயலையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக கொழும்பை பொறுத்தவரை  அநேகமானவை மாடிக் கட்டிடத் தொகுதிகளேயாகும். ஒரு சிறு நிலப் பகுதி கூட இல்லாத  இக் கட்டிடத் தொகுதிகளில் சிறு கடதாசித் துண்டுகளைக் கூட கொழும்பு மாநகர சபையே வந்து அகற்ற வேண்டிய நிலை காணப்படுகின்றது.

 இந்நிலையில் குடியிருப்பாளர்களால்  நாளொன்றுக்கு அகற்றப்படும் கடதாசிகள், பழைய துணிமணிகள் ,  உடைந்த கண்ணாடிப் போத்தல்கள் , உணவுக் கழிவுகள் என்பவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒரு பையினுள் கட்டிப் போட்டு விடுகின்றனர். இதனால் திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்து சேமிப்பதிலோ அல்லது அழிப்பதிலோ அல்லது மீள் சுழற்சிக்குட்படுத்துவதிலோ மாநகர சபை சுத்திகரிப்புப் பணியாளர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது.
 எனவே, இவற்றை குப்பைகள் அகற்றும் குடியிருப்பாளர்கள் சிரமம் பாராது வகைப்படுத்தி பைகளில்   அடைத்து அகற்றுவதன் மூலம் குப்பை அகற்றும் முகாமைத்துவம் ஓரளவு பாதுகாக்கப்படும். இதுபோன்று நாம் ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புணர்ச்சியுடன்  செயற்பட்டால் குப்பைகளால் ஏற்படும் அழி வையும் ஆபத்தையும் ஓரளவுக்காவது தடுக்க முடியும்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மெல்லக் கொல்லும் கொலையாளி! புகையிலை


_சா.சுமித்திரை_

அமெரிக்காவில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியிலேயே புகையிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் காயங்களை சுத்தமாக்கும் தொற்று நீக்கியதாகவும் வலி நிவாரணியாகவும் புகையிலையை பயன்படுத்தினர். வட அமெரிக்காவில் பணம் உழைக்கும் பயிராக புகையிலை இருந்துள்ளது. 1847 ஆம் ஆண்டு பிலிப் மொரிஸ் என்பவரே முதன் முதலாக புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட்டினைத் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். எனினும் சிகரெட் பயன்பாடு என்பது ஆரம்ப காலங்களில் இராணுவ வீரர்களிடமும் பாதுகாப்புப் படையினரிடமே காணப்பட்டது.

1953 களில் சிகரட், புகையிலை பாவனையால் பலவகையான புற்றுநோய் ஏற்படுகின்றது என டாக்டர் எமல் எல் வைன்டஸ் கண்டுபிடித்தார்.
இதனைத் தொடர்ந்து 1964 களில் அமெரிக்க அரசு புகைபிடிப்பதால் சுகாதாரத்திற்கு கேடு என்னும் நோக்கில் அவர்களுக்கு எதிராகவும் விற்பனைக்கு எதிராகவும் சட்டம் உருவாக்கியது.
மனிதனுக்கு மரணத்தைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாம் நிலையிலுள்ளது. இதனாலேயே புகையிலை பாவிப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக உலக சுகாதார அமைப்பு 1987 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து உலக நாடுகள் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நாளாக அனுஷ்டித்து வருகின்றன.
புகைத்தல் புகை பிடிப்பவரை விட அச் சூழலில் இருக்கும் ஏனையவர்களையே அதிகளவு பாதிக்கச் செய்கின்றது. புகைப்பவர்கள் தமது ஆயுட் காலம் முடிவதற்கு முன்பே தமது உயிரினை அழித்துக் கொள்கின்றனர். இதேவேளை தன் உயிரை அழிப்பதற்கே இந்த உலகில் அனுமதி இல்லாத போது  தன் சுயநலத்துக்காக அடுத்தவர் உயிர்களின் அழிவுக்கு மற்றவர்கள் காரணமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?

புகைத்தல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உலகில் நிமிடத்திற்கு 6 பேர் மரணிப்பதாக சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
20 ஆம் நூற்றாண்டில் 100 மில்லியன் பேரும் 21 ஆம் நூற்றாண்டில் இதுவரை 1 பில்லியன் பேரும் புகைத்தல் தொடர்பான நோய்களால் இறந்துள்ளனர் எனவும் ஆய்வறிக்கை ஒன்ற தெரிவிக்கின்றது. இது தொடருமானால் 2030 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 8 மில்லியன் பேர் வரை வருடாந்தம் உலகில் மரணமடையலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
இலங்கையில் ஒரு நாளைக்கு புகை சம்பந்தமான நோய்களால் 370 பேர் இறப்பதாக கடந்த வருடம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புகைக்கும் போது வெளிவரும் புகையில் 400 இற்கும் அதிகமான நச்சு இரசாயனப்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் 50 வீதமானவை சுவாசப் பற்றுநோயினை ஏற்படுத்துபவையாகவுள்ளன. அத்துடன் இப்புகையை சுவாசிக்கும் சிறு குழந்தைகளின் எண்ணங்களில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் நைட்டிங் காம் பல்கலைக்கழகங்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புகையியை சுவாசிப்பதால் இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்ற அதேவேளை நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு, பல், உதடுகளின் நிறம் மாறுதல், இருமல் என புதுப்புது நோய்கள் புகைப்பவர்களின் உடலினை ஆக்கிரமித்து கொள்கின்றன. இதனால் புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது வாழ்நாளினை வைத்தியசாலைகளிலும் மருந்துகளுடனும் கழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
புகையிலையை பல விதங்களில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வெற்றிலையுடன் சேர்த்து உண்ணல், மூக்குப் பொடியாக பயன்படுத்தல், குழாய்களைப் பாவித்து புகையை உறிஞ்சுதல், இதனை விட பீடி, சுருட்டு, சிகரெட் என பல முறைகளில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.
புகைப்பிடிப்பதால் சிலவேளைகளில் உடலின் அல்லது மனதின் உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், இவற்றினால் இறுதியில் கிடைக்கும் பிரதிகூலங்களும் வேதனைகளும் செல்லிலடங்காதவை.

புகையிø உள் இழுக்கும் போது புகையிலுள்ள நிக்கோர்டின் என்னும் இரசாயனப் பொருள் மூளையினைச் சென்றடைகின்றது. ஒவ்வொரு முறையும் இழுக்கும் போதும் அந்த இரசாயனப் பொருள் மூளைக்கு செல்கின்றது. அத்துடன் இந்த இரசாயன நச்சுப் பொருளுடன் 700 வகையான வேறு இரசாயனக் கூட்டுப் பொருட்களும் செல்கின்றன.
மூளையின் மனநிலை மாற்றுக் கலங்களுக்கு நிக்கோர்டின் உட்பட இரசாயனக் கூட்டுப்பொருட்கள் செல்வதால் புகைபிடிப்பவர்களுக்கு ஒரு வகை மாயையைத் தோற்றுவிக்கின்றனர். சில மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள் இந்த மாயையை ஒரு சிறந்த தீர்வாக எண்ணுகின்றனர். எனவே புகைபிடித்தலை ஒரு பழக்கமாக ஏற்றுக்கொள்ள முனைகின்றனர்.

மன அழுத்தங்களுக்கு புகைத்தல் தீர்வாகுமா?
இலங்கை இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரை அநேகமான ஆண்கள் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது பொது இடங்களிலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கும் தீர்வாகவே புகைபிடிப்பதாகக் காரணம் சொல்வார்கள். எந்தவொரு பிரச்சினைகளையும் பேசியோ, ஆராய்ந்தோ, சிந்தித்தோ முடிவெடுக்காது புகைபிடித்தலைக் காரணம் சொல்வது மடமையாகும்.

இலங்கையிலேயே புகைபிடிப்பதற்காக பல காரணங்களை சொல்கின்றனர். மகிழ்ச்சிக்காகவென 22 வீதமானோரும் நண்பர்களுடனும் பொழுது போக்கவென 8.2 வீதமானோரும் புகைபழகத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 17 வீதமானோரும் தனிமையைப் போக்க 10.5 வீதமானோரும் பரீட்சித்துப்பார்க்கவென 8.7 வீத மானோரும் நண்பர்களின் அழுத்தங்களுக்காக 10 வீதமானோரும் பிரச்சினைகளுக்காக 15 வீதமானோரும் தாம் புகைபிடிப்பதற்கான காரணமாகச் சொல்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்களின் விலையேற்றத்தால் திணறுகின்ற பொதுமக்கள் சிகரெட், சுருட்டு, மது போன்றவற்றின் விலையினை எத்தனை சதவீதத்தினாலும் அரசு உயர்த்தினாலும் எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாது அதிக பணம் கொடுத்த வாங்கி உபயோகிக்கின்றனர். எனவேதான் அரசு எந்தவித அச்சமோ, தயக்கமோ இன்றி அடிக்கடி இத்தகைய பொருட்களின் விலையினை அதிகரித்து வருகின்றது. இந்த விலையேற்றத்தால் குடும்பப் பெண்களும் குழந்தைகளும் உறவினர்களுமே பாதிக்கப்படுகின்றனர்.
200 குடும்பங்கள் சிகரெட் வாங்க மாதாந்தம் செலவு செய்யும் தொகை 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவாகும். ஒருநாளைக்க 4101 மில்லியன் சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன.

இலங்கை மட்டுமல்லாது உலக நாடுகள் பல சிகரெட் விற்பனை மூலமே அதிகளவு வருமான வரியினை  ஈட்டுகின்றன. இலங்கை அரசு சிகரெட் மூலம் 12 வீத வருமானத்தினைப் பெற்று வருகின்றது. புகைபிடிப்பதற்காக 5800 கோடி ரூபாவினை வருடமொன்றுக்கு செலவிடுகின்றனர்.
அதேவேளை புகை தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க சுகாதார அமைச்சு 22 வீதம் செலவிடுகின்றது. புகைபிடிப்பவர்களில் 60 பேர் உயிரிழக்கின்ற அதேவேளை 60 பேர் புதிதாக புகைபிடிக்கப் பழகுகின்றனர்.

புகைபிடித்தலை ஊக்குவிக்க பிரித்தானியா, அமெரிக்கா புகையிலை கம்பனிகள் கோடி கோடியாக அமைதியாக இருந்து கொண்டு இலாபம் உழைக்கின்றனர். ஆனால், இவற்றினை உணராத வறிய, சாதாரண குடும்பத்தவர்கள் அற்ப மகிழ்ச்சிக்காக அவர்களுடைய உடலையும் கெடுத்து குடும்ப மகிழ்ச்சியையும் சீரழித்து பணத்தினையும் விரயம் செய்து கொண்டிருக்கின்றனர்.
2010 ஆம் ஆண்டு விட கிழக்கில் மட்டும் 5.1 பில்லியன் ரூபாவினை அரசு புகையிலைப் பொருட்கள் மூலமாக வருமானமாகப் பெற்றுள்ளது. எனவே தான் புகைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசும் அரசு சாராத நிறுவனங்களும் சமுக நிறுவனங்களும் முன்வர வேண்டும். இதன் ஒரு முயற்சியாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்திப் பிரிவு இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை புகையிலை எதிர்ப்பு வாரங்களாக பிரகடனப்படுத்தியுள்ளது.

பொது இடங்களில் புகைபிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றினை எவரும் கருத்தில் கொள்வதில்லை. எனவே இத்தகையோரைக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்க பொலிஸார் முன்வர வேண்டும். அதேபோல 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு இவற்றை விற்க தடையுள்ள போது கடை உரிமையாளர்கள் இரகசியமாக விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

அதேபோல் பொது இடங்களிலோ, ஊடகங்களிலோ சிகரெட், புகையிலை தொடர்பான விளம்பரங்கள் செய்வதும் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
நாம் பொருட்களை வாங்கும் போது உற்பத்தித் திகதி, முடிவு திகதி, பலன் என ஒவ்வொன்றையும் பார்த்தே வாங்குகின்றோம். ஆனால், சிகரெட் பெட்டிகளிலோ, மதுசாரப் போத்தல்களிலோ பெரிய எழுத்துகளினால் எழுதப்பட்டிருக்கும் உடலுக்கு தீங்கானவை என்னும் வாசகத்தை மட்டும் வாசிக்கவோ பின்பற்றவோ தவறிவிடுகின்றோம்.

1988 ஆம் ஆண்டு பின்லாந்தும் 1994 ஆம் ஆண்டு பிரான்ஸும்  புகைத்தல் தொடர்பான விளம்பரங்களை முற்றாகத் தடை செய்துவிட்டன. அதேபோல எமது நாட்டு ஊடகங்களும் வர்த்தக அமைப்புகளும் இவற்றைத் தடை செய்ய முன்வர வேண்டும்.

ஓசோன் படலத் துவாரத்தை முதன் முதலாக எச்சரித்த விஞ்ஞானி மரணம்


-சா .சுமித்திரை -


சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தின் துவாரம் குறித்து முதன் முதலாக எச்சரிக்கை விடுத்துவரும் இரசாயனவியலுக்கான நோபல் பரிசினைப் பெற்ற வருமான ஷேர்வூர் ரொளலண்ட் தனது 84 ஆவது வயதில் கடந்த 10 ஆம் திகதி காலமானார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியராக இருந்த ரொளலண்ட் ஓசோன் படலம் எவ்வாறு பூமியை சூழ அமைந்துள்ளது? சுற்றுச் சூழல் பாதிப்பின் மூலம் அதில் எவ்வாறு துவாரம் ஏற்படுகின்றது என்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். 1974 ஆம் ஆண்டு இயற்கை தொடர்பாக எழுதிய தனது முதலாவது ஆய்வுக் கட்டுரையிலே ஓசோன் படலம் குளோரோபுளோரோக் காபன் துணிக்கைகள் மூலம் பாதிக்கப்படுவதாக எச்சரித்திருந்தார்.


3 ஒட்சிசன் அணுக்கள் இணைந்து உருவாகின்ற ஓசோன் மூலக் கூறால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓசோன் படலம் சூரியனிலிருந்து வெளிவரும் நச்சுப் புற ஊதாக் கதிர்கள்  (290 நனோ மீற்றர்களிலும் குறைவான அலை நீளமுடையவை) பூமியை தாக்காது பாதுகாக்கும் பணியைச் செய்கின்றது.

இம்மகத்தான தொழிலைச் செய்யும் ஓசோன் படலம் மனிதனின் பல்வேறு முறையற்ற நடவடிக்கைகளால் உருவாகின்ற கரிமச் சேர்ம வளிமங்கள் புவியிலிருந்து 30 கீலோ மீற்றர் தொலை வரையுற்ற வளிமண்டலப் படலங்களைச் சிதைவடைக்கின்றமையால் ஏற்படும் தாக்கங்களால் குளோரின், மற்றும் குளோரின் ஒக்சைட்டுக்கள் உருவாகி ஓசோன் மூலக் கூறுகளை நேரடியாக தாக்குகின்றன.

இதனால் ஓசோனின் மெல்லிய படலத்தில் துவாரங்கள் ஏற்பட்டு அதனூடாக புற ஊதாக்  கதிர்கள்  ஊடுருவி புவியை தாக்க வழி செய்கின்றன என ஷேர்வூர் ரௌலண்ட் தன்னுடைய உதவியாளர் மரியோ மொலினாவுடன் இணைந்து கண்டுபிடித்து இதனை தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கினார். இதனையடுத்தே அவரால் கட்டுரையில் முன்மொழியப்பட்ட கருத்துகளை கொண்டு ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

குளிர் சாதனப் பெட்டிகள், ஸ்பிரே கலன்கள், வாசனைத் திரவியங்கள், ஏரோசோல் ஸ்பிரேக்கள் போன்றவற்றின் அதீத பாவனைகள் காரணமாகவே அதிகளவு குளோரோபுளோரோக் காபன் துணிக்கைகள் வெளியேறுகின்றன. இவ் ஆய்வுக்கட்டுரை வெளியான பின்பே 1985 ஆம் ஆண்டு இரசாயன ஆய்வாளர்கள் அந்தார்டிக்கா கண்டத்தின் மேல் ஓசோன் படலத்தில் துவாரம் ஏற்பட்டுள்ளதையும் குளோரோபுளோரோக் காபன் போன்ற வாயுக்ககளின் தாக்கத்தாலேயே இது உருவானதாகவும் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்தே மேலதிக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர் இரசாயனவியலாளர்கள்.

அதேவேளை 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கையையடுத்து (இஊஇஊஇ  (குளோரோ புளோரோ காபன்) கள் மீதான சர்வதேச தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓசோன் துவாரம் கடந்த பத்தாண்டுகளை விட குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன என்பதை 3 செயற்கை கோள்களும் 3 தரை நிலையங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஓசோன் படலத் துவாரம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த ரௌலண்டுக்கு அவருடைய ஆய்விற்காக 20 ஆண்டுகளின் பின்பு 1995 ஆம் ஆண்டே இரசாயனவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவருடைய இழப்பு இரசாயனவியல் துறைக்கு ஒரு பேரிழப்பாகும். நாம் எங்களுடைய மிகச் சிறந்த நண்பனையும், ஒரு அனுபவசாலியையும் இழந்து விட்டோம் என இவினி கலிபோனியா பல்கலைக்கழக (க்இஐ ) பௌதீகவியல் விஞ்ஞானப் பீடத் தலைவர் கென்னித் யன்டா தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.

பார்க்கின்சன் நோய் காரணமாக காலமான ரொளலண்ட் வளிமண்டல இரசாயனவியல், வேதி வினை வேக இயல் ஆகிய துறைகளிலும் தனது ஆய்வினை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

புதன், 4 ஜூலை, 2012

மனித உயிர்களுடன் விளையாடும் போலி வைத்தியர்கள்




 இலங்கையில் 50 ஆயிரம் போலி வைத்தியர்கள் சேவையாற்றுவதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
 ஒரு நாட்டில் வைத்தியத்துறை சிறப்பாகச் செயற்பட்டால் மட்டுமே  ஏனைய துறைகளும் சிறப்பாகச் செயற்பட முடியும். அந்த வகையில் இலங்கையானது பல்வேறு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற போதிலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுகாதாரத் துறையில் சிறப்பாகச் செயற்படுவதால் அந்நெருக்கடிகளைச் சமாளித்து வருகிறது. எனினும் கடந்த சில மாதங்களாக வெளிவரும் சில சம்பவங்கள் தொடர்பான செய்திகள் இனிமேலும் இந் நிலை தொடருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் 50 ஆயிரம்  போலி வைத்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர்களை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கையாக சட்ட விரோத மருந்தகங்கள், மருந்துவ நிலையங்கள் சுற்றி வளைப்பு, போலி மருந்து விற்பனை நிலையம் முற்றுகை , கருக்கலைப்பு  நிலையங்களின் அதிகரிப்பு என மருத்துவத் துறைக்கு சவால்களாக  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து  வருகின்றோம். இதனால் வைத்திய சாலைகள், சிகிச்சை நிலையங்கள், வைத்தியர்களிடம் செல்வதற்கு மக்கள் பல்வேறு வகையிலும் ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்டியில் கடந்த 20 வருடங்களாக சாதாரண பரீட்சையில் கூட சித்தியடையாத ஒருவர் போலியான வைத்திய சான்றிதழ்களை வைத்துக் கொண்டு சிகிச்சை நிலையமொன்றினை நடத்தி வந்துள்ளார் என்பது கடந்த வருடமே தெரிய வந்தது. இதனையடுத்து அப்போலி வைத்தியரையும், அவருக்கு உதவியாக இருந்த இரு பெண்களையும் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் கைது செய்தனர்.
அதேபோல் யாழ். நகரில் கடந்த 5 வருடங்களாக இயங்கி வந்த பல் மருத்துவ சிகிச்சை நிலையத்தினை சுற்றி வளைத்துச் சோதனையிட்ட போது அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த போலி வைத்தியரொருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இதனைப் போல மலாய் பெண்ணொருவர் தனக்ப்கு புற்றுநோய் உள்ளதென பரிசோதனை முடிவில் அறிந்து கொண்டு மேலதிக சிகிச்சை பெற முயன்ற போது இயற்கை வைத்தியம் மூலம் இலகுவாக குணப்படுத்த முடியுமென ஒரு போலி வைத்தியர் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த  பெண், 4000 ரிங்கட்டினை கொடுத்து சில சிகிச்சைகளைப் பெற்றுள்ளார். எனினும் சில காலத்தின் பின்னரே அவ் வைத்தியர் ஒரு போலியானவர்  என்றும் தான் ஏமார்ந்து விட்டேன் என்பதையும் தெரிந்து கொண்டார். தற்பொழுது மலாய் பெண்ணுக்கு புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் மரணத்தை நெருங்கிய நிலையில் போராடிக் கொண்டிருக்கின்றார்.
இப் பெண்ணைப் போல பலர் இலகுவாக  குணமாக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ கூடிய நோய்களை தகுதியற்ற போலி வைத்தியர்களிடம்  காட்டி சிகிச்சை பயனளிக்கவில்லையென நோய் தாக்கம் அதிகரித்த பின் அரச வைத்தியசாலைகளை நாடி நிற்கின்றனர். நிலைமை கவலைக்கிடமாக மாறிய பின் வேறு பல நோய்களையும் இலகுவாக வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 
இதனைப் போல  முறையாக மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்யாது தாங்கள் மருத்துவர்கள் எனக் கூறிக் கொண்டு சமூகத்திலே பலர் கௌரவமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே தான் போலிப் பட்டங்களை பணம் மூலமாகவும் சமூக அந்தஸ்து மூலமாகவும் பெற்றுக் கொண்டு வைத்தியர்கள் போல் நடித்து பொது மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்குமாறு சுகாதார  அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 இதற்காக போலி வைத்தியர்கள் தொடர்பான சட்டத்தை திருத்தியமைக்கும் வகையில் நகல் சட்ட மூலத்தை அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இதனடிப்படையில் போலி வைத்தியர் என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படின் 5 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்தை  மிகவும் கடுமையாக அமுலாக்க வேண்டும். ஏனெனில் இன்றைய காலத்திலே வைத்தியத் துறையென்பது சமூகச் சேவையாக பார்க்கப்படுவது குறைவாக உள்ளது. இதையொரு பணங் கொழிக்கும் தொழிலாகவே சில வைத்தியர்கள் கருதுகின்றனர். பணம் கட்ட வசதி இருந்தால் வைத்தியசாலையினுள் நோயாளியை  அனுமதியுங்கள். இல்லையெனில் வேறு வைத்தியசாலை பாருங்கள் என்ற உரையாடல் அதிகளவில் தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெறுவதாகும்.
 போலி வைத்தியர்கள் 5 வருட சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வந்த பின்னரும் கூட புதிய இடத்திற்கு சென்று மீண்டும்  அதே குற்றத்தைச் செய்ய முற்படலாம்.  எனினும்  தற்பொழுது போலி வைத்தியார்கள் உருவாகுவதை ஒரளவேனும் தடுப்பதற்கும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் பொலிஸாருக்கும் சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் சுகாதார அமைச்சர் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றமை வரவேற்கத்தக்க தொன்றாகும்.
அதிகளவில் போலி வைத்தியர்கள் கிராமப் பகுதிகளிலேயே  சட்டவிரோதமாக சேவையாற்றி வருகின்றனர். இதற்குக்  காரணம்  கிராம மக்களிடையே மருத்துவத்துறை சார்ந்த தெளிவான அறிவின்மையே . இவர்கள் அநேகமாக ஆயுர் வேத வைத்தியம் மற்றும் இயற்கை வைத்தியம் போன்றவற்றையே கடைப்பிடித்து வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இவ் வைத்திய முறைகள் வழக்கொழிந்து போயின. இச் சந்தர்ப்பத்தை போலி வைத்தியர்கள் பயன்படுத்தி பணம் உழைக்கின்றனர்.
 அதேபோல் சட்ட விரோத  கருக்கலைப்பு நிலையங்கள், நகரங்களில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. போலி வைத்தியர்களை அதிகளவாக கொண்ட நாடாக மட்டுமன்றி, கருக்கலைப்பு அதிகளவு நடைபெறும்  நாடாகவும் இலங்கை மாறி வருவதாக  பல சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நாளொன்றுக்கு 45100  வரையிலான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக மருத்துவ ஆய்வறிக்கையொன்று  சுட்டிக்காட்டுகின்றது. இந்த கருக்கலைப்பு நிலையங்களில் அதிகளவில் போலி வைத்தியர்களே பணியாற்றுகின்றனர். கருக்கலைப்பு எண்ணிக்கையை விட போலி வைத்தியர்கள் அதிகமாக உள்ளமை அதிர்ச்சி தரும் விடயமாக உள்ளது.
இந்தப் போலி வைத்தியர்களிடம் போதிய கல்வியறிவோ, அனுபவமோ இல்லாமையால் கருக்கலைப்பு நடவடிக்கைகளின் போது அதிகளவு குருதிப்  பெருக்கு ,கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தல், முறையற்ற ஆலோசனைகள் போன்றவற்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.
எந்த வித பரீட்சைகளிலும் சித்தியடையாதவர்களும் மருத்துவ துறை தொடர்பான அறிவு இல்லாதவர்களும் வைத்தியர்கள் என அப்பாவி மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.  இதனால் மனித இனம் பாரிய போராட்டத்தை எதிர்நோக்குகிறது. எனவே தான் அரசாங்கம்  வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய போலி வைத்தியர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு  மாகாணத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போலி வைத்தியர்களை கட்டுப்படுத்த அரசு மற்றும் அரசு சாராத மருத்துவ துறை நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. 2004 ஆம் ஆண்டில் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருந்தனர் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டில் இருந்த தகைமை வாய்ந்த  ஆங்கில வைத்தியருக்கும் போலி வைத்தியருக்கும் இடையிலான விகிதம்  ஒன்றுக்கு நான்கு எனவும் தெரிவித்திருந்தது.
 ஆனால் தற்போதைய சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி போலி வைத்தியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாகும். எனவே, கடந்த 8 வருடங்களில் மேலும் 10 ஆயிரம் போலி வைத்தியர்கள் உருவாகியுள்ளனர்.  மருத்துவ துறையை போலிகளிடமிருந்து பாதுகாக்க சுகாதார அமைச்சு முன்னெடுத்து வந்திருக்கக் கூடிய நடவடிக்கைகள் போதுமானளவு உறுதியுடையவையாக இல்லை என்பதையே இந்த அதிகரிப்பு காட்டுகிறது.
எந்தத் துறையிலும் கலப்படம் இருக்கலாம். அவற்றினால் பாரியளவு பாதிப்புகள் சமூகத்திற்கு ஏற்படாது எனலாம். ஆனால் மருத்துவத் துறையில் போலி வைத்தியர்கள், போலி மருந்துகள் என கலப்படம் காணப்பட்டால் அது மனித உயிருக்கே பாரிய அச்சுறுத்தலாக மாறிவிடும். இத் துறை மனித உயிருடன் தொடர்பு உடையது என்பதை உணர்ந்து உறுதியான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாது எடுக்க முனைய வேண்டும். இல்லையெனில் மேலும் 5 வருடங்களின் பின்பு நாட்டில் இருக்கக் கூடிய போலி வைத்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தும் சனத்தொகையின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும் என்பது திண்ணம்.

வணிக மயமாகிவிட்ட காதலர் தினம்


பொதுவாக ஒரு விடயம் தொடர்பாக சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே விசேட தினங்கள் பிரகடனப்படுத்தி அனுஷ்டிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட தினங்கள் விசேடமானவையாக அமைகின்றன. அந்த வகையில் பெப்ரவரியென்றால் அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது பெப்ரவரி 14 ஆம் திகதி கொண்டாடப்படும் காதலர் தினமாகும். இது இன்றோ, நேற்றோ கொண்டாடப்படுவதல். பல வருடங்களுக்கு முன்பே இத்தினத்திற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளமையே இந்நாளின் சிறப்பாகும். 1840 ஆம் ஆண்டு அமெரிக்க மாதாந்த இதழின் பிரபல எழுத்தாளரான லஹ்எர்க் ஸ்மித் செயிண்ட் வலன்டைன் தினம் ஒரு தேசிய தினமாக ஆகிவிட்டது என தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை நினைவுகூரலாம்.


உண்மையிலே காதலர் தின வரலாற்றினை நாம் ஆராய்ந்து பார்த்தால் இத்தினம் இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடப்படக்கூடிய ஒரு தினமா? என எண்ணத் தோன்றும். ஏனெனில் காதலர் தினம் பலரது தூய காதலுக்காக தன்னுரியிரையே கொடுத்த ஒரு ரோம் பாதிரியாரின் மரணத்திற்கான ஆரம்பமாகும்.  ஒரு தியாகம் நிறைந்த நாளை  அமைதியாக அனுஷ்டிப்பதே சாலச் சிறந்ததாகும். அதாவது கி.பி. 250 ஆம் ஆண்டுகளில் ரோமப் பேரரசாகவிருந்த கிளாடியஸ் தனது அரசியல் வாழ்க்கையிலே தொட்ச்சியாக பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தான். இதேவேளை இவனது ஆட்சியில் மக்கள் இராணுவத்தில் சேர விரும்பவில்லை. அவர்கள் நாட்டிற்காக சேவையாற்றாது குடும்பம், காதல், மகிழ்ச்சியென இருக்கின்றமையால் தான் படைகளில் இணைய மறுக்கிறார்கள் என நினைத்து கிளாடியஸ் திருமணத்திற்கு தடை விதித்தான்.
இதனையெதிர்த்து வந்த பாதிரியரான வலன்டைன் பல இரகசியத் திருமணங்களை செய்து வைத்தார். இதனால் பேரரசு கிளாடியஸ் கோபம் கொண்டான். உடனே பாதிரியாரைச் சிறையிலே அடைத்து கொடுமைப்படுத்தி கொலை செய்தான். கி.பி. 270 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியன்றே பாதிரியார் வலன்டைன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கௌரவப்படுத்தவே புனித தியாக நாளாக இக்காதலர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.
எனினும் பெப்ரவரியென்றால் காதலர்களும் சரி இளவயதினரும் சரி தங்களுடைய காதல் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் ஏதோவொரு வகையிலே வெளிக்காட்ட ஆரம்பித்து விடுவார்கள். காதலர்களது அன்பினை புனிதப்படுத்தி உள்ளங்களில் மறைந்து கிடக்கும் உணர்வுகளை வெளிக்கொண்டு வர உகந்த நாள் காதலர் தினமென ஒரு சாரார் ஆதரிக்கின்றனர். எமது கலாசார விழுமியங்களை சீர்குலைக்கின்றன என காதலர் தினத்தை இன்னொரு சாரார் எதிர்த்து நிற்கின்றனர். ஏனெனில் ஏனைய தினங்கள் அமைதியான வாழ்த்துக்களுடன் முடிந்து போகின்றன. ஆனால், காதலர் தினம் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கின்றதோ என்ற அச்சமும் ஆதங்கமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுகிறது. இன்று காதலர் தினம் வணிகமயமாக்கப்பட்டு வருகின்றமையாலே தானோ என்னவோ இத்தகைய எதிர்ப்புகள் உருவாகின்றன என சிந்திக்கத் தோன்றுகின்றது.
காதலர் தினத்தை ஆடம்பரமாக்க இலத்திரனியல் ஊடகங்களும் துணை போகின்றன. அதாவது வர்த்தக நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்களை இவ் ஊடகங்கள் மூலம் அதிகளவில் விளம்பரப்படுத்துகின்றன. அவர்களது காட்சியறைகளிலே நவீன ரகத்திலான இறக்குமதி செய்யப்பட்ட பல அன்பளிப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றின் வாடிக்கையாளர்களில்  அதிர்ஷ்டசாலியான காதல் ஜோடி தெரிவு செய்யப்பட்டு ஒரு கணினி வழங்கப்படுவதுடன் 3 நாள் சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பும் உள்ளது என பல கவர்ச்சியான விளம்பரங்களை ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துகின்றன.
இதனால், காதலர் தினமென்றால் காதலர்கள் அன்பளிப்புப் பொருட்களை வாங்கி பரிமாறிக்கொள்ளல், சினிமா, நண்பர்களுக்கு விருந்து என பல வகைகளில் பணத்தை அள்ளிவீசி செலவளிப்பது என்றே ஆகிவிடுகிறது. வர்த்தக, நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும், வித்தியாசமாகவும் கவர்ச்சிகரமானதாகவும் விதம்விதமான வாழ்த்து மடல்கள், மலர்ச்செண்டுகள், பரிசுப் பொருட்கள், இனிப்புப் பண்டங்கள், ஆடை அணிகலன்கள் என எல்லாவற்றிலும் காதலர் தின ஸ்பெஷல் என்ற முத்திரை பதித்து குவித்து விடப்பட்டிருக்கம்.
இத்தகைய பொருட்களை வாங்க நினைக்காதவர்களைக் கூட கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஈர்த்து அவற்றினை அதிக விலைக்கு விற்றுவிடுவார்கள். இதனை விட நாம் அன்பு செலுத்துகின்ற யாருக்குமே அவ் அன்பளிப்புகளை வழங்கி எமது உண்மையான அன்பினை வெளிக்காட்டலாம் எனக் கூறி இலவச ஆலோசனைகளையும் வழங்குவார்கள். உதாரணமாக ஒரு தந்தைக்கோ அல்லது கற்பிக்கின்ற ஆசிரியருக்கோ மகன் அல்லது மாணவன் என்ற ரீதியிலே ஒரு தூய அன்பு உள்ளது. இதனைக் கூட வியாபாரமாக்கி அவ்விருவர்களுக்கும் இடையிலான பாசத்தை வெளிக்காட்டக் கூடியதாகவுள்ள தகுந்த பரிசுகளை காட்டி விற்றுவிடுகின்றனர். இதனால், காதலர்கள் மட்டுமல்லாது பொதுவாக அனைவருமே காதலர் தின மலிவு விற்பனையில் அன்பை காட்ட தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கி பரிசளிக்க விரும்புகின்றனர்.
இவர்களது வியாபார தந்திரங்களை உணராத நாம் வாழ்த்து அட்டைகள், மலர்ச் செண்டுகள், இனிப்புப் பண்டங்கள் என பல ரூபாக்கள் செலவளித்து வாங்குகின்ற போது அவர்கள் அமைதியாகவே இருந்து கொண்டு பல ஆயிரக்கணக்கில் இலாபம் சம்பாதிக்கின்றனர்.
அதேபோல அன்றைய தினம் வீதிகளில் காணப்படுகின்ற சாப்பாட்டுக் கடைகள் முதற்கொண்டு பிரபல்யம் உல்லாச விடுதிகள் வரை காதல் ஸ்பெஷல் உணவுகள் கிடைக்கின்றன. ஆனால், அங்கு வழமையாகவே விற்பனையாகின்ற உணவு வகைப் பட்டியலே காதல் ஸ்பெஷல் பெயர் மட்டுமே மாற்றப்பட்டிருக்கும்.
வியாபார நிலையங்களில் விதம்விதமான வடிவங்களில் சொக்லேட் பெட்டிகள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் காதலர் தின வாழ்த்துக்கள், ஆங்கில முதலெழுத்துக்கள் குறிக்கப்பட்ட கவர்களினால் சுற்றி அலங்கரித்து அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். இவற்றினைப் பார்க்கும் பொழுது சிறு குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியோர்களுக்கும் கூட வாங்க வேண்டுமென்ற ஆசை வரும். உடனே அவற்றினை அதிக விலை கொடுத்தும் வாங்கி விடுவார்கள். ஆனால், அவ்வலங்கரிக்கப்பட்ட பைகளினை பிரித்துப் பார்க்கும் போது உண்மையான பெறுமதி மிகச் சாதாரணமானதாகவே இருக்கும். அப்பொழுது தான் நாம் கடைக்கார்களிடம் ஏமாந்து விட்டோம் என்ற உண்மை தெரிய வரும்.
மேலைத்தேய நாடுகளைப் போல எமது நாட்டில் காதலர் தினத்திற்கு வெளிப்படையான ஆதரவு வழங்கப்படுவதில்லை. எனினும் இத்தகைய வியாபார நடவடிக்கைகளே இளம்வயதினர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முனைகின்றன. விளம்பர மேம்பாடு, மையப்படுத்தப்பட்ட சந்தை முயற்சிகள் மூலம் சிங்கப்பூரள், சீனா, தென்கொரியா, இந்தியா என சில ஆசிய நாட்டவர்களே காதலர் தினத்திற்கு என அதிகளவான பணத்தை செலவிடுகின்றனர்.
உலகிலே கிறிஸ்மஸுக்கு அடுத்தபடியாக வாழ்த்து மடல்களை அனுப்புவதிலும் பரிசுப் பொருட்களை வழங்குவதிலும் விருந்து உபசாரங்களிலும் இரண்டாவது இடத்திலே காதலர் தினம் உள்ளதாக புள்ளிவிபரமொன்று சுட்டிக்காட்டுகின்றது. அதேபோல் பெண்களை விட ஆண்களே சராசரியாக இருமடங்கு செலவிடுகின்றனர் எனவும் அப்புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் ஒரு காதலைத் தொடர வேண்டுமாயின் நிறையப் பணம் செலவிட வேண்டும். அப்பொழுது தான் அன்பு நீடிக்கும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்களும் உண்டு. உண்மையான காதலை பொருள் கொடுத்தோ, பணம் கொடுத்தோ வாங்க முடியுமா? வருடத்தின் 365 நாட்களும் கிடைக்காத தூய காதல் இந்நாளில் மட்டும் கிடைத்து விடுமா? இதனை விட ஒரு காதலன், அல்லது காதலி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவோ, தொலைந்த காதலை தேடவோ, இல்லையென்றால் எனக்கு யாரும் இல்லையே என அங்கலாய்க்கவோ தான் இந்நாளைக் கொண்டாட வணிக நிறுவனங்கள் பலவந்தப்படுத்துகின்றன. இக்காதலர் தினம் அன்பின்  அடையாளத்தை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதே ஒழிய கேலிக்கூத்துகளுக்கும் ஆடம்பர செலவுகளுக்கும் அல்ல. எனவே இந்நாளில் வர்த்தக சமூகத்தினரின் தந்திரோபாயங்களுக்கு காதலை விற்று விலை போகாது இனிமையான என்றும் இளமையான உண்மைக் காதல் உங்களுடனே இருக்கும் என்பதில்நம்பிக்கை கொண்டு வாழ்வோமாக.

சா.சுமித்திரை