புதன், 6 நவம்பர், 2013

தொடர் மாடிகளில் தொல்லை கொடுக்கும் செல்லப் பிராணிகள்

சா. சுமித்திரை

வேலிச் சண்டைகள், பாதைச் சண்டைகள் என்பவற்றுக்கு மேலாக அயல் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளால் ஏற்படும் மோதல் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றமையைக் காணக் கூடியதாகவுள்ளது. 

தலைநகர் கொழும்பு மற்றும் நகர்ப் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் செல்லப்பிராணிகளின் தொல்லைகளால் பல்வேறு வகையிலான மோதல்கள் அயலவர்களிடையே தினமும் அரங்கேறி வருகின்றன. 

முன்னைய காலங்களில் செல்லப் பிராணி வளர்ப்பென்பது மேலைத்தேய நாடுகளில் மட்டுமே இருந்து வந்தது. அந்நாடுகளில் நாகரிகமானதொன்றாகவும் செல்வம் படைத்தவர்களது சமூக அந்தஸ்தினை வெளிக்கொண்டு வரும் பொழுது போக்கு அம்சமாகவும் செல்லப் பிராணி வளர்ப்பு காணப்பட்டது.

குறிப்பாக பல ரகமான நாய்கள் , பறவைகள்  மற்றும் பூனைகளையே அதிகளவானோர் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். இலங்கை, இந்தியா போன்ற வளர் முக நாடுகளில் இத்தகைய செல்லப் பிராணி வளர்ப்பு என்னும் பொழுதுபோக்கு அம்சம் முக்கியமானதொன்றாகக் காணப்படவில்லை. ஆயினும் ஆடு ,மாடு,கோழி போன்வற்றை தமது உணவுத் தேவைகளுக்காகவும் நாய்களை பாதுகாப்புக்கெனவும் குதிரை, கழுதை போன்ற  விலங்குகளை தமது  சுய தேவைகளுக்காகவும் மட்டுமே வளர்த்து வந்தனர். 

எனினும், அவ் விலங்குகளுக்கென தனிப்பட்ட ஒதுக்குப் புறமான இடங்களில் சிறிய  குடிசைகளோ அல்லது  கூடுகளோ அமைத்து அவைகளுக்கேற்றவாறு வளர்த்து வந்தனர். அதேபோல அவற்றின் கழிவுகள் மற்றும் அவை உண்ட எஞ்சிய உணவுகள் என்பவற்றை பாதுகாப்பாக குழிகளுக்குள் போட்டு புதைத்து விடுவர். 

மேலைத்தேய நாகரீக கலாசார பழக்க வழக்கங்களை மெல்ல மெல்ல பின்பற்ற நாம் தொடங்கிய போதே வீட்டுக்குள் விலங்குகளை வளர்க்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டது. அதுவும் மனித தேவைகளுக்கு அவசியமில்லாத விளங்குகளை பொழுது போக்குக்காக மட்டும் வளர்க்கத் தொடங்கினார்கள்.

செல்லப் பிராணிகளாக 100 இற்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த உயர் ரக நாய்கள், பூனைகள் , முயல்கள், லவ் பேர்ட்ஸ் என ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த விலங்குகளை வளர்க்கின்றனர். 


சிலர் அவர்களது வசதிகள் மற்றும் சமூக அந்தஸ்துகளுக்கேற்ப அதிகளவு பணம் கொடுத்து இவ் விலங்குகளை வாங்குகின்றனர். அத்துடன், தமது குடும்ப உறுப்பினர்களைப் போல சீராட்டி பராமரித்து வளர்த்து வருகின்றனர். போஷாக்குணவுகள், நோய்த் தடுப்பு ஊசிகள், குளியல் பொருட்கள், மருந்துகள் என கால் நடை வைத்தியர்களது ஆலோசனையுடனும் அனுமதியுடனும் பல ஆயிரக்கணக்காக  ரூபாவினை செலவழித்து வாங்கி எந்தக்குறையும் இல்லாமல் ஒரு குழந்தை போல தமது செல்லப் பிராணிகளை பாதுகாத்து வருகின்றனர். 

தமக்கோ குடும்ப உறுப்பினருக்கோ அல்லது தமது பிள்ளைகளுக்கோ ஏதேனும் சிகிச்சை பெற மாதாந்தம் கிளினிக்கிற்கு தவறாது செல்கின்றார்களோ இல்லையோ ஆனால் செல்லப் பிராணிகளுக்குரிய குறித்த கிளினிக்கிற்கு செல்வோர் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது. 

அத்துடன், தமது செல்லப் பிராணிகளுக்கு பொருத்தமான  உடை, ஆபரணங்களை அணிந்து அழகு பார்க்கும் செல்வந்தர்களும் காணப்படுகின்றனர். இதனை விட தலைநகர் கொழும்பின் பிரதான வர்த்தக  பகுதிகளில் வீட்டுச் செல்லப் பிராணிகளுக்கு தேவையான உணவு, உடைகள் , போசனை மருந்துகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகின்றன. சில தையலகங்களில் அவைகளுக்குரிய அளவுகள் பிரத்தியேகமாக எடுக்கப்பட்டு உடைகள் தைத்துக் கொடுக்கப்படுகின்றன. 

 இன்றைய காலத்தில் மனிதனிடம் இல்லாத அன்பு , நன்றியுணர்வு, பொறுமை  போன்ற பண்புகள் மற்றும் நேரத்தினை இந்த செல்லப் பிராணிகளிடமிருந்து பெற்று விடலாமென்ற நம்பிக்கையிலேயே அதிகளவானோர் செல்லப் பிராணிகளை வளர்க்கும்  எண்ணங்களை உருவாக்கி கொள்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது. 

வயதானவர்களிலும் சிலர் தமது பிள்ளைகளை விட தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அதிக பாசம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இந்த பொழுது போக்கு ஏனையவற்றிலிருந்து விலகி நிற்கும் அதேசமயம். ஒரு மனிதனின் அன்பு கலந்த மனிதநேயத்தின் அடையாளமென ஒருசாரார் கருதுகின்றனர். ஆனால் இந்த மனித நேயம் மிருக வதையாகக்  கருதப்படுவதுடன், மனிதனுக்கும் அந்த செல்லப் பிராணிகளுக்கும் கூட ஒரு ஆரோக்கியமற்ற சூழல் உருவாகின்றது.

என்ன தான் நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வளர்த்து வந்தாலும் அத்தகைய விலங்குகளால் எமக்கு எந்தவிதமான நோய்த் தொற்றுகளும் ஏற்படாதென திட்டவட்டமாகக் கூற முடியாது. இவற்றினால் வீட்டிலுள்ள சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை பலர் நேரடியாகவும் மறை முகமாகவும் பல விதமான நோய்ப் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகின்றன. 

கிராமப் புறங்களில் இதுபோன்ற செல்லப் பிராணி வளர்ப்பதனால் அதிகளவு பாதிப்புகள் ஏற்படுவதாக அலட்டிக் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அங்கு புற சூழல் ஓரளவு ஆரோக்கிய காற்றோட்டம், நீர் நிலைகள், மற்றும் சூரிய ஒளி என்பன உள்ளன. ஆனால், தலைநகர் கொழும்பு உட்பட நகர்ப் பகுதிகளில் இத்தகைய செல்லப் பிராணி வளர்ப்புகளால் சுற்றுச் சூழலுடன் அயலிலுள்ள குடியிருப்பாளர்களும் அதிகளவு பாதிப்புகளை எதிர் கொள்கின்றனர். ஏனெனில் இத்தகைய நகரங்களிலுள்ள பெரும்பாலான தொடர் மாடிக் குடியிருப்புகளில் மக்கள் மிகவும் நெரிசலாக அவர்களது தனி நில சுகாதாரத்திற்கு கேடான வகையிலேயே வாழ்கின்றனர். 

இப்படியானதொரு நிலைமையில் நாய்,பூனை மற்றும் கிளி போன்றவற்றை செல்லப் பிராணிகள் எனக் கூறி வளர்ப்பதை பார்க்கும் போது வேதனையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. 

இவை வீடுகளில் வளர்ப்பதற்கென தனிப்பட்ட அல்லது பிரத்தியோகமான இடவசதிகளோ காணப்படுவதில்லை. எனவே, அவைகளும் வீட்டு அங்கத்தவர்களுடனேயே படுக்கையறையில் படுத்திருக்கும். அவர்களது சமையல் அறைக்கருகில் தான் சாப்பிடுகின்றன. தமது செல்லப் பிராணிகளை சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் பாவிக்கின்ற குளியலறையிலேயே குளிப்பாட்டுவார்கள். 

இதனையும்  விட சில வீடுகளில் வளர்க்கின்ற அவர்களது  செல்லப் பிராணிகள் படுக்கின்ற போது மின்விசிறி போட வேண்டும். அவைகள் அந்த மின் விசிறி காற்று பட்டால் மட்டுமே உறங்குகின்றன. மேலும்  சில வீடுகளில் அவற்றுக்காக தொலைக்காட்சிகள் கூட போட்டு விடப்படுகின்றன. அவையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அழகாக படுத்துக் கொண்டே பார்க்கின்றன. 

இந்த செல்லப் பிராணிகள் ஒரு சராசரி மனிதனின் வாழ்வினை வாழ்கின்றன என்பதை நாம் பார்த்து இரசித்துப் பெருமைப்படுகின்ற போதிலும் அவற்றினால் எமக்குக் கிடைக்கும் நன்மை  எதுவுமில்லை என்றே சொல்லலாம். இதனையும் விட அந்த விலங்குக்குரிய இயற்கையான குணவியல்புகளும் பண்புகளும் அற்றுப் போய்விடுகின்றன. இந்த மாற்றம் உயிரியல் பல்வகைமையிலும் என்றோ ஒரு நாள் பாரிய தாக்கம் செலுத்தியிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. 

வீடுகளில் நாய், பூனை போன்றவற்றை வளர்க்கும் போது அவை செல்லும் படுக்கும் இடமெல்லாம் அவற்றின் உரோம முடிகள்  கொட்டுகின்றன. இந்த முடிகள் நேரடியாக பல வழிகளிலும் எமது உடலினுள் செல்கின்ற  போது ஆஸ்மா, ஒவ்வாமை, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அதேபோல்  அவற்றின் உமிழ் நீரிலிருந்தும் பல வகையான நோய்க்  காவிகள் பரவுகின்றன. அந்த உமிழ் நீர் எமது உடலில் அடிக்கடி படும் போது தோல் புற்றுநோய் ஏற்படவும் வழிகோலுகின்றன. 

இதேவேளை குடியிருப்புத் தொகுதிகளில் வாழும் போது அயலவர்களின் வீட்டுச் சூழலிலும் பொது இடங்களிலும் மலங்கழிக்கின்றன . இதனை செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் முறையாக அகற்றாமையால் ஏனைய குடியிருப்பாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.  உதாரணமாக நாயென்னும் போது அவை இயல்பாகவே குரைக்கும், ஊளையிடும் , கழிவு குப்பைகளைக் கொண்டு வந்து பொது இடங்களில் போடும் ,கெட்ட மணம் வீசும் .இதனால் அந் நாயை வளர்ப்பவரை விட அயல் பகுதிகளில்  உள்ளவர்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். 

 அயல் வீட்டில் வளர்க்கும் நாய் இப்படி எல்லாம் செய்வதாகக் கூறிக் கொண்டு அந்த நாய் போய் வரும் பாதை எல்லாம்  தடியால் அடித்து துரத்துவதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை.  நாய் வளர்ப்பதற்குரிய சூழலை நான் கொண்டுள்ளேனா என அதன் உரிமையாளரே சிந்தித்து அதற்குரிய  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனை விடுத்து அயல் வீட்டாருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடாது. 

 கொழும்பிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் இரு குடியிருப்பாளர்கள் நாயினை வளர்த்து வந்தனர். அண்மையில் அவ்விரு நாய்களும் பொது இடமொன்றில் திடீரென சண்டையிட்டுக் கொண்டிருந்த போது அவ்விடத்தில் வந்த முதியவரொருவர் அச்சண்டையில் தடுமாறி வீழ்ந்ததில் அவருக்கு காலில் என்பு முறிவு ஏற்பட்டது. தற்பொழுது அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார். 

இதேபோல பல சம்பவங்கள் நாள்தோறும் தொடர்மாடிகளில் அரங்கேறி வருகின்றன. சிறுவர்கள் நாய், பூனை  போன்ற விலங்குகளை அரவனைத்தும் ,தொட்டும்   விளையாடுவார்கள். அவைகளுடன் விளையாடும் போது, அவை அவர்களின் கை , கால் , வாய்ப் பகுதி போன்றவற்றை நக்கி தமது அன்பை வெளிப்படுத்துகின்றன. ஆனால் அவற்றின் எச்சிலிலுள்ள நுண்ணங்கி கள் தோலின் ஊடாக மறைமுகமாக   உடலைப் பதம் பார்க்கின்றன. எனவே, இதன் மூலம் சிறார்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.  

 சிலர் தமது செல்லப் பிராணிகளுக்குரிய தடுப்பூசிகள் உரிய முறையில் ஏற்றப்பட்டுள்ளதால் தமக்கு எந்த வித  நோய் காரணிகளும் பரவாது   என்று எண்ணுகின்றனர். ஆனால், இந்தத் தடுப்பூசிகள் நோய்க் காவிகள் பரவும் தாக்கத்தைக் குறைப்பதற்காகவே வழங்கப்படுகின்றன. அதனை முற்றாகத் தடுப்பதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

தொடர் மாடிகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளால் மழை காலங்களிலேயே அதிக அசௌகரியங்கள் அனுபவிக்க நேரிடுகின்றன. தொடர்மாடிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு வெளிநாடுகளில் மட்டுமன்றி இலங்கையிலும் கூட அரசு தடை விதித்துள்ளது.  ஆனால், இந்தத் தடைகளை யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட அலட்சியம் செய்து வருவதையே காணக் கூடியதாகவுள்ளது. இது தொடர்பான எத்தனையோ வழக்குகள் நீதிமன்றங்களில் இன்றும்  தேங்கிக் கிடக்கின்றன. 

எனவே, செல்லப் பிராணிகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்? முறையற்ற வகையில் வளர்க்கும் போது ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் அந்தந்த பகுதிக்குரிய கால் நடை மருத்துவர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த  முன்வர வேண்டும். அதேபோல செல்லப் பிராணிகளின்  உரிமையாளர்களும் தகுந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக