சனி, 12 அக்டோபர், 2013

பகிடிவதைக் கூடங்களாகும் பல்கலைக்கழகங்கள்

 சா. சுமித்திரை

  பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசினால் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆயினும் தலைமைத்துவ பயிற்சியானது கிட்டத்தட்ட இராணுவப் பயிற்சிகளுக்கு சமாந்தரமானதெனக் குற்றஞ்சாட்டப்பட்டு விமர்சனத்திற்குள்ளாகிய நிலையில் அப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது,

 முதலாம் இரண்டாம் கட்டம் என தலைமைத்துவப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு பல்கலைக்கழகத்திற்குள் செல்லும் மாணவர்களாலேயே மீண்டும் பகிடிவதைகள் துளிர்விட ஆரம்பித்துள்ளன என்பதற்கு அண்மையில் இடம்பெற்ற சப்ரகமுவ பல்கலைக்கழக சம்பவம் நல்ல எடுத்துக்காட்டாகும்.

 பல்கலைக்கழக  கல்வியாண்டு காலப்பகுதியில் பகிடிவதை என்பது பாரியதொரு பிரச்சினையாக மீண்டும்  உருவெடுத்து வரும் நிலையில் சப்ரகமுவ  பல்கலைக்கழக பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய சகலமாணவர்களுக்குமெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 இச்சம்பவத்துடன் தொடர்புடைய 11 மாணவர்களுக்கு எதிராகத் தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில மாணவர்கள் தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான மாணவர்களுக்கெதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களில் பகிடிவதையினை முற்றாக ஒழிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே பகிடிவதை என்னும் வேடிக்கையானதொரு கலாசாரம் காணப்பட்டிருந்தாலும் அண்மைக் காலமாக கல்விச் மூகத்தினரிடை÷ய காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கியமாக பகிடிவதை மாறியுள்ளது.

 பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி பாடசாலைகள், உயர் கல்லூரிகள் அலுவலகங்கள், விடுதிகள் போன்ற இடங்களிலும் பகிடிவதை இடம்பெறுவதுடன் அது நாகரிகமானதொன்றாகவும் பார்க்கப்படுகின்றது.

 முன்னைய காலங்களில் பகிடிவதையானது புதிதாக இணையும் மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களுடன் ஆழமானதொரு நட்பினையும் புரிந்துணர்வுகளையும்  ஏற்படுத்திக்கொள்ளும்  நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் காலப்போக்கில் வன்முறைச் செயல்களுக்கும் காழ்ப்புணர்ச்சிகளுக்கும்  பாலியல்  ரீதியான குற்றங்களுக்கும் வித்திடுபவையாக உருவெடுத்தன.

 பல்கலைக்கழங்களாகட்டும் அல்லது அலுவலகங்களாகட்டும் அங்கு புதிதாக செல்வோரின் மனநிலை குடும்பம், சூழல் மற்றும் புறக் காரணிகள் சார்ந்ததாகவே அமைந்திருக்கும், அன்றைய தினம் வீட்டிலோ வீதியிலோ அல்லது உடல் ரீதியாகவோ குறித்த நபர் மனதளவில்  பாதிக்கப்பட்டிருப்பார். அவரின் மனநிலையை அவரால் விபரிக்கவோ அல்லது எம்மால் தானும் உணர்ந்து கொள்ளவோ முடியாது.

இப்படியானதொரு தருணத்தில் பகிடிவதை என்னும் நடவடிக்கையால் உடல், உள ரீதியாகக் கொடுமைப்படுத்துவதன் மூலம் எவ்வாறு புரிந்துணர்வுகளை ஏற்படுத்த முடியும்?

இங்கிலாந்தில் 18 ஆம் நூற்றாண்டுகளிலே தோற்றம் பெற்றதாகக்கூறப்படும் பகிடிவதைக் கலாசாரத்தில் பொதுவாக பேச்சு ரீதியான துன்புறுத்தல் உடல் ரீதியான துன்புறுத்தல், பாலியல் ரீதியான துன்புறத்தல் என 3 வகையான செயற்பாடுகள் குற்றச்செயல்களாகப் பதியப்பட்டுள்ளன.

 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் சிரேஷ்ட மாணவர்களுக்குமிடையேசிநேகபூர்வமான உறவினை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பகிடிவதைக்கு புதிய முகங்களாக பல்கலைக்கழகங்களில் உள்நுழைவோரை உடல், உள ரீதியாக சிரேஷ்ட மாணவர்கள் துன்புறுத்துவதே என இன்றைய காலத்தில் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது.

 இத்தகைய சில பகிடிவதைகளால் எத்தனையோ மாணவர்கள் தற்கொலைசெய்து கொண்டுள்ளனர். பலர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். உடல் அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர்.மேலும் பலர் மனநோயாளிகள் ஆகியுள்ளனர்.

 இதனைவிட  பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு என்னும் ஒரேயொரு இலட்சியத்துடன் இலட்சக்கணக்கான மாணவர்கள் உயர்தரக் கல்வியைக் கற்கின்றனர்.அவர்களுள் சில ஆயிரக்கணக்கானோருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது.எத்தனையோ போராட்டங்களுக்கு மத்தியிலே பல கனவுகளுடன்   பல்கலைக்கழகத்திற்கு  காலடியெடுத்து வைத்தவர்கள் இறுதியி பட்டப்படிப்பைத் தொடராது இந்தப் பகிடிவதையாலேயே இடை விலகுகின்றனர்.இதன் மூலம் இம்மாணவர்களின், இவர்களுடைய பெற்றோர்களுடைய எதிர்கால சமூகத்தினருடைய கனவு தவிடுபொடியாகிவிடுகின்றது.

இலங்கையின் சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி கிடைக்கும் மாணவர்களில் அநேகமானோர் அப்பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முதல் மாத காலப்பகுதியில் ஏதோவொரு சித்திரவதைக் கூடங்களுக்கு சென்று வருவதைப் போலவே உணர்கின்றனர். தம்மைவிட ஓரிரு வயதுகள் பெரிய அவர்களைப் போலவே பட்டம் பெறவுள்ள மாணவர்களால் வழங்கப்படும் பகிடிவதைகளாலேயே உன்னதமான உயர்வான ஓர் கல்விக்கூடம் சித்திரவதைக்கூடமாகத் தெரிகின்றது.

கல்வி என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்தது. கல்வியை இதுதான் என வரைவிலக் கணப்படுத்த முடியாது. அதேசமயம்  நற்பண்புகளையும் உயர்கல்வியையும் பெற்று ஒழுக்க சீலர்களாக வெளியேறி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற மனப்பான்மையை வழங்குவது பல்கலைக்கழகங்கள் மட்டுமேயாகும்.

 எனவே தான் ஏனைய நாடுகளை போலல்லாது இலங்கையில் உயர்கல்வி இலவசமாகவே வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கல்விச் சமூகத்தினரிடையே குற்றச்செயல்களைச் செய்யத்தூண்டும் இந்தப் பகிடிவதை மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

இவைகளால் புதிய நட்பு உருவாகும் என்பதற்குப் பதிலாக வக்கிரங்களே உருவாகின்றன. பகிடிவதை ஒரு போதை போன்றதே.  போதை தலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏற என்ன விளைவுகளைக் கொடுக்குமோ அதனைப் போலவே இதன் விளைவுகளும் காணப்படுகின்றன.

பகிடிவதைக் கலாசாரம் மேலைத்தேய நாடுகளை விட இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளிலேயே அதிகரித்துக் காணப்படுகன்றது. எமது நாட்டின் கல்வி முறையிலே ஆரம்ப காலங்களில் பகிடிவதை என்ற அத்தியாயம் காணப்படவில்லை. பின்னர் தொற்றிக்கொண்ட பகிடிவதைகள் சிநேகபூர்வமான உறவுகளுக்கே வழிவகுத்திருந்ததால் பெரியளவில் பேசப்பட்டிருக்கவில்லை. 

ஆனால் இன்று அநேகமான அரச பல்கலைக்கழகங்களிலும் சில தனியார் கல்லூரிகளிலும் தொடர்ச்சியாக  இடம்பெற்றுவரும் பகிடிவதைகளால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 பழிக்குப் பழி, நிர்வாகக் கண்காணிப்பின்மை, மாணவர் அமைப்புகளின் தலையீடுகள், சட்டத்தின் நெகிழ்வுத்தன்மை, விரிவுரையாளர்களது அக்கறையின்மை என பலகாரணங்களால் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன.

“நான் பல்கலைக்கழகத்துக்குள் புதிய மாணவனாக வந்தபோது பல வகையான பகிடிவதைகளுக்குள்ளாகியிருந்தேன். எனவே என்னைவிட இப்பொழுது புதிதாக உள்நுழைந்திருக்கும் புதிய மாணவர்களுக்கு கூடுதலான வதைகளை அனுபவிக்க விட வேண்டும்’ என்ற பழிக்குப் பழி தீர்க்கும் எண்ணம் மட்டுமே ஏற்பட்டு விடுகிறது. இதன்விளைவு அதிகரித்த பகிடிவதைகளாகும்.

2011 டிசம்பரில் றுகுணு பல்கலைக்கழக மாணவியொருவர் பகிடிவதையால் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து 2 ஆம் வருட மாணவியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். இத்தகைய சம்பவத்தால் இவ்விரு மாணவிகளது எதிர்காலமும் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

படிக்கவோ அல்லது  தொழில் புரியவோ பல்வேறு கனவுகளுடனும் இலட்சியங்களுடனும் வருவோரிடம் விளையாட்டுக்காகவும் சிறு சந்தோஷத்திற்காகவும் செய்யும் இந்த பகிடிவதைகளால் பாதிக்கப்படுவது இரு தரப்பினருமாகும்
.
இப்பகிடிவதைகளால் மாணவர்களிடையே மோதல்கள், குற்றச் செயல்கள் உருவாகுவது மட்டுமன்றி அவை பேராசிரியர் போன்ற கல்வியாளர்களையும் பாரியளவில் பாதித்து விடுகின்றன. இதற்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவரொருவர் விரிவுரையாளரைத் தாக்கிய சம்பவம் நல்லதொரு உதாரணமாகும்.

இப்படி எத்தனையோ பகிடிவதைகளால் உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் வரலாறுகளை பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் பக்கம் பக்கமாகச் சொல்லும். இருந்தபோதிலும் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களும் திருந்துவதாக இல்லை. அவற்றினைக் கட்டுப்படுத்தவும் எவரும் அதிக அக்கறை காட்டுவதுமில்லை.

குறிப்பிட்ட காலத்திற்கு குறித்த உடையுடனும் குறித்த தலையலங்காரத்துடனும் தான் வர வேண்டும். தரையில் நீச்சலடிக்க வேண்டும். மரங்களுக்கு முத்தமிட வேண்டும். கழிவுப் பொருட்களை அவர்கள் மீது எறிதல், பட்டப் பெயர் சொல்லல், சக மாணவர்கள் முன் கேவலப்படுத்தல், சகோதரர்களை வர்ணிக்கும் படி சொல்லல் உடைகளைக் களையச் சொல்லல் போன்றே மிகவும் கீழ்த்தரத்தான படித்தவனுக்குரிய  பண்பில்லாத பல செயல்கள் பகிடிவதை எனும் பெயரால் அரங்கேற்றப்படுகின்றன.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பகிடிவதைகளில் 60 வீதமானவர்கள் உளரீதியாகவும் 30 வீதமானோர் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 13 வீதமானோர் கல்வியிலே பின்னடைவுகளையும் சந்தித்துள்ளனர்.

 சில பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புகளில் அரசியல் நேரடி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. பல்கலைக்கழக அனுமதிபெறும் சில அரசியல்வõதிகளின் பிள்ளைகளும், மேலும் சிலர், அரசியல்வாதிகளின் செல்வாக்குகளுடன் பல்கலைக்கழக வளாகங்களில் கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவையும் மோசமான பகிடிவதைகள் உருவாகக் காரணியாக அமைந்துள்ளன.

 பகிடிவøதகளைத் தடுப்பதற்காக அரசாங்கமும் உயர் கல்வி அமைச்சும் இணைந்து பரந்தளவில் வழங்கி வருகின்ற தலைமைத்துவப் பயிற்சி நடவடிக்கைகளின் பின்பே பகிடிவதைகள் அதிகரித்துள்ளமையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் ஏற்றுக்கொண்வுள்ளது.

 அதேசமயம்  பகிடிவøதகளில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் பொலிஸில்  முறைப்பாடுகள் செய்யப்படுகின்ற போதிலும் மாணவர்கள் என்ற ரீதியிலும் அவர்களது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டும் பொலிஸ் நிலையங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை, இதனாலும் பகிடிவதைகள் அதிகரிக்கும் நிலையே உருவாகியுள்ளது.

 பகிடிவதைகளைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சிகளிலும் ஏதோவொரு குறைபாடு உள்ளமையாலேயே அவை அதிகரித்துள்ளமையை மறுக்க முடியாது. எனவே எங்கு குறைபாடு உள்ளதோ அவற்றினைக் கண்டுபிடித்து திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.

பகிடிவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்ய சட்டத்திலும் இடமுள்ளது. எனவே பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான கல்விச் சமூகத்தை உருவாக்குவது இன்றைய அவசியத்  தேவையாகும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக