வியாழன், 28 நவம்பர், 2013

காணாமல் போகும் சில்லறைகள்


சா. சுமித்திரை 

போதியளவு சில்லறை நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்கான பாவனை சுற்றோட்டத்தில் சமமின்மை காணப்படுவதாக அண்மையில் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

நாட்டில் பயனின்றி வைத்திருக்கப்படும் நாணயக் குற்றிகளின் தொகை பல மில்லியன்களாகும். அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணிகளால் நாணயக் குற்றிகளுக்கு பெரிதும் மதிப்பு வழங்கப்படுவதில்லை. இந்நிலைமையில்  கோயில் உண்டியல்களில் போடல் ,  வீட்டில் உண்டியல்களில் சேர்த்தல் இ  குபேர சிலைகள் போன்றவற்றின் மீது போடல் ,  நகைகள் செய்யவென நாணயக் குற்றிகளை உருவாக்குதல் இ  நிறை அளக்கப் பயன்படுத்தல் ,  பொருட் கொள்வனவு , பஸ் போக்குவரத்துகளின் போது மிகுதி சில்லறைகள் வழங்காமை ,  மூட நம்பிக்கைகளுக்கு பயன்படுத்தல் போன்ற பல காரணங்களால் நாட்டில் பயனின்றி வைத்திருக்கும் நாணயக் குற்றிகளின் தொகை பாரியளவில் அதிகரித்துள்ளது.

20.6 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையில் 15 கோடியே 74 இலட்சத்து 45 ஆயிரத்து 382  மில்லியன் பத்து ரூபா நாணயக் குற்றிகள் பயன்பாட்டுக்காக புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அத்துடன் 71 கோடியே 13 இலட்சத்து 34 ஆயிரத்து 933 மில்லியன் ஒரு ரூபாய் நாணயக் குற்றிகளும் 50 கோடியே 33 இலட்சத்து 68 ஆயிரத்து 315 மில்லியன் இரண்டு ரூபா நாணயக் குற்றிகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன

மேலும் 60 கோடியே 43 இலட்சத்து 67 ஆயிரத்து 758 மில்லியன் ஐந்து ரூபா நாணயக் குற்றிகளும் 27 கோடியே 14 இலட்சத்து 22 ஆயிரத்து 434 மில்லியன் ஐம்பது சதக் குற்றிகளும் மக்களின் பாவனைக்காக புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில்  சுட்டிக்காட்டியிருந்தது. 

இருப்பினும் இந்நாணயக் குற்றிகளை மக்கள் பயன்படுத்தாது அவற்றினை தேவையற்ற வகையில்  சேமித்து வைப்பதால் அல்லது பாவனைக்கு உட்படுத்தாததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

கோயில்களிலோ அல்லது தேவாலயங்களிலோ அல்லது ஏனைய பல மதம் சார்ந்த தலங்களிலுள்ள உண்டியல்களில் போடப்படும் சில்லறை நாணயங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் மாத ,  வருடக் கணக்கில் அவ்வாறே காணப்படுகின்றன.

அதேபோல் வீடுகளில் சிறுவயது முதலே சேமிக்க பழக்க வேண்டுமென்ற நோக்கில் உண்டியலில் சேமிக்கும் பழக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதேசமயம் வங்கிக் கணக்கினை ஆரம்பிக்கும் சிறார்களுக்கு அந்தந்த வங்கிகளினூடாகவே உண்டியல்களும் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன.
 உண்டியல்களில் பணம் சேர்ந்த பின்னர் அத்தொகையினை வங்கிக் கணக்கில் வைப்பிலிடவே உண்டியல்கள் வழங்கும் திட்டத்தினை வங்கி முகாமைத்துவங்கள் நடைமுறைப்படுத்துகின்றன.


ஆனால் ,   சிறுவர்களோ அல்லது பெரியவர்களோ அவ்வாறு செய்வதில்லை. மாறாக ஒரு அலுமாரியில் அத்தனை உண்டியல்களிலும் பணத்தைச் சேர்த்து அடுக்கி வைத்து விடுவார்கள்.

அதேபோல் குபேர சிலைகள் மற்றும் சுவாமி சிலைகளுக்கு முன்னால் சில்லறை நாணயக் குற்றிகளை  சேர்த்து வைக்கும் பழக்கமும் காணப்படுகின்றது.  குபேர சிலைக்கு நாணயக் குற்றிகள் சேர சேர வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை எம்மில் பலரிடம் காணப்படுகின்றது.
திருப்பதி ஏழுமலையானுக்கே குபேரன் கடன் கொடுத்ததாக புராண கதைகளுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.


மேலும் குபேர இயந்திரம் ,  குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்குமென மக்கள் நம்புகின்றனர். அதேபோல் சிங்களவர்கள் குபேரன் இலங்கையை ஆண்ட ஒரு அரசன் எனும் நம்பிக்கையை கொண்டுள்ளனர். இராவணனின் ஆட்சிக்கு முன்பு இலங்கையை ஆண்டதாகவும் சிங்களவர்களிடம் நம்பிக்கை உள்ளன. இதனாலேயே இலங்கையில் குபேர சிலைகளில் சில்லறை குற்றிகள் போடும் வழக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

 இதேவேளை , புதிதாக வெளியிடப்படும் நாணயக் குற்றிகளையும் நாணயத் தாள்களையும் சேகரித்து வைத்திருக்கும் பழக்கமும் சிலரிடம் காணப்படுகின்றது. இதுவும் பயனின்றி வைத்திருக்கும் நாணயக் குற்றிகளின் தொகை அதிகரிப்புக்கு காரணமாகும். 

இதேபோல் நாணயக் குற்றிகளை உருவாக்கி நகைகள் ,  பிளேட்டுகள் மற்றும் பிற பொருட்களும்  தயாரிக்கப்படுகின்றன.  இந்தியாவில் கடந்த வருடம் நாணயக் குற்றிகளுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டது. பிளேட்டுகள் தயாரிப்புக்காக  சென்னையில் சிறு வியாபாரிகளிடமும் சந்தைகளிலும் நாணயக் குற்றிகள் மொத்தமாக வாங்கிச் செல்லப்படுகின்றமையே இத்தட்டுப்பாட்டுக்கு பிரதான காரணமென்பது இதன்போது அம்பலமாகியிருந்தது.

இந்தியாவில் இந்த நாணயக் குற்றிகளை சிலர் அதிக விலை கொடுத்து சில்லறை வியாபாரிகளிடமும் நடைபாதை வியாபாரிகளிடமும் வாங்கிச் செல்கின்றனர். இதன் விளைவாக மறைமுகமாக மக்களிடமிருந்து நாணயக் குற்றிகளின் பயன்பாடு குறைந்து தட்டுப்பாடு ஏற்படுகிறது.

 நூறு ரூபா நாணயக் குற்றிகள் 200 ரூபாவிற்கு வாங்கப்படுகிறது. இந்த நாணயங்களிலுள்ள ஒருவகை உலோகம் பிளேட்டு தயாரிக்க பயன்படுகின்றது என்பதால் அவை  வாங்கப்படுகின்றன. பிளேட் தயாரிப்புக்கான  மூலப் பொருட்களை வாங்கும் விலையை விட நாணயக் குற்றிகளைப் பயன்படுத்தினால் குறைவான மூலதனத்தில் அதிக இலாபம் ஈட்டலாம் என்பதாலேயே இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இலங்கையிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வராத வகையில் இடம்பெற்று வருகின்றன. புதிதாக வெளியிடப்பட்ட ஒரு ரூபா நாணயக் குற்றி மற்றும் 5 ரூபா குற்றிகளை உருக்கி தங்க நகைகள் போலவே சங்கிலி ,  வளையல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுவொரு சட்ட விரோத செயற்பாடென தெரிந்தும் பலர் இது தொடர்பில் எதனையும் அலட்டிக் கொள்வதில்லை. 

 குறிப்பாக கொழும்பு  யாழ்ப்பாணம் செல்லும் பஸ்களில் ஏறும் சில நடைபாதை வியாபாரிகள்  நாணயக் குற்றிகளில் தயாரிக்கப்பட்டதாகக் கூறி அவற்றுக்கு குறித்த கால உத்தரவாதமும் வழங்கி 100 ரூபா முதல் 1000 ரூபா வரையிலான பெறுமதியில் விற்பனை செய்கின்றனர்.

 அப்பஸ்களில் எத்தனையோ அதிகாரமிக்க  உத்தியோகத்தர்கள் பயணித்துக் கொண்டிருந்தாலும் அந்நேரத்தில் இவ்விடயம் தொடர்பில் எந்தக் கவனமும் செலுத்தாமை வேதனை தரக் கூடிய விடயமாகும். இதேபோல் சில்லறைக் கடைகளிலோ அல்லது பல்பொருள் அங்காடிகளிலோ பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுதிச் சில்லறை பணம் வழங்கப்படுவதில்லை.
உதாரணமாக  தேநீர் கடையொன்றில் கோப்பி ,  பால் ,  தேநீரின் விலை 36 ரூபா எனில் அதற்கு 40 ரூபா கொடுப்பதால் நான்கு ரூபா சில்லறை வழங்கப்படுவதில்லை. மாறாக சொக்லேட்டு ,  ரொபிகளை கொடுத்து சமாளிக்கின்றனர்.

இந்த சொக்லேட்டுகளை வாங்க மறுப்போருக்கு மட்டுமே சில்லறை நாணயங்களை கொடுக்கின்றனர். சொக்லேட்டுகளை கொடுப்பதால் அவற்றின்  விற்பனை அதிகரிப்பதோடு ,  அதில்வரும் இலாபமும் சேர்ந்து கிடைக்கின்றது. அதேசமயம் சில்லறைக்குப் பதிலாக கிடைக்கும் சொக்லேட்டுகளில் சில தரமற்றவையாகவும் உள்ளதுடன் , வாடிக்கையாளர்களையும் நீரிழிவு நோயாளிகளாகவும் மாற்றவும் செய்கின்றது.

அதேபோல் பஸ்களில்  சில்லறைகள் முற்றிலுமாக கிடைப்பதில்லை. பஸ் ஆரம்ப கட்டணம் 9 ரூபாவாகும். இம்மாத ஆரம்பத்திலும் பல காரணங்களைக் கூறிக் கொண்டு பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால் இந்த ஆரம்பக் கட்டணத்தின் பெறுமதி மட்டும் உயர்த்தப்படவில்லை.

 ஏனெனில் 9 ரூபாவென டிக்கெட் கொடுக்கப்பட்டாலும் மிகுதி 1 ரூபா சில்லறை வழங்கப்படமாட்டாது. ஆனால் பஸ் நடத்துனர்கள் 1 ரூபா குற்றிகளை கைகளில் வைத்திருப்பர்.இந்நிலையில் மிகுதிப் பணத்தை கேட்டால் தகாத முறையில் நடந்து கொள்வர்.

இதேவேளை சில்லறை நாணயக் குற்றிகள்  மூட நம்பிக்கைகளுக்கும் சமய விடயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வரப்படுகின்றன. இந்த இடத்தில் காசு எறிந்தால் நினைத்த காரியம் நடைபெறுமென யாரும் கூறினால் கைப்பைகளிலுள்ள அனைத்து சில்லறைக் காசுகளும் அங்கு எறியப்படும்.இவ்வாறு கடல்களிலும் நீர் நிலைகளிலும் சில்லறைக் காசுகள் வீசப்படுகின்றமை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனை விட புதையல் கிடைக்க வேண்டுமாயின் ஒரு தொகை சில்லறை நாணயங்களை புதைக்க வேண்டும் என்றதொரு  மூட நம்பிக்கையும் பரவலாகக் காணப்படுகின்றது.

இதனை விட இந்து ஆலயங்களில் வளர்க்கப்படும் யாகங்களின் போது  சில்லறை நாணயக் குற்றிகள் தீயுடன் போடப்படுகின்றன. இவ்வாறு பல காரணங்களால் சில்லறை நாணயக் குற்றிகளின்  மிகப்பெரிய தொகை பயனின்றி காணப்படுகின்றன.

சில்லறை நாணயக் குற்றிகளின் தட்டுப்பாடு பல மடங்காக அதிகரித்து வருகின்றது. இலங்கையில் தற்போது தாள் காசுகளில் பவனை அதிகரித்துக் காணப்படும்  அதேவேளை ,   சில்லறை நாணயங்களின் பாவனை குறைவடைந்துள்ளது. அதேசமயம் 500 ரூபா தாள் அச்சிடப்பட்டு வெளியானதையடுத்து 1 ரூபா ,  2 ரூபா ,  5 ரூபா குற்றிகள்  குறைந்ததாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகின்றது. இந்நிலைமையில் கோயில் உண்டியல்களிலும் பாவனைக்குப் பயன்படுத்தப்படாமல் வீட்டின் ஓரங்களிலும் சில்லறை நாணயங்கள் காணப்படுகின்றன.

 இதேவேளை ,  அண்மைக்காலமாக யாழ்ப்பாண பஸ் நிலையம் மற்றும் வர்த்தக நிலையங்களில் சில்லறை நாணயக் குற்றிகள் இல்லாத நிலை காணப்படுவதனால் பிரயாணிகள் மற்றும் வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை  எதிர்நோக்கி வருகின்றனர்.

சில்லறை நாணயக் குற்றிகள்  இல்லாவிடின் கோயில்களுக்கு அருகிலிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு சிலர் 10 ரூபா , 20 ரூபா தாள்களை கொடுத்துவிட்டு செல்கின்றனர். இந்நிலைமையில் நாம் ஒரு ரூபா குற்றியையோ அல்லது 2 ரூபா குற்றிகளையோ கொடுத்தால் ஆத்திரத்தில் அவர்கள் எம்மிடமே திருப்பித்தரும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.


மேலும் சிலர் பிச்சைக்காரர்களிடம் சென்று காசு மாற்றிச் செல்கின்றனர். இந்நிலைமையில் பிச்சைக்காரர்களிடமே  சில்லறை நாணயக் குற்றிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.நாட்டில் பயனின்றி வைத்திருக்கப்படும் நாணயக் குற்றிகளின் தொகை மிகப் பெரியது. அவற்றை சுற்றோட்டத்திற்கு விடுவதன் மூலம் அவற்றைப் புதிதாக வார்ப்பதற்கு ஏற்படும் பெரும் தொகைப் பணத்தை சேமிக்க கூடியதாகவிருக்கும். 

புதிய நாணயக் குற்றிகளை வார்க்க ஏற்படும் குறிப்பிடத்தக்களவு செலவு நீண்டகாலத்தில் மறைமுகமாக மக்களை பாதிக்குமென இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படும் பணப் பெறுமதியில் பயனின்றி வைத்திருக்கும் நாணயக் குற்றிகளால் பாரிய துண்டு விழுந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த மத்திய வங்கி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதேவேளை ,  இதன் முதற்கட்டமாக சில்லறை  நாணயக் குற்றிகள் அதிகம் தேங்கி நிற்கும் முக்கிய இடமான கோயில்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மத்திய வங்கி ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் சில்லறை நாணயக் குற்றிகளின் தட்டுப்பாட்டுக்கு ஒவ்வொரு துறைகளிலுமுள்ள ஒவ்வொருவருமே காரணமாக உள்ளோம். இவ்விடயம் தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் உடனடி கவனமெடுக்க வேண்டியது இன்றைய தேவையாகவுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக