ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

அழகு ராணிப் போட்டியிலும் இனத்துவேஷம்!

சா.சுமித்திரை

இன, மத அடக்கு முறைகளுக்கெதிராக, காலம் காலமாக தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வந்துள்ள போதிலும் அவற்றினை இன்றைய காலத்திலும் ஏற்க பலரும் தயாரில்லை என்பதற்கு கடந்த வாரம் அமெரிக்க அழகியாக தெரிவு செய்யப்பட்ட நினா தவுலுரி தொடர்பான விமர்சனங்கள் நல்ல உதாரணமாகும். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிஸ் நியூயோர்க் அழகி நினா தவுலுரி இவ்வருடத்துக்கான மிஸ் அமெரிக்கா பட்டத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். கடந்த வாரம் அமெரிக்காவில்  நடந்த இறுதிப் போட்டியில் மிஸ் அமெரிக்கா பட்டம் வென்று இவர் சாதனை படைத்துள்ளார். 

1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதியன்று நியூயோர்க்கில் சைராகுஸ் பகுதியில் நினா தவுலுரி பிறந்தார். தனது 4 ஆவது வயதில் லஹோமாவிற்கு குடும்பத்துடன் சென்ற நினா, தனது ஆரம்பக் கல்வியை மிச்சிகனிலுள்ள சென்.ஜோசப் பாடசாலையில் தொடர்ந்தார். மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை முடித்தார். 

தொடர்ந்து 2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து சைராகுஸின் புறநகர்ப் பகுதியான பயாட்வலியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நினாவின் தந்தை தவுலுரி கோடீஸ்வர சௌத்ரி சென்.ஜோசப் மருத்துவமனையில் பெண்ணியல் மருத்துவ நிபுணராக கடமையாற்றி வருகின்றார். இந்தியாவின், ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடாவிலேயே கோடீஸ்வரர் சௌத்ரி பிறந்தவராவார். 

இந்து மதத்தினைப் பின்பற்றும் இவர், 1981 இல் தொழில் நிமித்தம் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். நினாவின் தாயார் ஷீலா ரஞ்சினி மென்பொருள் பொறியியலாளராக கடமையாற்றி வருகின்றார். லீலாவும்  இந்தியாவைச் சேர்ந்த ஒருவராவார். 

நினா, தனது சிறு வயதில் பெற்றோரின் தாய் வீடான இந்தியாவிற்கு சென்றுள்ளார். அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்தாலும் இந்திய மண்ணில் உள்ள பற்று நினாவிற்கு அதிகமாகும். எனவே தான், தன் பெற்றோரை அரவணைத்த இந்திய மண்ணுடன் எந்த நேரத்திலும் தொடர்புகளை வைத்திருக்க வேண்டுமென்பதற்காக, தெலுங்குத் திரைப்படங்களையே பார்த்து இரசிப்பதுடன் தெலுங்கு மொழியையும் சரளமாகப் பேசக் கூடியவர். 

நினா, தனது பல்கலைக்கழக காலத்தில் டீன் லிஸ்ட், மிச்சிக்கன் மெரிட் விருது, தேசிய சமூக கௌரவ விருது உட்பட சில விருதுகளையும் பெற்று தான் படித்த கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். விஞ்ஞானத் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ள நினா, 2006 இல், இடம்பெற்ற மிஸ், ரீன் அமெரிக்கா போட்டியிலும் தனக்கொரு இடத்தினை தக்க வைத்துக் கொண்டார். 

மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சாவளி அழகி இவர் தான். மேலும், இந்தப் பட்டத்தை தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக நியூயோர்க் அழகி வென்றுள்ளார். கடந்த வருடம், நியூயோர்க்கைச் சேர்ந்த மலோரி ஹேகன் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அட்லாண்டிக் சிற்றியில் நடந்த மிஸ் அமெரிக்காவிற்கான இறுதிப் போட்டியில் 53 பேர் கலந்து கொண்டனர். இதில் 24 வயதான நினாவுக்கு மிஸ் அமெரிக்கா பட்டம் கிடைத்துள்ளது. 

இப்படியானதொரு பெருமை நிறைந்த தருணத்தில், அமெரிக்கர் அல்லாத, பொன்னிறக் கூந்தல் இல்லாத, நீல நிறக் கண்கள் இல்லாத இந்திய வம்சாவளி பெண் நினாவை அழகு ராணியாக தெரிவு செய்தமை தொடர்பில் இன ரீதியான விமர்சனங்கள் உருவாகியுள்ளன. 

நினாவை, அரேபியரொருவரே மிஸ் அமெரிக்கா ஆகியுள்ளார் எனவும் இவரை அல்  ஹைடாவுடன்  தொடர்புபடுத்தி தீவிரவாதி என சமூக தளங்களின் மூலம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அல்ஹைடாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் கிண்டல் அடித்துள்ளனர். 

இனவெறியை தூண்டுபவையாகவுள்ள இந்த விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத நினா, சமூக சேவைகளில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளமை, அவரின் வயதிற்கு கூட, இல்லாத பக்குவத்தினை காண்பித்துள்ளது. 

இவரிடம் இறுதிச் சுற்றில் நடுவர்களால் கேட்கப்பட்ட கேள்வி, பிளாஸ்டிக் முகமாற்று சத்திரசிகிச்சை பற்றியதாகும். உங்கள் இமை மற்றும் கண்கள் மூலம் நீங்கள் ஒரு ஆசிய நாட்டவர் என்பதைக் காட்டிக் கொடுக்கிறதே. அதை பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மூலம் அகற்றச் சொன்னால் என்ன செய்வீர்கள் என நடுவர்கள் கேட்ட போது, நீங்கள் எப்படி இயல்பாக இருக்கிறீர்களோ, அதில் நம்பிக்கை வையுங்கள் என்றார் நினா. 

தனது வம்சாவளிக்கு பெருமை சேர்த்துள்ள நினா உண்மையிலேயே மிஸ் அமெரிக்காவிற்குத் தகுதியானவர் என்பதை மறுக்க முடியாது. சாதாரண போட்டிகளில் கூட, இத்தகைய இன, மத துவேஷங்களைக் காட்டுவதை உலகம் தவிர்த்துக் கொள்வதே ஆரோக்கியமானதாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக