சனி, 30 நவம்பர், 2013

மற்றொரு போருக்கு தூபமிடுகிறதா அமெரிக்கா?

சா.சுமித்திரை

ஜப்பானில் இரு தீவுகளை உள்ளடக்கிய வான் பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்கியுள்ளதாக சீனா கடந்தவாரம் அறிவித்திருந்தது. 

ஏற்கனவே, சர்ச்சைக்குரிய தீவு விவகாரத்தால், சீனாவுக்கும் ஜப்பானுக்கு இடையே அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஜப்பானின் இரு தீவுகளை உள்ளடக்கிய சீனாவின் வான் பாதுகாப்பு வலயம் சர்வதேச கவனிப்புக்குள்ளாக்கியுள்ளது.

கிழக்கு சீனக் கடலின் பெரும் பகுதியை உள்ளடக்குவதுடன், சீனாவினால் டயாகு என அழைக்கப்படுவதும், ஜப்பானினால் சென்யாகு என அறியப்படுவதுமான சர்ச்சைக்குரிய தீவுகளும் இந்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தீவுகள் பெய்ஜிங்கிங்கும், டோக்கியோவிற்கும் இடையிலான மையப்பகுதியில் அமைந்துள்ளன.

கிழக்கு சீனக்கடல் பிராந்தியத்தில், சீனா குறிப்பிடும் வான் பாதுகாப்பு  வலயத்தில் பறந்து செல்லும் பிறவிமானங்கள் சீனாவின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும், இந்தப் பகுதிக்காக ரோந்து விமானங்கள் அனுப்பப்படும் என்றும் சீன அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆயினும், வான் பாதுகாப்பு வலயத்தினால் ஜப்பானுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகளிலிருந்து ஜப்பானை பாதுகாக்க எல்லாவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படுமென வாஷிங்டன் தெரிவித்திருந்தது.

சீனாவின் இந்தச் செயலை ஜப்பான் மிகவும் ஆபத்தானது என்று விபரித்துள்ளது. ஏற்கனவே, இவ்விரு நாடுகளுக்குமிடையே தீவுக்களுக்கான உரிமைப் பிரச்சினை, கடற்பரப்பு ஆளுகை, எல்லை போன்றவை பிரச்சினைக்குரியனவாக இருக்கும்போது, சீனாவின் இந்த நடவடிக்கை ஜப்பானுக்கு பெரும் ஆத்திரத்தை தூண்டுவதாகவே உள்ளது.

இது குறித்து, தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெரி சீனாவின் இந்த ஒரு தலைபட்சமான முடிவு இந்தப் பகுதியில் அழுத்தங்களை அதிகரித்து, ஜப்பானுக்கு பாதகமாக முடியுமெனவும் எச்சரித்திருந்தார்.

சீனாவிடம் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாத அல்லது சீனாவின் உத்தரவுகளை ஏற்காத பிறநாட்டு விமானங்கள் மீது சீனா நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் கேட்டிருந்தார்.

இதேவேளை, அமெரிக்கா தங்களின் நட்பு நாடான ஜப்பானைக் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.

அக்கூற்றினை மெய்ப்பித்துக் காட்டுவது போல, சீனாவின் புதிய வான் பாதுகாப்பு செயற்பாடுகளை மீறி, கிழக்கு சீனக்கடலிலுள்ள சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு மேலாக பி52 ரக அமெரிக்க போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை பறந்துள்ளன.

தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளுடன் இவ்விவகாரம் தொடர்பில் அமெரிக்கா ஆலோசனைகளை நடத்திவரும் நிலையிலேயே பி52 ரக அமெரிக்க போர் விமானங்கள் அத்தீவுகளினூடாக பறந்துள்ளன.

தடைசெய்யப்பட்ட வான் எல்லை வழியாக, எவ்வித முன்னறிவிப்புமின்றி பி52 ரக இரண்டு குண்டு வீச்சு போர் விமானங்கள் பறந்த விவகாரம் தொடர்பில் சீன அரசாங்கம் எந்த பதில் அறிக்கையையோ கருத்துக்கனையோ வெளியிடவில்லை.

குவாமிலிருந்து ஒரு போர் விமானம் புறப்படும் அதேவேளை இன்னொரு போர் விமானம் குவாமை வந்தடையும் வகையில் ஒத்திகை பார்க்க நீண்ட நாட்களுக்கு முன்பே திட்டமிட்டிருந்தோம். அதன் படியே செவ்வாய்க்கிழமை அந்த ஒத்திகை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் இதற்கான காரணத்தினை வெளியிட்டிருந்தது.

மேலும், சென்யாகு பகுதியில் இதுபோன்ற இராணுவ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுமெனவும் பென்டகன் குறிப்பிட்டிருந்தது.

சீனா புதிய வான் பாதுகாப்பு வலயத்தினை பிரகடனப்படுத்தி மூன்று நாட்களுக்குள்ளேயே, அமெரிக்காவின் பி52 ரக இரண்டு குண்டு வீச்சு போர் விமானங்கள் சீன செய்மதிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, வெற்றிகரமாகப் பறந்து பாதுகாப்பாகத் திரும்பியுள்ளன.

அதேவேளை, இந்த வான் பாதுகாப்பு வலயத்திற்கு மேலாக, தென்கொரியா, ஜப்பானின் போர் விமானங்களும் பறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

சீனாவிற்கு எந்தத் தகவல்களும் தெரிவிக்காத நிலையிலேயே இவை பறந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கிழக்கு சீனாவின் வான் பாதுகாப்பு எல்லையினூடாக விமானமொன்று வழமையான கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஜப்பானிய அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தென்கொரியாவும் தங்கள் விமானத்தை அவ்வலயத்தினூடாக வியாழக்கிழமை பறக்கவிட்டுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு வான் வழியிலான அச்சுறுத்தல் உயர்மட்டத்திலே அதிகரித்துள்ளதாகக்கூறி அதனை கட்டுப்படுத்தும் வகையிலே அப்பகுதிக்கு போர்க் கப்பல்களை சீனா அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலைமையில், சீனாவிற்கும் ஜப்பானுக்குமிடையே பிரச்சினைக்கு உட்பட்ட கிழக்கு சீனக்கடல் பகுதியில் போர் மூண்டால், அமெரிக்கஜப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கை பிரயோரிக்கப்பட்டுமென வாஷிங்டன் எச்சரித்துள்ளது.

ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தனது செயற்பாடுகளில் அதிகளவில் ஆசிய நாடுகளுக்கே முன்னுரிமை அளித்துவரும் நிலையில், சீனக்கடல் பிராந்தியத்தில் இராணுவ அழுத்தங்களின் அதிகரிப்பு பதற்றமான நிலைமையொன்றினை தோற்றுவித்துள்ளது.

சீனாவினால் புதிதாக பிரகடனப்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு எல்லை விதிமுறை மூலமாக, கிழக்கு சீனா, தென் சீனக் கடல்களில் சீனாவிற்கும் அதன் அயல் நாடுகளான ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்றவற்றிற்கும் இடையே நீண்டகாலமாக புகைந்து கொண்டிருக்கும் நில உரிமை மோதல்களை வாஷிங்டன் தூண்டிவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், தனது வான் பாதுகாப்பு பிராந்தியத்தில் சீன விமானங்கள் பறப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் தடைவிதித்திருந்தது. சீனாவின் ஆட்களற்ற விமானமான டிரோன்களை சுட்டு வீழ்த்துவதாகக் கூட, பிரதமர் ஷின்ஷோ அபே தலைமையிலான அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது. சீனாவின் தற்போதைய நிலைப்பாடு என்னவோ, அது போலவே ஜப்பானும் அப்பொழுது நடந்து கொண்டது.

இதேவேளை, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், ஒகினாவா பிராந்தியத்தில் பாரிய இராணுவ ஒத்திகையை ஜப்பான் மேற்கொண்டிருந்தது. போர் கப்பல்களுடன் நடத்தப்பட்ட இந்த ஒத்திகையில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் 350 போர் விமானங்களும் சீனக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்துவது போன்று பயிற்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு முன்னர், வான் பாதுகாப்பு வலயமொன்றை சீன அரசாங்கம் பிரகடனப்படுத்தியதில்லை. ஆனால், அமெரிக்காவும் அதன் நேச நாடுகளான ஜப்பான், தாய்வான், தென்கொரியா ஆகியவை பல தசாப்த காலமாக இந்த பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி வந்துள்ளன.

அக்காலப்பகுதிகளில் மௌனம் சாதித்து வந்த வாஷிங்டன், சீனாவின் வான் பாதுகாப்பு வலயத்தினால் ஆத்திரமடைந்துள்ளது. சீனாவின் வான் பாதுகாப்பு வலயத்தை அமெரிக்கா கணக்கெடுக்காது எனத் தெரிவித்துள்ளது.

தானும், தனது நேச நாடுகளும் எந்த பிழைகள் செய்தாலும் அதனை சரியென வாதிடுவதே அமெரிக்காவின் வேலையாகும். இதனை மெய்ப்பிப்பது போலவே, சீன விவகாரத்தில் வாஷிங்டன் நடந்து கொண்டுள்ளது.

சீனாவின் வான் பாதுகாப்பு வலயம் தொடர்பான தவறான கணிப்பீடுகளும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் யுத்த விமானங்கள் சீனாவின் பிரகடனத்தை ஏற்று நடக்க மறுப்பதும் பிராந்திய மோதலுக்கே வழிகோலும்.

2010இற்கு பின்னர், சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இடம்பெறும் சின்னச் சின்ன சம்பவங்களையும் முக்கிய அரசியல் பிரச்சினையாக மாற்றி, அப்பிரச்சினைகளில் டோக்கியோவிற்கு தனது ஆதரவை ஒபாமா தலைமையிலான அரசாங்கம் வழங்கி வருகின்றது.

இந்நிலைமையில், கடந்த வருட இறுதியில், பிரதமராக தெரிவு செய்யப்பட்ட சின்சோ அபே, வலுவான இராணுவ தேசமாக ஜப்பானை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அபே பிரதமராக பதவியேற்ற திலிருந்தே பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்துள்ளதுடன் சீனாவிற்கெதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஜப்பானை ஒருங்கிணைப்பதையும் அதிகரித்திருந்தது.

இந்நிலைமையில் சீனாவுடன் மோதல்களை ஏற்படுத்தவே டோக்கியோ விரும்புகின்றது. ஆயினும், இவ்விவகாரம் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தவென அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜோய் பைடன், சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

எதிர்வரும் வாரம், ஆசியாவிற்கான விஜயமொன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பைடன், ஜப்பான், தென்கொரியாவுக்கும் செல்லவுள்ளார்.

இந்நிலைமையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையேயான மோதல்கள் அல்லது நேரடிப் போர் ஏற்படுவதற்கான ஆபத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயினும், இவ்விவகாரத்தை தணிக்கும் முயற்சியில் பைடன் ஈடுபடுவாரென வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள போதிலும், அது பெரிதும் சாத்தியப்படப் போவதில்லையெனக் கூறப்படுகிறது.

ஏனெனில், சீன விவகாரத்தில் எப்பொழுதுமே அமெரிக்கா ஒரு எதிரி போலவே நடந்து வந்துள்ளது. அதேபோல, சீனாவிற்கெதிராக அதன் அயல் நாடுகளையும் தூண்டிவிட்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவுடனான அமெரிக்காவின் பேச்சு வார்த்தை எவ்வாறு வெற்றியளிக்கும் என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சீனா தனது தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டே வான் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் பிரகடனத்திற்கு முன்பே பல நாடுகள் இதுபோன்ற வலயத்தினை பேணி வருகின்றன.

குலாம், ஹவாய், அலஸ்ஹா மற்றும் முக்கிய தொடர் தீவுகளை உள்ளடக்கிய வலயம் உள்ளடங்கலாக நான்கு தனி வான் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி அவற்றினை தற்பொழுதும் அமெரிக்கா பயன்படுத்தி வருகின்றது. அதேபோல பிரிட்டன், ஜப்பான் மற்றும் கனடாவிலும் இதுபோன்ற வலயங்கள் காணப்படுகின்றன.

இந்தத் தருணத்தில் சீனாவின் வான் பாதுகாப்பு வலயத்திற்காக கண்டனம் வெளியிடுவது தேவையற்றதொன்றாகும். இல்லையெனில் சர்வதேச விதிகளுக்கு அமைய அனைத்து நாடுகளும் இந்த வலய பிரகடனங்களை கைவிட வேண்டும். அவ்வாறு இயலாதெனில், சீனா மீதான அமெரிக்காவின் இலக்கிற்கு பகடைக்காய்களாக ஜப்பான், தென்கொரியா மற்றும் தாய்வான் போன்ற நாடுகளை பயன்படுத்துவதாகவே அமைந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக