திங்கள், 14 அக்டோபர், 2013

கென்யாத் தாக்குதல்

சா.சுமித்திரை

கென்யாவின் தலைநகர் நைரோபியிலுள்ள வெஸ்ட் கேட் வணிக வளாகத்தின் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலால் கடந்த சில நாட்களாக சர்வதேசம் நிலை குலைந்து போயிருந்தது.

கென்யாவில் இந்த மோசமான சம்பவம் அரங்கேறிய போதிலும் அதன் பாதிப்புகள் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, கானா என பல நாடுகளிலும் பிரதிபலித்திருந்தமையாலேயே இத்தாக்குதல் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

நைரோபியிலுள்ள வெஸ்ட்கேட் வணிக வளாகத்திற்கு பணக்காரர்களே அதிகம் வந்து செல்வர். இம்மையத்தில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக கடை வைத்திருந்தனர். மேலும், மேற்கத்திய நாட்டவர்களைத் தவிர இந்தியர்களுக்கும் இதுவொரு விருப்பமான வர்த்தக மையமாக இருந்து வருகின்றது.

கடந்தவார இறுதி நாளான சனிக்கிழமை வழமை போலவே வெஸ்ட் கேட் வணிக வளாகம் நெரிசலான ஆரவாரம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. நடக்கப் போகும் விபரீதங்கள் எதுவும் அறியாத நிலையில் சிறுவர்கள், பெண்கள் என பல தேசங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தனர்.

இத்தருணத்திலே அங்கு திடீரென நுழைந்த ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதுடன், வெடி குண்டுகளையும் வீசி கடும் தாக்குதல் நடத்தினர். கலகலப்பாக காணப்பட்ட பகுதிகளில் அழுகுரல்களும் அலறல் சத்தங்களும் கேட்டன. பளபளத்த மாபிள் தரைகள் இரத்த வெள்ளமாகின.

முஸ்லிம்கள் அல்லாத இஸ்லாமிய கோட்பாடுகள் தெரியாதவர்களை இலக்கு வைத்து சிறுவர், பெண்கள் என எந்தப் பாகுபாடுமின்றி ஆயுததாரிகள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகின்றது.
முதுகில் ஆயுதங்களுடனும், கையில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடனும் தீவிரவாதியொருவர், தான் வந்த வழியெங்கும் சுட்டுக் கொண்டே வந்தார். துப்பாக்கிச் சன்னங்கள் பல திசைகளிலும் சரமாரியாக பாய்ந்தன. இடையே அவர்கள், முஸ்லிம்களை அடையாளம் காண்பதற்காக அங்கிருந்தவர்களை அழைத்தார்கள். முஸ்லிம்களா என சோதித்த பின் சிலரை வெளியே அனுப்பி வைத்தனர். 

இந்தத் தாக்குதலில் தப்பிய ஒருவர் கூறுகையில்; எனது அடையாள அட்டையிலிருந்த ஜோஷûவா ஹக்கீம் என்ற பெயரில், ஜோஷûவா என்ற கிறிஸ்தவ பெயரை விரலுக்குள் மறைத்துக் கொண்டு ஹக்கீம் என்ற பெயரை மட்டும் காண்பித்தேன்.

உடனே, என்னை போகச் சொன்னார்கள். எனக்கு அடுத்து வந்த இந்தியரான ஸ்ரீதர் நடராஜன் என்பவரிடம் முகமது நபியின் தாயார் பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. உடனே, அவரை என் கண் முன்னேயே சுட்டுக் கொன்றனர் என உயிர் தப்பி வந்த ஹக்கீம் என்பவர் விபரித்தார்.

பல மோசமான வரலாற்றுத் தடயங்களை பதிவுசெய்து கொண்டிருந்த வணிக வளாக தாக்குதல்கள் புதன்கிழமை மதியத்துடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்த பின்பே அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்களில், பல நாடுகளையும் சேர்ந்த 70 பேர் உட்பட 130 பேர் கொல்லப்பட்டனர். 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம், தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 11 பேர் உயிருடன் பிடிபட்டுள்ளதாக கென்யா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 35 என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ள போதிலும், 50இற்கு மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், வெஸ்ட் கேட் வணிக வளாகத்திலிருந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 20 சிறுவர்கள் உட்பட 51 பேரின் நிலையென்ன? என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை, வணிக வளாகத்தில் இடம்பெற்ற சமையல் போட்டி யொன்றில் சுமார் 500 இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர். இத்தருணத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களால் குஜராத்தை சேர்ந்தவர்களில் கணிசமானவர்களும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

இத்தாக்குதல், பிரிட்டனைச் சேர்ந்த வெள்ளைக்கார பெண் சமந்தா வெல்த் வெயிட் (வயது 29) என்பவர் தலைமையில் நடந்தது தெரிய வந்துள்ளது. தலைமறைவாகியுள்ள இவரைப் பிடிக்க சர்வதேச பொலிஸின் உதவியை கென்யா அரசு நாடியுள்ளது. அதனைத் தொடர்ந்து சர்வதேச பொலிஸான இன்றபோல் தனது 190 உறுப்பு நாடுகளுக்கு பிடியாணை உத்தரவினை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில், சமந்தாவை கைது செய்ய தகவல் தந்து உதவும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதவையான சமந்தா, பிரிட்டனின் முன்னாள் இராணுவ வீரரொருவரின் மகளாவார்.

இவர் அல்ஹைடா இயக்கத்தைச் சேர்ந்தவர். 2005இல், லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 52 பேர் பலியாகியிருந்தனர். இச்சம்பவத்துடன் சமந்தாவின் கணவரான ஜெர்மயின் லிண்ட்சே தொடர்புபட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

1819 வயதுகளை உடைய சோமாலியா அல்லது அரபு பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்கர்களும் பிரிட்டன் பெண்ணும் இணைந்து மேற்கொண்ட இத்தாக்குதலுக்கு சோமாலியாவைத் தளமாகக் கொண்ட அல்ஸபாத் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

அல்ஸபாத் என்பது அரபு மொழியில் “இளைஞர்கள்’ அல்லது “ஆண்கள்’ என பொருள்படும். 2006இல் சோமாலியத் தலைநகர் மொகாதிசுவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்லாமிய சபைகளின் ஒன்றியத்தின் கடும் போக்கு கிளையாக அல்ஸபாத் அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. 2012இல் அல்ஹைடா, போகோ ஹரம் ஆகிய குழுக்களுடன் தொடர்புடையதாக, அல்ஸபாத் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இஸ்லாத்தின் எதிரிகளுக்கெதிராகவே போராடுவதாக கூறிக்கொள்ளும் இந்த அமைப்பினை மேற்குலக நாடுகள் சில பயங்கரவாத அமைப்பாகவே சித்திரித்து வருகின்றன.

சோமாலியாவில், இஸ்லாமிய தேசமொன்றை உருவாக்க போராடி வரும் அல்ஸபாத் தென்பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆயினும், 2011இல் அந்நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, மேற்குலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதித்தமையால், அல்ஸபாத் மக்களின் ஆதரவை பெருமளவில் இழந்திருந்தது.

இருந்தபோதிலும், சோமாலியாவில் அல்ஸபாத்திற்கெதிராக நடத்தப்படும் யுத்தத்தில், ஆபிரிக்க ஒன்றிய துருப்புகளின் பங்காளியாக கென்யா தனது இராணுவத்தையும் அனுப்பியமையை கண்டித்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவ்வமைப்பு தம்மை நியாயப்படுத்தியுள்ளது.

அல்ஸபாத்தின் கட்டுப்பாட்டிலிருந்த சோமாலியாவின் தலைநகர் மொகதிசு; ஆபிரிக்க ஒன்றிய துருப்புகளின் வசமாகியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்துள்ள அல்ஸபாத், கென்யாவின் எல்லைப் பகுதிகளில் பல்வேறு தாக்குதல்களை அடிக்கடி மேற்கொண்டு வருகின்றது.

சோமாலியாவை விட்டு, கென்ய துருப்புகள் வெளியேறும் வரை அந்நாட்டினை கடுமையாகத் தாக்குவோம் என்று அல்ஸபாத் இயக்கம் தொடர்ந்தும் கூறி வருகின்றது.

அல்ஸபாத் தனது எச்சரிக்கையை நிரூபிப்பது போல, வெஸ்ட் கேட் சம்பவத்திலிருந்து எவரும் மீளாத நிலையிலேயே, அடுத்தடுத்ததாக மேலும் இரு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக கென்ய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே வணிக வளாகத்தில் வியாழக்கிழமை முதல் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், ஜேர்மனி, கனடா உள்ளிட்ட பன்னாட்டு தடயவியல் நிபுணர்கள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் தடயங்கள் சேகரிக்கப்படுமென்றும் கென்ய உள்துறை அமைச்சர் ஜோஸப் ஒலே லெங்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெஸ்ட் கேட் வணிக வளாக தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டதாக அல்ஸபாத் தனது டுவிட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள அதேவேளை, அல்ஹைடாவுடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கமொன்று கென்ய படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இராணுவ ரீதியில் பலவீனமான நாடுகளைத் தாக்கி, அங்கு இஸ்லாமிய சட்டமான ஷரிஆ சட்டத்தினை அமுல்படுத்தி தமது செல்வாக்கை நிலை நாட்டுவதே அல்ஸபாத்தின் நோக்கமாகும். 

அதனால்தான் நாளாந்தம் பட்டினி மரணங்கள் தொடரும் சோமாலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் இந்த அல்ஸபாத் இயக்கம், வறிய நாடுகளிலொன்றாகவும் வெளிநாட்டு உதவிகளுடன் கொஞ்சம் உயிர்த்துக் கொண்டிருக்கும் நாடாகவுமுள்ள கென்யா மீது இலக்குவைத்து தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

அல்ஹைடாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள தொடர்புகள் மூலம், அக்குழுவின் பாணியில் தாக்குதல்களை நடத்தும் அல்ஸபாத்தின் திட்டங்களிலொன்றாக வெஸ்ட் கேட் வணிக வளாகத் தாக்குதலும் இருந்துள்ளது.

ஆபிரிக்க ஒன்றிய படைகளுக்கும், இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில், சோமாலியாவில் நடந்துவரும் போரில், கென்யா தலையிட்டமைக்கு பழிவாங்கவே இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அல்ஸபாத் கூறியுள்ளது.

ஆயினும், வணிக வளாகத்திலிருந்தவர்களில் அமெரிக்கர்களே இலக்கு வைக்கப்பட்டு, சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பிரிட்டிஷ்காரர்களும் ஏனைய நாட்டவர்களும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக, அல்ஸபாத் தெரிவிக்கின்றது.

எனினும் பிரிட்டன், இந்தியா, சீனா என பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? முஸ்லிம் அல்லாத காரணத்துக்காக அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உயிர்தப்பிய பலரும் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக, முஸ்லீம்களுக்கெதிரான நெருக்கடிகள் சர்வதேச ரீதியில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்லாமிய கடும்போக்குவாதிகளால் பாதிக்கப்படுவது அப்பாவி முஸ்லிம்களேயாகும்.

எந்த மதமும், இன்னொரு மதத்தினை அழிக்கவோ, பழிக்கவோ அல்லது அடிமையாக்கவோ இடமளிக்கவில்லை. அப்படியானதொரு நிலையிலே, அல்ஸபாத்தின் இந்தப் பயங்கரவாத தாக்குதல் முஸ்லிம் சமூகத்திற்கும், அவர்கள் பின்பற்றும் இஸ்லாம் மதத்திற்கும் அவதூறாகவே பார்க்கப்படுகின்றது.

தாக்குதலில், இறந்தவர்களில் ஆபிரிக்கக் கவிஞரும் பேராசிரியருமான கொபி அவ்நூரும் ஒருவராவார். 78 வயதான கானா பிரஜையான கொபி அவ்நூரும், பெரிய ஆபிரிக்க ஆளுமை என்று ஆபிரிக்கர்களால் கொண்டாடப்பட்டு வந்த ஒருவராவார். அவ்நூறும் அனைத்து ஆபிரிக்க இலக்கிய விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த போதே, தாக்குதலில் பலியானார். 

அதேபோல கென்ய ஜனாதிபதியின் மருமகன் மபுஹா முஹாங்ஹியும் அவருடைய காதலி ஹாஹிடோவும் இதில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கென்யாவின் அயர்லாந்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த மபுஹா, கடந்த 6 வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் அநேகமானோர் வெளிநாட்டுப் பிரபலங்களாகும். அர்த்தமற்ற தாக்குதலால் ஏற்பட்ட இந்த மரணம், வேதனைகள், இழப்புகள் என்பவற்றை சர்வதேச சமூகமும் இன்று பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம், உலகில் பல சமூகங்களுக்கும் அச்சுறுத்தலாக அல்ஸபாத் அமைப்பு காண்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய மதங்களை விட, இஸ்லாமில் மனித உயிர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுகின்றது. முஸ்லிம் தேசமாக உருவாக்க வேண்டுமென போராடும் அல்ஸபாத்திற்கு, இக்கொள்கையை பின்பற்ற முடியாது, பழி தீர்த்துக் கொண்டிருக்குமானால், அதனை அனைத்து நாடுகளும் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 2010இல் உகண்டாவின் தலைநகர் கம்போலாவில் உலக உதைப்பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த இரசிகர்கள் மீது இவ்வமைப்பு குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தது. இதன்போது 70 பேர் பலியாகினர். சோமாலியாவில் தமக்கெதிரான போரில் உகண்டா படையினர் ஈடுபட்டிருப்பதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையே இதுவெனவும் கூறியிருந்தனர்.

அபிவிருத்தி காணாத, வறுமையான நாடுகளான உகண்டா, கென்யா, சோமாலியா போன்றவற்றினை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக எந்தக் காரணமும் இல்லாமல் தினமும் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது சர்வதேசத்தையும் கடும் சீற்றமடையச் செய்துள்ளது.

பொது மக்களை படுகொலை செய்தும், காயப்படுத்தியும் தனது பயங்கரவாதத்தை உலகளவில் நடத்தி வருவதில் வெற்றி கண்டுள்ளதாக அல்ஸபாத் கொக்கரிப்பதில் எந்தவித அர்த்தமுமில்லை. மேற்குலக நாடுகளையோ அல்லது ஆபிரிக்க நாடுகளையோ தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தம் விரல்களை அல்ஸபாத் துண்டித்து வருகின்றனர் என்றே கூறவேண்டும்.

சர்வதேச ரீதியில் இதுவொரு ஆபத்தான தருணமாகும். ஏனெனில், தனது செல்வாக்கையும் அதிகாரங்களையும் இழந்துள்ள அல்ஸபாத்தின் தற்போதைய இலக்கு அப்பாவிப் பொது மக்கள் மட்டுமேயாகும். இனிமேல் பொது இடங்கள் நிச்சயமாக பயங்கரவாதிகளால் இலக்கு வைக்கப்படும். அது மட்டுமல்லாது, வெஸ்ட்கேட் தாக்குதலை விடவும் மிக மோசமானதாகவும் அமையலாம்.

அப்பாவி பொதுமக்கள் மீது, எந்தவொரு அர்த்தமும் இல்லாமல் திரும்பியுள்ள தாக்குதல்களைக் கட்டுப்படுத்த சர்வதேச தலைமைகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும். இல்லையெனில், இத்தாக்குதல்கள் வழமையாகிவிட, கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியுமென வலியுறுத்தப்படுகிறது.

மதங்கள், மனித மனங்களை பண்புள்ளவராக மாற்றுவதற்கே துணை நிற்கின்றவையாகும். ஆனால், மதங்களை வளர்ப்பதற்காகவும் இன்னொரு மதத்தை அழிப்பதற்காகவும் இன்று ஆயுதங்கள் எடுக்கப்படுகின்றமையா னது, மனித குலம் அழிவின் விளிம்பினை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக