ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சிரிய நெருக்கடி மிகவும் ஆபத்தானதொரு கட்டத்தில்


சா.சுமித்திரை

சிரிய நெருக்கடி மிகவும் ஆபத்தானதொரு கட்டத்தில் சென்று கொண்டிருக்கின்றது என்பதை கடந்த வார சம்பவங்கள் வலுவாக நிரூபித்துள்ளன. 

சிரியாவின் இத்தகைய மோசமான போக்கு பிராந்திய ரீதியான யுத்தத்தினை உறுதிப்படுத்தியுள்ள அதே சமயம் சிரியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 
கடந்த வாரம், சிறு பிள்ளைகள் உட்பட பல  நூற்றுக்கணக்கானோரின் சடலங்கள் இரத்தம் தோய்ந்த வெள்ளைத் துணிகளால் சுற்றப்பட்ட  நிலையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை சர்வதேச  ஊடகங்கள் காட்சிப்படுத்தியிருந்தன. 

கிளர்ச்சியாளர்களோ அல்லது ஜனாதிபதி பஷார் அல் அஷாத் தலைமையிலான அரச படைகளோ மக்களிற்காகவே போராடி வருவதாக சர்வதேசத்திற்கு கூறிக் கொள்கின்ற நிலையில் மிக மோசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

இப்படியானதொரு தருணத்தில், கண் மூடித்தனமானதொரு தாக்குதல் மூலம் சொந்த மக்களையும், ஏதுமறியா பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவிக்கின்றனர். இந்நிலைமை சிரியாவில் போரிடும் இருதரப்பும் நீதியாகச் செயற்படவில்லையென்பதை நிரூபித்துள்ளன. 

எவ்வித நோக்கமுமின்றி தான் ÷ தான்றித்தனமாக செயற்படும் இரு தரப்பினரும் எவ்வாறு மக்களுக்காகத் தான் போராடுகின்றோமெனக் கூறிக் கொள்கின்றார்கள் என்பது புரியவில்லை. 

கிளர்ச்சியாளர்களுக்கெதிராக பசாத் தலைமையிலான அரசாங்கம், சிறப்பு விடுபாட்டு உரிமையுடன் கண்மூடித்தனமான தாக்குதல்களை மிகவும் உக்கிரமாக மேற்கொள்வதினூடாக, அந்நாட்டில் நீடித்துவரும் உள்நாட்டு யுத்தம் மோசமான கட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
2011 இல் சிவில் யுத்தமாக உருவாகிய சிரிய நெருக்கடி இன்று எவ்வித இலக்குமின்றி கொண்டு செல்லப்படுகின்றது. 

பல மாதங்களாக,  கிளர்ச்சியாளர்களின்  நிலைகள் இலக்கு வைக்கப்பட்டு சிரிய அரசினால் இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச் சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தலைநகரின் கிழக்குப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 

இத்தாக்குதலில், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென சிறு சந்தேகம் உள்ளதாக அமெரிக்கா முதலில் தெரிவித்திருந்தது. 
ஒரு வருடத்திற்கு முன்பு, சிரிய நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சிரிய அரச படைகள் இரசாயனத் தாக்குதலை மேற்கொள்வதே, அங்கு அமெரிக்கப் படைகளின் தலையீட்டுக்குரிய காலக்கெடுவாக அமையுமெனக் குறிப்பிட்டிருந்தார். 

தற்போது கூற்றினை சாத்தியமாக்கும் வகையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையினரின் கப்பல்களின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கு சிரியா இணங்கியதை அடுத்தே ஐ.நா.வின் விசாரணையாளர்கள் அங்கு சென்றிருந்தனர். இருந்த போதிலும் இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகுதிக்கு செல்லும் வழியில், ஐ.நா. விசாரணையாளர்களின்  வாகனத் தொடரணி இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதில், ஐ.நா. குழுவின் காரொன்று சேதமடைந்திருந்தது. ஆயினும் இத் தாக்குதலில், விசாரணையாளர்கள்   யாரேனும் காயமடைந்தனரா? என்பது தொடர்பில் ஐ.நா. தகவல் தர மறுத்து விட்டது. 

ஏற்கவே, ஐ.நா. விசாரணையாளர்களை அப்பகுதிக்கு அனுமதிக்க சிரிய அரசாங்கம் இணங்கியமை தொடர்பில் மேற்குலக நாடுகள் மத்தியில் சிரியா குறித்த சந்தேகத்தினை ஏற்படுத்தியிருந்தது. 

எனினும், சிரியாவில் இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் விசாரணைகளை ஐ.நா. குழுவினர் ஆரம்பித்துள்ளனர். இத்தாக்குதலில் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் ஐ.நா. குழு சென்று பார்வையிட்டுள்ளது. 
இதேவேளை, வியட்நாம் விவகாரத்தில் தொடங்கி இன்றுவரை அமெரிக்கா தலைமையிலான எந்தவொரு இராணுவத் தலையீடும், தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதென சிரிய ஜனாதிபதி பஷார் அல்அசாத் கூறியுள்ளார். 

சிரியாவை, மேற்குலக நாடுகளின் கைப் பொம்மையாக மாற்றும் முயற்சியில் மேற்குலக நாடுகளின்  தலைவர்கள் ஈடுபட முடியாதென ரஷ்ய பத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். 

இரசாயனத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியை சென்றடைவதற்கு ஐ.நா. குழுவின் அதிகாரிகள் அரச கட்டுப்பாடுகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின்  பகுதிகளுக்கு அபாயகரமான பயணத்தினை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 
ஏற்கனவே, இப்பகுதிகளில், விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு ஐ.நா. குழுவினர் நீண்ட காலம் காத்திருந்தனர். மாதக் கணக்காக  அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், அனுமதியைப் பெற்றக் கொள்வதற்கான மத்தியஸ்தம் ஐ.நா.வின் கட்டுப்பாட்டு தலைவர் அஞ்சலா கேனினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, அப்பகுதிகளுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா. குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே அக்குழுவினர் விசாரணகைளை முன்னெடுத்துள்ளனர். நச்சு வாயுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்  அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு சென்ற ஐ.நா. குழு, அங்கு பணியாற்றும் மருத்துவர்களிடமும், நோயாளிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளது. 

இருந்த போதிலும், விசாரணைகளின் போது, அந்நாட்டவர்களால் தகுந்த விளக்கம் வழங்கப்படும் என்பதும் சந்தேகமே. அவ்வாறு  வழங்கப்பட்டாலும், ஐ.நா. குழுவினர் நீதியாக செயற்படுவார்களா? என்பதும் சந்தேகமே.  தற்பொழுது கடும் சவால்களுக்கு மத்தியில் இந்த விசாரணைக் குழு எடுத்துள்ள நடவடிக்கைகள் மூலம் ஓரளவேனும் சிரிய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரக் கூடிய உந்துதலாக அமையும் என்பதை மறக்க முடியாது. 

அரபு நாடுகளில், நட்புறவாகவுள்ள சிரியாவைப் பாதுகாக்க, ரஷ்யா பல வகைகளிலும் பகீரதப் பிரயத்தனம்   செய்து வருகின்றது.  இந்நிலையில் சிரியாவை இலக்கு வைத்து மத்திய தரைக் கடற்பகுதியில் தனது இராணுவ பிரசன்னத்தை அமெரிக்கா அதிகரித்துள்ளது. 

இவ்விரு நாடுகளினதும், இரு வேறு போக்கானது மூன்றாவது உலகப் போருக்கு வழி வகுக்குமா? என்ற  சிறு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. 
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நீண்ட காலமாகவே, சிரியாவைக் கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன், எமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட ஏதாவது காரணம் கிடைக்காதா? என தேடி வருகின்றனர் என சிரிய ஜனாதிபதி பஷார் கூறி வருகின்றார். 

ஜனநாயக ரீதியில், மக்கள் ஆட்சி  நடத்தப்படுமாயின், உள்நாட்டு கலவரம் ஏன் ஏற்பட்டது? சொந்த மக்களையும் பச்சிளம் குழந்தைகளையும் கண் மூடித்தனமாக படுகொலை செய்வது ஏன்? 

இன்று அயல் நாடுகளில் பல இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இது பிராந்திய போருக்கு வித்திட்டுள்ளது. 
சிரிய ஜனாதிபதி பஷாரை பதவி விலகக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சிவில் யுத்தத்தின், திகில் நிறைந்த விளைவுகளே இவையாகும். இந்நிலைமையில் தனது நாட்டினை கைப்பொம்மையாக மாற்றும் முயற்சியாகவே மேற்குலக நாடுகள் தலையிடுவதாக கூறுவது உண்மையிலே வேடிக்கையானதாகும். 
இதேவேளை, அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி கப்பல், மத்திய தரைக் கடலை சென்றடைந்துள்ளது. அக்கடற் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யு.எஸ்.எஸ்.ஹாரி, எஸ்.ட்ருமான் விமானத் தாங்கிக் கப்பல் சுயஸ் கால்வாய் ஊடாக செங்கடலை சென்றடைந்துள்ளது. ஜோர்தானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள எப்.16 ரக போர் விமானங்கள் பல்முனைத் தாக்குதலில் ஈடபடுமெனவும் அஞ்சப்படுகின்றது. 

சிரியா மீதான தாக்குதலுக்கு தயாரான நிலையில், மத்திய தரைக் கடல் டவுலான் துறைமுகத்தில் பிரான்ஸ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு குடியரசில் நிறுத்தப்பட்டுள்ள மிராஜ் மற்றும் ரபேல் ஜெட்  விமானங்களும் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகிறது. 

பிரிட்டனும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்தி வைத்துள்ளது. சைபிரஸின் அனுமதியுடன் அதன் இராணுவத் தளத்தை பயன்படுத்தவும் பிரிட்டன் தீர்மானித்துள்ளது. 

சிரியாவை மையப்படுத்தி தாக்குதல் மேற்கொள்ள மேற்குலக நாடுகள் தயாராகவுள்ள நிலையில், அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்கினால், மத்திய கிழக்குப் பிராந்தியமே  தீப்பற்றி எரியுமென சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மத்திய தரைக் கடலில், போர்க்கப்பல்களை நிறுத்துவதால் நிலைமை மேலும் மோசமாகுமே தவிர, இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது போகுமென ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே, இரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தினால், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் பாரிய அழிவுகளை சந்தித்திருக்கும் நாடொன்றின் மீது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதானது, பேரழிவு மிக்க பின் விளைவுகளையே ஏற்படுத்தும். இப்படியானதொரு நிலைமையினை உருவாக்கியதே மேற்குலக நாடுகள் தான் என்பதை எவராலும் மறுக்க இயலாது. 

சிரிய படையுடன் லெபனானிய ஹிஸ்புல்லா குழுவும் இணைந்து போராடி வருகின்றன. இதற்குப் பதிலடியாக, கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவின் பின்னணியில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. 
சிரியாவில் இரு தரப்பினரிடையேயும் மேற்குலக நாடுகளின் ஆதிக்கம், மாறி மாறி செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது. இந்த முக்கோண ஆட்டத்தில் பாதிக்கப்படுவது பொது மக்களே. 

ரஷ்யா, அமெரிக்காவுக் கிடையிலான சிரிய விவகாரம் தொடர்பான கலந்துரையாடலும் ஸ்நோடேன் புகலிடம் அனுமதி விவகாரத்தால் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

இந்நிலையில், சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். 
சிரிய அரசு சொந்த மக்களுக்கெதிராகவே,  இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கும் நிலையில் உலக நாடுகள் அதை வெறுமனே பார்த்துக் கொண்டு வீணாக காலத்தை விரயம் செய்து கொண்டிருக்க முடியாது எனவும் கமரூன் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வார ஆரம்பம் முதல், சிரிய விவகாரத்தில் மேற்குலக நாடுகள் எடுத்துள்ள முயற்சிகள் எந்தளவிற்கு வெற்றி தரப் போகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

யுத்தம் தின்ற நாடொன்றில், இராணுவ அடக் கமுறைகளைப் பிரயோகிப்பதால், மேலும் மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்லும் என்பது யதார்த்தமாகும். உள்நாட்டிலும் சரி, சர்வதேச ரீதியிலும் அதிகளவுக்கு நிராகரிக்கப்பட்டவராக உருவாகியுள்ள சிரிய  ஜனாதிபதி பஷார் அல் அசாத், தனது அதிகாரத்தை  எவ்விதத்திலும் தக்க வைத்துக் கொள்ள எதனையும் செய்யக் கூடியவராகவே இருப்பாரென அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். 

சதாம் ஹுசைன், ஹொஸ்னி முபாரக், முகமது முர்சி என்ற வரிசையில் பஷார்  அல்  அசாத்தும் இணைந்து கொள்ளும் தருணம் வெகு தூரத்திலில்லை. 

இருந்த போதிலும், அசாத்தின் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர்  ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அந்நாட்டில் மிதவாத அமைப்புகளோ தலைவர்களோ இல்லை. இந்நிலையில் எகிப்து போன்றே இங்கும் மோதல்களும், வன்முறைகளும் தொடரும் நிலையே காணப்படுகின்றது. 
உள்நாட்டு போரும் சர்வதேச தலையீடும் சிரியாவின் எதிர்காலத்தை நிச்சயமாக கேள்விக்குறியாக்கப் போகின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக