புதன், 18 செப்டம்பர், 2013

தாக்க முயலும் அமெரிக்காவும் தடுக்க முயலும் ரஷ்யாவும்

சிரியவிவகாரம்

சா.சுமித்திரை

சிரிய விவகாரம் தொடர்பான இராஜ தந்திர நகர்வுகள் தோல்வியடைந்தால் பதில் நடவடிக்கைக்குத் தயார் நிலையில் அமெரிக்க இராணுவம் இருப்பதாக ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ள நிலையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்அசாத் தலைமையிலான ஆட்சியை பாதுகாக்க ரஷ்யா கடும் பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருகின்றது.

சிரிய நெருக்கடியில் இராணுத் தலையீட்டுக்கு அதிகாரமளிக்கும் வாக்கெடுப்பு அமெரிக்க காங்கிரஸினால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஆயினும், சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அப்புறப்படுத்தும் இராஜ தந்திர முயற்சிகள் தொடர்வதாகவும் அந்நகர்வுகள் தோல்வியடைந்ததால், இராணுவம் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமெனவும் ஒபாமா கூறியுள்ளார்.

எனினும், இரசாயன ஆயுதங்கள் ஏதும் இருப்பின் அவற்றை சர்வதேச அவதானிகள் யாரேனும் கண்டறிய வேண்டுமென்று ரஷ்யா யோசனை ஒன்றை முன் வைத்திருந்தது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் இந்த யோசனையை, சிரிய அதிகாரிகளும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இதில் தொடர்ந்தும் முழுமையான நம்பிக்கையற்ற தன்மையிலேயே இருக்கின்றன.

அதேசமயம், ரஷ்யா ஜனாதிபதியின் திட்டமானது, செவ்வாய்க்கிழமை ஐ.நா.வில் இராஜதந்திர சர்ச்சைக்கும் வழிவகுத்திருந்ததாக கூறப்படுகின்றது. சிரியாவிற்கெதிரான இராணுவ நடவடிக்கையை தடுப்பதற்கு ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட யோசனையானது, சர்வதேசத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிரியாவின் இரசாயன ஆயுதக் களஞ்சிய சாலையை கொண்டு வருவதுடன் பின்னர் அதனை அவர்களே அழித்துவிட வேண்டும் என்பதை சிரிய அரசிடம் கேட்பது போலவே அமைந்துள்ளது. ஆகவே, சிரியா மீதான ரஷ்யாவின் யோசனை எப்படி சச்தியமானதொன்றாக அமையுமென்ற கேள்வியும் எழுகிறது.

சிரியாவின் இரசாயனக் களஞ்சிய சாலையை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோ அல்லது அதனை அழிப்பது என்பதோ இராஜதந்திர ரீதியில் அவ்வளவு இலகுவான விடயமல்ல.

முதலில், சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதப் பாவனையில் ஈடுபட்டதை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. எனது மக்களுக்கெதிராக நான் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்குரிய எதுவிதமான ஆதாரங்களும் கிடைக்காது என சிரிய ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆனால், இரசாயன ஆயுதங்கள் இருந்திருந்தாலும், அது மத்திய அரசின் உத்தரவின் கீழ் வைத்திருக்கப்படவில்லை. ஒரு தாக்குதலுக்கெதிரான தாக்குதலுக்கென தனது ஆதரவாளர்கள் இரசாயன ஆயுதங்களை வைத்திருந்திருக்கலாம் எனவும் அசாத் கூறியுள்ளார்.

அசாத்தின் இந்த உரை மூலம், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பது கொஞ்சம் குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. அசாத், தனது கட்டுப்பாட்டில் இரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ முற்படாது இதனைக் கூறியுள்ளார்.

ஈரானிலும், இதுபோன்ற குற்றச்சாட்டு விசாரணைகளை மேற்கொள்ளவென, கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக பல தடவைகள் ஐ.நா.ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் விசாரணையாளர்கள் சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலைமையில் சிரியாவுக்கெதிராக அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்துமாயின், அது புதிய பயங்கரவாத அலையொன்றை கட்டவிழ்த்து விடுவதாக அமையுமென புட்டின் எச்சரித்துள்ளார். மில்லியன் கணக்கானோர் அமெரிக்காவை ஒரு ஜனநாயகத்தின் முன் மாதிரியாகப் பார்க்கவில்லையெனவும் புட்டின் குற்றஞ்சாட்டுகின்றார்.

எதுவாயினும் சிரியா மீது அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டினையோ அல்லது அசாத்துக்கெதிரான முன்னேற்பாடுகளையோ ரஷ்யா விரும்பவில்லை என்பதை அவருடைய கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இரு வருடங்களுக்கும் மேலாக, யுத்தம் தின்று கொண்டிருக்கும் சிரிய பிராந்தியத்தின் மீது இராணுவத் தலையீட்டினை திணிப்பது பலமிழந்துள்ள சிரிய மக்களுக்கு மிகவும் ஆபத்தானதாகவே அமைந்துவிடும்.

ஆயினும், பஷார் பதவி விலகக்கோரி, ஆரம்பிக்கப்பட்ட சிவில் யுத்தம், இன்று எவ்வித இலக்குமின்றி ஆபத்தான கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கையில் அந்நாட்டினை மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க ரஷ்யா எத்தனிப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இதேவேளை சிரிய விவகாரம் தொடர்பில் அக்கறை காட்டிவரும் தமது ஜனாதிபதி புட்டினுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குமாறு அந்நாட்டு கல்வி ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ளது.

இரசாயன ஆயுத தாக்குதல் விவகாரம் தொடர்பில் கிரிகிஸ்தானில் நடைபெறும் பிராந்திய மாநாட்டிலும் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது.

இதன்போது சிரியா இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க ரஷ்யா 4 கட்டத் திட்டத்தை உருவாக்கி அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது.

சிரிய இரசாயன ஆயுத தடுப்பு அமைப்பில் இணைய வேண்டும், இரசாயன ஆயுத களஞ்சியசாலையும் அவை எங்கு தயாரிக்கப்படுகின்றன என்பதையும் சிரியா தெரிவிக்க வேண்டும். அவற்றை ஆயுத தடுப்பு குழுவின் விசாரணைகள் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும், இரசாயன ஆயுதங்கள் ஐ.நா.குழு விசாரணையாளரகளின் உதவியுடன் அழிக்கப்பட வேண்டும் என்ற 4 திட்டங்களையே ரஷ்யா வகுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக