சனி, 12 அக்டோபர், 2013

வாஷிங்டன் கடற்படைத்தள தாக்குதல் மூலம் சந்தேகத்திற்கிடமாகியுள்ள அமெரிக்க இராணுவப் பாதுகாப்பு

சா.சுமித்திரை

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனிலுள்ள கடற்படைத் தளத்தினுள் கடந்தவார ஆரம்பத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மூலம் அந்நாட்டின் இராணுவ பாதுகாப்பு சந்தேகத்திற்கிடமாகிவிட்டது. கடந்த திங்கட்கிழமை, வாஷிங்டன் கடற்படை தளத்தினுள் இராணுவ உடையில் வந்த ஆயுததாரிகள் மூவரால் இந்த துணிகரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகிலேயுள்ள, மிகவும் பாதுகாப்பான பகுதியான இந்த கடற்படைத் தளத்தில் துணிச்சலாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் சட்ட அமுலாக்கப் பிரிவு அதிகாரிகள் இருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும், பொது மக்கள், பொலிஸார் என 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், கொல்லப்பட, ஏனைய இருவர் பொலிஸாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து வாஷிங்டன் கடற்படைத்தளம் பதற்றம் நிறைந்தாகவும் இரத்தம் தோய்ந்த பகுதியாகவுமே காட்சியளித்தது. வீதியெங்கும், அமெரிக்க இராணுவ வீரர்களின் நடமாட்டமே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை காணப்பட்டது. சோதனைகள், சுற்றி வளைப்புகள் தேடுதல்கள் என எதற்கும் குறைவில்லாமல் வாஷிங்டன் நகர் காட்சியளித்திருந்தது.

உலகில்; தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தைரியத்தோடு செயற்படுத்தும் ஒரேயொரு நாடு அமெரிக்காதான். வியட்னாம் தொடங்கி சிரியாவாகட்டும் அனைத்து நாடுகளினதும் அரசியல் விவகாரங்களிலும் தலையிட்டு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போலவே அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது.

உலகின் தீவிரவாதத்தை அடக்க போராடி வரும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தினால் தனது நாட்டில் மேலோங்கிக் காணப்படும் துப்பாக்கிக் கலாசாரத்தை தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றது.

வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி; முன்னாள் கடற்படை வீரரான 34 வயதுடைய அரோன் அலோசியஸ் என இனங்காணப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைத்தளங்களின் பாதுகாப்பினை ஆராய்ந்து உறுதிசெய்யுமாறு பென்டகன் உத்தரவிட்டுள்ளது. கடற்படைத் தளத்தில் பல்வேறு முறையற்ற நடத்தைகளால் பணி நீக்கம் செய்யப்பட்ட அலோசியஸ் எவ்வாறு கடற்படைத் தளத்துக்குள் நுழைய அனுமதி கிடைத்தது? என்று விசாரணை நடத்தவும், அமெரிக்கப் படைத்தளங்களின் பாதுகாப்பை பரிசீலித்து உறுதி செய்யுமாறு பென்டகன் உத்தரவிட்டுள்ளது.

தொழில்நுட்ப கட்டிடவியலாளராக பணிபுரியும் செல்லு படியான அனுமதிப்பத்திரம் மற்றும் உள் செல்வதற்கான நுழைவுச் சீட்டு என்பனவற்றை காண்பித்தே அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அலோசியஸ் நுழைந்திருந்ததாக அந்நேர அதிகாரிகள் தெரிவிக்கின்றார்.

அதேசமயம், தாக்குதல் சம்பவம் அன்றைய தினம் அந்நாட்டு நேரப்படி காலை 8.20 மணியளவில் அலோசியஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அரோன் அலோசியஸ் காலை 9மணிக்கு பின்னரே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அப்படியாயின் சுமார் 40 நிமிடங்களாக, அலோசியஸ் குழுவினர் அங்கிருந்த ஏனைய பாதுகாப்புத் தரப்பினருக்கு தண்ணீர் காட்டியுள்ளனர். இதனால் இத்தாக்குதலின் பின்னணியில் வாஷிங்டன் கடற்படைத் தள அதிகாரிகள் சிலரும் இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

கடந்த 5 நாட்களுக்கு மேலாக, நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. அந்நகரின் பாடசாலைகள், அரச அலுவலகங்கள் என தனித்தனியே பாதுகாப்பு வழங்கப்பட்டு சோதனைகளும் இடம்பெற்று வருகின்ற போதிலும் தாக்குதலின் பின்னணி குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளிவராததுடன் தப்பிச் சென்றுள்ள ஏனைய இரு துப்பாக்கிதாரிகளும் கைது செய்யப்படவில்லை.

இதன்மூலம் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினரின் பலவீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அமெரிக்காவிற்குள் உள்நாட்டு மாபியா குழுக்களால் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளதா? என இன்னும் சில காலம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அதேசமயம், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் நடைபெறும் மனிதஉரிமை மீறல், குற்றவியல் நடவடிக்கைகளை பரிசீலிக்குமாறு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையிடம் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவது வழமையானதொன்றாகும்.

கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளவர்களை உடனடியாக நீதியின் முன் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தன் நாட்டில் நடைபெறும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தாக்குதல் சம்பவங்கள் மீதான விசாரணைகளையும் இனிமேல் ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

இவ்வருட ஆரம்பத்தில், வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி, துப்பாக்கிகளின் உரிமங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

மிதமிஞ்சிய சுதந்திரம் சமூகத்தை என்றும் அமைதியாக வைத்திருக்காது என்பது போல, அமெரிக்காவில் தினமும் துப்பாக்களால் பள்ளிச் சிறுவர்கள் துளைக்கப்படுவது அந்நாட்டையே பாரிய அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது. இதனைத் தொடர்ந்ததே துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்தக் கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும், துப்பாக்கி உரிமத்தை கட்டுப்படுத்த ஒபாமா தலைமையிலான அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளுமாகும்.

உலகின் பல நாடுகளில், பயங்கரவாதம் தலைதூக்குவதற்கும், வன்முறைகள் வெடிப்பதற்கும் முதல் காரணியாக செயற்படுவது அமெரிக்கா தான் என்பது அரசியல் விமர்சகர்களின் குற்றச்சாட்டாகவுள்ளது.

ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, ஆபிரிக்க நாடுகள் என்று எங்கு பார்த்தாலும் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் அனைத்து மோசமான வன்முறைகளுக்கும், புரட்சிகளுக்கும் ஆரம்பம் அமெரிக்கா என்பதை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வர்.

அதேசமயம், உலக வர்த்தகத்தில் அதிக பணம் கொழிக்கும் வியாபாரமான ஆயுத விற்பனை, இன்று ஒரு மரக்கறி வியாபாரம்போல மாற்றப்பட்டுள்ளது. உலக ஆயுத வர்த்தகத்தின் பெறுமதி 70 பில்லியன் டொலர் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆயுத விற்பனையில் முன்னிலையில் இருப்பவை மனிதஉரிமைகள், சமாதானம் பேசும் நாடுகள் தான். அதிலும் குறிப்பாக, உலக ஆயுத வர்த்தகத்தில் அரைவாசிக்கும் அதிகமான அளவு பங்கு வகிப்பது அமெரிக்கா தான். அதனைத் தொடர்ந்து ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகியவை தமக்குரிய ஆயுத வியாபார இடங்களை தக்கவைத்துள்ளன.

ஜேர்மனியைத் தவிர்ந்த ஏனைய 5 நாடுகளும் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ உரிமை கொண்டவை என்பது இன்னொரு சுவாரசியமான விடயமாகும்.

இருந்தபோதிலும், உலக ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவற்கு சர்வதேச ரீதியில் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்த ஐ.நா.பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த உடன் படிக்கையை கொண்டு வர மனிதஉரிமை அமைப்புகள் நீண்டகாலம் போராடி வந்த நிலையில் கருத்தில் கொள்ளாத மேற்குலக நாடுகள் இன்று இந்த உடன்படிக்கையை ஏற்றுள்ளன.

மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளுக்கு விற்ற தமது ஆயுதங்களின் முனை தற்போது தம் பக்கம் திருப்ப முயலும் போதே மேற்கு நாடுகள் விழித்துக் கொண்டன.

ஆயினும், ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேற்றப்படும் எத் தீர்மானத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் எந்த நாட்டுக்கும் இல்லாத நிலையில், இந்த உடன்படிக்கை எந்தளவிற்கு வெற்றியளிக்கும் என்பதும் சந்தேகமே.

மத்திய நாடுகளின் உள் விவகாரங்களில் பல்வேறு வழிகளிலும் தலையிட்டு வரும் அமெரிக்காவிற்கு அந்நாடுகளின் கிளர்ச்சிக் குழுக்கள் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இந்நிலைமையில், தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்ற குற்றஞ்சாட்டில் அமெரிக்காவும் அவ்வப்போது, அக்கிளர்ச்சியாளர்களின் தலையில் குட்டி அடக்கி வருகின்றது.

இருந்தபோதிலும், அக்கிளர்ச்சியாளர்களின் கை நிலை மாறிப்போய், அமெரிக்காவிற்கெதிராகவும், அதன் பிராந்திய தளங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு நல்ல உதாரணம் பொஸ்டன் குண்டுத்தாக்குதலாகும்.

இனிமேலும், அமெரிக்கா தான் ஒரு வல்லரசு நாடு என்பதைக் காண்பித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளைக் குறைத்துக் கொள்ளாவிடின் இதுபோன்ற தாக்குதல்கள் அங்கு வழமையாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக