ஞாயிறு, 17 நவம்பர், 2013

அமெரிக்காவின் இராஜதந்திரம் மத்திய கிழக்கில் எடுபடுமா?

ஜோன் கெரியின் விஜயம்
எழுப்பும் கேள்வி


 சா.சுமித்திரை

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், உலகின்  மிகப் பெரிய வல்லரசு நாடாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட அமெரிக்கா, அந்நிலைமையை தக்க வைத்துக்கொள்வதற்காக   பல வழிகளிலும் முயற்சி எடுத்து வருகின்றது. 

அதனொரு பகுதியாகவே, அரபு கூட்டாளிகளுடனான  இழுபறியான  உறவினை புதுப்பிக்கும்  வகையிலே, பிராந்திய பதற்ற நிலைமைக்கு மத்தியிலே, மத்திய  கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கான  விஜயமொன்றினை அமெரிக்க இராஜங்க செயலர் முன்னெடுத்துள்ளார்.

கடந்த மாத ஆரம்பத்தில்  முடங்கிப் போயிருந்த அரச சேவைகள், உலக கடன் சுமை அதிகரிப்பு, ஒபாமா நலன்புரித் திட்டத்தின் தோல்வி, எட்வெட் சிநோடன் விவகாரம், நட்பு நாடுகளைக் கூட வேவு பார்த்தமை அம்பலம், கிளர்ச்சியாளர்களால்  மேற்கொள்ளப்படும் திடீர்த் தாக்குதல்கள் என நிலை  குழம்பி பேõயுள்ள அமெரிக்கா, அரபுக் கூட்டாளிகளுடனான உறவினை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

நவம்பர் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சவூதி அரேபியா, இஸ்ரேல், யோர்தான், மொரோக்கோ,போலந்து, எகிப்துது, மற்றும் இஸ்ரேல் உட்பட பல நாடுகளுக்கும் சென்று சமரச முயற்சிகளில் ஈடுபடும் நடவடிக்கைகளில் அமெரிக்க இராஜங்க செயலர்  ஜோன் கெரி ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, எதுவித முன்னறிவிப்புமின்றி எகிப்துக்கு திடீர் விஜயமொன்றை கெரி மேற்கொண்டிருந்தார். குறிப்பாக, கடந்த யூலையில் எகிப்திய ஜனாதிபதி முஹமட் முர்சி பதவியிலிருந்து அகற்றப்பட்டதையடுத்து, அந்நாட்டிற்கு விஜயம் செய்த அதி சிரேஷ்ட அமெரிக்க அதிகாரியாக ஜோன் கெரி  விளங்குகின்றார்.

முகமது முர்சி உட்பட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முக்கிய தலைவர்கள்  திங்கட்கிழமை  நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருந்த நிலையிலேயே ஜோன் கெரி அங்கு சென்றிருந்தார்.

ஏற்கனவே, இவ்வருட ஆரம்பத்தில், எகிப்திற்கென வருடாந்தம் வழங்கும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை அமெரிக்கா, எகிப்தின் ஸ்தீரத்தன்மையற்ற அரசியல் நிலைமையைக் காரணங் காட்டி இடைநிறுத்தியிருந்தது. அமெரிக்காவின் இந்நடவடிக்கையினை எகிப்தின்  இடைக்கால அரசாங்கம் கடுமையாக  விமர்சித்திருந்தது.

இந்த  விமர்சனங்கள் தொடர்பில், அமெரிக்கா பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளாத அதேசமயம், எகிப்தில் கடந்த 6 மாத காலமாக இடம்பெற்று வரும்  அரசியல் நெருக்கடியிலும் சரியான  தீர்மானத்தினை கொண்டு வர எதனையும் செய்யவில்லை.

இந்நிலையில், நாம் எல்லோரும் ஒரு வீட்டுப் பிள்ளைகள் என்பது போல, காட்டிக் கொள்ள ஒபாமா தலைமையிலான அரசாங்கம், அமெரிக்க இராஜங்க செயலர் ஜோன் கெரி  மூலம் தூது அனுப்பியுள்ளது. இந்த தருணத்தினை அமெரிக்காவாகட்டும், எகிப்தாகட்டும் எந்த வகையில்  பயன்படுத்திக் கொள்ளப்போகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

எகிப்துடனான பழைய உறவினை புதுப்பிக்கும்  வகையிலேயே ஜோன் கெரி தனது  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக  கூறப்பட்ட போதிலும், அது எவ்வகையிலான நடவடிக்கை  எனத் தெளிவாகத் தெரியவில்லை.

மத்திய கிழக்கு  நாடுகளுக்கான  உத்தியோகபூர்வ  விஜயத்தில் முதல் நிறுத்தமாக, சவூதி அரேபியாவிற்கு சென்ற ஜோன் கெரி, உங்களுக்கும், எங்களுக்கும் இடையிலான உறவு  இன்று அல்லது நேற்று உருவானதா? என்றும் கேள்வி எழுப்பினாராம்.

ஏற்கனவே எகிப்து அரசாங்கத்துடன் உறவைப் பேணுவதில் அமெரிக்கா காட்டி வந்த அசிரத்தை, சிரியாவில் அமைதியை ஏற்படுத்த போதியளவு அக்கறை கொள்ளாமை போன்ற அமெரிக்காவின் செயற்பாடுகளில் சவூதி அரேபியா திருப்திகொண்டிருக்கவில்லை.

இதனால்தான் சவுதி அரேபியாவிற்கும், அமெரிக்காவிற்குமிடையிலான  இராஜதந்திர உறவுகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, ஐ.நாவில்  நிரந்தரமற்ற  உறுப்பினர் பதவி சவுதி அரேபியாவிற்கு வழங்கப்பட்ட போதிலும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

என்னதான், பதவி,பட்டம், பண உதவி வழங்கினாலும் தனது கொள்கையிலும் மாற்றமில்லை என்பது போல அடம்பிடிக்கும் சவூதி அரேபியாவுடனான உறவு நிலைமைகளைச்  சரி செய்யும்  பேச்சு வார்த்தைகளிலேயே கெரி ஈடுபட்டிருந்தார்.

சவூதி அரேபியாவுடனான  உறவு, அமெரிக்காவிற்கு அவசியமானதொன்று எனவும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் கெரி, சுட்டிக்காட்டியிருந்தார்.அதேபோல, 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில், இஸ்ரேல், பலஸ்தீனிய தலைவர்களுடனான சந்திப்பினையும் அமெரிக்க இராஜங்க செயலர் மேற்கொண்டிருந்தார்.

கடின நிலைமைகளை பற்றிய ஏதாவது மாயத் தோற்றங்கள் இங்கிருக்கலாம். ஆனால், நான் ஆரோக்கியமான  சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்புகின்றேன் எனவும் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவுடன் இஸ்ரேல் நெருங்கிய நட்பு நாடாக  விளங்கியது. இராணுவ தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி வருகிறது. 2010 இல், இஸ்ரேல் அமெரிக்காவிடையே பாரிய ஆயுதக் கொள்வனவு உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.

மிக உக்கிரமாகப் போரிடும் ஆற்றலைக் கொண்ட  எப்  35 ரக ஜெட் விமானங்கள், மத்திய கிழக்கில் வேறு எந்த நாடுகளிடமுமில்லை. இஸ்ரேலின் பாதுகாப்புக்கென அமெரிக்கா பெருமளவு ஆயுதங்களை  வழங்கியுள்ளது.

சிரியா, ஈரான், லெபனான் போன்ற நாடுகளின் ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் கட்டுப்படுத்தவும் இந்நாடுகளிடமிருந்து இஸ்ரேல் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்களை முறியடிக்கவுமே இந்த  நவீன  ரக ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.

இவ்வளவு ஆதரவினை இஸ்ரேலுக்கு வழங்கி வரும், அமெரிக்கா, பலஸ்தீனத்துடனான  பேச்சுவார்த்தை களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது என்பது , பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதைப் போலாகும்.

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள், பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருக்க வேண்டிய நிலையில், சிறிதளவான முன்னேற்றமே தென்படுவதாக இஸ்ரேல்  பலஸ்தீனத்துக்கிடையிலான  நிலைமையினை ஜோன் கெரி விபரித்திருந்தார்.

அதேசமயம், இடைக்கால சமாதான உடன்படிக்கையொன்றினை கெரி முன்வைத்திருந்தாக ஊடகங்கள் எதிர்வு கூறியிருந்தமையும் அவர் நிராகரித்துள்ளார்.தடைப்பட்டுப் போயிருந்த மத்திய  கிழக்குப் பேச்சு வார்த்தைகளை நேரடியாக மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகளை  முன்னெடுத்துள்ள அமெரிக்காவின்  இச்செயற்பாடுகள் உண்மையில் சர்வதேசத்திற்கு ஆச்சரியத்தையும்  சந்தேகத்தையுமே  ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, மத்திய கிழக்கு பல்வேறு பாரிய மோதல்களைக் கண்டுள்ளது. இன்றும் பல நாடுகளில் மோதல்கள் இடம்பெற்று வருவதுடன், ஸ்தீரத்தன்மையற்ற அரசியல் நிலைமையும் பல நாடுளில் காணப்படுகின்றது.

குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளை நீண்ட காலமாக ஆக்கிரமித்திருந்த மேற்குலக காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து, இந்நாடுகளை  விடுவிக்க நடந்த விடுதலைப் போர் முக்கியமாகும்.

மேற்குலக நாடுகள், இன்றைய காலப்பகுதியிலும் தமது படைகளுக்கும், பொருளாதாரத்திற்கும் முதலீடு செய்யும் நிலமாக மத்திய கிழக்கை நடத்தி வருகின்றன.மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றுடன் ஒன்று சகோதர யுத்தம் செய்து வரும் வேளையிலே, மேற்குலக நாடுகளின் தாக்குதல்களுக்கும், அதிகாரங்களுக்கும் உட்பட்டே  இவை காணப்படுகின்றன.

பழைய சக்திகளான  பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா போன்றவற்றின் ஆதிக்க மோகம் கலைந்த பின், மத்திய கிழக்கு நாடுகள் மீது ஆளுமையும், அதிகாரமும் செய்ய அமெரிக்கா நீண்ட காலமாகத் திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கியது.

மத்திய கிழக்கு ஆட்சியாளர்கள் சிலரையும், பொருளாதார உதவிகள் சிலவற்றையும்  காட்டி, அமெரிக்கா  இவற்றை வளைத்துப் போட்டது. பொருளாதார ஒத்துழைப்பு, இராணுவ  உதவி, அபிவிருத்தி மற்றும் கலாசார உதவிகள் என எல்லா விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கிய அமெரிக்கா அரபு நாடுகளில் தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டு, தன் திட்டங்களைச் செயற்படுத்திக் கொண்டது.

அமெரிக்காவின் இச்செயற்பாடுகள் மத்திய கிழக்கில் பெரும் மோதல்களை தூண்டுவதாகவே அமைந்துள்ளன. இந்நிலைமையில், அரபுக் கூட்டாளிகளுடன் இழுபறியாகியுள்ள  உறவினை  புதுப்பிக்கும்  வகையிலே அமெரிக்க இராஜங்கச்செயலர்  சமரச பேச்சவார்த்தைகளில் நேரடியாகச் சென்று ஈடுபட்டு வருகின்றனர். இந்த உத்தியோக பூர்வ பயணத்தின்போது, அமெரிக்காவின் பாரிய வேவு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிலும் ஜோன் கெரி தள்ளப்பட்டிருந்தார்.

எங்களுக்கு உதவினால் உங்களுக்கு உதவத் தயாராகவுள்ளோம் என்பதே மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா தற்பொழுது சொல்லும் செய்தியாகும்.
ஜோன் கெரியின், மத்திய கிழக்குப் பயணம் மூலம் நன்மையடையப் போவது அமெரிக்காவா? அல்லது மத்திய கிழக்கு நாடுகளா? என்பதை பொறுத்திருந்தே  பார்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக